தரமான உயர்கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (2025 டிசம்பர் 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவப் பிரதமர் அவர்கள் முன்வைத்த இந்த முன்மொழிவுக்கு அமைய, இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் நிறுவனங்களுடனும் கூட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது:
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ’பெல்ட் அண்ட் ரோட்’ பிராந்தியங்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் அமைப்புகளின் கூட்டணி (ANSO): காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பான சர்வதேச நீர் உச்சிமாநாட்டை நடத்துவது தொடர்பான திட்ட ஒப்பந்தம்.
பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகம்: மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus) நோய் பரவுதல், அவற்றின் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை மற்றும் மரபணு பன்முகத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்யும் நோக்கிலான ’ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ (Research Collaboration Agreement) மற்றும் ’பொருள் பரிமாற்ற ஒப்பந்தம்’ (Material Transfer Agreement).
களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் கியோத்தோ தகவல் அறிவியல் பட்டதாரிப் கல்லூரி: கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தல், பீடங்கள் மற்றும் மாணவர்களுக்கிடையிலான கல்வி, தொழில்சார் மற்றும் கலாசார நடவடிக்கைகள் மூலம் நட்புறவை வளர்த்தல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்துதல் போன்ற நோக்கங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras): இருதரப்பு இணக்கப்பாட்டுடன் கூடிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஏற்படுத்துதல், கல்வித் தகவல்கள் மற்றும் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளுதல், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் கூட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்துதல் போன்ற நோக்கங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாசார உறவுகள் பேரவை (ICCR): வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வருகைதரு பேராசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஆகியவற்றுக்கே அமைச்சரவையின் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரதமர் ஊடகப் பிரிவு





