பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகள் வழங்கப்படும்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, கல்வித் துறையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்த பிரதமர், தற்போதைய நிலையை பின்வருமாறு விளக்கினார்,

இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) 903 வெற்றிடங்கள்.

இலங்கை அதிபர் சேவை (SLPS) 3,790 வெற்றிடங்கள்.

இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்ட பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமனங்களைப் பொறுப்பேற்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, 2026 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நேர்முகத் தேர்வுகளை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2021 முதல் 2025 வரையான காலப்பகுதியில் புதிதாக உருவான வெற்றிடங்களுக்காக, அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் எதிர்காலத்தில் போட்டிப் பரீட்சைகளை நடாத்தி புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்.

அதிபர் சேவையில் இணைந்துகொள்வது தற்போது ஒரு புதிய ஆட்சேர்ப்பாகக் கருதப்படுவதால், சம்பள நிர்ணயத்தின் போது எழுந்துள்ள சிக்கலுக்குத் தீர்வாக, அதிபர் சேவைக்கான நியமனத்தை ஒரு "பதவி உயர்வாகக்" கருதிச் சம்பள மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்வித் துறையில் மாத்திரமன்றி, ஏனைய பல துறைகளிலும் நிலவும் சம்பள நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு அவசியமாகும். அதற்காக அரசாங்கத்தினால் புதிய சம்பள ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இவ்வருடத்தில் அந்த ஆணைக்குழுவினூடாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய அதிபர்களின் திறன் விருத்திக்காகப் பின்வரும் பயிற்சித் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன

ஆரம்பக் கடமைப் பயிற்சி. இரண்டாம் தரம் மற்றும் முதலாம் தரத்திற்குப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் வழங்கப்படும் கொள்ளளவு அபிவிருத்திப் பயிற்சிகள்.மாகாண மற்றும் வலய மட்டத்தில் நடாத்தப்படும் காலோசிதமான விழிப்புணர்வுத் திட்டங்கள்.

அதிபர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் நிர்வாகச் சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்த முடிவுகளின் அடிப்படையில் அமைச்சரவையினூடாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு

அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அவ்வாறு அடக்குமுறை இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையாவது சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கோ அல்லது போராட்டங்களை நடத்துவதற்கோ உள்ள ஜனநாயக உரிமையின் மீது எவ்விதத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

அடக்குமுறை என்பதை வெறும் சொல்லாக மாத்திரம் உச்சரிக்காது, கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்ட அல்லது அடக்குமுறைக்கு உள்ளான நபர்கள் எவராவது இருப்பின் அவர்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பியுங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன, ஆயினும் அதற்கு எதிராக எவ்வித அடக்குமுறைகளையும் பிரயோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதைய அனர்த்த நிலையின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீதிகள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பேணுவதற்கு இந்தச் சட்டப் பின்னணி தேவைப்படுகிறது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பு (புகையிரதப் பாதைகள் உட்பட) மற்றும் பாடசாலைக் கட்டடங்களை மீண்டும் சீரமைக்கும்போது, அவற்றை முன்பு இருந்த நிலைக்கு மாத்திரம் கொண்டு வராமல், எதிர்கால அனர்த்தங்களைத் தாங்கக்கூடிய வகையில் விஞ்ஞான ரீதியான முறையின்கீழ் நவீனமயப்படுத்துவதற்கு முப்படையினரை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இத்தகைய தேவைகளுக்காகவே நாம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றோம்.

அனர்த்த நிவாரணங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதியினால் விசேட செயலணி (Task Force) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இந்த மாதம் எமக்குக் கிடைக்கும். அதற்கமைய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படும்.

அதேபோல், தற்போதும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் குறித்துக் கண்டறிந்து, அவர்களை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகையினால், அரசியல் இலாபத்திற்காக “அடக்குமுறை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தாது, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெண்களின் உழைப்பை மதிக்கும் நியாயமான சமூகத்தையும், தேசிய பராமரிப்புக் கொள்கையையும் நிறுவுவது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட, ’தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்’ என்ற பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இன்று (05) பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை குறித்து உரையாற்றக் கிடைத்தமை இட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, ஆறு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்திய போது, ’பராமரிப்பு பொருளாதாரம்’ (Care Economy) பற்றி நான் பேசிய வேளையில், இச்சபையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களே இருந்தனர். அன்று அந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுவதே ஒரு புதிய விடயமாகக் கருதப்பட்டது.

ஆனால், ஆறு வருடங்களின் பின்னர் இன்று இத்தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஒரு பலமான குழு எமக்கு இருப்பையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உரையாடல் இன்று எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால், எமது தேசியக் கொள்கை வரைவுக்கான ஒரு முன்மொழிவை முன்வைக்கும் அளவுக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இக்கருத்தாடல் வலுவடைந்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவம், சமூக நிறுவனங்கள், அரச சேவை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள ஒரு சூழலில், இவ்வாறானதொரு தீர்க்கமான அதே நேரத்தில் மிக முக்கியமான தலைப்பு குறித்து உரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

பொதுவாக இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டுமாயின், பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, ஒரு பிரஜையாக அனைத்துத் துறைகளிலும் சமமாகவும் கௌரவமாகவும் தனது விருப்பத்திற்கமைய பங்கெடுப்பதற்கான அவரது உரிமையை ஏற்றுக்கொண்டு, அதற்கான பிரதான தடைகளை நீக்குவதற்கு நாம் செயற்பட வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், பெண்கள் பிரஜைகளாக சமூகம், அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அச்சமின்றி கௌரவமான முறையில் செயற்பட வேண்டுமாயின், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பரப்புகளிலும் அவர்களின் கௌரவம் பேணப்படும் வகையிலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அந்தத் தளங்கள் ஒழுங்கமைக்கப்படுவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, இது சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒரு சமூக மாற்றத்தின் ஊடாகவே நிகழ வேண்டும். அந்தச் சமூக மாற்றத்தினூடாக பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதுடன், அனைத்துப் பிரஜைகளும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சம வாய்ப்புகளுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம், எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரச சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்புகள் முன்னெடுப்பு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாகத் தொடர்ந்து வருவதாகவும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் முறையாக நடைபெறாமையே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகைமைகளின் அடிப்படையில் சரியான நடைமுறைகளைப் பின்பற்றி ஆட்சேர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அரச அச்சகம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்

இலங்கை அச்சக சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய, தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்த திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தற்போது அரசு அச்சகத் திணைக்களத்தில் இல்லாமையினால், திணைக்களத்தின் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவை அனுமதியுடன் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள தகுதியும் அனுபவமும் மிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, இரகசிய மற்றும் பாதுகாப்பு அச்சுப் பணிகள் உள்ளிட்ட இணையவழியில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு பணிகளும் குறைக்கப்படவில்லை. இப்பணிகளின் தரம், இரகசியத்தன்மை மற்றும் நடைமுறைகளைப் பேணுவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அத்துடன், முழுநேர அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாக நீடித்த ஒன்றாகும். அதற்கான தெளிவான காரணங்களை நாம் அறிவோம். அரச சேவையில் முறையான ஆட்சேர்ப்புகள் இடம்பெறாமையே பிரதான காரணமாகும். இது அரசு அச்சகத்திற்கு மாத்திரமின்றி, பல அரச நிறுவனங்களிலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம், எனப் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து, இம்முறை பெரும் போக நெல் கொள்வனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

2025/2026 பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினை ’நாடு’ அரிசி 120 ரூபாவிற்கும், ’சம்பா’ 130 ரூபாவிற்கும், ’கீரி சம்பா’ 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நெல் கொள்வனவிற்கென உறுதிப்படுத்தப்பட்ட விலை நிர்ணயிக்கப்பட்டு, தரமான நெல் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும். இதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கொள்ளளவை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மெட்ரிக் தொன் வரை அதிகரித்து, நெல் கொள்வனவிற்கான தேவையான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெப்ரவரி 16 முதல் 20 வரை இந்தியாவில் நடைபெற்ற ’2026 செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு’குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார்,

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ’தெற்கு பூகோள’ பிராந்தியத்தில் நடத்தப்பட்ட முதலாவது உச்சிமாநாடு இதுவாகும். மக்கள், உலக சமூகம் மற்றும் தரம் ஆகிய துறைகள் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது குறித்துக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

மனித மூலதனம், சமூக வலுவூட்டலுக்கான உள்ளடக்கம், பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், அறிவியல், மீளெழும் திறன், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன், செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகிய துறைகள் குறித்து அங்கு ஆராயப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்ததுடன், பொறுப்புமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அரச தலைவர் மட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு அமைந்திருந்ததால், இலங்கையின் நிலைப்பாட்டையும் இத்துறை மீதான ஆர்வத்தையும் சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்விச் சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது குறித்து பிரதமருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

கல்வித் துறைக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (HRDEP) குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அதிகாரிகளுக்கும் இடையில் மார்ச் மாதம் 2ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, சிரேஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியின் தரம் மற்றும் பொருத்தப்பாட்டை மேம்படுத்துதல், ஆசிரிய குழாமின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கல்வித் துறை நிர்வாகத் திட்டத்தைச் செம்மைப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டில், தொழில்நுட்பத் திறன் மற்றும் தேர்ச்சிமிக்க மனித வளங்களின் அவசியத்தைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார். ஒட்டுமொத்தக் கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தியிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் தேசிய அபிவிருத்தியின் அனைத்துத் துறைகளையும் முன்னோக்கி இட்டுச் செல்லக்கூடிய பலமான மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதே இதன் இறுதி இலக்காகும் எனச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர். இத்துறைசார் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும், சர்வதேச நிதி வசதிகள் ஊடாக ஒத்துழைப்புகளை நீடிக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக மக்களிடையே பரந்த சமூகப் பணிகளை ஆற்றிவரும் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமானவை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு ஆகிய முப்பகுதிகளின் சங்கநாயக்கர் பதவியைப் பெற்ற வணக்கத்துக்குரிய கங்கோடகம விமலரத்ன நாயக்க தேரருக்கு, அதற்கான ’சன்னஸ்பத்ர’ பதவிப் பிரமாணப் பாத்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இன்று (01) புத்தல கலாசார மத்திய நிலையத்தில் இதனைத் தெரிவித்தார்.

ஊவா அமரபுர மகா நிகாயவின் புதிய நாயக்க தேரருக்கு, அதற்கான ’சன்னஸ்பத்ர’ ஆவணத்தைப் பிரதமர் கையளித்த அதேநேரம், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர ’விஜினிப்பத்த’ (விசிறி) கௌரவச் சின்னத்தை வழங்கிவைத்தார்.

புதிய சங்கநாயக்கர் பதவி பெற்ற நாயக்க தேரருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றிய பிரதமர்,

ஊவா மாகாணம் என்பது எமது நாட்டிற்கு மதரீதியிலான பாரிய பணிகளை ஆற்றிய பௌத்த துறவியல் பரம்பரையொன்று உருவான மாகாணமாகும். எமது நாயக்க தேரரும் அந்தப் பாதையில் பயணித்து, தனது 60 வருடங்களுக்கும் மேலான துறவற வாழ்க்கையில் தர்மத்தின் ஊடாக மாத்திரமன்றி, மருத்துவ சாஸ்திர அறிவின் மூலமும் இப்பிரதேச மக்களுக்கும் மாகாணத்திற்கும் பாரிய சேவையாற்றியுள்ளார்.

உதவி ஆசிரியர், பிரிவெனாதிபதி மற்றும் அதிபர் என இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றி, தனது அறிவின் மூலம் எமது நாட்டுப் பிள்ளைகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்பதை நாம் அறிவோம்.

குறிப்பாக, இப்பிரதேசத்தின் கல்வி கற்றலை ஊக்குவிக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு 6ஆம் தரம் முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தேவையான நிதி உதவிகளை வழங்குவதோடு, ஏனைய வசதிகளைச் செய்துகொடுத்து, உதவி தேவைப்படும் மக்களுக்கு எந்நேரமும் கைகொடுத்தமை, பிரதேசப் பிள்ளைகளின் தர்ம அறிவை மேம்படுத்துவதற்காகத் தர்ம பாடசாலைகளை ஆரம்பித்தமை என நாயக்க தேரரின் வழிகாட்டலிலும் அர்ப்பணிப்பிலும் முன்னெடுக்கப்பட்ட சமூகப் பணிகளை இவ்வேளையில் நினைவுகூர வேண்டும்.

புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இந்நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்லப் பாரிய பணிகளைச் செய்து வருகின்றோம். அந்தப் புதிய யுகத்தில், உங்களைப் போன்று மக்களுக்காகப் பரந்த சமூகப் பணியை ஆற்றி வரும் மதத் தலைவர்களின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கம் ஊவா மாகாணத்திற்கு, குறிப்பாகப் பதுளை மாவட்டத்திற்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது நாம் அந்தத் துயரங்களிலிருந்து படிப்படியாக மீண்டு, வலுவாக எழுந்து நிற்கும் ஒரு காலப்பகுதியில் இருக்கின்றோம். அந்த அனர்த்தத்தினால் தமக்கு நெருக்கமானவர்களின் உயிர்களை இழக்க நேர்ந்ததின் வலிகளையும் தாங்கிக்கொண்டு, மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பக்கபலமாக இருப்பதற்கு, புதிதாக சங்கநாயக்கர் பதவியைப் பெற்றுக்கொண்ட உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன்,என தெரிவித்தார்

இந்நிகழ்வில் அமரபுர மகா நிகாயவின் ஊவா பிரிவின் அநுநாயக்கரும், பதுளை மைலகஸ்தென்ன போதிருக்காராமாதிபதி வணக்கத்துக்குரிய வதுபிட்டியே ஞானானந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தல பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு