இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட, பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை பல் வைத்திய சங்கம் (SLDA) அதன் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வை ஜூன் 26 ஆம் திகதி கொழும்பு, Cinnamon Life ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. விஞ்ஞான புத்தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வாய்வழி சுகாதாரப் பராமரிப்பினை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள், தங்கப் பதக்கம் வென்றவர்கள், சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமர்வை ஆரம்பித்து வைத்த பிரதமர், சான்றுகள் அடிப்படையிலான மற்றும் புத்தாக்கத்தை நோக்கிய சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் இலங்கையின் கல்வி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பை இந்தச் சாதனைகள் பிரதிபலிக்கின்றதாகத் தெரிவித்தார்.

ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை பல் வைத்திய சங்கம், அறிவுப் பரிமாற்றம், தொழில்சார் தரங்களைப் பேணுதல் ஆகியன மூலமாக ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

அத்தோடு, பொதுச் சுகாதாரம் என்பது வெறும் மருத்துவமனை சிகிச்சையை மாத்திரம் சார்ந்தது அல்ல என்றும், நல்ல உடல்நலம், தடுப்பு சார்ந்த வாழ்க்கைமுறை தேர்வுகளில் இருந்தே அது ஆரம்பமாகிறது என்றும் தெரிவித்தார்.

“வாய்வழி சுகாதாரம் இந்தப் பயணத்தின் முக்கியமானதொரு பகுதியாகும்” எனக் கூறிய பிரதமர், “ஆரோக்கியமான புன்னகை என்பது பலமான பற்கள் இருப்பது மட்டுமல்ல, அது நல்ல ஊட்டச்சத்துடனும், ஒரு குழந்தையின் கற்றல் திறனுடனும், ஒரு வளர்ந்தோரின் உழைப்புத் திறனுடனும், ஒவ்வொரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வு, கௌரவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்” எனத் தெரிவித்தார்.

உலகளாவிய தரவுகளை எடுத்துக்காட்டிய பிரதமர், உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கையில், குழந்தைகளிடையே பல் சொத்தை, பெரியவர்களிடையே பரவலாகக் காணப்படும் ஈறு நோய், மற்றும் புகையிலை பயன்பாடு, பாக்கு மெல்லுதல், வெற்றிலை உபயோகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புடைய ஆண்களிடையே அதிக அளவில் காணப்படும் வாய்வழி புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

தொற்றா நோய்களின் தேசிய சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பு சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பாடசாலை பல் மருத்துவ சேவைகள் மற்றும் சமூக ரீதியிலான சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட வெற்றிகரமான முன்முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார்.

மருத்துவ சமூகமானது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கவும், உள்நாட்டு ஆராய்ச்சித் திறன்களைப் பலப்படுத்தவும், நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளைத் தமக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பல் மருத்துவத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், இத்துறையில் அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதுடன், நிபுணத்துவ பயிற்சி, ஆராய்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் பதவிகளிலும் அவர்களுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, இலங்கை பல் வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, முன்னணி பல் வைத்திய நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு