ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்
ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 18 முதல் 22 வரையான தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பங்கேற்றல், இருதரப்பு கல்வி மற்றும் சமூக ஈடுபாடுகளை மேம்படுத்தல் ஆகியனவே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
பிரதமர் தனது விஜயத்தின் ஆரம்பத்தில், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி கற்கைகள் நிறுவனத்தின் (IDS) 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றினார். இதன்போது, இலங்கையின் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்கள், அரசியல், நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை எடுத்துரைத்தார். பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தல், ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பேணுதல், பொருளாதார மீட்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களைச் சமநிலைப்படுத்துவதில் உள்ள சவால்கள் ஆகிய விடயங்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் St Antony கல்லூரியின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விரிவுரையை நிகழ்த்திய பிரதமர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில், அர்த்தமுள்ள சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அடைய முயற்சிக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்து விளக்கமளித்தார். அத்தோடு, இந்த ஒக்ஸ்போர்ட் விஜயத்தின்போது, செவெனிங் CRISP திட்டத்தின் கல்விமான்களையும் பிரதமர் சந்தித்தார்.
அத்தோடு, ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான செயலாளர் கௌரவ இவெட் கூப்பர் (Rt Hon. Yvette Cooper) அவர்களைப் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, ’டிட்வா’ சூறாவளியை அடுத்து ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், இலங்கையின் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த ஐக்கிய இராச்சியம் வழங்கும் ஒத்துழைப்பையும் பாராட்டினார். மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் வளர்ச்சிப் பாதை குறித்துத் தெளிவுபடுத்திய பிரதமர், புவிசார் அரசியல் மற்றும் வலுசக்தி சவால்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) அவர்களுடனான சந்திப்பின்போது, நிறுவனங்களுக்கு இடையிலான அர்த்தபுஷ்டியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல் ஆகிய விடயங்களைப் பிரதமர் வலியுறுத்தினார். கல்விசார் ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல் ஆகிய விடயங்களில் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த விஜயத்திற்குச் சமாந்தரமாக, லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பிரித்தானிய கவுன்சிலின் கல்வி நிபுணர்களைச் சந்தித்துப் பிரதமர் கலந்துரையாடினார். இதன்போது ஆசிரியர் பயிற்சி, ஆங்கில மொழித் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தினார். மேலும், கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை அதிகரித்தல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மே 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 2026 பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பங்கேற்ற பிரதமர், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Shirley Ayorkor Botchwey) அவர்களுடனான சந்திப்பின்போது, காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி மற்றும் ஜனநாயக நல்லாட்சி ஆகியன குறித்துக் கலந்தாலோசித்தார். தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்ளளவு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இலங்கையைத் தொடர்ந்து ஆதரிக்கத் தயார் எனச் செயலாளர் நாயகம் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்தார்.
அதற்கு அடுத்தபடியாக, லண்டன் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், அதன் விகாராதிபதி வணக்கத்திற்குரிய போகொட சீலவிமல தலைமைத் தேரரைச் சந்தித்து, விகாரையின் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும், இலங்கையர்களுக்காக விகாரை முன்னெடுத்து வரும் நீண்டகால சேவைகளைப் பற்றியும் கலந்துரையாடினார். அதனை அடுத்து, இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டார்.
இவ்வாறு, ஐக்கிய இராச்சியத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே மாதம் 23 ஆம் திகதி காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக மீண்டும் நாடு திரும்பினார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





