நேபாள் நாட்டின் புதிய பிரதமர் பிரசந்தாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து

நேபாளத்தின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள புஷ்ப கமல் தஹல் அவர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதையிட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் என்ற வகையில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆழமான நட்புறவையும் நெருங்கிய உறவுகளையும் கொண்ட நெருக்கமான தெற்காசிய அயல் நாடுகளான இலங்கையும் நேபாளமும், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்ளவும், ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் இணைந்து செயற்பட அர்ப்பணிப்புடன் உள்ளன என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்த சமய மற்றும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வலுவான, நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற தான் பெரிதும் எதிர்பார்த்துள்ளதாகவும், புதிய பதவிக் காலத்தில் நாட்டு மக்களின் நலன்களை உறுதிசெய்யும் அனைத்து முயற்சிகளும் முழுமையாக வெற்றிபெற வாழ்த்துவதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.