பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை

மே 19 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 OSGA வருடாந்த விரிவுரையின் (2026 OSGA Annual Lecture) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ’அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்’ (The Politics of Development: Sri Lanka and Beyond) எனும் தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் St Antony’s College இல் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவினால் (OSGA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமகால உலகளாவிய சவால்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக முன்னணி கல்விமான்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்தத் துறையின் முதன்மை நிகழ்வாக இது அமைந்தது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் பற்றி எடுத்துரைத்ததுடன், அர்த்தமுள்ள சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அடைய முயற்சிக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்தும் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

தனது விரிவுரையின் போது, அபிவிருத்தி என்பதைக் கொள்கைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார மாதிரிகளின் ஊடாக மாத்திரம் புரிந்துகொள்ள இயலாது என்றும், அது மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் ஊடாகவே நோக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகள், நிறுவன ரீதியான சவால்கள் மற்றும் நீண்டகால சமத்துவமின்மைகளிலிருந்து மீண்டு வரும் நாடுகளில், கொள்கைகளையும் நடைமுறை எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கங்களுக்கு அவசியமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்திய பிரதமர், அடிமட்ட அரசியல் இயக்கங்கள் மற்றும் தலைமைத்துவப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிக அரசியல் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய சமூக, அரசியல் கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் தொடரும் சவால்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

அத்தோடு, பொருளாதார மீட்சி மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த கலாநிதி அமரசூரிய, ஊதியம் பெறும் மற்றும் பெறாத பராமரிப்புப் பணிகளை (Care Work) அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாரம்பரிய பொருளாதார அமைப்புகளில் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குப் பெண்கள் பெற்றுக்கொடுக்கும் பங்களிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்தோடு, நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார முன்னேற்றத்தை உறுதிசெய்வதுடன், மனித கௌரவம், நீதி மற்றும் சமூக நலனையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கங்கள், சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய பிரதமர், அபிவிருத்தி முன்னுரிமைகள் உள்ளூர் எதார்த்தங்களுக்கு அமைய அமைவதையும், மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் இருப்பதையும் உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சமூக மானுடவியலாளர், செயற்பாட்டாளர், கல்வியாளர் மற்றும் அரசியல் தலைவராகத் தனது அனுபவங்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கலாநிதி அமரசூரிய, மக்கள் போராட்டங்களை நீண்டகாலக் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களாகவும் நிறுவன மாற்றங்களாகவும் மாற்றியமைப்பதில் உள்ள சவால்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்தார். அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த பொறுமை, பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு ஆகியன அவசியமாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விரிவுரையைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் அமர்வில், நல்லாட்சி, நிறுவனங்களின் சுதந்திரம், அரசியல் சீர்திருத்தம், பொருளாதார மீட்சி மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் என்பவற்றுடன் கொள்கை அமுலாக்கத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் டீகோ சான்செஸ்-அன்கோச்சியா (Professor Diego Sanchez-Ancochea), பிரதமரின் விரிவுரையைப் பாராட்டியதோடு, புலமைசார் நுண்ணறிவையும் நடைமுறை அரசியல் அனுபவங்களையும் உள்ளடக்கிய, அரசியல் மற்றும் அபிவிருத்திக்கு இடையிலான உறவு குறித்த மிக முக்கியமான மற்றும் காலத்திற்கேற்றதொரு உரையாக இது அமைந்ததாகத் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து பிரிந்த ஒன்றல்ல. அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல என்றும், அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 19 ஆம் திகதி சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கை நிறுவகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

18 பிற்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், இலங்கை நேரப்படி இரவு 8.00 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரதமரையும் குழுவினரையும், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளரின் விசேட பிரதிநிதியும், இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் குழுவினர் மிகவும் அன்புடன் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, 19 காலை பிரைட்டனில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பிரதமரை, அப்பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அனு ஜோஷி, பேராசிரியர் மிக் மூர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியல், நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கினார். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன், அரச நிர்வாகம், பொருளாதார மீட்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களைச் சமநிலையில் முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சவால்களைப் பற்றி அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அதேபோன்று, ஊதியம் பெறும் மற்றும் பெறாத பராமரிப்புச் சேவைகளைத் தேசிய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக அங்கீகரிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள கொள்கை ரீதியான கவனம் மற்றும் பராமரிப்புத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் பங்களிப்பு ஆகியன குறித்தும் பிரதமர் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவில் இடம்பெறவுள்ள விசேட உரையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், அங்குள்ள அறிஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் இவெட் கூப்பர் (Yvette Cooper), கல்வி இராஜாங்க செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Shirley Ayorkor Botchwey) உள்ளிட்ட ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரைச் சந்திக்கவுள்ளார்.

பிரித்தானிய கவுன்சில் பிரதிநிதிகள், செவ்னிங் புலமைப்பரிசில் பெற்றவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான உத்தியோகபூர்வ சந்திப்புகளும் இந்த விஜயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ஊடகப் பிரிவு

பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

​43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 18 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணமானார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி, அபிவிருத்திக் கற்கை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகள் பலவற்றில் பிரதமர் கலந்துகொள்ளவிருக்கின்றார்.

அத்தோடு, இந்த ​விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் ஐக்கிய இராச்சியத்தின் கல்வித் திணைக்களத்தில், அந்நாட்டின் கல்வி இராஜாங்க செயலாளர் திருமதி பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து, கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் திருமதி இவெட் கூப்பரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.

​அத்தோடு, 22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் 2026 நிர்வாகச் சபைக் கூட்டத்திற்கு இணையாக, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி ஷெர்லி அயோர்கொ போச்வேயையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

​இந்த விஜயத்தின்போது, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இடம்பெறும் பொது நிகழ்வொன்றிலும் கலந்துகொள்ளவுள்ள பிரதமர், அந்நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலும் பங்கேற்கவுள்ளார். மேலும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான கல்விப்பீடத்தில் உரையாற்றவுள்ள பிரதமர், அதனைத் தொடர்ந்து அங்குள்ள கல்விமான்கள் மற்றும் மாணவர்களுடனான வினா விடை அமர்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.

பிரதமரின் ​இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் கல்வி, ஆராய்ச்சி, கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் சர்வதேச கல்வி நிறுவனங்கள், சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகளுடன் இலங்கையின் ஈடுபாட்டையும் கூட்டுறவையும் மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

​பிரதமர் ஊடகப் பிரிவு

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்காக மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிரஜையை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் கல்வியை உறுதிப்படுத்தி இருக்கின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 மே 15 ஆம் திகதி சவ்சிரிபாய வளாகத்தில் நடைபெற்ற, டவர் ஹோல் திரையரங்கு அறக்கட்டளையினால் 30 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட "2024/2025 அகில இலங்கை பாடசாலைகள் நாடகப் போட்டித்தொடரின்" விருது வழங்கும் விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பாடசாலை மாணவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் அவர்களது வாழ்க்கைக்கு மட்டுமன்றி, நாட்டிற்குத் தேவையான உயரிய மனப்பாங்கைக் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதிலும் பெரிதும் துணையாக அமைகின்றன. எனினும், தற்காலத்தில் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியைத் துரிதமாக முடித்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாக வளர்ந்தவர்களாக்குவதற்கு முற்படும் போக்கினைப் பெரியவர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கின்றது. இது நாட்டிற்குத் தேவையான வளர்ச்சி பெற்ற பிரஜைகளை உருவாக்குவதற்குப் பொருத்தமானதொரு சூழல் அல்ல.

’வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் மூலம் நாட்டில் பல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளதால், அவற்றைச் சட்டத்தினால் மாத்திரம் தீர்த்துவிட முடியாது. அதற்குச் சமூகத்தில் தெளிவானதொரு மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்த மனிதனை உருவாக்குவதற்குக் கலைத்துறையினால் மகத்தான பணியை ஆற்ற முடியும். சமூகத்திற்குத் தேவையான சிறந்த கற்பனைத்திறன், கருணை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட படைப்பாற்றல் மிக்க, முழுமையான நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் கல்விச் செயன்முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பாடசாலை வாழ்க்கையில் மேடையில் பல்வேறு படைப்புகளுக்குப் பங்களிப்புச் செய்யும் அனைவரும் தொழில்சார் கலைஞர்களாவதில்லை; ஆயினும் அதன் மூலம் பெறும் அனுபவங்கள் அவர்களைச் சமூகத்தில் படைப்பாற்றல் மிக்க சிறந்த மனிதர்களாக மாற்றுவதற்குப் பெரும் பக்கபலமாக அமையும். ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பதன் மூலமோ அல்லது சிறந்த திரைப்படமொன்றைப் பார்ப்பதன் மூலமோ மனித மனம் நல்வழிப்படுத்தப்படுவதுடன், அது புதிய பரிமாணங்களின் ஊடாகச் சிந்திப்பதற்கான சிந்தனைக் கதவுகளைத் திறந்துவிடுகின்றது. அதன் மூலம் புதியதொரு உலகைப் படைப்பதற்குத் தேவையான மனப்பாங்கு ரீதியான வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கின்றது.

பிள்ளைகளின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான இத்தகைய தீர்க்கமான அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பாடுபடும் ஆசிரியர்களும், பெற்றோரும் சமூகத்திற்கு இன்றியமையாததொரு பணியையே ஆற்றி வருகின்றனர். திறமையான, உணர்வுப்பூர்வமான இளம் சமுதாயத்தினர் மூலமாகவே நாட்டிற்குத் தேவையான தலைவர்கள் உருவாகின்றனர்; அதற்கான பின்னணியை அமைத்துக்கொடுக்கும் இவ்வாறான போட்டிகள் மிகவும் முக்கியமானவையாகும், எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டவர் ஹோல் திரையரங்கு அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம், அமைச்சுகளின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அதி வணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரர் அவர்கள் மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்பு.

மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கராகப் பதவியேற்ற, கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த மையம் மற்றும் ஹபுத்தலை நிக்கபொத்த சுபத்ராராம பிரிவெனா மகா விஹாரை உள்ளிட்ட விஹாரைகளின் அதிபதி, ஸ்ரீ ரதனஜோதி வங்சாலங்கார சத்தர்மவாகீஸ்வர சாஸ்திர விசாரத பண்டித மஹோபாத்தியாய அதிவணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரரை வரவேற்றல் மற்றும் சன்னஸ் பத்திரம் கையளித்தலுக்கான அரச விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் 17 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகா விஹாரவங்சிக ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் உன்னத மகாநாயக்க அதிவணக்கத்துக்குரிய கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி மகாநாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த புண்ணிய மஹோற்சவத்தில், மகா விஹாரவங்சிக உடரட்ட அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க பதவிக்கான ’ஸ்ரீ சன்னஸ்’ பத்திரத்தினைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் அதிவணக்கத்துக்குரிய நிக்கபொத்த சந்திரஜோதி மகாநாயக்க தேரர் அவர்களிடம் கௌரவப்பூர்வமாகக் கையளித்தார்.

முப்பிரிவுகளினதும் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல உள்ளிட்ட அமைச்சர்கள், பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவச் செயல்பாட்டினைப் பின்பற்றியது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.

ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாறு அந்தச் செலவை அரசாங்கமே பொறுப்பேற்று, நிலைபேறான முகாமைத்துவச் செயன்முறையொன்றைப் பின்பற்றியதாகவும், எனினும் நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் 15 ஆம் திகதி நடைபெற்ற, அரச சேவையைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச நிறுவனங்களுக்குள் வலுசக்தியைச் சேமிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ’வலுசக்தி முகாமைத்துவ அதிகாரி’ (Energy Manager) ஒருவரை நியமிப்பது குறித்தும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலாதாரங்களை நோக்கிச் செல்ல வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ’Clean Sri Lanka’ தேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கக் கட்டிடங்களைப் பசுமைக் கட்டிடக் கோட்பாட்டிற்கு (Green Building Concept) அமைய வடிவமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இதுவரை நடைமுறையிலிருந்த ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினை நீக்கி, QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதுடன், இவ்வருடத்தின் எஞ்சிய மாதங்களுக்குத் தேவையான எரிபொருளும் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

மின்சார நுகர்வினை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ’Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மின்சார நுகர்வினை முறையாக முகாமைத்துவம் செய்யும் வீடுகளைத் தெரிவு செய்து பாடசாலை மாணவர்கள் ஊடாக மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால கட்டுமானத் திட்டங்களில் பசுமைக் கட்டிடக் கருத்தை Green Building அறிமுகப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் முறையான வலுசக்தி முகாமைத்துவத்தை முன்னெடுப்பதனால், மக்கள் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து அதிக கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்சாரத் தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் அந்த நெருக்கடியைச் சரியான முறையில் கையாண்டோம். எனினும், நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததால் நாம் இது குறித்துத் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும். நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.ஜி.எஸ்.பி. ரோஷன் உள்ளிட்ட அரச நிர்வாகம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வலுசக்தி ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு