பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கலாநிதி விக்டர் ரத்நாயக்க நமது நாட்டிற்குக்கிடைத்த உன்னதப் பரிசு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தினால் கலாநிதி விக்டர் ரத்நாயக்கவைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “சுபாவித கீதயே சிட்டுவரயானோ... கலாநிதி விக்டர் ரத்நாயக்க அபிநந்தனாபிஷேக” எனும் விசேட பாராட்டு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கை வானொலியின் ’குமாரதுங்க முனிதாச’ கலையகத்தில் நடைபெற்றது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டு இசைத்துறைக்கும் வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி விக்டர் ரத்நாயக்க ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டுவதே இவ்விழாவின் நோக்கமாகும். இதன் ஓர் அங்கமாக, வானொலிக் கூட்டுத்தாபன வளாகத்தில் அவரது திருவுருவப்படம் ஒன்றும் பிரதமரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

நானும் கலாநிதி விக்டர் ரத்நாயக்கவின் தீவிர ரசிகை என்பதால் இந்தத் தருணம் எனக்கு மிகவும் விசேடமானது. எனது வாழ்நாளில் உங்களை இவ்வளவு நெருக்கமாக நின்று கௌரவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, இது மிகவும் மகிழ்ச்சியானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான தருணமாகும்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் நமது நாட்டின் இசைத்துறைக்கு ஆற்றிய சேவை ஈடுஇணையற்றது. இலங்கையில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட உங்களது தனிநபர் இசை நிகழ்ச்சியான ’ச’ பிரசங்கமே, எனது சிறுவயதில் நான் பார்த்து ரசித்த முதலாவது இசை நிகழ்ச்சியாகும்.

சிங்கள மொழியின் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது உங்களது பாடல்களே. உங்களது பாடல்கள் காதல் பற்றிய நுட்பமான, அதேவேளை அற்புதமான படைப்புகளாக அமைந்திருந்தன. இசையும் மொழியும் இணைவதன் மூலம் எம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை உங்களது பாடல்கள் மூலமே நான் உணர்ந்தேன்.

அதேபோல், உங்களது பாடல்களில் பொதிந்துள்ள இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்த கருத்துக்கள் நாம் வெகுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். ’சருங்களே’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ’ஒப யன கமனே’ போன்ற பாடல்களின் இசையமைப்பும் பாடிய விதமும், பல்லினக் கலாசாரங்களின் அழகியலை மிகவும் தத்ரூபமாக எமக்குக் கற்றுத் தந்தன. உண்மையிலேயே உங்களைப் போன்றதொரு பெறுமதிமிக்கப் பரிசு எமது நாட்டிற்குக் கிடைத்தமைக்காக நாம் பெருமையடைகின்றோம்."

வாழ்க்கையின் எல்லாவிதமான முக்கிய தருணங்களுக்கும் பொருத்தமான படைப்புகள் விக்டர் ரத்நாயக்க அவர்களின் ஆக்கங்களுக்கு மத்தியில் காணப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 18ஆம் திகதி தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய கலாநிதி விக்டர் ரத்நாயக்க, நீண்ட ஆயுளுடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென வாழ்த்திய பிரதமர், இவ்வாறானதொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கு நன்றி தெரிவித்தார். ஊடகத்துறையில் தற்போது காணப்படுகின்ற போட்டிகளுக்கு மத்தியிலும், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் அனைத்துச் சவால்களையும் முறியடித்து முன்னோக்கிச் செல்லும் சக்தியைக் கொண்டிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கலைத்துறையைச் சார்ந்த தலைசிறந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் இத்தகைய வேலைத்திட்டங்களைப் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர, கலாநிதி விக்டர் ரத்நாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிப்பொன் நிலையத்தின் 40-வது ஆண்டு நிறைவு மற்றும் வண. மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் (SNECC) 40-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அதன் பொதுச் செயலாளரும் அத்துல்கோட்டை ஸ்ரீ மஹிந்தாராமய விகாராதிபதியும் மேல் மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கருமான சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலானதொரு நட்புறவுப் பாலமாகச் செயற்பட்டு, இந்நாட்டுப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார மத்திய நிலையம் ஆற்றிய மகத்தான சேவையைப் பாராட்டுவதே இவ்விழாவின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இங்கு உரையாற்றிய பிரதமர்,

இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்குவதற்காக நிப்பொன் நிலையத்தினூடாக வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரர் முன்னெடுக்கும் சமூகப் பணி மிகுந்த பாராட்டுக்குரியதாகும் எனத் தெரிவித்தார். திறமையான பிள்ளைகளை நாட்டுக்குப் பங்களிக்கக்கூடிய நற்பண்புகள் மிக்க பிரஜைகளாகக் கட்டியெழுப்புவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்நிறுவனம் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக நிப்பொன் நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் "நிப்பொன் புலமைப்பரிசில்" திட்டத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பாடசாலை உபகரணங்கள், மாதாந்த நிதி உதவி, மருத்துவ உதவி மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படுவதுடன், ஜப்பானிய மொழிப் பயிற்சியை வழங்கி ஜப்பானில் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு வழிகாட்டப்படுகின்றது. அத்துடன், இரு நாட்டு மாணவர்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஜப்பான் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விசேட தருணத்தைக் குறிக்கும் வகையில், 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரருக்குப் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது சமூகப் பணிகளைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான வலிமை கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோட்டை மாநகர முதல்வர் ஆரோஷ அத்தப்பத்து, ஜப்பானிய அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விப் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் ’சிந்தனை தினத்தை’ (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் பெப்ரவரி 22-ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, சாரணர் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பேடன் பவல் பிரபுவின் சிலைக்குப் பிரதமர் மலரஞ்சலி செலுத்தித் தனது மரியாதையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர்,

சாரணர் இயக்கம் என்பது வெறும் பதவிகளை வகிப்பதல்ல, அது ’தயார் நிலையில் இருப்பதற்கும்’, பிறருக்கு உதவுவதற்கும் சேவை செய்வதற்கும் கிடைக்கப்பெறும் ஒரு உன்னதமான பயிற்சியாகும், எனத் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அதேவேளை, பிறரை மதிக்கும், ஒழுக்கமான, புத்திசாலித்தனமான ’ஸ்மார்ட்’ சாரணர்களாகச் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், மரம் நடுதல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல்நேயச் செயற்திட்டங்கள் ஊடாக, பொறுப்புணர்வுடன் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்குமாறு சாரணர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில், சாரணர் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் சில மாவட்டங்களுக்கு அடையாள ரீதியாக மடிக்கணினிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இலங்கைச் சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அவர்களினால் பிரதமருக்கு விசேட சாரணர் முத்திரைத் தொகுப்பும் நினைவு உறையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சாரணர் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான சாரண மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளில் மாவட்டக் குழுக்களுடன் இணைந்து செயற்படுங்கள். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (பெப்ரவரி 19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டப் பாடசாலைகளை அடையாளம் காணுதல், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு மற்றும் பாடசாலைகளுக்குச் சொந்தமான காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நிலவும் ஆசிரியர், அதிபர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் தரம் 13 இல் கற்கும் மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் பயில்வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் தொழிற்கல்வியைத் தொடரும்போது நிலவும் மொழிப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மேலும், ஆசிரியர் பயிற்சிகளின்போது தமிழ் மொழிமூல ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மாவட்ட மட்டத்திலான தரவுகள் அவசியம் என்றும், ’தித்வா’ சூறாவளியினால் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இப்பாடசாலைகளை மீள அமைக்கும்போது இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இதற்கான தரவுகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்தப் பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரச பாடசாலைகளே. எனவே, எதிர்காலத்தில் இப்பாடசாலைகளை எவ்வாறு பெயரிட்டு அழைப்பது என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்குத் தெளிவுபடுத்தி, அக்குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர், இதன் மூலம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளை மிக நெருக்கமாகக் கண்காணிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் 23,000 பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை ஓரளவுக்கு நிரப்ப முடியும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன், நிலவும் வெற்றிடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் வருடாந்தம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்

மாத்தறை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை உள்ளடக்கிய ’மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாத்தறை பழைய மேல் நீதிமன்ற வளாகம் மற்றும் மாத்தறை மாவட்ட செயலகக் கேட்போர் கூடம் என்பவற்றை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இக்கலை விழா, பெப்ரவரி 20 முதல் 23ஆம் திகதி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இவ்விழாவில் காட்சிக் கலைக் கண்காட்சிகள், குறும்படத் திரையிடல்கள், கலைச் சந்தை மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் செயன்முறைப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆரம்ப விழாவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் உள்ளிட்ட கலைஞர்கள், விசேட விருந்தினர்கள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழில்சார் கல்விக்கான முதலீடு நிறுவன உறுதிப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான அடித்தளம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை பட்டயப் பணியாளர் முகாமைத்துவ நிறுவனத்தினால் (CIPM) ஏற்பாடு செய்யப்பட்ட, ’அங்கீகாரத்தின் புதிய உச்சங்கள்’ New Heights of Recognition எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் கடந்த புதன்கிழமை ,பெப்ரவரி 18 நடைபெற்ற இந்நிகழ்வின்போது, SCQF 11 ஆம் மட்டத்தின் (Level 11) கீழ், QS தரச்சான்று பெற்ற புதிய பாடத்திட்டத்துடனான ’மனிதவள முகாமைத்துவத்தில் பட்டயத் தகைமை’ (CQHRM) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது, தொழில்சார் மற்றும் தொழிற்கல்விப் பாதைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

நமது கல்விப் பாதைகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற, நிபுணத்துவ மற்றும் தொழிற்துறை சார்ந்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்விச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். இது நாம் கல்வித்துறையில் ஆரம்பித்துள்ள சீர்திருத்தச் செயல்முறைகளுடன் ஒத்துப்போகின்றது. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது எல்லைக்கு உட்பட்டது மாத்திரமல்ல, எவர் வேண்டுமானாலும் கல்வி கற்றுக்கொண்டே தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய முன்னுரிமைகளை முன்னிறுத்தி மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இலங்கை பொருளாதார மீட்சி, நிறுவன ரீதியான சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இக்காலகட்டத்தில், திறமையான மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட மனிதவளத் தலைமைத்துவத்தின் தேவை இன்றியமையாதது. போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் என்பது முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, நிறுவனங்களைத் திறம்பட வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த தொழில் நிபுணர்களின் மீதே தங்கியிருக்கின்றது.

இந்த SCQF Level 11 மனிதவள முகாமைத்துவ பட்டயத் தகைமையானது, நிபுணர்களின் சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்துவதுடன், நாட்டின் தொழில்சார் கல்வி முறைமை மீதான நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்தும் என பிரதமர் குறிப்பிட்டார். அத்தோடு, நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பாதுகாப்பான பணிச்சூழல், பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணித்தள சமத்துவத்தை முன்னெடுப்பதில் மனிதவள முகாமைத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்துறையின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், பணியாளர் முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு