பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்...

உழைப்பின் கண்ணியத்திற்கும் இயற்கையிடமிருந்து கிடைத்த பாதுகாப்பிற்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசார பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (ஜனவரி 15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த தைப்பொங்கல் விழாவை பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வில் பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரின் தலைமையில் தைப் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இந்த விழாவில் இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியை முன்வைத்து கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ,

"இந்த நிகழ்வு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்ட நிகழ்வு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல துறைகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தைப் பொங்கல் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த தைப் பொங்கல் தினத்தில், இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப பாடுபடும் அனைத்து இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இவ்வருட தைப் பொங்கல் தினத்தில், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் செயற்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.

தைப் பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய சாரமாக விளங்குவது, பொறுமை மற்றும் சூழல் மீதான மரியாதை ஆகிய முக்கிய பண்புகளுடன், ஒரு நாடாக முன்னேறுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாடு புதியதோர் யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொள்கை மற்றும் மனப்பான்மை சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது சவாலானது என்றாலும், அது ஒரு அத்தியாவசிய பணி என்றும் பிரதமர் கூறினார்.

"தைப் பொங்கல் பண்டிகை, ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், இயற்கையுடனான நமது தொடர்பையும், நமது அன்றாட வாழ்வில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது. இன்று இந்த தேசிய தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இந்து சமூகத்திற்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் மற்றும் இந்து சமயத் தலைவர்கள் உட்பட சர்மத தலைவர்கள், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறப்பு அதிதிகள், இந்து பக்தர்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி – 2026

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இத்திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களே. இயற்கையை மீறி எம்மால் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது. இயற்கையினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் கைமாறு செய்வது மிக உயர்ந்த மனிதப் பண்பாகும்.

நாடு என்ற ரீதியில் நாம் இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்கின்றோம். கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக, மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ஒரு ’மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. சவால்கள் நிறைந்ததாக இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாம் அந்தப் பொறுப்பை ஏற்று, தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருடத்தை உறுதியுடன் ஆரம்பித்துள்ளோம்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதேபோல, நாட்டின் சுபீட்சத்திற்காக நாம் மேற்கொள்ளும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பது போன்றதே. இத்தருணத்தில், இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, வளமான கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது.

ஒருவரையொருவர் மதித்தல், பிற மத மற்றும் கலாச்சார உரிமைகளைப் பேணுதல் போன்ற உயரிய பண்புகளுடன், நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.

தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இப்புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இத்திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன்.


கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஜனவரி 15 ஆம் திகதி

Farewell Call on Prime Minister by the Ambassador of the United States of America to Sri Lanka.

H.E. Ms. Julie Jiyoon Chung, Ambassador of the United States of America to Sri Lanka, paid a farewell call on the Prime Minister Dr. Harini Amarasuriya at Temple Trees on the 14th of January, marking the conclusion of her tenure in Sri Lanka.

The Prime Minister warmly welcomed H.E. the Ambassador and expressed sincere appreciation for her service and significant contribution to strengthening bilateral relations between Sri Lanka and the United States during her tenure. The Prime Minister conveyed special thanks to the Government of the United States for the timely assistance extended to Sri Lanka during the emergency situation following Cyclone Ditwah.

H.E. Ms. Julie Jiyoon Chung expressed her gratitude to the new Government of Sri Lanka for the cooperation, support, and spirit of mutual understanding extended to her throughout her tenure, and reaffirmed the continuity of partnership between the two countries.

During the meeting, discussions were held on ongoing cooperation under the Fulbright Scholarship Programme and the United States Peace Corps Programme, with both sides emphasizing their value in fostering strong people-to-people ties and long-term collaboration.

The meeting was attended by Ms. Jayne Howell, Deputy Chief of Mission, Ms. Menaka Nayyar, Counselor for Public and Cultural Affairs, Mr. Pradeep Saputhanthri, Secretary to the Prime Minister, Ms. Sagarika Bogahawatta, Additional Secretary to the Prime Minister, Mr. Sugeeshwara Gunaratna, Director General of the Europe and North America Division, Ministry of Foreign Affairs, and Ms. Pramuditha Manusinghe, Director of the Europe and North America Division, Ministry of Foreign Affairs.

Prime Minister’s Media Division

சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய தொடர்பாடல் திட்டம் (SBCC) அங்குரார்ப்பணம்! - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

முன்பள்ளி ஆசிரியர் பயிற்சியை முறையாக முன்னெடுத்துச் செல்லவும் முன்பள்ளிகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை

முன்பள்ளிக் கல்வியை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும், அதனை ஒரு பொதுவான கலைத்திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும், ஆசிரியர் பயிற்சியினைச் சீராக முன்னெடுத்து அதன் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, யுனிசெப் (UNICEF) நிறுவனம் மற்றும் Clean Sri Lanka திட்டம் ஆகியன இணைந்து, ஆரம்பகாலச் சிறுவர்களின் சமூகம் மற்றும் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகச் சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய தொடர்பாடல் திட்டத்தை (SBCC) அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இன்று (10) அலரி மாளிகையில் வைத்து இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியானது, மனித இன வளர்ச்சிக்கும் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பிரதான காரணியாக அமைகின்றது. பிள்ளைகளின் எதிர்காலம், ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாகும். ஒரு பிள்ளையின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியமான பல விடயங்கள் ஐந்து வயது வரையிலான காலப்பகுதியிலேயே நிகழ்கின்றன. அக்காலப்பகுதியில் பிள்ளை பெறும் அனுபவங்கள், அரவணைப்பு மற்றும் அன்பு ஆகியன மிகவும் தீர்க்கமானவையாக அமைகின்றன.

ஒரு பிள்ளை பெரியவராக உருவாவதற்குச் சிறுவயதில் பெறும் சமூகமயமாக்கலின் தாக்கம், இடைத்தொடர்புகள் மற்றும் சூழலின் செல்வாக்கு ஆகியன அடிப்படையாக அமைகின்றன. ஒருவர் வளர்ந்த பின்னர் அவரை மாற்றியமைக்க முடியாத அளவிற்கு ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி வாழ்க்கை மீது செல்வாக்கு செலுத்துகின்றது.

பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்துப் பெரியவர்கள் வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள், அவர்களுடன் பழகும் விதம், அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் மிக முக்கியமானவையாகும். எனவே, பிள்ளைகளின் ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியைப் பெற்றோரின் பொறுப்பாக மாத்திரம் எம்மால் ஒருபோதும் கருத இயலாது. இது அனைத்துப் பிரஜைகளினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

ஒரு பிள்ளையைச் சிறந்த பிரஜையாக எம்மால் தனித்து உருவாக்க இயலாது. எமது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதும், எமது பெற்றோரைப் போலவே எமது வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்திய பெருமளவானோர் இருக்கின்றனர் என்பது தெரியவருகின்றது. எமக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்கிய பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரினதும் பங்களிப்பாலேயே இன்று நாம் இந்த நிலையை எட்டியுள்ளோம். ஆகையினால் பிள்ளைகளைப் பாதுகாப்பாதை ஒரு சமூகப் பொறுப்பாகவே எமது அரசாங்கம் கருதுகின்றது. ஒரு பிள்ளையை உருவாக்குவதில் அவருக்குக் கிடைக்கவேண்டிய அரவணைப்பு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பது ஒரு சமூகப் பொறுப்பாகும் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில் ’கிளீன் ஸ்ரீலங்கா’ அமைப்பின் தலையீடு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

பிள்ளைகளுக்காக முன்பள்ளி ஆசிரியர்கள் விசேட பணியை ஆற்றுகின்றார்கள். பிள்ளைகளுக்கு அப்பருவத்தில் கிடைக்கும் அன்பு, அரவணைப்பு மற்றும் அவர்களுக்குச் செவிசாய்த்தல் என்பன பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன. அந்த வகையில் பிள்ளைகளின் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்கிறீர்கள். ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி குறித்துக் கல்விக் கொள்கையொன்று உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. UNICEF நிறுவனம் இதற்காக எமக்குத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குகின்றது. முன்பள்ளிக் கல்வியை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முன்பள்ளிக் கல்வியை ஒரு பொதுவான கலைத்திட்டத்திற்குள் கொண்டு வருவதற்கும், ஆசிரியர் பயிற்சியை முறையாக முன்னெடுப்பதற்கும், அதன் தரத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி என்பது கல்வித்துறையில் ஒரு விசேட துறையாக இனங்காணப்பட்டு, அத்துறை மீது அரசாங்கம் கவனம் செலுத்தும், எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்,

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டிற்கான முதன்மை இலக்கு, ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சியைத் தரப்படுத்துவதும் மேம்படுத்துவதுமாகும். தாயின் மடியிலிருந்தும் தந்தையின் தோளிலிருந்தும் பிரிந்து முன்பள்ளி ஆசிரியர்களிடம் வரும் பிள்ளை, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் பெற்ற அதே அரவணைப்பையும் அன்பையும் ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றது. ஆசிரியர்கள் அச்சிறுவர்களைப் பார்க்கும் விதத்திலும், அவர்களுடன் பேசும் வார்த்தைகளிலும் அந்த அன்பை உணரச் செய்வது ஆசிரியர்களின் கடமையாகும். ஒரு பிள்ளை சூழலை நேசிக்கவும், மற்றவரை மதிக்கவும் அவர்களுக்குக் கிடைக்கும் அன்பும் பாதுகாப்பான சூழலுமே காரணமாக அமைகின்றன, எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ:

"எதிர்க்காலத்தில் இந்நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள தலைமுறையை, இன்று நாம் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகள் மற்றும் இன்னல்களிலிருந்து விடுபட்ட ஒரு அழகான தலைமுறையாக மாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காகப் பொருத்தமான குழுவினரே இந்தத் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எமது நாட்டு மக்களை ஆரோக்கியமானவர்களாகக் கட்டியெழுப்புவதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டால், குறிப்பாகத் தொற்றா நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியமாகும். இன்று 3 முதல் 5 வயது வரையிலான பிள்ளைகளே, 2040ஆம் ஆண்டளவில் 18 முதல் 20 வயதை எட்டிய தலைமுறையினராக இருப்பார்கள். இத்தலைமுறையைத் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு இவ்வாறானதொரு தொடர்ச்சியான வேலைத்திட்டம் அவசியமாகும். அதற்கு ஆரம்பகாலக் குழந்தைப்பருவத்திற்கு முன்னரான தாயின் கருவறையில் இருக்கும் காலத்திலிருந்தே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பகாலக் குழந்தைப்பருவ வளர்ச்சி மையங்களின் ஆசிரியர்களாகிய நீங்கள் பொறுப்பேற்பது, எதிர்காலத்தில் இந்நாட்டின் பாரிய மாற்றத்திற்காக ஆற்றப்பட வேண்டிய பெரும் பணியேயாகும, எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமால் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி Emma Brigham, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ். பி. சி. சுகீஸ்வர, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், துறைசார் அமைச்சுகளின் அதிகாரிகள், மாகாண சபை அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்:

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட ‘வளமான நாடு - அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி, சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்கும் சமமான நீதித்துறைக் கட்டமைப்பின் கீழ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட வழக்குகள் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய, தகுதியான வழக்குகள் தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தம் 102 வழக்குகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 65 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3 வழக்குகள் தொடர்பில் மீண்டும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நீதித்துறையின் செயற்பாடுகளை அவதானித்தால், எவரையும் பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது மிகத் தெளிவாகப் புலப்படும். இந்த நாடாளுமன்றத்தில் தற்போது இருப்பவர்கள் மட்டுமன்றி, தற்போது நாடாளுமன்றத்தில் இல்லாத பலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டு நாம் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்காகச் சற்று கால அவகாசம் தேவைப்படும்.

நாங்கள் தராதரம் பார்த்துத் தீர்மானங்களை எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம். அரசாங்கம் எக்காரணம் கொண்டும் எவரையும் பாதுகாக்காது.

கடந்த கால அரசாங்கங்களில் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டவர்களே, தற்போது அரசாங்கம் நீதித்துறைச் செயல்முறையைச் சரியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘யாரையாவது பாதுகாக்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது,” என தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழில்நுட்பப் பயன்பாட்டின் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கல்விச் சீர்திருத்த உரையாடலுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்!

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

6ஆம் தர ஆங்கில மொடியூலில் (Module) ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகா நாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தும் போதே, இன்று (08) கண்டியில் வைத்து பிரதமர் இதனைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மொடியூல்களினதும் அச்சுப் பிரதிகள் மகா நாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்று காலை கண்டி மல்வத்து விகாரைக்குச் சென்ற பிரதமர், மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்து, 6ஆம் தர ஆங்கில மொடியூலின் முதலாம் பதிப்பில் ஏற்பட்டுள்ள பிழை குறித்து விளக்கமளித்தார்.

அதன்போது, கல்வி என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம் எனவும், இவ்வாறான விடயங்களில் அதிக கரிசனையுடனும் சரியான மேற்பார்வையுடனும் செயற்பட வேண்டும் என்றும், முறையான விசாரணையை நடத்தி கல்விச் சீர்திருத்தப் பணிகளை முறையாக முன்னெடுத்துச் செல்லுமாறு மகா நாயக்க தேரர் ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற பிரதமர், அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து, ஆங்கில மொடியூலில் உள்ள சிக்கல் குறித்து விளக்கமளித்தார்.

கல்விச் சீர்திருத்தம் என்பது காலத்தின் தேவை என்றும், அது பற்றி முறையான மேற்பார்வையுடனும் மிகுந்த கவனத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த மகா நாயக்க தேரர், இலங்கையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் விதத்திலிருந்து அது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார்.

மகா நாயக்க தேரர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இந்தச் சிக்கல் குறித்து ஆராய நாம் ஒரு குழுவை நியமித்தோம். பின்னர் தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரையுடன் அந்தப் பாடத்தை நீக்க நடவடிக்கை எடுத்ததோடு, சம்பந்தப்பட்ட மொடியூலின் அனைத்து அச்சுப் பிரதிகளையும் முத்திரையிட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆகையினால், எந்தவொரு மொடியூலும் பாடசாலை மாணவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை. இச்சம்பவம் குறித்து அமைச்சினால் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பு குறித்த கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம், எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

எதிர்க்கட்சியினர் இந்தத் தேசியப் பணியையும் தமது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும், சமூகத்தில் பலரும் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்துத் தவறுகளைத் திருத்தும் நோக்கில் நேர்மறையாகவே கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏற்பட்டுள்ள தவறுகளை அடையாளம் கண்டு, அவற்றைத் திருத்தி கல்விச் சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகையினால், எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கல்விச் சீர்திருத்தம் பற்றிய உரையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதிச் செயலாளர் வணக்கத்திற்குரிய முருத்தேனியே தம்மரக்கித்த தேரர், மகா விகாரைத் தரப்பின் பிரதிச் செயலாளர் மஹவெல ரதனபால தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான துஷாரி ஜயசிங்க, தனுர திஸாநாயக்க, கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் டி.டி. விமலவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு