பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தினதும் (IFAD) இலங்கை அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் ’சிறு அளவிலான விவசாய முயற்சிப் பங்காளித்துவத் திட்டத்தின்’ (SAPP) ஊடாக, கிராமப்புற இளைஞர், யுவதிகளை விவசாய முயற்சிகளில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட "SAPP" தேசிய இளைஞர் விவசாய - முயற்சிக் கண்காட்சி மற்றும் வர்த்தகங்களுக்கிடையிலான (B2B) தொடர்பாடல் மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இன்று (28) முற்பகல் பத்தரமுல்லை வொட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்:

நாட்டில் காணப்படுகின்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இவ்விழாவை ஏற்பாடு செய்தமையைப் பாராட்டுகின்றேன். நாட்டின் விவசாயத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் நீங்கள் அனைவரும் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள். உங்களைப் போன்ற திறமைமிக்க விவசாய முயற்சியாளர்களைக் காணக் கிடைத்ததையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பாதுகாப்பு, ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. ’Grow and Sell’ போன்ற எண்ணக்கருக்களினால் உற்பத்திப் பொருளாதாரம் பலம்பெறுகின்றது.

கொவிட் நெருக்கடி காலத்திலோ அல்லது தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழல்களின் போதோ நாடுகளின் உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிடின், அந்நாடுகளின் பொருளாதாரம் சவாலுக்குள்ளாகும். குறிப்பாக, தலைவர்களின் சிறிய தீர்மானங்களினால் கூட விநியோகச் சங்கிலி பாதிக்கப்படக்கூடும்.

அதேபோல், காலநிலை மாற்றங்களினாலும் விவசாயத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மற்றும் சுற்றாடல் நிலைமைகளை முன்கூட்டியே எதிர்வு கூறுவது கடினமாகும்போது விவசாயத் துறை பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாய முயற்சியாளர்களாகிய உங்களது பங்களிப்பு என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மாத்திரமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்பின் ஊடாகத் தேசியப் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒரு பங்களிப்புமாகும். உங்களது திறமைகளை வெளிப்படுத்துவது உங்களுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது, எனத் தெரிவித்தார்.

IFAD மற்றும் SAPP போன்ற நிறுவனங்களின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், ஆற்றல்மிக்க இளைஞர் சமூகத்திற்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர் லதீஷா பிரியந்தி, SAPP பணிப்பாளர் சுனிமல் சந்திரசிறி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்...

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார்.

முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான சங்கநாயகருமான வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த நாயக தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பிரதமர், அதன்பின் வரலாற்று சிறப்புமிக்க கிரிவெஹெரயில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம விஷ்ணு மஹா தேவாலயத்தின் மாலை நேர பூஜையில் கலந்துகொண்ட பிரதமர், கதிர்காமம் ஸ்ரீ அபிநவாராம விஹாரஸ்தானத்தின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான ஆதிகரண சங்கநாயகருமான சாஸ்திரபதி வணக்கத்துக்குரிய கபுகம சரணதிஸ்ஸ நாயக தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, ஹொரண வாசனா பேக்கர்ஸ் நிறுவனத்தின் அதிபர் தயானந்த போம்புவல, கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். எம். ஹேரத், ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா” பிரதமரின் தலைமையில்

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த “நட்புறவு புத்தாண்டு விழா”, ஏப்ரல் 25ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

“அனைவருக்கும் துன்பங்கள் அற்ற, அமைதியான, இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றேன். அத்தோடு, நீங்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் கடமைகளையும் வழங்கிவரும் ஆதரவையும் பாராட்டுகின்றேன். இந்நாட்டு மக்களுக்காகப் பிரதமர் அலுவலகம் முன்னெடுக்க வேண்டிய சேவைகளை மென்மேலும் நேர்த்தியாக ஆற்றுவதற்கான வலிமையும் உறுதியும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டுப்புற விளையாட்டுகளையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய இந்த “நட்புறவு புத்தாண்டு விழா” நாள் முழுவதும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் உட்படப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 24ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான சமாதான நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து, சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்களாபிதான மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சமாதான நடைப்பயணம் இலங்கையில் நடைபெறுவது, ஒரு நாடு என்ற வகையில் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோல், உலக சமாதானம் என்பது நம் அனைவரதும் பிரார்த்தனையாகும். அந்த வகையில், இந்நிகழ்வில் பங்குபற்றக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் குறித்து அரசாங்கம் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் விசாரணைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சி அவசியமானது; ஆனால், எதிர்க்கட்சியிடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அவர்கள் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. இதனாலேயே அடிப்படை ஆதாரமற்ற விடயங்களை முன்வைத்து அரசாங்கத்தைச் சிரமப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாகக் கூறினார்கள். எனது கருத்துகளை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும் வரை நானும் காத்திருக்கின்றேன்.

கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு, மருத்துவக் கல்வி தொடர்பிலும் ஒரு குழுவை நியமித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சர்வதேச புகழ்பெற்ற “சமாதான நடைப்பயணம்” (Walk For Peace) மூன்றாம் நாள் நடைப்பயணம் பிரதமரின் பங்கேற்புடன் ஆரம்பம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைமை தாங்கிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நாட்டிற்கு வருகை தந்து, தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம விகாரையை நோக்கி அவர்கள் ஆரம்பித்த சமாதான நடைப்பயணத்தின் மூன்றாம் நாள், உபய விகார மகா சங்கத்தினரதும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினதும் பங்கேற்புடன் இன்று (24) முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமானது.

மூன்றாம் நாள் நடைப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உட்பட மகா சங்கத்தினரும், பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தலதா மாளிகையின் பத்திரிப்புவ முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் மகா சங்கத்தினர் பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம், மாவனெல்ல பெலிகம்மன வித்யாவர்த்தன பிரிவேனா பொத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி இச்சமாதான நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் உபய விகார மகா சங்கத்தினர், மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி. அபேகோன், தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகக் காணப்படும் பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெறும் “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், ஏப்ரல் 21ஆம் திகதி உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பராமரிப்புச் சேவைகள் பொருளாதார மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் அடிப்படை அம்சங்களாகும் என்றும், அதனை இனிமேலும் புறக்கணிக்க இயலாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 21 முதல் 24 வரை நடைபெறும் இந்தப் பிராந்திய நிகழ்ச்சியானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி, நாடுகளுக்கிடையிலான அனுபவப் பகிர்வு, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் பாலின ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிலையான பொருளாதாரத்திற்கான வழிகளைக் கண்டறியும் ஒரு பிராந்திய மேடையாகச் செயற்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

பெண்கள் மேற்கொள்ளும் பராமரிப்புச் சேவைகள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமை குறித்த பிரச்சினைகளை இதற்கு மேலும் புறக்கணிக்க இயலாது. இது பொருளாதாரச் செயற்பாடுகளையும் சமூகத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவசியமான ஒரு அங்கமாகும். வீட்டுப் பணி, சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு அல்லது சமூக ஒத்துழைப்பு என எதுவாக இருப்பினும், அவை முறைசார்ந்த மற்றும் முறைசாரா பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. பராமரிப்புச் சேவை என்பது வெறும் பராமரிப்போடு மாத்திரம் நின்றுவிடுவதில்லை. குறிப்பாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் மூலமாக பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் இனங்காண வேண்டும்.

ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக இருக்கின்றது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தலாகாது. அதேநேரம், பெண்கள் தொழில் சந்தையில் இணைவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். குடும்பத்தையும் சமூகத்தையும் கொண்டு நடத்துவதற்காக அவர்கள் ஊதியமின்றி மேற்கொள்ளும் பணிகள் மூலம் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தின் மிக முக்கியமான, அதேநேரம் இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படாத ஒரு துறையாகும்.

இலங்கையின் பராமரிப்புச் சேவைகள் குறித்துக் கவனம் செலுத்துகையில், பெண் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஏனைய காரணிகளால் அவர்கள் தொழில் சந்தையிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். முறைசாரா மற்றும் ஊதியமற்ற உழைப்பு ஆகிய இரண்டு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றை வரையறுக்கும் விதம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழில் சந்தைப் பங்களிப்பு என்பது வெறும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவது மாத்திரமல்ல; அது வாய்ப்புகள், கௌரவம் மற்றும் உள்வாங்கப்படுதல் பற்றிய விடயமாகும். ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ உழைப்பை வழங்குதல், முறைசார்ந்த அல்லது முறைசாரா உழைப்பு என எதுவாக இருந்தாலும் அதனை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடலாகாது. பராமரிப்புச் சேவை என்பது பொருளாதார ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பும் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான துறையாகும்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் தொடர்பான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இச்செயற்பாட்டின் மூலம், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை தேசிய வளர்ச்சிக்கான அத்தியாவசிய அங்கமாக அங்கீகரித்தல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தல், பராமரிப்புப் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம், என, குறிப்பிட்டார்.

ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புச் சேவைகள், சமூக மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளின் இன்றியமையாத பிரிவுகளாகும் என்றும், அவை தொழிலாளர் சந்தைப் பங்கேற்பைச் சாத்தியமாக்கி, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளித்து, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வலியுறுத்தியுள்ளது. தெற்காசியா முழுவதிலும் இப்பராமரிப்புச் சேவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தரமான பராமரிப்புச் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதே பாலின சமத்துவமின்மைக்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, ’கௌரவமான பணியும் பராமரிப்புப் பொருளாதாரமும்’ தொடர்பான முன்மொழிவு ஒன்றினை ILO அங்கீகரித்துள்ளது. பராமரிப்பைத் தொழில் சந்தையின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியாக இனங்கண்டு, உயர்ந்த தரத்திலான சேவைகளை வழங்குவதற்கும், பராமரிப்புப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த உரையாடல்கள் மூலமாக தெற்காசியா முழுவதிலும் பராமரிப்புச் சேவை அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு