பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் மற்றும் பிலியந்தலை, கொலன்னாவை ஆகிய வெசாக் விழாக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

கங்காராம விகாரையின், வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்காராம விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

மே மாதம் 31 ஆம் திகதி பிற்பகல், பிலியந்தலை தர்ம சாஸ்த்ரோத பிரிவென் விகாரையில் நடைபெற்ற ஸ்ரீ சர்வஜ்ஞ தாது (புனித சின்ன) கண்காட்சியின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டார். அவ்விகாரைக்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, விகாராதிபதி தேரரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர், தர்மசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தாதுக்களைத் தரிசித்தார். அதன் பின்னர், பொதுமக்களும் அப்புனித சின்னங்களை வழிபடும் வகையில் புனித சின்னக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.

இதனை அடுத்து, மாதின்னாகொட ஸ்ரீ சுரம்யாராம விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய தொடங்கொல்லே பஞ்ஞானந்த தேரரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டிகாவத்தை – முல்லேரியாவை வெசாக் வலயத்தினையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், யமா மகா பெலஹரையை மையமாகக் கொண்டு, கொட்டிகாவத்தை – முல்லேரியாவை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணத்தைப் பிரதமர் ஒளியேற்றி ஆரம்பித்து வைத்தார். ஐக்கிய வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வுடன், கொலன்னாவை இளைஞர் பௌத்த சங்கமும், கொலன்னாவை கிழக்கு மற்றும் மேற்கு சாசன பாதுகாப்பு மன்றங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பௌத்த பக்திப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் மகாசங்கத்தினர், அமைச்சர்களான வசந்த சமரசிங்க, சுனில் வடகல, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரு தோரணங்கள் பிரதமரால் திறந்து வைப்பு

மே மாதம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்புப் பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு வெசாக் தோரணங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

பொரளை மகசின் ஐக்கிய வர்த்தகர்களின் ஸ்ரீ வைசாக்ய சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “சம்புலா ஜாதகக் கதை” அடங்கிய தோரணத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் அமைக்கப்பட்ட “சமுத்திர வாணிஜ ஜாதகக் கதையை” மையமாகக் கொண்ட தோரணத்தையும், சம்பிரதாய முறைப்படி தேங்காய் எண்ணெய் விளக்கேற்றி ஒளியூட்டித் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், ஏனைய மத குருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நஜித் இந்திக, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, திலித் ஜயவீர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு, மகசின் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் பாலித ஹேரத் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் வெசாக் தினச் செய்தி

புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமைய வேண்டும் என இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன்.

வெளி உலகை ஒளிபெறச் செய்வதைப் போலவே, எமது இதயங்களையும் அன்பு, கருணை, அறிவு ஆகியவற்றைக் கொண்டு ஒளிபெறச் செய்வதற்கு இந்த வெசாக் காலத்தை ஒரு சந்தர்ப்பமாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். பேராசை, வெறுப்பு, மடமை ஆகிய தீய குணங்கள் அகன்று, சாந்தியையும் சமாதானத்தையும் மேலோங்கச் செய்யும் புண்ணியகரமான காலப்பகுதியாக இதனை நாம் மாற்றிக்கொள்வோம்.

"அபித்தரெத கல்யாணே" பொது நலனுக்காகத் தாமதமின்றி அணிதிரள்வோம் எனும் இம்முறை அரச வெசாக் விழாவின் கருப்பொருளானது, காலத்தின் சமூகத் தேவையை மிகத் தெளிவாகச் சித்தரிக்கின்றது. தனிப்பட்ட குறுகிய நோக்கங்களிலிருந்து விலகி, பொது நலனுக்காக அர்ப்பணிக்கின்ற, தருமத்தினால் பிரகாசிக்கின்ற ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்வதற்கு இந்த வெசாக் விழாவை நாம் ஓர் ஆசீர்வாதமாகவும் சக்தியாகவும் கொள்ள வேண்டும்.

அதிவணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களினதும், அகில இலங்கை சாசனாரட்சக சபையினதும் அறிவுரைகளுக்கமைய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்யும் அரச வெசாக் மகோற்சவம் எல்லா வகையிலும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

அரசாங்கத்திற்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையே நிலவும் ஆழமான பிணைப்பினால், தார்மீக ஆட்சியின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையும் செழிப்பையும் ஏற்படுத்த முடியும். இனம், மதம், குலம் எனும் பேதங்களற்ற, அனைவருக்கும் நீதி கிடைக்கப்பெறும், "அனைத்து உயிர்களும் நலமாக இருக்கட்டும்" என்ற உன்னத கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாக, நாம் எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் சமூக சவால்களை வெற்றி கொள்வதற்குத் தேவையான பொறுமையைக் கடைப்பிடிப்பது இங்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.

தீவிரவாதத்தைத் தவிர்ந்து, நடுநிலைப் பாதையில் பயணிக்கும், இயற்கை மற்றும் சூழல்நேய வெசாக் கொண்டாட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரிடமும் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன். கொள்கைகளைப் போற்றும் ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்!

உங்கள் அனைவருக்கும் புண்ணியகரமான வெசாக் பண்டிகை நல்வாழ்த்துகள்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மே 30 ஆம் திகதி

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz )அவர்கள், பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz )அவர்கள், 2026 மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz) அவர்களை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கான வத்திக்கான் தூதராக நியமிக்கப்பட்டதற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கை மக்களுடன் பேணப்பட்டுவரும் நீண்டகால நட்புறவும் ஆன்மீக ஒற்றுமையும் தொடர்பில் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

இருதரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகள் மற்றும் ஈடுபாடுகள் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் ’டிட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

’டிட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலும், இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையிலான மனிதாபிமான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட ’மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம்’ (Humanitarian Priority Plan – HPP), சூறாவளியால் பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் 81 பங்காளர் அமைப்புகளின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இத்திட்டம் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இத்திட்டத்தின் மூலம் சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்ட பாரிய ஒத்துழைப்பினைப் பாராட்டிய பிரதமர், எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்துவதற்காகத் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், இக்கலந்துரையாடலின்போது ’டிட்வா’ சூறாவளி பற்றிய சமீபத்திய நிலைமையறிக்கையினை (Situation Report) ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, மூலோபாய செயற்பாடுகள் தொடர்பான சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.யூ.ஏ. வீரசிங்க மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான உதவிச் செயலாளர் சஷினி அனுபமா ஆகியோரும், ஐக்கிய நாடுகள் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அலுவலகத் தலைவர் ஆண்ட்ரியாஸ் கர்பாத்தி அவர்களும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சஷிகா சோமரத்ன மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு பணிப்பாளர் சமன்மலி அதுலகம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும், திறந்த அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 28 ஆம் திகதி கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் நடைபெற்ற “இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு 2026” நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் ஜெர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி சபை (AHK Sri Lanka) மற்றும் கொழும்பில் அமைந்துள்ள ஜெர்மன் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் பிரதான நோக்கம், கடல்சார் மற்றும் வழங்கல் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கையை ஊக்குவித்தலாகும்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாக தொழிற்பயிற்சி, தொழிற்கல்வி, புத்தாக்க வலுசக்தி மற்றும் பொருளாதார பரிவர்த்தனை ஆகிய துறைகளில் ஜெர்மனி வழங்கி வரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

அத்தோடு, தற்போது இலங்கை, பேரினப் பொருளாதார நிலைத்தன்மையையும், கூடுதல் போட்டித்தன்மை மிக்க பொருளாதார மாதிரியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பு சீரமைப்புகள் மற்றும் நல்லாட்சிசார் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இந்த செயல்முறைகளின் போது பெண்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்கள் மீது ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்ற மூலோபாய முக்கியத்துவமிக்க நிலை, திறமையான தொழிலாளர் படை மற்றும் மேம்பட்டு வரும் முதலீட்டுச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், ஜெர்மன் வணிக சமூகத்தினர் இலங்கையுடன் புதிய கூட்டாண்மைகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஜெர்மன் தூதுவர் கலாநிதி ஃபெலிக்ஸ் நியுமன் (H.E. Dr. Felix Neuman), AHK Sri Lanka நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி மார்ட்டின் க்ளோஸே (Mr. Martin Klose) ஆகியோரும் அரச உத்தியோகத்தர்களும் இரு நாடுகளின் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு