கொரியாவில் இலங்கையின் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் இரட்டிப்பாக்கப்படும்.... - கொரிய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்

இந்த ஆண்டு, கொரிய வேலைவாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையின் பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை, ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கொரிய குடியரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் லீ ஜுங்சிக் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் கொரிய தூதுவர் லீ மியோன் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையில் (2023.09.14) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரிய மொழி அறிவு கொண்ட திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம், விவசாயம், கல்வி, தகவல் தொழிநுட்பம் உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காகவும், கொரியாவில் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கும் கிடைத்துள்ள ஆதரவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.

இளைஞர் திறன் விருத்தித் திட்டங்கள் மற்றும் கொரிய மொழியைக் கற்பிப்பதற்காக கொரிய அரசாங்கத்திடம் இருந்து மேலும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த யோசனைகளை தாம் சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்த தொழில் அமைச்சர் லீ ஜுங்சிக், தனது இலங்கை விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள கொரிய மொழி கற்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் முத்தாகக் கருதப்படும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர், இலங்கையில் உபசரிப்புத் துறையில் கொரிய முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொரிய தூதுவர் லீ மியோன், பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, கொரிய தொழில் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கிம் என்சூல் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு