நீதிமன்றத் தீர்ப்புகளின்படியே ஆசிரியர் தேர்வுகள் நடத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பட்டம் பெற்ற திகதியைத் திருத்தம் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சிறுவர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, புதிய டிஜிட்டல் கொள்கை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகச் சரியான திட்டமிடலின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியைச் செலவிட்டு, அதன் முன்னேற்றத்தைச் சமர்ப்பியுங்கள்.
எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள இரண்டு ஆசிரியர் தேர்வுகளும் தற்போதுள்ள வழக்கு விசாரணைகளின்படி வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைவாகவே நடத்தப்படும் என்றும், கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, பட்டம் பெற்ற திகதி தொடர்பான நிபந்தனைகளைத் திருத்தம் செய்வதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மொனராகலை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்குத் திறன் பலகைகளை (Smart Boards) வழங்கும் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த 132 பாடசாலைகளுக்குத் திறன் பலகைகள் வழங்கப்படவுள்ளன. பிரதமரின் அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் செயலணியின் தலையீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் அடையாளமாக, 10 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்குத் திறன் பலகைகளை வழங்கும் நிகழ்வு பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் கொள்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 01 இற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கற்றல் முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து நேரில் ஆராய்வதற்காகப் பிரதமர் இன்று (13) மொனராகலை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது கும்புகன மொ/ ஸ்ரீ சண்முகம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மொனராகலை மதுருகெட்டிய மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்குச் சென்று தரம் 01 மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பிரதமர் கண்காணித்தார்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு, மதுருகெட்டிய மகா வித்தியாலயத்தின் பெயரை "மொனராகலை தர்மராஜ மகா வித்தியாலயம்" என மாற்றுவதற்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் முன்வைத்த முன்மொழிவுக்கும் இதன்போது பிரதமர் அனுமதி வழங்கினார்.
புதிய செயல் நூல்கள் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பங்கேற்பதாகவும் இதன்போது ஆசிரியர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இது முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும், இந்தத் தேர்வுகள் மூலம் குறிப்பிடத்தக்க வசதியை ஏற்படுத்த முடியும். நீதிமன்றத் தீர்மானத்தின்படி பட்டம் பெற்ற திகதி 2025.06.30 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பலரது கோரிக்கைகளை ஏற்று அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அந்தத் திகதியைத் திருத்தம் செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன் தீர்மானங்களுக்கு அமைய நாம் செயற்படுவோம்.
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகச் சரியான திட்டமிடலின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியை வெளிப்படைத்தன்மையுடன் செலவிட்டு அதன் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய, மாகாண அல்லது கிராமிய, நகர்ப்புற எனப் பிரிந்து எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுக்க முடியாது. கல்வி அதிகாரிகள் என்ற வகையில் நீங்கள் சரியான தரவுகளின் அடிப்படையில் விரைவான மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அத்துடன், பிரிவெனா கல்வியை மேம்படுத்துவது மற்றும் பிரிவெனா ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கல்வி அமைச்சின் பிரிவெனா குழு தற்போது கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக மற்றும் வாணிப பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட, ஊவா மாகாண கல்விச் செயலாளர் நிஹால் குணரத்ன உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





