பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செக் குடியரசின் தூதுவர் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு.

இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் கலாநிதி எலிஸ்கா சிகோவா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 25 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான செக் குடியரசின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் இதன்போது பாராட்டினார். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், ஜனநாயக ஆட்சி முறைக்கான புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இரண்டு அமைதியான தேர்தல்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியமைக்கு தூதுவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. தூதுவர் சிகோவா இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒப்பந்தங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தனது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே விஞ்ஞானம் மற்றும் கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அதற்று கல்வி பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள், ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அறிவு பரிமாற்ற திட்டங்களைச் சேர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சூழல் பாதுகாப்பு மற்றும் நகர நிலைபேற்றுத்தன்மைக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட தேசிய அளவிலான திட்டமான " Clean Sri Lanka " திட்டம் குறித்து தூதுவருக்கு பிரதமர் விளக்கமளித்ததுடன், இலங்கையின் கலாசார பாரம்பரியம், இயற்கை சூழல் மற்றும் சுற்றுலா சூழல் முறைமைகளை அனுபவிக்க செக் நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பில், செக் குடியரசில் உள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பி.ஆர்.எஸ்.எஸ். குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

இலங்கை போன்ற நாடுகளுக்கு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையை நீக்குவதற்கும் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஆலயம், ஐ நா பெண்கள் அமைப்பு மற்றும் கிரிசாலிஸ் அமைப்பு (Chrysalis) ஆகியன மார்ச் 25 ஆந் திகதி கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ’அவளுக்காக ஒன்றுபட்டு வளமுறுவோம்: இலங்கையில் தாங்குதிறனை கட்டியெழுப்புதல், உள்ளடக்கியதன்மை மற்றும் சமத்துவத்திற்கான குரல்கள்’ (’THRIVE- Together for Her: Resilience-building, Inclusivity, and Voices for Equality in Sri Lanka’ ) திட்டத்தின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

THRIVE என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு, ஐ நா பெண்கள் அமைப்பு மற்றும் கிரிசாலிஸ் அமைப்பு (Chrysalis) ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து ஆண்டு திட்டமாகும். இந்த திட்டம், இலங்கையில் ஐ.நா. அமைப்பின் பணிகளை வழிநடத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்தாலும் ஐக்கிய நாடுகள் சபையாலும் இணை கைச்சாத்திடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. பேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்பு சட்டகம் 2023-2027 இன் "பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்" என்ற 6வது விளைவை அடைந்துகொள்வதற்கு பங்களிக்கிறது.

மன்னார், கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, மொனராகலை மற்றும் கொழும்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் தோட்டத் துறையில் உள்ள பெண்களை இலக்காகக் கொண்டு, நெருக்கடிகள், பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்து மீள்வதற்கும், விளிம்புநிலை பெண்களின் பொருளாதார மற்றும் சமூக தாங்குதிறனை வலுப்படுத்துவதன் மூலம், இலங்கையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கும் கட்டமைப்பு மற்றும் மனப்பான்மை மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

"இலங்கை மானிட அபிவிருத்தி குறியீட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளது, கல்வியறிவு விகிதம் 92% ஐ விட அதிகமாக உள்ளது, மேலும் பல்கலைக்கழக மாணவர்களில் 60% க்கும் அதிகமானோர் பெண்களாவர். இருப்பினும், 35% பெண்கள் மட்டுமே சம்பளம் பெறும் தொழிற்படையில் பங்கேற்கின்றனர். வேலை வாய்ப்புகள் மற்றும் சம ஊதியம் மூலம் பெண்கள் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான வழிகளையும் வாய்ப்புகளையும் கண்டடைவது அவசியம், சம்பளம் இல்லாத வேலை மற்றும் சம்பளம் இல்லாத பராமரிப்பு வேலைகள் பெரும்பாலும் பெண்களால் விகிதச் சமமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இலங்கை பாராளுமன்றம் 2024 இல் பெண்கள் வலுவூட்டல் சட்டத்தை நிறைவேற்றியது, இதில் பெண்களின் உரிமைகளை மேற்பார்வையிடுவதற்காக ஒரு சுயாதீன தேசிய ஆணைக்குழுவை நிறுவதல், பெண்களுக்கான தேசிய நிதியமொன்றை உருவாக்குதல் என்பனவும் அடங்கும். ஆணையாளர்களை நியமிப்பதற்கான நிர்வாக செயன்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஒரு அரசாங்கமாக, தேசிய வரவு செலவுத்திட்டத்தின் கீழ் மகளிர் மற்றும் இளம் பெண்களுக்கு பல சலுகைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். கல்வி அமைச்சர் என்ற முறையில், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி வய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இலவச சீருடைகள், காலணிகள், சுகாதார வசதிகள், உணவு, புத்தகங்கள் மற்றும் உதவித்தொகை வழங்குவதற்கும், பொருளாதாரத் தடைகள் காரணமாக எந்தக் பிள்ளையும் பாடசாலையை விட்டு இடைவிலகாதிருப்பதற்கும் நிதி ஒதுக்கியுள்ளோம் என்று நான் நம்பிக்கையுடன் கூற முடியும்.

எவ்வாறாயினும், 90% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என்பது புள்ளிவிபர ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் இலங்கையின் உலகளாவிய பாலின இடைவெளிச் சுட்டெண்146 நாடுகளில் 122 இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, இது பாலின பாரபட்சம் என்பது பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல என்பதை குறிக்கிறது. இது பாலினம், இனம், மதம் மற்றும் வயதை கடந்த ஒரு சமூக சவாலாகும்.

மேலும், புதிய அச்சுறுத்தல்களும் உருவாகி வருகின்றன. டிஜிட்டல் கருவிகள் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரும் ஆற்றலை வழங்கினாலும், பெண்களை மௌனமாக்குவதற்கும், சார்பியங்களை அதிகரிப்பதற்கும், துன்புறுத்தலைத் தூண்டுவதற்கும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாலினம், இனம், மதம் அல்லது வயதைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் டிஜிட்டல் யுகத்தில் வளம்பெறுவதற்கான சம வாய்ப்புகள் உள்ள ஒரு உள்ளடக்கிய டிஜிட்டல் வெளியை உருவாக்குவது அவசியம். பாலின டிஜிட்டல் பிளவை நீக்குவதற்கும், பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள், டிஜிட்டல் பொருளாதாரத்தில் சுயாதீனமாக பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

பாலின சமத்துவமின்மை என்பது ஒரு பெண்கள் பிரச்சினை அல்ல, இது கொள்கை மாற்றம், கல்வி, மனப்பான்மை மற்றும் நடத்தை மாற்றம் ஆகியவற்றை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. இலங்கை போன்ற நாடுகளுக்கு, அனைத்து பெண்களுக்கும் சமமான வாய்ப்புகள் உள்ள எதிர்காலத்தை உருவாக்குவதில் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியமாகும். ”

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ்; ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா. மகளிர் பிரதி பிராந்திய பணிப்பாளர் மரியா ஹோல்ட்ஸ்பெர்க்; ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரூ ஃபிராஞ்ச்; மற்றும் அதிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெண்களுக்கு இடம்பெறும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கம், கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று (22) ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் வெற்றிகளுக்கும், சமூக அங்கீகாரத்திற்கும் உட்பட்ட மகளிர் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

சமூக, பொருளாதார அந்தஸ்து, கல்வி தகுதிகள், மதம், இனப் பாகுபாடு, அங்கவீனம் அல்லது வேறு எந்தவொரு அடையாளங்களையும் கவனத்திற்கொள்ளாது அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தேசத்தை வளப்படுத்திய சக்திவாய்ந்த பெண்கள் இருந்த நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது. அவ்வாறான பலர் இன்று இந்த பார்வையாளர்கள் மத்தியில் இருப்பதை நான் அறிவேன்.

அரசியல் செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகளின் மாற்றங்களுக்கு பெண்கள் தலைமைத்துவம் வழங்கி பரிணாமம்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் நாம் அரசு என்ற அடிப்படையில் பல்வேறு கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஊடாக பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2024 பெண்களை ஊக்குவிக்கும் சட்டத்தின் ஊடாக புதிய சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். பாலின சமத்துவத்தை நிறுவனமயமாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையாக அது பார்க்கப்பட்டது.

கிராமிய பெண்களுக்கென தொழில் முயற்சியாண்மை மற்றும் டிஜிட்டல் நிதி கல்வியறிவு வேலைத்திட்டங்கள் மற்றும் பெண்கள் உட்பட முழு சமூகத்தினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒன்பது அமைச்சுக்களை ஒதுக்கி தொழில் படையணியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் அவ்வாறான பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தலைமைத்துவம், தீர்மானங்களை எடுத்தல் மற்றும் பொருளாதாரத்திற்குள் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. பொருளாதார சந்தர்ப்பங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் ஊடாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவர்களை ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பங்களை அடையாளம் காண்பது உட்பட இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பாராளுமன்றத்தினுள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை இருமடங்காக அதிகரித்துள்ளோம். எனினும் தொடர்ந்தும் 10 வீதம் மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. அரசியலைப் போன்று தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலும், தலைமைத்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய தொழில்களில் பெண்கள் தொழில் படையணியின் பங்களிப்பு ஆண்கள் தரப்புடன் ஒப்பிடுகையில் 32 வீதமாகவே காணப்படுகிறது.

உங்களால் அனைத்தையும் செய்ய முடியுமென கூறி வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை என்பது பெண்களால் முடியாத காரியமென சிலர் கூறுகின்றனர். எம்மால் அனைத்தையும் செய்ய முடியாது. எம்மால் செய்ய இயலுமானதை செய்வதே எமக்கு தேவையானது. பெண்களை வரவேற்கும் குடும்பம் மற்றும் சமூகமொன்றை உருவாக்குவதே எமக்கு தேவையானது. பெண்களுக்கு கூடுதல் ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே தேவையானது. இதற்கென ஊதியம் பெறாத பெண்களின் விருந்தோம்பல் செயற்பாடுகள் அடையாளம் கண்டு அவை பாராட்டப்பட வேண்டும்.

பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடு காண்பிப்பது சமூகத்தில் எந்த இடத்திலும் இடம்பெறுகிறது. இவற்றை நிறுத்துவதற்கு அவசர சட்டங்கள் மற்றும் சமூக மறுசீரமைப்பு தேவையானதாகும். பாலின சமத்துவத்தை நோக்கிச் செல்லும் பயணம் நாம் தனித்து செல்லும் ஒன்றல்ல. ஐக்கிய நாடுகளின் நிரந்தர அபிவிருத்தி இலக்கு, விசேடமாக ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவத்திற்கென அர்ப்பணிப்புடன் செயலாற்றும் தேசமாக பெண்களை ஊக்குவித்தல் மற்றும் அதற்கென பூகோள ரீதியிலான முயற்சிகளுடன் சர்வதேச தொடர்புகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வேகமாக அபிவிருத்தியடையும் உலகிற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கென நாம் பெண்களை ஊக்குவிப்பது மாத்திரமன்றி முற்றிலும் எமது தேசத்தின் அபிவிருத்திக்கும் பங்களிப்பை பெற வேண்டும். இங்கு இலங்கையானது, ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களின் உரிமைகளுக்கான வலுவான ஆலோசனை தரப்பாக உள்ளது.

தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு பதில் வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.எம்.ருஷான்ஹவுதீன், உதவி பொதுச் செயலாளர் பன்ச்சலீ ரத்னாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மார்ச் 21ஆம் திகதி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக நீர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், நீர் இணைப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் பிரதமரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், உலக நீர் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிக்குழாம் தொழில்வான்மையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களும் பிரதமரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

நீர் வழங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து, 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் 41,234 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அளவிலான நீர் திட்டங்கள் மற்றும் சமூக நீர் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்தல், பாதுகாப்பான நீர் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையில் தேசிய முக்கியத்துவத்தை அறிந்து, கம்பஹா - அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட இணைந்த நீர் வழங்கல் திட்டம், பொல்கஹவெல - அலவ்வ மற்றும் பொத்துஹெர இணைந்த நீர் வழங்கல் திட்டம், மத்துகம மற்றும் அகலவத்தை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சம்பந்தப்பட்ட கடன் வழங்குனர்கள் கடன் வசதிகளை இடைநிறுத்தியதால் தாமதமடைந்த தம்புத்தேகம நீர்வழங்கல் திட்டம் என்பனவற்றை துரிதமாக நிறைவு செய்வதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே எமது அரசாங்கத்தின் கொள்கையான  "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கினை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஒரு முன்னோடி நிறுவனம் என்ற வகையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலிமையுடனும் தைரியத்துடனும் செயற்படும் என்று தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் தீப்தி யு. சுமணசேகர உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக வங்கியின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் கலந்துகொண்டார்.

’அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளின் கீழ் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக வங்கியின் தலைமையகத்தில் மார்ச் 17ம் திகதியிலிருந்து 20ம் திகதி வரை உலக வங்கி குழுமத்தின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார்.

இந்த மாநாடு டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பொருளாதார, சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வது மற்றும் அதன் பங்கினை ஆராயும் நோக்கில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல்மயப்படுத்தல் செயற்பாடுகளுக்கென இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் நிரந்தர டிஜிட்டல் பரிணாமத்தை முன்னிட்டு வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உபாய மார்க்கங்கள் தொடர்பில் பூகோள நிபுணர்களுடன் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ தனது கருத்துக்களைப் பரிமாற்றிக்கொண்டார்.

பூகோள டிஜிட்டல் மாநாட்டிற்கு இணைவாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் பிரதம அதிகாரிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.கே.ஜீ.ஹரிச்சந்த்ர உள்ளிட்டவர்களையும் சந்தித்தார்.

இலங்கையின் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதிகளின் (EFF) முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் 2025 பெப்ரவரி மாதத்தில் EFF இன் கீழ் மூன்றாவது மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் IMF நிறைவேற்றுக் குழுவின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் பணிக் குழு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமரின் செயலாளர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள EFF மீளாய்வின் மைல்கல்லை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்குமென பிரதமரின் செயலாளர் இதன்போது தெரிவித்தார். பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்குதல், வரி செயன்முறையின் செயற்திறனை மேம்படுத்தல் மற்றும் முழு பொருளாதார பயன்களையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அரசின் தொடர்ச்சியான டிஜிட்டல்மயப்படுத்தல் முயற்சிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு உலக வங்கி வழங்கும் பூரண ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து, உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரயிசர் அவர்களுடனும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார். இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவது மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென ரயிசர் அவர்கள் இதன்போது உறுதியளித்தார்.

நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கென தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் தேவைப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் ஊடக பிரிவு

மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் இடம்பெற்று வருகிறது என்பது எதிர்க்கட்சியினரின் பேச்சு மற்றும் செயல்களில் இருந்து தெளிவாகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சில விமர்சனங்களை அவதானிக்கும் போது மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் (System Change) இடம்பெற்று வருவதாக தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு இன்று (20) உரையாற்றும் போதே பிரதமர் இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற இந்த ஒரு மாத காலமாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இது பற்றி நாம் விவாதம் செய்து உரையாடல்களில் ஈடுபட்டோம். இதன் போது பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்தித்து வரவு செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடினோம்.

எமக்கு முன்வைக்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் விமர்சனத்தின் ஊடாக வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது.

என்றாலும், வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் முதல் நாள், எதிர்க்கட்சிகளின் பேச்சுக்களிலும், இன்று நடைபெற்ற உரைகளிலும் முன்னேற்றம் உள்ளதா என நான் ஆராய்ந்து பார்த்தேன். ஏனென்றால் ஒரு மாத உரையாடலில் இருந்து சில வளர்ச்சியையும் மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் சில பேச்சுக்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கின்றபோது, அவை இன்னும் அப்படியே இருப்பதாகவே உணர்ந்தேன்.

இந்த விவாதத்தில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு வகையான தாழ்வுச் சிக்கலால் ஏற்பட்ட வலியால் ஏற்பட்டதாக உணர்ந்தேன். இவை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள். வரவு-செலவுத் திட்ட உரையாடல் குறித்து கவனம் செலுத்தும் போது, அரசாங்கம் சாதிக்க முயலும் முறைமை மாற்றம் நிச்சயம் நிகழும் என்று நம்பிக்கையுடன் கூறலாம்.

ஒரு முறைமையை மாற்றினால், அது ஒரே இடத்தில் நடக்கின்ற ஒன்றல்ல. சமூகத்தில் உள்ள அதிகார உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு அமைப்பு மாற்றத்தில், ஒரு இடத்தில் உள்ள உறவுகள் மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த வரவுசெலவுத்திட்டத்தை விமர்சிக்கின்ற அல்லது, இந்த முறை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால், முறை மாற்றம் ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வரவு செலவுத் திட்டம் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் பழைய முறைமையில் அதிகாரத்தை வைத்திருந்தவர்கள் மற்றும் அந்த அதிகாரத்தை ஒரு சிறப்புரிமையாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து தான் வருகிறது. சிறப்புரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகம் ஜனநாயகமானது அல்ல. அதை மாற்றவே நாம் முயற்சிக்கிறோம். அதிகாரத்தை தவறாக அனுபவித்துவந்த சமூகத்தை பெரும்பான்மையானவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தால் மகிழ்ச்சியடைந்தவர்கள் கடினமாக உழைத்து, மிகவும் நியாயமான முதலீடுகளைச் செய்து, பொறுப்புடன் நடந்துகொள்ளும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகும். இன்று அவர்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற அரசியல்வாதிகளின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை. இன்று அவர்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறது. அவர்களால் பல வருடங்களை திட்டமிட்டு செயற்பட முடிகிறது.

அரச சேவையில் உள்ளவர்கள் தமக்கு ஒரு இடம் கிடைத்துள்ளதால் இந்த மாற்றத்தை பாராட்டுகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் கிடைத்துள்ளது. தங்கள் கடமையை சுதந்திரமாகச் செய்ய முடியும் என்ற மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளனர்.

சமூகத்தில் வாய்ப்புகளை இழந்த பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெருந்தோட்ட மக்கள் உட்பட பலர் இன்று நிவாரணம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரின் எதிர்காலப் பொருளாதார வழிகள் திறக்கப்படுவதை அவர்களால் பார்க்க முடிகிறது. பொருளாதார நன்மைகளை இழந்த பெருமளவிலான மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழி கிடைத்துள்ளது.

வேலையற்ற இளைஞர்கள் குறித்து பல விவாதங்கள் நடந்தன, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தகுதிக்குப் பொருந்தாத வேலைகளை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைத் திறக்கும் முறைமையை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதே யதார்த்தமாகும். தற்போதும் பல வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆட்சியில் இருந்த அரசுகள் எடுத்த முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன. மேலும் சில வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளன.

மக்களின் எரியும் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது அதிகாரத்தையும் சலுகைகளையும் பெற்றவர்கள் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அனைவரையும் உள்ளடக்கிய வகையில் முடிவெடுக்கும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பெரும் தியாகங்களையும் கடின உழைப்பையும் செய்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு