ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை
மே 19 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 OSGA வருடாந்த விரிவுரையின் (2026 OSGA Annual Lecture) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ’அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்’ (The Politics of Development: Sri Lanka and Beyond) எனும் தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் St Antony’s College இல் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவினால் (OSGA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமகால உலகளாவிய சவால்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக முன்னணி கல்விமான்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்தத் துறையின் முதன்மை நிகழ்வாக இது அமைந்தது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் பற்றி எடுத்துரைத்ததுடன், அர்த்தமுள்ள சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அடைய முயற்சிக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்தும் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
தனது விரிவுரையின் போது, அபிவிருத்தி என்பதைக் கொள்கைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார மாதிரிகளின் ஊடாக மாத்திரம் புரிந்துகொள்ள இயலாது என்றும், அது மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் ஊடாகவே நோக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகள், நிறுவன ரீதியான சவால்கள் மற்றும் நீண்டகால சமத்துவமின்மைகளிலிருந்து மீண்டு வரும் நாடுகளில், கொள்கைகளையும் நடைமுறை எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கங்களுக்கு அவசியமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்திய பிரதமர், அடிமட்ட அரசியல் இயக்கங்கள் மற்றும் தலைமைத்துவப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிக அரசியல் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய சமூக, அரசியல் கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் தொடரும் சவால்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
அத்தோடு, பொருளாதார மீட்சி மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த கலாநிதி அமரசூரிய, ஊதியம் பெறும் மற்றும் பெறாத பராமரிப்புப் பணிகளை (Care Work) அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாரம்பரிய பொருளாதார அமைப்புகளில் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குப் பெண்கள் பெற்றுக்கொடுக்கும் பங்களிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்தோடு, நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார முன்னேற்றத்தை உறுதிசெய்வதுடன், மனித கௌரவம், நீதி மற்றும் சமூக நலனையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கங்கள், சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய பிரதமர், அபிவிருத்தி முன்னுரிமைகள் உள்ளூர் எதார்த்தங்களுக்கு அமைய அமைவதையும், மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் இருப்பதையும் உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சமூக மானுடவியலாளர், செயற்பாட்டாளர், கல்வியாளர் மற்றும் அரசியல் தலைவராகத் தனது அனுபவங்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கலாநிதி அமரசூரிய, மக்கள் போராட்டங்களை நீண்டகாலக் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களாகவும் நிறுவன மாற்றங்களாகவும் மாற்றியமைப்பதில் உள்ள சவால்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்தார். அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த பொறுமை, பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு ஆகியன அவசியமாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விரிவுரையைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் அமர்வில், நல்லாட்சி, நிறுவனங்களின் சுதந்திரம், அரசியல் சீர்திருத்தம், பொருளாதார மீட்சி மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் என்பவற்றுடன் கொள்கை அமுலாக்கத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் டீகோ சான்செஸ்-அன்கோச்சியா (Professor Diego Sanchez-Ancochea), பிரதமரின் விரிவுரையைப் பாராட்டியதோடு, புலமைசார் நுண்ணறிவையும் நடைமுறை அரசியல் அனுபவங்களையும் உள்ளடக்கிய, அரசியல் மற்றும் அபிவிருத்திக்கு இடையிலான உறவு குறித்த மிக முக்கியமான மற்றும் காலத்திற்கேற்றதொரு உரையாக இது அமைந்ததாகத் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





