6ஆம் தர மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது; கற்றல் தொகுதிகளை அச்சிட்டதால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை
பாடப்புத்தக அச்சிடல் மற்றும் கற்றல் தொகுதிகள் (Module) தொடர்பாக இன்று (03) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
"2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் பாடப்புத்தகங்களை ஓடர் செய்வதற்கு முறையான தரவு அமைப்பு ஒன்று இருக்கவில்லை. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஓடர் ஆவணங்கள் மூலமே அவை பெறப்பட்டன. பாடசாலைகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் எஞ்சியிருந்த பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. இதனால் எஞ்சிய புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிதிப் பெறுமதியைக் கணக்கிட முடியாமலிருக்கின்றது.
2023 முதல் 2025 வரை பாடப்புத்தகங்களை ஓடர் செய்யும் நடைமுறை தரவு அமைப்பு மூலமே முன்னெடுக்கப்பட்டது. அதனால் அவை முறையாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஆண்டின் ஆரம்பத்திலேயே அடுத்த ஆண்டிற்குத் தேவையான பாடப்புத்தகத் தரவுகள் அந்த அமைப்பின் ஊடாகப் பெறப்படுகின்றன. தரவு அமைப்பு மற்றும் கையிருப்பிலுள்ள புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விற்பனை மற்றும் அவசர அனர்த்தங்களின் போது ஏற்படும் தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
பாடப்புத்தக விநியோகம் மற்றும் அச்சிடுவதற்குத் தேவைப்படும் காலம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே கொள்முதல் செயல்முறை முன்னெடுக்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்களை அச்சிடுகின்றனர். களஞ்சியங்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கப்பெறும் முறைமைக்கு ஏற்ப, அவை விரைவாக விநியோகிக்கப்படுகின்றன.
பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் (Modules) ஆகியன வெவ்வேறானவை. தற்போது அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின்படி, 6ஆம் தரத்தின் முதலாம் தவணைக்காகக் கற்றல் தொகுதிகள் (Modules) அச்சிடப்பட்டன. அந்தத் தொகுதிகள் அனைத்தையும் நாம் நீக்கிவிடவில்லை. 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த கற்றல் தொகுதிகளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானித்துள்ளோம். ஆயினும் கற்றல் தொகுதிகள் எவையும் அகற்றப்படவில்லை. அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் நாம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. 6ஆம் தர மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெப்ரவரி மாதத்தில் நாம் விநியோகிப்போம்.
6ஆம் தர மாணவர்களுக்கு எவ்விதத்திலும் அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு





