அறிவு, திறமை மற்றும் ஆற்றல் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாகும்.
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவசியமெனவும், அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜூன் 27 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் (IIESL) 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பட்டயப் பொறியியலாளர்கள் Chartered Engineers, ஒன்றிணைந்த பொறியியலாளர்கள் (Incorporated Engineers) மற்றும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் (Engineering Technicians) ஆகியோரை உள்ளடக்கிய பொறியியல் துறை சார்ந்த உலகளாவிய அமைப்பின் முக்கிய பிரிவினரான ’ஒன்றிணைந்த பொறியியலாளர்களின்’ தொழில்சார் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிகழ்வின்போது, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க புதிய அங்கத்தவர்களுக்கு பிரதமரினால் அங்கத்துவச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பொறியியல் வல்லுநர்கள் தேசிய அபிவிருத்திக்கு ஆற்றும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியதோடு, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்களும் முயற்சிகளும் அதன் உறுப்பினர்கள் தமது தொழில்சார் பயணத்தில் முன்னேற உறுதுணையாக அமைவதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் தொடர்ந்து வலுச்சேர்க்கவும் காரணமாக அமைவதாகத் தெரிவித்தார்.
வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில், திறன்கள் மற்றும் ஆற்றல்கள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் ஒப்பிடப்படும் சூழலில், சில பொறியியல் தகைமைகளுக்குக் குறைவான அங்கீகாரம் கிடைப்பது பல திறமையான நிபுணர்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இச்சவால்களை எதிர்கொள்ளுதல் தனிப்பட்ட பயிற்சியாளர்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி, இலங்கையின் பொறியியல் திறனை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் இன்றியமையாததாக அமையும் எனக் கூறினார்.
கல்வித் துறையில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், உயர்கல்வியின் தொடர்ச்சியான மேம்பாடு ஒரு தேசிய முன்னுரிமையாகும் எனத் தெரிவித்தார். தனிநபர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தவும், திறன்களை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்த இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில்சார் அமைப்புகள், கைத்தொழில் துறை மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கிடையில் தொடர்ச்சியான உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை ஒருங்கிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் எம்.பி. ஆனந்த குணவர்தன, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச, இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி திலக் டி சில்வா, சபையின் உறுப்பினர்கள், நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், புதிய அங்கத்தவர்கள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு