பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி டயனி மெண்டிஸ், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி என்.ஐ.டி. பரணவிதான, ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் குமார சந்திரசிறி மற்றும் பாலஸ்தீனத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம். பாரூக் எம். பௌஸர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய நலன்களை முன்னெடுப்பதில் அவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதில் அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தத்தமது நாடுகள் மற்றும் சர்வதேசத் தளங்களில் நிலையான, தொழில்முறை சார்ந்த மற்றும் மூலோபாய ரீதியான ஈடுபாடுகளின் ஊடாக, சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றிய நேர்மறையான மற்றும் நம்பகமான பிம்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகக்கூடிய, குறிப்பாகப் பேண்தகு நிலை, புத்தாக்கம் மற்றும் நீண்டகாலப் பெறுமதியினை அதிகரிக்கச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் உயரிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு தூதுக்குழுத் தலைவர்களைப் பிரதமர் ஊக்கப்படுத்தினார்.

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் பன்முகப்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இச்சந்திப்பின்போது விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் நியமனம் பெற்ற தூதுக்குழுத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான கியூபா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவர் Patricia Lazara Pego Guerra அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய இரு தரப்பினரும், இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இரு நாடுகளினதும் மனித வளத்தைப் பலப்படுத்துவதற்கான பரிமாற்ற வேலைத்திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்பது உட்பட, கல்வித்துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், விவசாயத்துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. விளையாட்டுத் துறையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. இரத்தினசிங்கம் கோகுலரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) முறைமையானது, தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான, பொருத்தமான, அதேநேரத்தில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், பசுமையான நிலையான எதிர்காலத்தை நோக்கிய பொறுப்புமிக்க புத்தாக்கங்களை உருவாக்கவும் வழிவகுக்கின்றது. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையைப் பொறுத்தவரை, இந்த மாற்றமானது ஒரு தேசிய முன்னுரிமையாகும்.

பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC) மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ’காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்’ எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு இன்று (மார்ச் 24) கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் ’டிஜிட்டல், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்காக TVET முறைமையை உருமாற்றுதல்’ எனும் ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக இம்மாநாடு அமைகின்றது. இதில் பூட்டான், பீஜி, மலேசியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய கொழும்புத் திட்ட (CPSC) உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, காலநிலைத் தன்மைகளைத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமைத் திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப் பகிர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது இலங்கையின் தேசிய முன்னுரிமையாகும்.

கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது, தனிநபர் வாய்ப்புகள், கௌரவம் மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும்.

பாடத்திட்டங்களில் பசுமைத் திறன்களை உள்ளடக்குதல், புதிய பயிற்சி வசதிகளில் முதலீடு செய்தல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் வளர்ந்து வரும் பசுமைத் தொழில்துறைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கல்வி முறையில் ஒருங்கிணைக்க வேண்டும்.

பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், இளம் பெண்கள், விசேட தேவையுடையோர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் உட்பட அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்களிப்புகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அத்தகைய உறவுகளை உண்மையான நன்மைகளாகவும் செயற்திறன் மிக்க கூட்டுறவுகளாகவும் மாற்றுவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) திருமதி சமந்தி சேனநாயக்க, கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கலாநிதி சுரேஷ் கே. தமேஜா, TVET நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய நாடுகளின் சர்வதேசப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

​தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான குழுவின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதமரின் விசேட கவனம்

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் மார்ச் 23ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

​இதன்போது, தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக அக்குழுவினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததோடு, குழு உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பிலும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது என்பது நீண்டகால மற்றும் சிக்கலானதொரு செயல்முறை என்பதை வலியுறுத்திய பிரதமர், அவசரமான தீர்மானங்களைத் தவிர்த்து, உயர்கல்வித் தரநிலைகளுக்கு இணங்கவும், தற்போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் கே. எல். வசந்த குமார, அகில இலங்கை தாதியர் சபையின் பிரதநிதிகள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

ஈதுல் பித்ர் (ரமழான்) பெருநாளை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

ஒரு மாத காலம் புனித நோன்பு நோற்று, ஆன்மீக ஒழுக்கத்தைப் பேணி, அதனை நிறைவு செய்துள்ள உலகவாழ் மற்றும் இலங்கைவாழ் இஸ்லாமிய மக்கள் பக்திபூர்வமாகக் கொண்டாடும் ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

ரமழான் காலம் என்பது வெறுமனே உணவையும் நீரையும் தவிர்ப்பது மட்டுமல்ல, பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் பிறரின் துன்பங்களை உணர்ந்துகொள்ளுதல் போன்ற உன்னத மனிதாபிமானப் பண்புகளை வாழ்வோடு இணைத்துக்கொள்ளும் ஒரு காலமாகும். இந்த உயரிய விழுமியங்களைத் தனிப்பட்ட வாழ்வோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாது, நாட்டின் பொதுநலனைக் கருதிப் பயன்படுத்துவதே இன்று எமக்கு முன்னுள்ள முக்கிய தேவையாகும்.

நமது நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை எமக்கு ஒரு பலமாகும். ரமழான் பெருநாள் எமக்குக் கற்றுத்தரும் சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய பாடமானது, இலங்கையர் என்ற வகையில் ஒரே கொடியின் கீழ் அணிதிரள எம்மை ஊக்குவிக்கிறது. சமய மற்றும் கலாசாரப் பிணைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம், இனங்களுக்கிடையே கட்டியெழுப்பப்படும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தை அடித்தளமாகக் கொண்ட அஸ்திவாரத்தின் மீதே நாட்டின் நிலையான சமாதானமும் சுபீட்சமும் தங்கியுள்ளன.

நாம் இவ்வாறு சகோதரத்துவத்துடன் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகம் முழுவதும் நிலவும் யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும். குறிப்பாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் எதிர்நோக்கியுள்ள மிகக் கடினமான மற்றும் வேதனையான நிலை குறித்து நாம் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மனித உரிமைகளும் மனிதாபிமான விழுமியங்களும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், போரின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதும், அப்பிராந்தியங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதும் ஒட்டுமொத்த உலகச் சமூகத்தினதும் பொறுப்பும் பிரார்த்தனையுமாகும்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் தனிமைப்பட விடாது, பரஸ்பரம் உதவி செய்து சகோதரத்துவத்துடன் செயற்படுவது சமூக ஸ்திரத்தன்மைக்கு ஒரு வலுவான அடித்தளமாகும். ரமழான் பெருநாள் மூலம் வெளிப்படுத்தப்படும் இந்த ஆன்மீக ஒழுக்கம், தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொண்டு ஒரு நாடு என்ற வகையில் சுபீட்சத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தன்னிடம் உள்ளவற்றில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு வழங்கி (ஸகாத்), சமூக நீதியை நிலைநாட்டும் இந்த உன்னத நாளில், அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் சிறந்த, ஒத்துழைப்புமிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம். இந்த ரமழான் திருநாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய ரமழான் தின வாழ்த்துகள்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
2026, மார்ச் 21

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இன்று ,மார்ச் 19, பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் ஆசிரியர் வெற்றிடங்களே பிரதானமானவை எனக் குறிப்பிட்டதுடன், நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 23,000 இற்கும் அதிகமான ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட ரீதியான கலந்துரையாடல்களின் போது இவை குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தித் துரித தீர்வுகள் எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

உலகளாவிய தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டு, மீண்டும் மூச்சுவிடத் தொடங்கியுள்ள ஒரு தருணத்திலேயே தற்போதைய நெருக்கடி உருவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பங்களிப்பு குறித்து அவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வீணான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் இயலாமை மற்றும் இராஜதந்திரத் தோல்விகள் போன்ற போலி விம்பங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைத் தூண்டி வருகின்றனர்.

ஜனநாயகத் தேர்தல் முறையினூடாகக் கொள்கைகளை முன்வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குப் பதிலாக, நாடு அழிவுப்பாதைக்குச் சென்றாலும் பரவாயில்லை என்ற நோக்கில் அதிகாரத்தைப் பறிக்க எதிர்க்கட்சி முயல்கிறது. நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்த தரப்பினரே, கடந்த காலங்களில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளிலிருந்து தப்புவதற்காக, மக்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்கின்றார்கள்.

எரிபொருள் நெருக்கடியானது அரசாங்கத்தின் இயலாமையினால் ஏற்பட்டது எனக்காட்ட எதிர்க்கட்சியினர் எடுக்கும் முயற்சி வீணானது. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு உலகளாவிய யுத்தச் சூழலின் நேரடி விளைவாகும். மத்திய கிழக்கில் போர் ஆரம்பித்து 20 நாட்களுக்குள் எமது அரசாங்கம் எடுத்த சரியான தீர்மானங்களினால், தெற்காசியாவிலேயே எரிபொருள் விலை மிகக் குறைந்த அளவில் திருத்தப்பட்ட நாடாக இலங்கை இருந்து வருகின்றது.

எண்ணெய் விநியோகத்தில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை நாம் மறுக்கவில்லை. எனவேதான், எரிபொருள் நுகர்வை முகாமைத்துவம் செய்ய QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை மேலும் முறைப்படுத்தி முறைகேடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச இயந்திரம் மற்றும் கைத்தொழில் துறையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கம். எமது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு