பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஓமான் சுல்தான் ராஜ்யத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆலோசகர் திரு. பங்கஜ் கிம்ஜி அவர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

ஓமான் சுல்தான் ராஜ்யத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆலோசகர் திரு. பங்கஜ் கிம்ஜி தலைமையிலான தூதுக்குழுவினர், ஆகஸ்ட் 13 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளைப் பலப்படுத்துவதோடு, வர்த்தகக் கூட்டுறவுகளுக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கும் சாதகமான சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கும் ஓமான் தயாராக இருப்பதாகத் திரு. பங்கஜ் கிம்ஜி இதன்போது தெரிவித்தார்.

இலங்கைக்கு அதிகளவிலான முதலீடுகளை ஈர்ப்பது குறித்துக் கவனம் செலுத்திய பிரதமர், இலங்கையில் காணப்படுகின்ற பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பரிசீலிக்குமாறு ஓமான் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தினருக்கும் இடையே மேலும் நெருங்கிய உறவுகளைக் கட்டியெழுப்புவது குறித்தும் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் வர்த்தகக் கூட்டுறவுக்கான புதிய துறைகளைக் கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தனியார் துறைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகக் கூட்டுறவை இலகுபடுத்துவதற்கும், இலங்கை–ஓமான் வர்த்தக சபையை நிறுவுவது தொடர்பான முன்மொழிவொன்றையும் ஓமான் பிரதிநிதிகள் குழு இதன்போது முன்வைத்தது. வர்த்தக உறவுகளை மேலும் வளர்க்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஓமான் சுல்தான் ராஜ்யத்தின் தூதுவர் அகமட் அல்-ரஷ்டி, ஆலோசகர் அலுவலகத்தின் திட்டப் பிரிவின் பணிப்பாளர் மூசா அல்-கரூசி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையின் கல்வியை, மதிப்பீட்டு முறைமைகளையும் பரீட்சைகளையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் கொண்டு சென்று, மாணவர்களின் திறமைகள், படைப்பாற்றல், அனுபவம் சார்ந்த கற்றல் செயல்முறை மற்றும் பரிபூரண வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நவீனமயமாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் கல்வியை, மதிப்பீட்டு முறைமைகளையும் பரீட்சைகளையும் மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் கொண்டு சென்று, மாணவர்களின் திறமைகள், படைப்பாற்றல், அனுபவம் சார்ந்த கற்றல் செயல்முறை மற்றும் பரிபூரண வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நவீனமயமாக்க வேண்டும்., எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற "250 ஆண்டுகாலக் கல்விச் சிறப்பு: இலங்கை அமெரிக்கர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்" (250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American) எனும் தலைப்பிலான பகிரங்க விரிவுரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். 1952ஆம் ஆண்டு முதல் கல்வி, கலாசார மற்றும் தொழிற்துறைப் பரிமாற்றத் திட்டங்களின் ஊடாக இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே பரஸ்பர புரிதலையும் அமைதியையும் மேம்படுத்தும் சுயாதீன இருதரப்பு ஆணைக்குழுவாகிய அமெரிக்க-இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவினால் (US-Sri Lanka Fulbright Commission) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைமைகளின் பரீட்சைகளை மையப்படுத்திய அணுகுமுறைக்கு அப்பால் சென்று, மாணவர் செயற்பாடுகளை மையமாகக் கொண்ட, அனுபவம் சார்ந்த கற்றல்-கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்துவதே ஆகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறைமையிலுள்ள சாதகமான அம்சங்கள் நீக்கப்படமாட்டாது என்பதை வலியுறுத்திய பிரதமர், அம்முறையினூடாகக் கல்வியியல் ரீதியாக வெற்றியடைந்த பல தலைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப அதனை நவீனமயமாக்குவதே இச்சீர்திருத்தங்களின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பெற்றோரின் டிஜிட்டல் எழுத்தறிவைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, கல்வித்துறையோடு தொழிற்கல்வித் துறைக்கும் சமமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்விச் சீர்திருத்தச் செயல்முறைக்காக ஒரு மாத காலமாகக் கலாநிதி அபேவிக்கிரம அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குச் சர்வதேச நிபுணத்துவ அறிவும் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானவையாகும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்திற்கு ஆதரவளித்த புல்பிரைட் ஆணைக்குழு, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிக்கான பட்டமேற்படிப்பு நிறுவனம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அதிகாரிகள், பங்காளர்கள் ஆகியோருக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, நவீன மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான கல்வி முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்பதையும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப்பிரிவு

தொழிற்கல்வியை கல்வித் துறையில் சமபெறுமதி மிக்க ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் தேசிய கல்வி முறைமைக்குள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியானது சமபெறுமதியும் கௌரவமும் மிக்க ஒரு கல்விப் பாதையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜெர்மன் அரசாங்கத்தின் BMZ அமைப்பினூடாகக் கிடைத்த உதவிகளின் கீழ் GIZ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, சுவிட்சர்லாந்து அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகவர்நிலையத்தின் (SDC) பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “இலங்கையில் தொழிற்பயிற்சி (VTSL) – இரண்டாம் கட்டம்” திட்டத்தின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

இலங்கையின் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையைப் பலப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையின் தொழிற்கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்காக நீண்டகாலமாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்காக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களுக்கும், GIZ, BMZ மற்றும் SDC ஆகிய அமைப்புகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தொழிற்கல்வி என்பது இளைஞர் யுவதியரை வேலைவாய்ப்புகளுக்காகத் தயார்படுத்துவது மட்டுமன்றி, சமமான வாய்ப்புகளை உருவாக்குதல், வாழ்வாதாரங்களைப் பலப்படுத்துதல், சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் இளம் தலைமுறையினர் அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதுடனும் தொடர்புபட்டது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வேகமாக மாற்றமடைந்து வரும் தொழில்நுட்பத் துறைகளுக்கும், மனிதவளச் சந்தையின் மாறிவரும் தேவைகளுக்கும் முகங்கொடுக்கக்கூடிய திறமையான, மாற்றங்களுக்கு இயைந்து செல்லத்தக்க, புத்தாக்கத் திறன்கள் கொண்ட மனிதவளப் படையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

TVET துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்காக இத்திட்டம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அதில் TVET டிஜிட்டல் வழிகாட்டல் வரைபடம், டிஜிட்டல் பாடத்திட்டங்கள், தகவல் முகாமைத்துவ முறைமைகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்கும் “GuideMe” செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

60 பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட Master Trainer Development Programme பற்றிக் கவனம் செலுத்திய பிரதமர், கல்வி முறைமையைப் பலப்படுத்துவதற்குப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மனித மூலதனத்தில் முதலீடு செய்வது அத்தியாவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்வியானது அரசாங்கத்தின் பரந்த கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கட்டாய அங்கமாக அமைய வேண்டும் என்றும், அதன் மூலம் வேலைவாய்ப்பிற்கு மட்டுமன்றி உயர்கல்வி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் வாழ்நாள் முழுவதுமான கற்றலுக்கும் வழிகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் திறனாற்றல் விருத்தியினூடாக வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுக்கு இடையிலான பங்களிப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

பசுமைத் திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அதன்கீழ் Green Campus திட்டங்கள், Mobile Green Lab மற்றும் சூரிய சக்தித் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் முடிவானது நவீன, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, டிஜிட்டல் ஆற்றல்களுடன் கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான TVET முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான பணியின் ஆரம்பமாக அமைய வேண்டும் எனக் கூறிய பிரதமர், இலங்கையின் பொருளாதார மாற்றத்தின் முக்கிய தூணான திறன் அபிவிருத்தியைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது “Footprints of Change” வெளியீடு, Virtual TVET Training Kit கையளிப்பு மற்றும் GuideMe App வெளியீடு என்பன இடம்பெற்றன.

அத்துடன் VTSL திட்டம் பற்றிய ஆவணப்படமொன்றும் திரையிடப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நியமிக்கப்பட்ட தூதுவர் திரு. ஒலிவியர் பிராஸ், ஜெர்மனியின் பதில் தூதுவர் திருமதி சாரா கெர்ஸ்டின் ஹசல்பார்த், மற்றும் GIZ இலங்கைப் பிரதிநிதி திருமதி பாலினா கெம்போஸ் (Paulina Campos) ஆகியோர் உரையாற்றினர்.

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், திருமதி சாரா கெர்ஸ்டின் ஹசல்பார்த், திரு. ஒலிவியர் பிராஸ், திருமதி பாலினா கெம்போஸ், GIZ மற்றும் VTSL திட்டத்தின் பிரதிநிதிகள், TVET நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், திட்டப் பங்காளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வெளிப்படைத்தன்மையுடனான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கின்ற பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்கும்.

வெளிப்படைத்தன்மையுடனான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்றும், மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கின்ற பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் உலகளாவிய மன்றம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் பங்கேற்று, ஆகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

“Forward Faster Now” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாக இயலாது. அதற்கு அரசு, தனியார் மற்றும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும். இன்றளவில் வளர்ந்துவரும் நாடுகளில் வருடாந்த நிதிப் பற்றாக்குறை 2.5 டிரில்லியன் முதல் 4 டிரில்லியன் டொலர்களாகக் காணப்படுகின்றது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் அப்பற்றாக்குறை 1.5 டிரில்லியன் டொலர்களாகும். அதுமட்டுமன்றி, 2030ஆம் ஆண்டளவில் இப்பிராந்தியத்தில் அளவிடக்கூடிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் 88 சதவீதத்தை நாம் தவறவிடுவதற்கான பாரிய அபாயமும் காணப்படுகின்றது. ஆகையினால் நாம் இந்நிதிகளை முதலீடு செய்வதை விரைவுபடுத்த வேண்டும்.

சவால்கள் நிறைந்த காலப்பகுதிக்குப் பின்னர், இலங்கை தற்சமயம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மீண்டெழ ஆரம்பித்திருக்கின்றது. 2025ஆம் ஆண்டில் நமது பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்ததுடன், தனிநபர் வருமானம் 5,000 டொலர்களைத் தாண்டியது. அந்த வகையில் நமது இலக்கு வெறுமனே எண்களில் மட்டும் தென்படும் வளர்ச்சியன்று; நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற, அனைவருக்கும் நியாயமாகப் பலன்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற உண்மையான பொருளாதார மாற்றமாகும்.

வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்குவோம். எனினும், நாம் எதிர்பார்ப்பது இலாபத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்ட முதலீடுகளை அல்ல, அவை மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளாக இருத்தல் வேண்டும். ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குதல், தொழிற்பயிற்சியளித்தல், உரிய விதத்தில் வரிகளைச் செலுத்துதல் போன்றே சுற்றாடலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதும் ஒவ்வொரு வர்த்தகத்தினதும் முதன்மைப் பொறுப்பாக இருத்தல் வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கும் இதுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்தவர்களுக்கும் பொருளாதாரத்தில் இணைந்துகொள்வதற்கு இருந்துவரும் தடைகளை அகற்றுவது எமது மிக முக்கியமான முன்னுரிமையாகும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அசம்பாவிதங்களால் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் விவசாயம் மற்றும் சக்திவளப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட ’நிலையான நிதி வழிவரைபடம்’ மற்றும் ’பசுமைப் பத்திரக் கட்டமைப்பு’ ஆகியவற்றின் ஊடாக இக்காலநிலைச் சவால்களுக்கு முகங்கொடுக்கவும், உள்நாட்டுச் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிதி வசதிகளை வழங்கவும் நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இலங்கை என்பது சுற்றாடலை மதிக்கும், நியாயமான வளர்ச்சியைப் போற்றும் ஒரு நாடாகும். எனவே, வெளிப்படைத்தன்மையுடனான நீண்டகால முதலீடுகளுக்கு எமது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் உலகளாவிய உடன்படிக்கையின் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான செல்வி சாண்டா ஓஜியாம்போ,

உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளையுமே பாதிக்கும் மூன்று பாரிய நெருக்கடிகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அவை காலநிலை நெருக்கடி, சக்திவள நெருக்கடி மற்றும் நிதி வசதி தொடர்பான நெருக்கடி என்பனவாகும். இங்கு பணம் இல்லாமை என்பது உலகில் மூலதனம் இல்லாமை அல்ல. இருக்கின்ற பணத்தை சரியாகப் பயன்படுத்தப்படாமையே ஆகும். தற்போது நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்துகொள்வதற்கு 4 டிரில்லியன் டொலர் பற்றாக்குறை நிலவியபோதிலும், தனியார் துறையிடம் 22 டிரில்லியன் டொலர்கள் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அதேவேளை, நல்ல பலன்களைப் பெறக்கூடிய இடங்களுக்கு இம்மூலதனத்தைத் திருப்புவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும்.

கோவிட், போர், காலநிலைச் சிக்கல்கள் மற்றும் அதிக செலவினங்களுக்கு மத்தியிலும் இதற்கான தீர்வுகள் நம்மிடம் இருக்கின்றன. மக்களுக்குத் தேவையான நிரந்தர வீடுகள், நியாயமான ஊதியம், சமத்துவம் மற்றும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, தூய்மையான சக்திவளத்தில் முதலீடு செய்வதன் மூலம் விரைவான பலன்களைப் பெறக்கூடியதாக இருக்கும். புதைபடிவ எரிபொருட்களுக்கு அதிக நிவாரணம் கிடைப்பதால் முதலீடுகளைச் சரியான திசையில் திருப்புவதும் அத்தியாவசியமாகின்றது.

வளர்ந்துவரும் நாடுகளுக்கு முதலீடுகளைக் கொண்டுவருவது என்பது நிதி சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; அதற்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசு-தனியார் துறைகளுக்கிடையிலான நல்ல ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வர்த்தகர்கள், வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அமைப்பும் தொடர்ச்சியாக உதவத் தயாராகவுள்ளன.

UN Global Compact ஊடாக 2030ஆம் ஆண்டளவில் 10 டிரில்லியன் டொலர் நிதிச் சந்தையை உருவாக்குவதற்காகவே CFO கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று, அரசாங்கம், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து வெற்றிகரமான, சமூகத்திற்குப் பயனுள்ள முதலீடுகளை உருவாக்க ’கலப்பு நிதி’ (Blended Finance) முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் பொருளாதாரத்தினுள் காணப்படுகின்ற பாரிய முதலீட்டு வாய்ப்புகளிலிருந்து பயன்பெறுவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிய இக்கலந்துரையாடல் ஒரு நல்ல தளத்தை அமைத்துக்கொடுக்கும் என உதவிப் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஐக்கிய நாடுகள் உலகளாவிய உடன்படிக்கையின் பிரதிநிதிகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தனியார் துறை சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், இராஜதந்திரிகள், நிலையான அபிவிருத்தி பற்றிய நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

JICA பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் திரு. ஷோஹெய் ஹாரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஆகஸ்ட் 11 ஆம் திகதி அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக JICA நிறுவனம் நீண்டகாலமாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளையும், ’டிட்வா’ அனர்த்த நிலைமையின் பின்னர் நிவாரணப் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஆதரவையும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் தேவையான நிவாரணச் சேவைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்காக JICA முகவர் நிலையத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த நிலைமைகளுக்குத் தயாராகுதல், அனர்த்தத்தைக் குறைத்தல் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் திறனை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இலங்கை முன்னெடுத்துவரும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.

கடன் நிவாரணம் உள்ளிட்ட ஏனைய ஒத்துழைப்புகள் ஊடாக இலங்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்க JICA நிறுவனம் தயாராக இருப்பதாக இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழு குறிப்பிட்டதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் பயன்களைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் JICA நிறுவனம் தயாராக உள்ளதாக அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள், டொப்ளர் வானிலை ரேடார் தொகுதியொன்றை நிறுவுதல் மற்றும் டிஜிட்டல் தரைவழித் தொலைக்காட்சி வலையமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கழிவு முகாமைத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் இத்துறைசார் கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் இலங்கை JICA அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி திரு. ஷிகேஓ ஹொன்சு, இலங்கை JICA அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதி திரு. மினோரு மத்சுனோஷிதா, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Assistant Secretary-General of UN and UN Global Compact CEO Sanda Ojiambo Meets Prime Minister

Ms. Sanda Ojiambo, Assistant Secretary-General of the United Nations and CEO of the United Nations Global Compact, accompanied by a delegation, met with Prime Minister Dr. Harini Amarasuriya on 11 August at Temple Trees.

The meeting took place on the sidelines of the SDG Investment Forum, convened as a part of “Forward Faster Now 2026”, the UN Global Compact’s flagship convening event for the Asia-Pacific region, organised in collaboration with the Principles for Responsible Investment (PRI), the United Nations Environment Programme Finance Initiative (UNEP FI), and the Board of Investment of Sri Lanka (BOI).

Welcoming the delegation, Prime Minister Dr. Harini Amarasuriya appreciated the initiatives led by the UN Global Compact at an important juncture of Sri Lanka. The Prime Minister noted that, during the past two years, the Government’s primary focus had been on restoring stability and building confidence, while the next phase would centre on creating an inclusive, sustainable and green economy.

The Prime Minister emphasised that attracting investment should be an important component of this next phase. She highlighted the need to identify and promote what Sri Lanka can uniquely offer.

The Prime Minister also stressed the importance of responsible private-sector engagement, noting them to be uphold ethical, inclusive and sustainable practices and align their investments and operations with the Government’s broader development principles.

Ms. Ojiambo briefed the Prime Minister on the ongoing SDG Investment Forum and the work of the UN Global Compact to strengthen collaboration between the public and private sectors. She highlighted efforts to mobilise private-sector investment and encourage businesses to adopt sustainable practices while supporting national development priorities and the Sustainable Development Goals.

The meeting was attended by Rathika de Silva, Executive Director of the UN Global Compact Network Sri Lanka; Carolina Fowler, Special Assistant, Office of the Assistant Secretary-General, UN Global Compact; Neha Das, Head of Asia & Oceania, UN Global Compact; and other representatives, Secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri, Additional Secretary to the Prime Minister Ms. Sagarika Bogahawatta, and officials from the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism also participated in the meeting.

Prime Minister’s Media Division