பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவச் செயல்பாட்டினைப் பின்பற்றியது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.

ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாறு அந்தச் செலவை அரசாங்கமே பொறுப்பேற்று, நிலைபேறான முகாமைத்துவச் செயன்முறையொன்றைப் பின்பற்றியதாகவும், எனினும் நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் 15 ஆம் திகதி நடைபெற்ற, அரச சேவையைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரச நிறுவனங்களுக்குள் வலுசக்தியைச் சேமிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ’வலுசக்தி முகாமைத்துவ அதிகாரி’ (Energy Manager) ஒருவரை நியமிப்பது குறித்தும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலாதாரங்களை நோக்கிச் செல்ல வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ’Clean Sri Lanka’ தேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கக் கட்டிடங்களைப் பசுமைக் கட்டிடக் கோட்பாட்டிற்கு (Green Building Concept) அமைய வடிவமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இதுவரை நடைமுறையிலிருந்த ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினை நீக்கி, QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதுடன், இவ்வருடத்தின் எஞ்சிய மாதங்களுக்குத் தேவையான எரிபொருளும் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.

மின்சார நுகர்வினை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ’Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மின்சார நுகர்வினை முறையாக முகாமைத்துவம் செய்யும் வீடுகளைத் தெரிவு செய்து பாடசாலை மாணவர்கள் ஊடாக மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்கால கட்டுமானத் திட்டங்களில் பசுமைக் கட்டிடக் கருத்தை Green Building அறிமுகப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் முறையான வலுசக்தி முகாமைத்துவத்தை முன்னெடுப்பதனால், மக்கள் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து அதிக கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்சாரத் தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் அந்த நெருக்கடியைச் சரியான முறையில் கையாண்டோம். எனினும், நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததால் நாம் இது குறித்துத் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும். நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.ஜி.எஸ்.பி. ரோஷன் உள்ளிட்ட அரச நிர்வாகம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வலுசக்தி ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

’சஞ்சாரக்க உதாவ 2026’ பிரதமர் தலைமையில் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

கூட்டான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய போட்டித்தன்மை மிக்க நிலைபேறான சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடியும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் 13 ஆவது தடவையாக நடத்தப்படும் இலங்கையின் முன்னணி சுற்றுலாத் துறைக் கண்காட்சியான ’சஞ்சாரக்க உதாவ (Sancharaka Udawa) 2026’ நிகழ்வில், மே 15 முற்பகல் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (SLTPB) ஒத்துழைப்புடன், இலங்கை உள்நாட்டுச் சுற்றுலாச் சங்க அமைப்பாளர்களினால் (SLAITO) ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி, 2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெறும்.

இம்முறை கண்காட்சியில் 250 இற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் பங்கேற்பதுடன், 300 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், 100 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் வர்த்தகச் சந்திப்புகள் (B2B), கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியன 15, 16 ஆகிய இரு தினங்களிலும் நடைபெறவுள்ளன.

இம்முறை கண்காட்சியில் முதன்முறையாக வெளிநாட்டு அனுசரணையுடன் கொள்வனவாளர்களுக்கு (Foreign Hosted Buyers) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும். இதன் மூலம் உள்நாட்டுச் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருப்போருக்கு சர்வதேச சந்தையுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான முன்னெப்பொழுதும் இல்லாத வாய்ப்புகள் கிட்டவுள்ளன.

’சஞ்சாரக்க உதாவ 2026’ கண்காட்சியைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களுக்காகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்:

நிலைபேறான, அனைவரையும் உள்ளடக்கிய, சுற்றாடல் நேய சுற்றுலாத் துறையொன்றைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் தொலைநோக்காகும். தற்போது எதிர்நோக்க வேண்டியுள்ள சுற்றாடல், அரசியல், பொருளாதார மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், சுற்றுலாத் துறை அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துச் செயற்படுவது மிகவும் அவசியமானதாகும். உலகளாவிய சுற்றுலாத் தளத்தில் இலங்கையைச் சரியான இடத்தில் நிலைநிறுத்துவதும், ஒரு சுற்றுலா இலக்காக நாட்டின் சர்வதேச வர்த்தக நாமத்தைப் பலப்படுத்துவதும் மிக முக்கியமானதாகும்.

இத்துறையில் மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக இளைஞர், யுவதிகளின் வருங்கால வேலைவாய்ப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தார். இளைஞர்கள் சுற்றுலாத் துறை போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், இதற்காகச் சுற்றுலாத் துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டுச் சுற்றுலாத் துறையைப் பலப்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த பிரதமர், சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தைப் பலமாகக் கட்டியெழுப்பவும், நிலைபேறான முன்னேற்றத்தை அடையவும் அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையில் முறையான கூட்டான்மையையும் ஒத்துழைப்பையும் பேணுவது அத்தியாவசியமாகும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, இலங்கை உள்நாட்டுச் சுற்றுலாச் சங்க அமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நளின் ஜயசுந்தர உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர், கண்காட்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero was conferred the title of Chief Sanghanayaka

The official ceremony to present Sannas Patra to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero, who was conferred the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces, was held on 14 of May at the historic Pothubandhana Rajamaha Viharaya in Bibile, with the participation of Prime Minister Dr. Harini Amarasuriya.

The ceremony was held under the patronage of the Anunayake of the Malwathu Chapter, Most Venerable Dimbulkumbure Vimaladhamma Nayaka Thero. During the ceremony Prime Minister Dr. Harini Amarasuriya presented the official Sannas Pathraya conferring the title of Chief Sanghanayaka of Wellassa, Bintenne and the Eastern Three Provinces to Prof. Venerable Maha Oya Jinarathana Nayaka Thero.

Addressing the gathering, Prime Minister Dr. Harini Amarasuriya stated that the Nayaka Thero, who entered monastic life in 1982, has rendered exemplary service to Buddhism and society for over four decades, setting a model for the entire community. She noted that the contributions made by the Veneration Thero by continuing the Sri Saranankara and Sri Saddhatissa Dhamma Schools, as well as the service carried out as the Chief Prelate of the Deegavapi Pirivena, are highly commendable.

The Prime Minister further stated that the humanitarian assistance extended annually by providing educational equipment to hundreds of children is commendable and strengthens the government’s efforts towards realizing educational policies. The Prime Minister appreciated the efforts of the venerable Nayaka Thero toward the restoration of the historic Deegavapi Maha Seya and the development of other temples.

The Prime Minister also highlighted that initiatives such as the construction of a Bhikkhu ward at the Ampara Hospital demonstrate selfless dedication of the venerable Thero through actions. The Prime Minister further emphasized that religious leaders who work for the spiritual and social upliftment of the people in historically significant regions such as Wellassa and Bintenne are essential to the country, and that the conferring of this title by the Malwathu Chapter is an honour not only to the Thero but also to the people of those regions.

The occasion was graced by the presence of members of the Maha Sangha representing the three Nikayas, and attended by the Minister Samantha Viddyarathna, Deputy Minister R.M. Jayawardena, Opposition Leader Sajith Premadasa, the Governor of Uva Province, government officials, and a large gathering of devotees.

Prime Minister’s Media Division

தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 மிகவும் முக்கியமானதாகும் , ஏனெனில் அது இத்துறைக்குக் கொள்கை, தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு அரசாங்கம் என்ற வகையில், தொடர்ச்சியான செயற்பாட்டை இதனுள் கொண்டுவருவதும், கூட்டுறவை வளர்க்கும் சூழலை உருவாக்குவதும், அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதற்கான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அவர்கள் புத்தாக்கத் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எமது கடமையாகும்.

மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026, பற்றிய உரையாடலின் இரண்டாம் நாளில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SME) பலப்படுத்தும் நோக்கில் “தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026” இன் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா, 13ஆம் திகதி கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கட்டமைப்பானது, “வளமான நாடு — அழகான வாழ்க்கை” எனும் தேசியக் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி ஆலோசனைக் குழு மற்றும் முக்கிய பங்குதாரர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு, தொழில்முயற்சியாளர்களுக்குத் தமது வர்த்தகத்தினை இலகுவாகப் பதிவு செய்யவும், நவீன தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ளவும், விசேட நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், பாரம்பரிய முறையிலிருந்து விலகி இலவசமாக வழங்கப்படும் நேரடி ஆலோசனைச் சேவைகளைப் பெறவும் வழிவகுக்கிறது.

இரண்டாம் நாள் நிகழ்வில், “தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பின் (2026)” அமலாக்கம் மற்றும் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துதல் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தியதோடு, தொடர் குழு விவாதங்களும் இடம்பெற்றன. தேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி மூலோபாயக் கட்டமைப்பு 2026 அறிக்கையைப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பிரதமருக்கு வழங்கிவைத்தார்.

அங்கு உரையாற்றிய பிரதமர்,

உலகளாவிய நிலையற்ற சூழல் மற்றும் சீர்குலைவு நிறைந்த காலகட்டத்தில் நாடு தனது மாற்றுச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டதோடு, குறிப்பாகச் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையில் தகவமைப்பு, நிலைத்தன்மை மற்றும் மீட்சி அடைதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிக் கொள்கைக் கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இத்துறையில் தொடர்ச்சியான செயற்பாடு, நிலைத்தன்மை மற்றும் கூட்டுறவை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இந்தக் கட்டமைப்பு முக்கியமானது ஏனெனில் இது இத்துறைக்குத் தொடர்ச்சியான கொள்கை மற்றும் நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது. இந்தக் கட்டமைப்பானது கொள்கை பற்றியதாகும். துறையில் நிலைத்தன்மையை நிலைநாட்டுவது, கூட்டுறவை வளர்ப்பது மற்றும் கொள்கைகள் ஆகியன குறுகியகால நிகழ்ச்சி நிரல்களாக அல்லாது, சான்றுகளின் அடிப்படையிலும் நீண்டகாலத் தொலைநோக்கு மூலமாகவும் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியனவே இதன் சாரம்சமாகும். கொள்கை நிலைத்தன்மையால் இயக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் சிறந்த முறையில் ஒருமைப்படுத்தப்பட்ட தளமாக, சிதறிக் கிடக்கும் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத ஒரு துறையை ஒன்றிணைப்பதற்கு இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், நிலைத்தன்மையைக் கொண்டுவருவதும், ஒத்துழைப்பை வளர்த்து குழுப்பணிக்கு வழிவகுக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவதும், துணிந்து செயற்படவும் புதுமைகளைப் புகுத்தவும் தக்க வகையில் மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதுமே அடிப்படையில் எமது பொறுப்பாகும் என நாம் நம்புகிறோம்.

அடிக்கடி கொள்கைகள் மாறாது என்றும், அரசாங்கமே சீர்குலைவின் ஆதாரமாக அமையாது என்றும் மக்கள் உணரக்கூடியதாக இருக்க வேண்டும். தொடர் செயற்பாடு, நிலைத்தன்மை மற்றும் அவை பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையின் மூலமே நாம் இந்த முயற்சியை உண்மையான வெற்றியை நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாக அமையும். இந்த மிக முக்கியமான முயற்சியை மேற்கொண்ட உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விச் சீர்திருத்தங்களில் தொழில்முயற்சி மனப்பான்மையை ஒருங்கிணைக்கும் தேவை குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இளைஞர்கள் தமது திறன்களையும் ஆற்றல்களையும் அடையாளம் காணவும், தமது எதிர்காலத்திற்கான பல்வேறு பாதைகளைக் கண்டறியவும் உதவும் கல்வி முறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 6ஆம் தரம் முதல் கைத்தொழில் மற்றும் நிதி பற்றிய அறிவைப் புகட்டும் கல்வியை அறிமுகப்படுத்துவதை முன்னிலைப்படுத்தியதோடு, மாணவர்களுக்கு நடைமுறை அனுபவங்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதில் தொழில்துறையின் ஆதரவு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகர் திருமதி Ruth Baird, தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம். திலகா ஜயசுந்தர மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள், வணிகச் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இனங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இன்றியமையாதது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் ஆனைமடுவ போன்ற பல்லினப் பண்பாட்டுப் பிரதேசங்களில், இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவம் அவசியமானது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தலைமைத் தேரருக்கு ராஜவன்னி மற்றும் குமாரவன்னி ஆகிய இரு பிரதேசங்களுக்குமான பிரதம சங்கநாயக்கர் பதவியை வழங்குவதை முன்னிட்டு, 13ஆம் திகதி ஆனைமடுவ சுதம்பாயவில் நடைபெற்ற ’சன்னஸ் பத்திரம்’ கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மல்வது விஹாரை பீடத்தின் அநுநாயக்கர் நியாங்கொட விஜிதசிறி தலைமைத் தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் குறித்த ‘சன்னஸ் பத்திரம்’ ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த தலைமைத் தேரரிடம் கையளிக்கப்பட்டது. ’விஜினிபத’ எனும் விசிறியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

ஆனைமடுவ தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த நாயக்க தேரர், சுமார் 50 ஆண்டுகாலத் துறவற வாழ்விலும் 35 ஆண்டுகால ஆசிரியர் சேவையிலும் பௌத்த சாசனத்திற்கும் நாட்டின் கல்வித் துறைக்கும் அளப்பரிய சேவையாற்றிய ஒரு துறவியாவார். அவர் வெறுமனே மதச் சடங்குகளுக்கு மாத்திரம் தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளாது, இப்பிரதேச சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் இன்ப துன்பங்களின்போது நிழல் போல உடனிருப்பவர். குறிப்பாக, கடந்த ஆண்டு திடீர் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அவர் வழங்கிய மனிதநேயத் தலைமைத்துவமானது முழுப் பிரதேசத்திற்கும் பெரும் சக்தியாக அமைந்ததை நினைவுபடுத்த வேண்டும்.

அத்தோடு, பரமாகந்த ரஜமகா விஹாரை உள்ளிட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற புனிதத் தலங்களைப் புனரமைத்து, அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதில் அவர் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பரிவுமிக்க மக்களைக் கொண்ட ’புதிய மறுமலர்ச்சி யுகத்தை’ நோக்கி நாட்டை இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் நோக்கத்தை அடைந்துகொள்வதில், இத்தேரரைப் போன்ற நடைமுறைச் சாத்தியமான மதத் தலைவர்களின் வழிகாட்டலும் ஆசீர்வாதமும் அரசாங்கத்திற்குப் பெறுமதிமிக்கதாகும்" எனப் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முப்பிரிவின் மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், வடமேல் மாகாண ஆளுநர், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, தியவதன நிலமே நிலங்க தேல பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுடன், பெருமளவு பக்தர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, கொழும்பு மாவட்டச் செயலகத்தில் மே மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாவட்டத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், கிராமப்புற வீதி அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பரவலாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டிற்காக 195 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான தமது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கனவே 240 திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 127 மில்லியன் ரூபா பெறுமதியான 126 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் வீதி வலையமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதில் அபாயகரமான இடங்களில் பாதுகாப்பு வேலிகள் மற்றும் சமிக்ஞைப் பலகைகளை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு கிராமப்புறப் பாலங்களை நிர்மாணிப்பதற்காக 100 மில்லியன் ரூபாவும், 50 கிலோமீற்றர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உத்தியோகத்தர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "பிரஜா சக்தி" திட்டத்திற்காக 1,036 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அத்திட்டங்கள் அனைத்தையும் 2026 நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு பிரதமர் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், விளையாட்டு அமைச்சின் பங்களிப்புடன் பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல், புத்தசாசன மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கீழ் விசேட திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, அசித நிரோஷன, கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு