இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இந்திய தொழில்முயற்சியாளர்கள் உறுதி...

இலங்கையில் இந்திய முதலீட்டை மேலும் ஊக்குவிக்க இந்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழிற் துறை தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கிய இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், தனியார் துறையில் இந்திய முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய தலைமை நிறைவேற்று அதிகாரிகளின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

விவசாயம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் இருப்பதாக பிளாட்டினம் ரியாலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் இலங்கை இந்திய சங்கத்தின் தலைவருமான கிஷோர் ரெட்டி தெரிவித்தார்.

இலங்கை அண்மைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதால், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மேலதிகமாக, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி, கனிம மணலுக்கான பெறுமதி சேர்ப்பு மற்றும் விவசாய கூட்டுறவுகளின் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் பால் மற்றும் பண்ணை வளர்ப்பு, கைத்தொழிற்துறையை கட்டியெழுப்புதல், தக்காளி சாறு உற்பத்தி போன்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளுதல் போன்ற பல துறைகளில் நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், முதலீட்டுக்கு இதுவே நல்ல நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய இலங்கை சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் பிரதமருக்கு திரு.ரெட்டி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் பல நிறுவனங்களைக் கொண்ட குழுமத்தின் தலைவர் திரு. டி.எஸ். பிரகாஷ், பால் உற்பத்தி மற்றும் சேகரிப்புக்கு விவசாய கூட்டுறவு சங்கங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் வெற்றியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை தனது பால் தொழிலை விரிவுபடுத்த முடியும் என்று கூறினார்.

பல தசாப்தங்களாக இலங்கையில் வர்த்தகம் செய்த அனுபவத்தை மேற்கோள் காட்டி, இந்திய மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள், மிகப்பெரிய இந்திய சந்தைக்கான தயாரிப்புகளை தயாரிப்பதற்காக, இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை இந்திய சங்கம், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் பழமையான மற்றும் மிகப்பெரிய நட்புறவு சங்கங்களில் ஒன்றாகும்.

பிரதமர் ஊடகப் பிரிவு