பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

"டிஜிட்டல் மயமாக்கல்" மூலமாக அரச சேவைகளை மிகுந்த வினைத்திறனும், வெளிப்படைத்தன்மையும் மிக்க இலகுவான முறையில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அரச நிறுவனங்களில் வங்கி அட்டைகள் (POS இயந்திரங்கள்) மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு, ஜூலை 02, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பதிவாளர் பிரிவு மற்றும் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரப் பிரிவு ஆகியவற்றில் POS இயந்திரங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர், அடையாள நிமித்தமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கை வங்கியின் (BOC) நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக, மக்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும் சந்தர்ப்பங்களில் கிரெடிட் (Credit) மற்றும் டெபிட் (Debit) அட்டைகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் பணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

தற்போதைய உலகில் வேகமாக இடம்பெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப இலங்கையின் அரச துறையை நவீனமயப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், இந்த முறையின் மூலம், சேவை பெறுநர்கள் பணத்தை எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், மிகக் குறுகிய காலத்திற்குள் தமக்குத் தேவையான சேவைகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய POS கட்டண முறையினால் மக்கள் பெறக்கூடிய நன்மைகளாக,

பண நோட்டுக்களை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமின்றி, வங்கி அட்டைகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு. பரிவர்த்தனைகளை மிக விரைவாக முடிக்க முடிவதால், மக்கள் சேவை பெறுவதற்குச் செலவாகும் நேரம் குறைதல். பெரும் தொகைப் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாததால், பண மோசடிகள் மற்றும் பணம் காணாமல் போகும் அபாயங்கள் குறைதல். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குத் தாராளமாகப் பங்களிப்புச் செய்தல். அனைத்து பரிவர்த்தனைகளையும் கணக்காய்வு செய்வதற்கு வசதியாகக் கிடைப்பதனால், அரசாங்க வருமானம் சரியாகப் பதிவு செய்யப்படுதல்.

இன்று முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இந்த வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் சேவை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இலங்கையின் அரச சேவையில் நிதி நிர்வாகம் மிகவும் வெளிப்படையான அதே நேரத்தில் மக்கள் நேயமிக்கதாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, மேல் மாகாண பிரதம செயலாளர் கே. பி. பிரதீப் யசபாலன, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட பதிவாளர் நாயகம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், திணைக்களத் தலைவர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் வாரத்திற்குச் சமாந்தரமாக நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜூலை 01 முதல் 05 ஆம் திகதி வரை நடைபெறும் அரச கரும மொழிகள் வாரத்தின் ’பாடசாலை தினத்திற்கு’ அமைவாக, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் நிறைவு விழா, ஜூலை 02, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், "அரச கரும மொழிக் கொள்கை மற்றும் அதன் பயன்பாட்டின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்ற விவாதப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைக் குழுக்களுக்கு பிரதமர் விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பாடசாலை மாணவர்களிடையே இருமொழிப் பயன்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் ஒன்றும் இதன்போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

அரச கரும மொழிகள் வாரம் என்பது வெறுமனே மொழிகளைக் கொண்டாடும் வாரம் மாத்திரமல்ல. இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் தனது சொந்த மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வாரமுமாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் எமது பொறுப்பை மீண்டும் நினைவுகூரும் தருணமாகும்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, மொழி உரிமைகளை மிகவும் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம், ஒவ்வொரு பிரஜையும் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமையானது மேலும் உறுதிப்படுத்தப்படும்.

ஒரு மொழியினை இன்னும் ஒரு மொழியை விட உயர்ந்ததாகக் கருதும் நாட்டை உருவாக்க நாம் முயற்சிக்கவில்லை. சகல மொழிக்கும் சமமான கௌரவம் அளிக்கப்படும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும், நீதியான, அந்நியோன்னிய புரிதல் மிக்கதொரு அரசையே நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்.

தொடர்ந்தும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்,

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் சைகை மொழியையும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "உங்கள் தாய்மொழியை உங்கள் கௌரவமாகவும், ஏனைய மொழிகளை உங்கள் நட்பின் பாலமாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புதிய வார்த்தையும் மனிதர்களிடையே புரிதலையும், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் ஒரு படியாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்" என மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்

நிகழ்வில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார,

"பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய இன முரண்பாடுகளை நோக்கும்போது, பன்முகத்தன்மையை ஒடுக்குவதன் மூலம் அல்ல, மாறாக அதனைக் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதன் மூலமே நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது உறுதியாகிறது" எனச் சுட்டிக்காட்டியதோடு, மொழி, மதம், இனம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருப்பினும், ஒவ்வொரு பிரஜைக்கும் சமமான கௌரவமும் உரிமைகளும் கிடைக்கப் பெறுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது பிள்ளைகளுக்கு நாம் கையளிக்க வேண்டிய மிக முக்கியமான தேசிய உரிமையாகும் என்பதை வலியுறுத்தினார்.

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்காக அனைவரும் ஒரே மொழியைப் பேச வேண்டியதில்லை, மாறாக மற்றவர்களின் மொழிகளையும் கலாச்சாரங்களையும் மதிப்பதே அவசியமாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சமாதானம் என்பது அதிகாரத்தினாலோ அல்லது வெறுப்பினாலோ அல்லாது, மற்றவர்கள் மீது காட்டும் கௌரவம் மற்றும் நாகரிகமான மனிதநேயத்தின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஆர். ரணவக, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சிரேஷ்ட பேராசிரியர் சந்தகோமி கோபரஹேவா, பேராசிரியர் எஸ். ஜே. யோகராஜா, கலாநிதி சி. டி. எச். எம். பிரேமரத்ன, அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்த ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள், அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா பெருமிதக் கொண்டாட்டம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்ளத்தக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்க வேண்டும்

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையின் மிக முக்கியமான தேசிய பயிற்சி நிறுவனமாகிய களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் (NIHS) நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு விழா மாநாட்டை, நேற்று (01) களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் இந்த நிறுவனம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆற்றி வரும் மகத்தான சேவையைப் பாராட்டிய பிரதமர், தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா என்பது இலங்கையின் பொதுச் சுகாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கலாகும் என்றும், நாட்டின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சுகாதார சேவைகளை மேம்படுத்துவதிலும் ஒரு நூற்றாண்டு காலமாக இந்த நிறுவனம் ஆற்றிய பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமே இதுவாகும் என்றும் தெரிவித்தார்.

தாய் மற்றும் சேய் நலம், நோய்த்தடுப்புத் திட்டங்கள், நோய்த்தடுப்பு போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகள், பலமான பொதுச் சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், முதுமை அடையும் சனத்தொகை, தொற்றா நோய்களின் பரவல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் புதிய சுகாதார அனர்த்தங்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையக்கூடிய திறமையான சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நவீன சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தியதுடன், வைத்தியர் துஷார பெர்னாண்டோ "NIHS – Past, Present and Future" எனும் தலைப்பில் முதன்மை உரையை நிகழ்த்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் "NIHS – 100 Years" ஞாபகார்த்த நூல் வெளியீடும், நூற்றாண்டு விழா ஞாபகார்த்த அஞ்சல் முத்திரை ஆகியனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள், பங்காளி நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், சுகாதார வல்லுநர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அழைக்கப்பட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து, நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, எதிர்காலத்திலும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், நீடித்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்த இலங்கை தனது பயணத்தைத் தொடர்ச்சியாக மீள்நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர், வலுசக்தி, துறைமுகங்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட உலகளாவிய போக்குகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய துறைகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும், புற அதிர்வுகளுக்கு முகங்கொடுக்கத்தக்க வகையில் நாட்டின் பின்னடைவைத் தாங்கும் திறனைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள், பணவீக்கத்தை கணிசமாகக் குறைத்தமை உள்ளிட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டனர். நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் சவால்களைப் புரிந்து கொண்ட அவர்கள், இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை தனித்து விடவில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, கூட்டாண்மை மூலம் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

வர்த்தகம், முதலீடுகளை ஈர்த்தல், சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துதல், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியும் சமூகப் பாதுகாப்பும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்றும், இவை தனித்தனியாக வெற்றிபெற இயலாதவை என்றும் குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சமநிலையை அடைவதற்கு, குறிப்பாகக் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு போன்ற துறைகளில் வலுவான பொது உட்கட்டமைப்பு தேவை என்பதையும், பயனுள்ள சேவை வழங்கலைப் பாதிக்கும் தற்போதைய மனிதவளப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் Sonali Jain-Chandra, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் Evan Papageorgiou, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி Martha Woldemichael, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே. எம். ஏ. என். தௌலகல, மத்திய வங்கியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள், ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் அந்த அமைப்பு வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஆதரவையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்த அவர்களின் கலந்துரையாடலின் போது, பாலின அடிப்படையிலான வன்முறைகள் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய UNFPA பிரதிநிதிகள், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விரிவான கொள்கை ரீதியான தீர்வுகளை உருவாக்குவதில் தமது அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கிக் கூறினர்.

இலங்கை பல முக்கிய குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும், அந்தச் சாதனைகளைத் தக்கவைப்பதும் அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல், நன்கொடையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இனப்பெருக்க ஆரோக்கிய சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி Aleksandar Sasha Bodiroza, UNFPA இன் பதில் பிரதிநிதி Phuntsho Wangyel உள்ளிட்ட தூதுக்குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சசிகா சோமரத்ன மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரையில் ஜூன் 29 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு வருகை தந்த பிரதமரை, விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் வரவேற்றார். தேரருடன் சுமூகமாகக் கலந்துரையாடிய பிரதமர், விகாரையின் போதி மலுவவிற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைத்த பிரதமர், தர்ம பாடசாலை மாணவர்களினால் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, பொரளஸ்கமுவ நகர சபைத் தலைவர் நிஷாந்த வெதமுல்ல உள்ளிட்ட முக்கிய அதிதிகள், பிரதேசவாசிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு