பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயல்படுத்தப்பட வேண்டும்.

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், திட்டங்களைத் தயாரிப்பதற்கும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த அரசாங்கத்தினால் முடிந்திருக்கிறது என்றும், நிதி ஒதுக்குவதால் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது என்பதால் நிறுவனங்களைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் அவர்கள்,

"கல்வி பற்றிப் பேசும்போது, ஒரு நாட்டில் தரமான கல்வியை உருவாக்க வேண்டுமானால், கல்வி தொடர்பான முடிவுகள் கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். இரண்டாவது, கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலுவான நிறுவனக் கட்டமைப்பு அவசியம். இவை இரண்டையும் செய்யப் பணம் இருக்க வேண்டும். நம் நாட்டின் வரலாற்றில் இந்த மூன்று அம்சங்களும் சரியாகச் செய்யப்படாததால்தான் இன்று நாம் கல்வித் துறையில் பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கல்விக்காகச் செய்யும் சேவை காரணமாக கல்வியின் தரத்தைப் பேண முடிந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் நாம் மேற்கொண்ட மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நமது கல்வித்துறை சார்ந்த தீர்மானங்களை இயற்றுதல், நிறுவனங்களை இனம் கண்டு, நிலவுகின்ற பிரச்சினைகளை முறையாகத் தீர்த்து, நிறுவனக் கட்டமைப்புகளைச் சரிசெய்து, கொள்கைத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, கொள்கை திட்டங்களுக்கு அமைய பணத்தை உரிய முறையில் பயன்படுத்தி, 2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற கல்விச் சீர்திருத்தங்களுக்காகச் செயற்பட்டமையே ஆகும்.

கொள்கைகளை உருவாக்குவதால் மாத்திரம் தரமான கல்வியை நடைமுறைப்படுத்திவிட இயலாது. அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த திட்டம் இருத்தல் வேண்டும். அதிகாரிகளுக்குச் சரியான இலக்குகளைக் கொடுக்க வேண்டும். பொறுப்புகள் சரியாகப் பகிரப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்த கல்விக் கொள்கைகளைப் பார்க்கும்போது, பாடசாலைகளில் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான பரிந்துரைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆயினும், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திட்டமிடல், நிறுவனக் கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைச் சீராகச் செய்யப்படாததாலேயே அந்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணமாக இருந்திருக்கின்றன.

2025இல் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குப் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எம்மால் எடுக்க முடிந்தது. அதற்கான நிறுவன அமைப்பை உருவாக்க எம்மால் முடிந்தது. கல்வி அமைச்சு முடிவுகளை எடுக்கும்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய நான்கு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. அவை: சமத்துவத்தின் மூலம் கல்வித் துறையின் வேற்றுமைகளைத் தளர்த்துதல், தரத்தை அதிகரித்தல், ஆளுகை (Governance) மற்றும் தரவு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றின் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளைத் தயாரித்தல் ஆகியனவாகும். இந்த நான்கு அம்சங்களின் அடிப்படையில் கொள்கைகளைத் தயாரிக்கவும், திட்டங்களைத் தயாரிக்கவும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கவும் எம்மால் முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் பிரச்சினையை ஆராய நாம் நியமித்த குழு வெளியிட்ட அறிக்கையில், கடந்த காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறை எந்த அளவிற்குச் சீர்குலைந்திருந்தது என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. செயலில் இருக்க வேண்டிய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்குப் பதிலாக, மிகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் முடிவுகள் எடுக்கப்பட்டதால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தரம் சீர்குலைந்தது இருப்பதோடு அதனால் அந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமையினாலும், நிறுவனக் கட்டமைப்புகளில் பலவீனங்கள் இருந்ததாலும், கல்வி தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இவ்வாறு வீழ்ச்சியடைந்தே இருந்தன. 2025ஆம் ஆண்டில் அந்த நிலைமையைச் சரியான இடத்திற்குக் கொண்டு வர எம்மால் முடிந்திருக்கின்றது.

பல வருடங்களின் பின்னர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது 7.04 பில்லியன் ரூபா. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.04% ஆகும். முதல் வருடத்திலேயே கல்விக்காக 6% விகிதத்தை ஒதுக்குவோம் என நாம் கூறவில்லை. கொள்கைகளை உருவாக்கி, நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும் என்பதை நாம் அறிவோம். பணத்தை ஒதுக்கிக் கொடுப்பதால் மாத்திரம் அனைத்தும் நடந்தேறிவிடாது. நிறுவனங்களைப் பலப்படுத்தி, கொள்கைகளை நடைமுறைப்படுத்திப் பணத்தை ஒதுக்குவோம்.

கல்விச் சீர்திருத்தங்களுக்காக 3,000 மில்லியன் ரூபா கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமையவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2025இல் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட செலவினம் குறித்தும் இங்கு பேசப்பட்டது. ஆயினும் எமது வரவுசெலவுத் திட்டம் ஏப்ரல் மாத இறுதியிலேயே நிறைவேற்றப்பட்டது. மே மாதத்திலிருந்தே பண ஒதுக்கீடு ஆரம்பமானது. அதன்படி, எமது நிதித் துறையின் முன்னேற்றம் 18% ஆகும். டிசம்பர் மாதத்திற்குள் எமது அந்த முன்னேற்றம் 69% ஆக வந்துபடும். இதற்கு முன் கல்விக்காக இந்த அளவு திறமையான செயல் திறன் வெளிப்பட்டதில்லை. செயலாளர்கள் உட்பட அதிகாரிகளுக்கு இலக்குகளைப் பெற்றுக் கொடுத்து, கண்காணிக்கப்பட்டே இந்த முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இதைவிட அதிக முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியும்.

சவால்கள் இருக்கவே செய்கின்றன. பலவிதமான பலவீனங்கள் இருந்து வருகின்ற ஒரு துறையையே நாம் மேம்படுத்தி வருகிறோம். இதற்கு மேலும் இத்துறையின் செயல்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பிரச்சினை எழும்போது அதன் மீது திறமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருந்து வருகின்ற வரையறைகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயாரித்து, படிப்படியாக எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்," எனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மிக முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரம் மீதும், அவர்களின் பாதுகாப்பு மீதும் விசேட கவனம் செலுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மிகவும் முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரத்தையும்,அவர்களின் பாதுகாப்பையும் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மூலம் ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக முறையான செயற்றிட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஷ்வ முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் 2025, நவம்பர் 24ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகப் பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தகுதியான பயிற்றுவிப்பாளர்களைத் தெரிவு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதற்காக நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

முன்பள்ளிகளை ஒழுங்குபடுத்துதல், மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள் மூலம் ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் அரசாங்கத்திற்கும் முன்பள்ளிகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகப் பாடத்திட்டத்தைத் தயாரித்தல், முன்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி. சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சமன்மாலீ குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (Asian Productivity Organization) வெளியிடப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தினால் (Korea Development Institute) சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் (National Productivity Roadmap) மற்றும் உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழை வெளியிடுவதற்கு இணையாக, நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் கையளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பிரதான கைத்தொழில் துறைகளான விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் ஆகியன எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், இலங்கையின் தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன், இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தொழில்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, குறுகிய காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய புதிய கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் கொள்கைத் திட்டங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டியதோடு, உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும், உலகளாவிய தளத்திற்கான மூலோபாய அணுகல் வழிகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

மேலும், முன்னேற்றம் கண்டுவரும் ஒரு மூலோபாய அணுகல் வழியாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் அதன் விரிவான பங்கு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.எம். திலகா ஜயசுந்தர, ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி Indra Pradana Singawinata, ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவர் திரு. Arsyoni Buana மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டது.

பிரதமர் ஊடகப் பிரி

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் சமாதானப் படையின் (Peace Corps) கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும், ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விளக்கப்படுத்தியதுடன், Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

சர்வதேசக் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்னணிப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமான Fulbright புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும், கல்விமான்களுக்கும் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை வழங்கி வருகின்றது.

பரீட்சையை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பிலிருந்து ஒத்துழைப்புமிக்க கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்காக, கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் மனித அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் அறிவாளிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில், அமெரிக்கப் பொது விவகார அதிகாரி திருமதி. Menaka Nayyar, அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இலங்கை Fulbright ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி Patrick McNamara, மற்றும் பாலின சமத்துவம், பாலின அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய (SGBV) நிலையத்தின், அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாணவர் பகிடிவதைத் தடுப்பு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரபா மனுரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. பிரமுதித்தா மனுசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. Matthew John Duckworth அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் பற்றியும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகள் பற்றியும் கவனம் செலுத்திய பிரதமர், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவுபடுத்தியதுடன், பிராந்திய மற்றும் பல்தரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அத்தோடு, தொழில்சார் கல்வித் துறையின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதின் அவசியம் குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைச் சட்டகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவை கோரிய பிரதமர், தொழில்சார் கல்வித் துறையை பலப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. Matthew John Duckworth, முதல் செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. Zoe Kidd மற்றும் இலங்கை Austrade இன் கல்விப் பணிப்பாளர் திருமதி. Sandi Seneviratne,பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் திரு. Dhawood Amanullah, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. திலோமா அபயஜீவ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா (Aqua Planet Sri Lanka) - 2025 சர்வதேசக் கண்காட்சி ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.

மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.

நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

"நீர்வளத்தால் செழிப்பான எதிர்காலம்" எனும் தலைப்பில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025" கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சார்ந்த உற்பத்திகள், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், நீரியல் தாவரங்கள், அலங்கார மீன் வகைகள் உட்பட மீன்பிடித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெறும் அக்குவா பிளானட் 2025 சர்வதேசக் கண்காட்சி இன்று, நவம்பர் 21 முதல் 23ஆம் திகதி வரை தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப விழாவை முன்னிட்டு, மீனவ சமூகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஓய்வூதிய உரிமைப் பத்திரங்கள் பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது. அக்குவா பிளானட் 2025ஐ அடையாளப்படுத்தும் வகையில் முதலாம் நாள் தபால் உறை, ஞாபகார்த்த முத்திரை ஆகியனவும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவ்விழாவில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

எமது அரசாங்கத்தின் "வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப, நாம் எதிர்பார்த்தபடி இலங்கையை மீன்பிடித் துறையின் உலக ஏற்றுமதி மையமாக (Global Export Hub) மாற்ற வேண்டும் என்ற இலக்கை யதார்த்தமாக்கும் ஒரு படியாகவே அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025 சர்வதேசக் கண்காட்சியை நான் பார்க்கின்றேன்.

நாட்டின் தேசியப் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கினையும் வகிக்கும் அதே வேளை, நமது நாட்டின் பெருமளவு மக்களின் பிரதான வாழ்வாதாரமாகவும் மீன்பிடித் தொழில் இருந்து வருகின்றது. ஆகையினால் நீரின வளர்ப்பு மற்றும் உள்ளக மீன்பிடித் தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும். உயிரினங்கள் மற்றும் நீர்த் தாவரங்கள், மதிப்புச் சேர்க்கப்பட்ட கடலுணவுப் பொருட்கள் ஆகிய உற்பத்தித் துறைகளில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு, விஞ்ஞான ரீதியிலான (Science-Based) வள முகாமைத்துவம், பொதியிடல், சூழல்நல மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் நவீன நீரின வளர்ப்பு பற்றிய அறிவையும், தொழில்நுட்பத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத்தர அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம் என்பதை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக, மதிப்புச் சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கான ஒரு செயற்றிட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், மீன்பிடித் தொழிலுடன் சம்பந்தப்பட்ட கிராமியச் சிறிய அளவிலான உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினைக் கற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நாட்களில் பிரதான பேசுபொருளாக இருப்பது எமது அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மீன்பிடித் துறையின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருக்கின்றது. எமது மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகளைத் தயாரிப்பதற்காக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

துறைமுக உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 500 மில்லியன் ரூபாயை நாம் ஒதுக்கி இருக்கின்றோம். அத்தோடு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான உயிர்காப்பு உபகரணங்கள் வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபாய் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடிப் பிரதேச கண்காணிப்பு முறைமைக்காக (Satellite-Based Fish-Ground Tracking Systems) 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அத்தோடு நீரினப் பண்ணை அபிவிருத்தி நிலையங்களை உருவாக்குதல், மீனவ சமூகத்தின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மீன்பிடித் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றுக்காகவும் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கூற விரும்புகிறேன்.

இறுதியாக, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க நாம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்குப் பங்களிக்குமாறு மீன்பிடித் துறை சார்ந்த உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள்,

வீழ்ச்சியடைந்திருந்த மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பதற்கான பாரிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கண்காட்சி திட்டமிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தக் கண்காட்சியின் பிரதான நோக்கம், நமது நாட்டின் கடல் வளங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கடல் வளத்தை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அதன் பயன்களைப் பெற்றுக் கொடுப்பதோடு, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதே ஆகும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தொழிற்கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் திரு. கோலித்த கமல் ஜினதாச உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் மீனவ மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு