1ஆம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சகலவித நற்பண்புகளும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் மிக்க எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதற்கான ஆரம்ப அடித்தளமே இன்றைய தினம் இடப்படுகின்றது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சகலவித நற்பண்புகளும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் மிக்க எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதற்கான ஆரம்ப அடித்தளமே இன்றைய தினம் இடப்படுகின்றது. புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் இப்பண்புகள் வளர்த்தெடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை வழங்குவதற்கான பாரிய பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அத்துருகிரிய, ஜயவர்தனபுர குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெற்ற, 2026ஆம் ஆண்டிற்காக முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் தேசிய நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மாணவ மாணவிகளுடன் இணைந்துகொண்ட பிரதமர், பாடசாலை வளாகத்தில் கருங்காலி கன்று ஒன்றினை நட்டு வைத்ததோடு, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட முதலாம் தர வகுப்பறைகளைக் கண்காணித்த பின்னர் மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இணையாக, நாடு தழுவிய ரீதியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதைக் குறிக்கும் வகையில், அத்துருகிரிய ஜயவர்தனபுர குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவர் பதிவு இடாப்பில் முதலாம் தர மாணவர்களின் பெயர்களைப் பிரதமர் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பாடசாலைச் சீருடைகள் மற்றும் பாடவிதானம் சார்ந்த செயற்பாட்டுப் புத்தகங்களையும் வழங்கிவைத்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
"நாட்டின் பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்வதைக் காணும் வகையில், புத்தகப் பையின் சுமையைக் குறைத்து, அழுத்தங்களற்ற கற்றல் சூழலை உருவாக்குவது புதிய கல்வி மறுசீரமைப்பின் மிக முக்கியமான அம்சமாகும். மனதிற்கு இனிய பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கான ’கனவுப் பாடசாலை’ திட்டத்தை யதார்த்தமாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதேபோன்று, 2026ஆம் ஆண்டில் ஆறாம் தர மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த முடியாமல் போன கல்வி மறுசீரமைப்புகளை, எதிர்காலத்தில் அந்தப் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களையும் நாம் வகுத்து வருகின்றோம்.
புதிய மறுசீரமைப்புகளின் ஊடாகத் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய பாடத்துறைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதும், விஞ்ஞானக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சூழல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதும், ஆங்கிலம் மற்றும் இரண்டாம் மொழிக் கற்பித்தலுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் ஆரம்பக் கல்வியின் அடிப்படையாக அமைந்துள்ளன.
பல தசாப்தங்களாக நாம் புத்தக அறிவை மாத்திரம் பெற்றுக்கொடுக்கும், போட்டித்தன்மை மிக்க கல்வி முறைமைக்கே பழகியிருக்கின்றோம். அத்தகைய முறைமையினால் பிள்ளைகள் கல்வியைவிட்டு விலகும் போக்கு அதிகரித்து வருகின்றது. எனவே, ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியைப் பாதுகாக்கும் எமது அரசாங்கத்தின் பொறுப்பிலிருந்து எம்மால் ஒருபோதும் விலகிவிட முடியாது.
ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வி முறைமையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த மறுசீரமைப்பை ஒரு ’பரிவர்த்தனை ரீதியான மாற்றம்’ என நாம் அழைப்பதற்குக் காரணம், இது பாடவிதானத்தை மாத்திரம் மாற்றாமல் ஒட்டுமொத்த கல்வி முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதனாலேயே ஆகும்.
இந்தப் பரிவர்த்தனை செயல்முறையின் போது பிள்ளைகளின் மனச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாகச் சமநிலையான ஆளுமையைக் கொண்ட எதிர்காலப் பிரஜையை உலகிற்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.
எழுத்துகளை மாத்திரமன்றி வாழ்க்கையைப் பற்றியும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்தக் கல்வி மறுசீரமைப்பினூடாகத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
பெற்றோரின் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிள்ளையின் கல்வி பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை மிக உறுதியாக உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்,எனக் கூறினார்
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, கடுவலை நகர முதல்வர் ரஞ்சன் ஜயலால், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, அத்துருகிரிய குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் நதீகா தர்மதாச, கல்விச் செயலாளர்கள், கல்வித்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





