பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid தலைமையிலான யுனிசெப் பிரதிநிதிகள் குழு, ஜூன் 25 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேலும் பலப்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும் அவற்றுக்கு பதிலளிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது, குறிப்பாக ’தித்வா’ சூறாவளி பாதிப்பின் போது இலங்கைக்கும், கல்வி மற்றும் ஆரம்பகாலக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான முன்முயற்சிகளுக்கும் யுனிசெப் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் பாராட்டினார்.

இலங்கை கொள்கை உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய சவாலாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குழந்தை பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு தரப்பினருக்கிடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதன் அவசியத்தையும், குழந்தை பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முன்னிலை உத்தியோகத்தர்களின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

குழந்தை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பரிந்துரைக்கும் வழிமுறைகளில் காணப்படுகின்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை யுனிசெப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்தோடு, குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கும் உதவியைப் பெறுவதற்கும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய பொறிமுறைகளை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, முன்களப் பணியாளர்களின் திறன்களைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம், குறிப்பாக உளவியல்-சமூக ஆதரவு, முன்கூட்டிய கண்டறிதல், நேரடி அறிகுறிகளை இனங்காணுதல், திறம்பட செவிமடுக்கும் உத்திகள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய துறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்களில், குழந்தைகளை இணையவழி வன்முறை மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவமும், டிஜிட்டல் சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் தேவை ஆகிய விடயங்களை வைத்தியர் Najat Maalla M’jid அவர்கள் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid, யுனிசெப் பிரதிநிதி திருமதி Emma Brigham, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

2026 அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கின்ற "இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு (SLEIS 2026)" குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாட்டின் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நாட்டின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த உச்சிமாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என இலங்கை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, பிரதி உப தலைவர் வினோத் ஹைட்ராமணி, செயலாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷிரான் பெர்னாண்டோ, பிரதி செயலாளர் நாயகம் / பிரதம செயற்பாட்டு அதிகாரி அலிகி பெரேரா மற்றும் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவின் பிரதம பொருளாதார நிபுணர் அனகி ரொட்ரிகோ-வீரசேகர உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ’குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாடு’ (EVAC) ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் (ஜூன் 23 மற்றும் 24) நடைபெறும் இந்த பிராந்திய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பும் (SAARC), தெற்காசியாவிற்கான யுனிசெப் (UNICEF) பிராந்திய அலுவலகமும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய அலுவலகங்களும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதியின் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இப்பிராந்தியத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் கலந்து கொள்கின்றனர் .

அடுத்த இரண்டு நாட்களில், பங்கேற்கும் நாடுகள் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், தீங்கு விளைவிக்கும் சமூகப் பழக்கவழக்கங்கள், குழந்தை திருமணம், சிறுவர் தொழிலாளர், தரவு மற்றும் ஆதாரங்களில் காணப்படுகின்ற இடைவெளிகள், வளப் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வன்முறைகள், துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான சவால்களுக்கான தீர்வுகளை ஆராயவுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முறைசார்ந்த அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, குழந்தை பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது நாட்டின் பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கிய ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

கல்வி முறையானது குழந்தைகளுக்கு மிகவும் பலமானதொரு சூழலாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்றும், அது கற்றலுக்கானதொரு இடமாக மாத்திரமின்றி, குழந்தை பாதுகாப்பிற்கான முக்கியமான தளமாகவும் செயல்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் கல்வி கற்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், உளவியல் சமூக ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் தலையீடுகளுக்கான முக்கியமான இடங்களுமாகும். பரிந்துரைக்கும் பொறிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை இலங்கை தொடர்ந்தும் பலப்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்தார்.

அத்தோடு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குழந்தை பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதல், கற்றல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் நிலையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகவே இவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் SAARC அமைப்பின் செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர், இலங்கையின் யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மல்லா மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் விடைபெற்றுச் செல்வதற்காகப் பிரதமரைச் சந்தித்தார்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் கோலம் சர்வர் Golam Sarwar, ஜூன் 22 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதன்போது, SAARC செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர் அவர்களை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலும் SAARC அமைப்பின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் செயலாளர் நாயகம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

2026 ஜூன் 23 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள ’குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைச்சர்கள் மாநாடு’ குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. தெற்காசியா முழுவதிலும் வாழ்கின்ற குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த பிராந்திய நடவடிக்கைகளின் அவசியத்தைப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின்போது, SAARC செயலகத்தின் தற்போதைய பணிகள் மற்றும் SAARC கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய பிராந்திய முன்னெடுப்புகள் குறித்து செயலாளர் நாயகம் பிரதமருக்கு விளக்கமளித்தார். உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், குழந்தைகளின் போஷாக்கை மேம்படுத்துவதற்கும் SAARC மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் SAARC மற்றும் ஏனைய பிராந்திய அமைப்புகளுக்கிடையில் நெருக்கமான ஈடுபாட்டை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

SAARC மீதான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், பிராந்திய அமைதி, சுபீட்சம் மற்றும் மக்கள் மையப்படுத்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைப்பின் முன்னெடுப்புகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் காத்மாண்டு SAARC செயலகத்தின் பணிப்பாளர் (ESC) வருண வில்பத்த, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரமதர் ஊடகப் பிரிவு

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டியமை எம் முன் இருக்கும் சவாலாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த இடங்கள் உட்பட எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இருப்பினும் குறித்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட மனித வளத்தைப் பெற்றுக்கொள்வதே தற்போது எழுந்துள்ள சவாலாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 19 ஆம் திகதி மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது, கண்டி நகரில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கண்டியில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர்களான அதிவணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி நாயக்க தேரர் மற்றும் அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம நாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்காவின் சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஞானரத்தன மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய நிலை குறித்து தேரர்களுக்கு விளக்கமளித்ததோடு, நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவிருப்பதாகவும், நடைபெற்ற ஆசிரியர் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நடைமுறைப் பரீட்சைக்குப் பின்னர் உடனடியாகப் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதன்போது பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டி, பல்லேகல SIBA வளாகத்தில் ஜூன் 19 ஆம் திகதி நடைபெற்ற "சசுனட திரிதென சுரகீமு பிரிவென" சாசனத்திற்கு வலுசேர்க்கும், பிரிவெனாவைப் பாதுகாப்போம்) சங்கரஜ புகழஞ்சலி 2026 தேசிய பிரிவெனா தின அரச விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய மாதோவிட்ட வஜிரபுத்தி தேரரின் ஆலோசனைகளுக்கு அமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவு மற்றும் மத்திய மாகாண சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த தேசிய பிரிவெனா தின அரச விழாவில், பிரிவெனா கல்விக்காகத் தமது சாசனப் பணிகளை அர்ப்பணித்த மகா சங்கத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதில் பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, நவீன சிக்கலான உலகின் சவால்களை வெல்லக்கூடிய வகையில் மகா சங்கத்தினரை உருவாக்கும் பிரிவெனா கல்வி முறைமைக்காக மகா சங்கத்தினர் முன்னிலை வகிக்க வேண்டும். பிரிவெனா கல்வியின் நோக்கங்களைச் சென்றடையும் வகையில், அந்த மாற்றங்களை நீங்களே ஒன்றிணைந்து வடிவமைத்துக் கொடுக்க வேண்டும், என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பிரிவெனா கல்வியை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்கள், இலங்கை அமரபுர மகா நிக்காய மற்றும் ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் தேரர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தியவதன நிலமே நிலங்க தேல, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ , மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரிவெனா ஆசிரியர்கள், கல்வி கற்கும் துறவிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு