இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜப்பான் ஆராய்வு

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானின் உயர் மட்ட குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்த தூதுக்குழுவில் ஜப்பானின் அரச குடும்ப உறுப்பினரும் டோக்கியோ பெருநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி சைகோ அயுமி மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புகழ்பெற்ற சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஜப்பானுக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு ஜப்பானில் நினைவுச்சின்னத்தை நிர்மாணித்த தொழில்முயற்சியாளர் குடும்பத்தைச் சேர்ந்த திரு கமிசகமோட்டோ யுஜி மற்றும் திருமதி கமிசகமோட்டோ ஹிசாகோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்காக ஜப்பானுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் அவர்கள், விவசாயம், மீன்பிடி, மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள், மருந்து மற்றும் உபசரிப்பு கைத்தொழில் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்யுமாறு தூதுக்குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். பாரிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், ஜப்பானிய மொழி கற்பித்தல் உள்ளிட்ட கல்வித் துறையிலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான வாய்ப்புகளை ஆராய்வதற்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஜப்பானிய நிறுவனங்களை இலங்கையில் அதிக முதலீடுகளை செய்ய ஊக்குவிப்பதாக தூதுக்குழுவினர் உறுதியளித்தனர்.

ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனா பற்றிய நூலை திரு கமிசகமோட்டோ பிரதமரிடம் வழங்கினார், மறைந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனா பற்றிய புதியதோர் நூலை வெளியிடுவதற்கான முன்மொழிவு பற்றி கலந்துரையாடுவதற்காக தூதுக்குழுவினர் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் பேரன் திரு பிரதீப் ஜெயவர்த்தனவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்த தூதுக்குழுவில் சடோஷ் ரியோசுகே, சைடோ அயா, யமடா ஹிரோகோ, நகாடே ரியோஷின், நோஸ் ஹிரோஷி, செட்டோ தட்சுஹிகோ, கவாய் தோஷிஹிகோ, மியுரா யோசுகே, சுசுகி நட்சுவோ, டான்கா டாரோ, சடோ இச்சிரோ மற்றும் இகேடா கவுட்சு ஆகியோர் அடங்குவர். இந்த சந்திப்பின் போது பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன மற்றும் கலாநிதி அன்வர் முஸ்தபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.