கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகக் காணப்படும் பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் நடைபெறும் “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், ஏப்ரல் 21ஆம் திகதி உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பராமரிப்புச் சேவைகள் பொருளாதார மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் அடிப்படை அம்சங்களாகும் என்றும், அதனை இனிமேலும் புறக்கணிக்க இயலாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 21 முதல் 24 வரை நடைபெறும் இந்தப் பிராந்திய நிகழ்ச்சியானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி, நாடுகளுக்கிடையிலான அனுபவப் பகிர்வு, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் பாலின ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிலையான பொருளாதாரத்திற்கான வழிகளைக் கண்டறியும் ஒரு பிராந்திய மேடையாகச் செயற்படுகிறது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
பெண்கள் மேற்கொள்ளும் பராமரிப்புச் சேவைகள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமை குறித்த பிரச்சினைகளை இதற்கு மேலும் புறக்கணிக்க இயலாது. இது பொருளாதாரச் செயற்பாடுகளையும் சமூகத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவசியமான ஒரு அங்கமாகும். வீட்டுப் பணி, சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு அல்லது சமூக ஒத்துழைப்பு என எதுவாக இருப்பினும், அவை முறைசார்ந்த மற்றும் முறைசாரா பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. பராமரிப்புச் சேவை என்பது வெறும் பராமரிப்போடு மாத்திரம் நின்றுவிடுவதில்லை. குறிப்பாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் மூலமாக பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் இனங்காண வேண்டும்.
ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக இருக்கின்றது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தலாகாது. அதேநேரம், பெண்கள் தொழில் சந்தையில் இணைவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். குடும்பத்தையும் சமூகத்தையும் கொண்டு நடத்துவதற்காக அவர்கள் ஊதியமின்றி மேற்கொள்ளும் பணிகள் மூலம் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தின் மிக முக்கியமான, அதேநேரம் இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படாத ஒரு துறையாகும்.
இலங்கையின் பராமரிப்புச் சேவைகள் குறித்துக் கவனம் செலுத்துகையில், பெண் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஏனைய காரணிகளால் அவர்கள் தொழில் சந்தையிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். முறைசாரா மற்றும் ஊதியமற்ற உழைப்பு ஆகிய இரண்டு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றை வரையறுக்கும் விதம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொழில் சந்தைப் பங்களிப்பு என்பது வெறும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவது மாத்திரமல்ல; அது வாய்ப்புகள், கௌரவம் மற்றும் உள்வாங்கப்படுதல் பற்றிய விடயமாகும். ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ உழைப்பை வழங்குதல், முறைசார்ந்த அல்லது முறைசாரா உழைப்பு என எதுவாக இருந்தாலும் அதனை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடலாகாது. பராமரிப்புச் சேவை என்பது பொருளாதார ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பும் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான துறையாகும்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் தொடர்பான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இச்செயற்பாட்டின் மூலம், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை தேசிய வளர்ச்சிக்கான அத்தியாவசிய அங்கமாக அங்கீகரித்தல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தல், பராமரிப்புப் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம், என, குறிப்பிட்டார்.
ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புச் சேவைகள், சமூக மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளின் இன்றியமையாத பிரிவுகளாகும் என்றும், அவை தொழிலாளர் சந்தைப் பங்கேற்பைச் சாத்தியமாக்கி, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளித்து, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வலியுறுத்தியுள்ளது. தெற்காசியா முழுவதிலும் இப்பராமரிப்புச் சேவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தரமான பராமரிப்புச் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதே பாலின சமத்துவமின்மைக்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, ’கௌரவமான பணியும் பராமரிப்புப் பொருளாதாரமும்’ தொடர்பான முன்மொழிவு ஒன்றினை ILO அங்கீகரித்துள்ளது. பராமரிப்பைத் தொழில் சந்தையின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியாக இனங்கண்டு, உயர்ந்த தரத்திலான சேவைகளை வழங்குவதற்கும், பராமரிப்புப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த உரையாடல்கள் மூலமாக தெற்காசியா முழுவதிலும் பராமரிப்புச் சேவை அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





