சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக வழிபாட்டுத் தலங்களை மாற்றி அமைக்க எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
விஹாரைகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத வழிபாடுகளுக்கு மட்டுமன்றி, நற்பண்புகளை வளர்க்கும், சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வாதுவ, பொஹொத்தரமுல்ல ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மஹா நிகாயவின் மஹிகர்ஜனாராம விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்தூபியின் கும்பத்தைத் திறந்து வைத்தல் மற்றும் பிக்கு வாசஸ்தலத்தை திறந்து வைத்தலுக்கான விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ஜூன் 26 ஆம் திகதி இதனைத் தெரிவித்தார்.
ஸ்தூபியின் கும்பத்தைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக, எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ தர்மாயத்தனத்தின் அதிபரும், தெற்கு இலங்கையின் பிரதம சங்கநாயக்கரும், சிங்கப்பூர் மற்றும் மலேசிய போதிராஜ நிலையங்களின் அதிபருமான கலாநிதி வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்த பிரதமர், சூழல் தூய்மை மற்றும் பாடசாலைகளின் ஒழுக்கப் பண்புகளை மேம்படுத்தல் மற்றும் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.
அதனைக் தொடர்ந்து, விஹாரையின் புதிய தூபியின் கும்பத்தினை திரைநீக்கம் செய்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், தூபிக்கு மலர் பூஜையைச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
இந்த விஹாரையின் தூபிக் கும்பத்தினை திரைநீக்கம் செய்து வைத்து, புதிய பிக்கு வாசஸ்தலத்தை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் இந்த உன்னதமான புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இது இந்த விஹாரையின் எதிர்காலப் பயணத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஒரு புதிய படியாகும்.
இது, கடந்த கால விழுமியங்களைப் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததிக்கு அந்த உறுதியான உரிமைகளைக் கையளிக்கும் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும்.
வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதென்பது வெறுமனே செங்கல், மணல் கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது மாத்திரமல்ல. அது மக்களின் இதயங்களை ஒன்றிணைத்து, நற்பண்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் சூழலை உருவாக்கும் ஒரு பணியாகும். அந்தப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.
சமூகத்திற்கும் விகாரைக்கும் இடையே பெரும் பிணைப்பு இருக்கின்றது. அது சமூக வாழ்வுடனும் ஒழுக்கத்துடனும் ஒன்று கலந்த விடயமாகும்.
ஆயினும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்களின் வேலைப்பளு மிக்க வாழ்க்கை முறையினால் அந்தப் பிணைப்பு குறைந்திருப்பதை எம்மால் உணரக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், நமக்குத் துன்ப துயரங்கள் ஏற்படும்போது, சிக்கல்கள் வரும்போது முதலில் நினைவுக்கு வருவது நமது மதமே. ஏனெனில் அது நமது ஆன்மாவிற்குள் இருக்கும் ஒரு விடயமாகும். ஒரு நாடு பொருளாதாரத்தால் மாத்திரம் முன்னேறுவதில்லை.
மக்களின் சிந்தனைகள் தூய்மையாகி, ஒழுக்கம் மேலோங்கும்போதே ஒரு நாட்டில் உண்மையான மறுமலர்ச்சி ஏற்படும். அந்தப் பயணத்திற்கு மகா சங்கத்தினரும் இத்தகைய விகாரைகளும் பெற்றுக்கொடுத்து வரும் முழுமையான பங்களிப்பை நான் இந்த வேளையில் கௌரவத்துடன் பாராட்டுகிறேன்.
இந்நாட்டின் பண்டைய பௌத்த அறிவுடன் பின்னிப்பிணைந்திருக்கும் கலாச்சாரம் பற்றி ஆராய்வதற்காக அனுராதபுரம், திஸ்ஸமஹாராமய மற்றும் யாப்பஹுவ ஆகிய பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மல்வத்து மஹா விஹார பிரிவின் மேல் மாகாண பிரதம சங்கநாயக்கர், கொரொஸ்தூவ வஜ்ரகொத் மஹா விஹாராதிபதி, அகில இலங்கை சாசனாரக்ஷக பல மண்டலத்தின் முன்னாள் பதிவாளர் சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய கோனதுவே குணானந்த தேரர், யடவர தர்ம வர்தனாராமதிபதி மிள்ளனிய சாசனாரக்ஷக பல மண்டலத்தின் தலைவர் பாயாகல பிரதேச சங்க சபையின் உபாதயாய பரித்த பாணக்க பூஜ்ய யடவர ஞானசிறி தேரர், நெஹின்ன ஸ்ரீ விசுத்தாராமதிபதி வினய விசாரத பரித்த பாணக்க வணக்கத்துக்குரிய படதூவே சிறிவிமல நாயக்க தேரர் மற்றும் வாதுவ பொஹொத்தரமுல்ல ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ நிகாய மஹிகர்ஜனாராம விஹாரையின் நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி, பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், களுத்துறை பிரதேச சபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





