’ஸ்வர்ணாபிவந்தனா 2026’ புனித தாதுச்சின்ன வழிபாட்டுப் புண்ணிய நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
2026 வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த ஆய்வுகள் பிரிவின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், கிரிபத்கொடை ஸ்ரீ சுதர்சனாராம புராண விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்துக்குரிய மாகொல மங்கள நாயக்க தேரரின் வழிநடத்தலில், கிரிபத்கொடை ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட ’ஸ்வர்ணாபிவந்தனா 2026’ புனித தாதுச்சின்ன வழிபாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 03 ஆம் திகதி கலந்துகொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,
இவ்வாறானதொரு உன்னதமான மத நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமையானது தான் பெற்ற பாக்கியம் எனத் தெரிவித்தார். இந்தப் புனித தாதுச்சின்னக் காட்சியில் சர்வக்ஞ தாதுச்சின்னம் மாத்திரமன்றி, சீவலி, அங்குலிமால, அனுருத்த மற்றும் மஹிந்த உள்ளிட்ட பல மஹா நாயக்க தேரர்களின் புனித தாதுச்சின்னங்களைத் தரிசித்து வழிபடுவதற்கான அரிய சந்தர்ப்பம் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும், நாட்டுக்கு ஆசீர்வாதம் கிடைப்பதற்கும் பெரிதும் உதவும் என்பதையும் பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.
இந்த மகத்தான புண்ணிய காரியத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வழிகாட்டிய விகாராதிபதி நாயக்க தேரர் அவர்களுக்கும், விகாரையின் நிர்வாக சபை உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் தனது கௌரவத்தையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





