பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போன்று, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிப்போம்.

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று அவசியமென்றும், கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போலவே, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிக்க வேண்டுமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்குச் சமாந்தரமாக, டெங்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதையும் பொதுமக்களிடையே சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு,16 ஆம் திகதி கொட்டாவ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தற்போது எமது நாட்டில் டெங்கு அபாயம் அதிகரித்து வருகின்றது. கொழும்பு மாவட்டம் அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது. அதிலும் மகரகம நகரம் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக, பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டெங்கு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் என்ற வகையில், டெங்கு ஒழிப்பு வாரத்தை அறிவித்து, அந்த வாரத்திற்குள் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள டெங்கு அபாயத்தைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வாரத்திற்கு மட்டுமல்லாது, இதற்காக நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததைப் போன்றே, இப்போதும் கூட்டு முயற்சியின் மூலம் இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும். டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டைத் தமது சொந்தப் பொறுப்பாகக் கருதி, முதலில் கொழும்பு மாவட்டத்தை அதிக அபாயத்திலிருந்து குறைந்த அபாயமுள்ள பிரதேசமாக மாற்றி, படிப்படியாக இந்நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கிய கொட்டாவ நகர சபை, கொட்டாவ பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், மகரகம பிரதேச செயலகம், பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, காணிப் பதிவு அலுவலகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, கொட்டாவ தர்மபால வித்தியாலயம், கொட்டாவ ஆனந்த வித்தியாலயம் மற்றும் கொட்டாவ வர்த்தக சங்கம் உள்ளிட்ட தரப்பினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கம்லத், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பிரதமரைச் சந்தித்து விடைகொடுத்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் H.E. Andalib Elias, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன்15 அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்தோடு, இரு நாட்டு மாணவர்களின் நலனுக்காக கல்வித்துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நலன் சார்ந்த ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் திரு. முஹம்மது ஜன்னதுல் ஹபீப் Md. Jannatul Habib, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் ஆதியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் Didier Vanderhasselt அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்காக தூதுவர் Didier Vanderhasselt அவர்கள் ஆற்றிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கையில் பெல்ஜியத்தின் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

பிரதமரைச் சந்திப்பதற்கான வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்த தூதுவர் Didier Vanderhasselt, தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் நேர்மறையானதாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அதனை மேலும் பலப்படுத்துவதன் அவசியத்தையும் உறுதிப்படுத்தினர்.

புதுடெல்லியில் உள்ள பெல்ஜியத் தூதரகத்தின் முதலாம் செயலாளர் Jonas Heirbrant, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, வெளிவிவகார , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

’திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஜூன் 12 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

“திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி - ஏப்ரல் 2026)” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. பதிலளிக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பக் கட்டத்தில் எட்டப்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தலையீடுகள் குறித்து கலந்துரையாடவும் இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இடைவிடாத கல்வியை உறுதிசெய்தல், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Emma Brigham, யுனிசெப் பிரதிநிதி Begona Arellano உள்ளிட்ட யுனிசெப் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது , உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேக்கரித் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ஷாங்கிரி-லாஹோட்டலில் ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நாடு பொருளாதார ரீதியாக ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இந்தத் தீர்க்கமான தருணத்தில், பேக்கரித் தொழில்துறையை வெறும் மாவு சார்ந்த தயாரிப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது, அதனை நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாக மாற்ற முடியும் என நான் நம்புகிறேன்.


உணவு உற்பத்தியில் தரமும் ஆரோக்கியமுமே அடிப்படையாக இருக்க வேண்டும். எனவே, சுவைக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்காது, செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் அற்ற, அதிக சத்துமிக்க ஆரோக்கியமான தயாரிப்புகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி மா, குரக்கன், தினை, பயறு மற்றும் உள்நாட்டு கிழங்கு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட (Value-added) புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், உலகளாவிய தரத்திலான ’ஆரோக்கியமான உணவு’ (Health-conscious diet) எனும் போக்கினைப் பேக்கரித் துறையினரால் வெற்றிகொள்ளக்கூடியதாக அமையும்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பலமாக அமையும். உள்ளூர் வர்த்தகர்களைப் பலப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. மூலப்பொருள் இறக்குமதிச் சிக்கல்களைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களுக்கான சலுகைக் கடன் வசதிகளை வழங்குதல் மற்றும் சர்வதேசத் தரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சி மற்றும் சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு, தொழில் அமைச்சின் ஊடாக அரசாங்கம் ஏற்கனவே வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

ஆதிவாசி மக்கள் தமது பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 12 பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆதிவாசித் தலைவர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

ஆதிவாசி மக்கள் எவ்விதத் தடங்கலுமின்றித் தமது பாரம்பரிய காணிகளை அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என்றும், அதற்காகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.

அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதை ஆதிவாசித் தலைவர் எடுத்துரைத்தார். இதன்போது, பிரதமர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.

தம்பானை பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு