நத்தார் தின வாழ்த்துச் செய்தி
டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதர்பார்ப்பாகும்.
ஆனால் இந்தக் குளிர் கால டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி அல்லது உற்சாகத்துடன் விடியவில்லை. முழு நாட்டையும் உலுக்கிய இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே அதனை நாம் அடைந்தோம்.
எனினும், நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற் கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த ’மற்றவர்களை நேசித்தல்’ என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.
நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் இப்போது அடைந்திருக்கின்றோம்.
உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீண் போகாத வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யை உருவாக்கும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ந்தேர்ச்சையாக பாடுபட்டு வருகிறோம்.
சிறந்த்தோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடையவும் அந்த கனவிற்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம்.
இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!
கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 டிசம்பர் 25-ஆம் திகதி





