பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளில் மாவட்டக் குழுக்களுடன் இணைந்து செயற்படுங்கள். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (பெப்ரவரி 19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டப் பாடசாலைகளை அடையாளம் காணுதல், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு மற்றும் பாடசாலைகளுக்குச் சொந்தமான காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நிலவும் ஆசிரியர், அதிபர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் தரம் 13 இல் கற்கும் மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் பயில்வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் தொழிற்கல்வியைத் தொடரும்போது நிலவும் மொழிப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். மேலும், ஆசிரியர் பயிற்சிகளின்போது தமிழ் மொழிமூல ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மாவட்ட மட்டத்திலான தரவுகள் அவசியம் என்றும், ’தித்வா’ சூறாவளியினால் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இப்பாடசாலைகளை மீள அமைக்கும்போது இடத்தின் பொருத்தப்பாடு குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இதற்கான தரவுகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்தப் பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரச பாடசாலைகளே. எனவே, எதிர்காலத்தில் இப்பாடசாலைகளை எவ்வாறு பெயரிட்டு அழைப்பது என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்குத் தெளிவுபடுத்தி, அக்குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர், இதன் மூலம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளை மிக நெருக்கமாகக் கண்காணிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் 23,000 பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை ஓரளவுக்கு நிரப்ப முடியும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன், நிலவும் வெற்றிடங்களை முழுமையாக நிரப்பும் வகையில் வருடாந்தம் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தொழில்சார் கல்விக்கான முதலீடு நிறுவன உறுதிப்பாட்டிற்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான அடித்தளம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை பட்டயப் பணியாளர் முகாமைத்துவ நிறுவனத்தினால் (CIPM) ஏற்பாடு செய்யப்பட்ட, ’அங்கீகாரத்தின் புதிய உச்சங்கள்’ New Heights of Recognition எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் கடந்த புதன்கிழமை ,பெப்ரவரி 18 நடைபெற்ற இந்நிகழ்வின்போது, SCQF 11 ஆம் மட்டத்தின் (Level 11) கீழ், QS தரச்சான்று பெற்ற புதிய பாடத்திட்டத்துடனான ’மனிதவள முகாமைத்துவத்தில் பட்டயத் தகைமை’ (CQHRM) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது, தொழில்சார் மற்றும் தொழிற்கல்விப் பாதைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,

நமது கல்விப் பாதைகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற, நிபுணத்துவ மற்றும் தொழிற்துறை சார்ந்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்விச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். இது நாம் கல்வித்துறையில் ஆரம்பித்துள்ள சீர்திருத்தச் செயல்முறைகளுடன் ஒத்துப்போகின்றது. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது எல்லைக்கு உட்பட்டது மாத்திரமல்ல, எவர் வேண்டுமானாலும் கல்வி கற்றுக்கொண்டே தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.

இலங்கையின் தேசிய முன்னுரிமைகளை முன்னிறுத்தி மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இலங்கை பொருளாதார மீட்சி, நிறுவன ரீதியான சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இக்காலகட்டத்தில், திறமையான மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட மனிதவளத் தலைமைத்துவத்தின் தேவை இன்றியமையாதது. போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் என்பது முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, நிறுவனங்களைத் திறம்பட வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த தொழில் நிபுணர்களின் மீதே தங்கியிருக்கின்றது.

இந்த SCQF Level 11 மனிதவள முகாமைத்துவ பட்டயத் தகைமையானது, நிபுணர்களின் சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்துவதுடன், நாட்டின் தொழில்சார் கல்வி முறைமை மீதான நம்பிக்கையையும் மேலும் உறுதிப்படுத்தும் என பிரதமர் குறிப்பிட்டார். அத்தோடு, நியாயமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பாதுகாப்பான பணிச்சூழல், பெண்களுக்கான தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணித்தள சமத்துவத்தை முன்னெடுப்பதில் மனிதவள முகாமைத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொழிற்துறையின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், பணியாளர் முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt அவர்களை வரவேற்ற பிரதமர், உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தாம் டாவோஸ் நகருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், உலகப் பொருளாதார மன்றத்திற்கு இணைவாக இடம்பெற்ற உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான விஜயங்கள் ஆகியவை இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின்போது சுவிட்சர்லாந்தின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (VET) துறை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டப்பட்டது.

’டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகச் சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கிய உதவிகளைப் பாராட்டிய பிரதமர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீளக் கட்டியெழுப்பும் பணிகளின்போது, குறிப்பாகப் பாலங்கள் மற்றும் புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதில் இலங்கைக்குத் தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதை வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தமது கவனத்தைச் செலுத்தினர்.

இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளர் Justine Boillat, குடியேற்றப் பிரிவின் முதன்மைச் செயலாளர் Andrea Kienast மற்றும் இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva பாராட்டியதுடன், ’டிட்வா’ சூறாவளியானது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் மீளெழும் திறனைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

’டிட்வா’ சூறாவளிப் பாதிப்பிற்குப் பின்னர் இலங்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளைப் பிரதமர் பாராட்டினார். பொருளாதார வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி ஊடாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நேரடியாகப் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை மேம்படுத்துதல், நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதன் அவசியம் ஆகியன குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்வியை வெறும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளரின் பணிக்குழாம் பிரதானி Andreas Bauer, ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி Krishna Srinivasan, (மூலோபாய தொடர்பாடல் பிரிவுத் தலைவர்) கலாநிதி Pierre Mejlak), இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி Martha Woldemichael, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட வழிபாட்டில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்துப் பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்ற விசேட சிவபூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டபோது...

நாட்டின் முன்னோக்கிய பயணத்தை இனவாதத்தூண்டல்களால் சீர்குலைக்க இடமளியோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சட்டம் இதைவிட வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.

நாம் ஆரம்பித்துள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களாகிய நீங்களும் முன்வர வேண்டும்.

இனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பின்னோக்கித் தள்ள எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மன்னார், அடம்பன் பகுதியில் பெப்ரவரி 15 நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

"எமது அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். புள்ளிவிபரங்களின்படி, மொத்த சனத்தொகையில் சுமார் 52 சதவீதமானோர் பெண்கள். அதன் அர்த்தம், எமது நாட்டின் மக்கள் தொகையில் பலம்மிக்க ஒரு தரப்பினர் பெண்களே என்பதாகும். ஆயினும், பல்வேறு துறைகளை எடுத்துக்கொண்டால் அல்லது அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்த்தால், அந்தப் பலம் நடைமுறையில் பெண்களாகிய எமக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்த பிரதான பிரச்சினை யுத்தமும் வன்முறையுமே ஆகும். நாம் ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்த்து வந்தோம். உண்மையில் யுத்தம் காரணமாக நாம் பிளவுபட்ட ஒரு நாடாகவே இருந்தோம். இதன் காரணமாகப் பெண்களே அதிகளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இந்நாட்டின் பெரும்பான்மையான பெண்கள் தமது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புகளை இழந்து துயரப்படுவதை நாம் அறிவோம். இந்தப் பகுதியிலும் அவ்வாறு துயரப்படும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் கடந்துவிட்ட போதிலும், அந்த அமைதி இன்றும் எமது இதயங்களில் ஏற்படவில்லை. இப்போதும் கூட, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாது தவிக்கும் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். தனித்து நின்று தமது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் பல பெண்களும் இருக்கிறார்கள்.

எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்நாட்டின் சகலரும் பாதுகாப்பாக, சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம். ஆயினும், சில இனவாதக் கும்பல்கள் மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன. அவர்களுக்கு ஊழலை ஒழித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டுமே. அதுவும் சாதாரண மக்களுக்காக அல்ல, அவர்களது சுயநலத்திற்காகவே.

அவர்கள் இந்நாட்டின் வளங்களை எந்த அளவுக்கு அழித்திருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். 2022 ஆம் ஆண்டில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆயினும் 2025 ஆம் ஆண்டளவில், திருட்டு, ஊழல் மற்றும் வீண்விரயங்களைத் தடுத்துப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எமது அரசாங்கத்தால் முடிந்தது. அதனாலேயே, ’தித்வா’ சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாரிடமும் கடன் பெறாது மக்களுக்கு உதவ எம்மால் முடிந்தது.

21 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பால் பண்ணையாளர்களுக்கு ’மில்கோ’ நிறுவனத்தின் இலாபத்தைப் பகிர்ந்து அளிக்க முடிந்தது. ஒரு வருட காலத்திற்குள் வருமான வழிகளை அதிகரித்து, நிறுவனங்களின் வீண்விரயங்களைக் குறைத்ததாலேயே இந்த இலாபத்தை வழங்க முடிந்தது.

வீழ்ச்சியடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பி, மோசடி மற்றும் ஊழலை நிறுத்தி, அரசியல்வாதிகளின் வீண்விரயங்களைத் தடுத்து, அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டை இனவாதத்தைத் தூண்டிப் பின்னோக்கித் தள்ளச் சிலர் முயற்சிக்கின்றனர்.

இனவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெண்களே ஆவர். நாம் மீண்டும் பிளவுபட்டு, ஒற்றுமையின்மையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டுமா? வேண்டாம் என்றால் அதற்குப் பெண்களின் தலைமைத்துவம் அவசியம். நாம் ஆரம்பித்துள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களாகிய நீங்களும் முன்வர வேண்டும். நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆகையினால் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தைப் பின்னோக்கித் தள்ள நாம் இடமளிக்க மாட்டோம்.

நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரதான பிரச்சினை போதைப்பொருள். எமது பிள்ளைகள் அதற்குப் பலியாகிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே நாம் இருக்கிறோம். இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுகின்றன. போதைப்பொருள் பாவனையாளர்கள் காரணமாக வீதிகளில் நடப்பதற்கும், வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்வதற்கும் அச்சமாக இருக்கிறது. போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். இது வரை அதிகாரத்தில் இருந்தவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். பொலிஸாருக்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் இன்று சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். இன்று பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்ய முடிகிறது. நீதிமன்றங்கள் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கின்றன. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும், சட்டம் அனைவருக்கும் சமம். இருப்பினும் சட்டப் பாதுகாப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படாத இடங்கள் இன்னும் இருப்பதை நாம் அறிவோம்.

வன்முறைக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சட்டம் இன்னும் வினைத்திறனானதாக இருக்க வேண்டும். நாம் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இவ்வாறான வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பிள்ளைகளின் கல்வியில் நம்பிக்கை வைத்துத் தாய்மார்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஐந்து வருட இடைவேளையின் பின்னர் இந்த ஆண்டு நாம் பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துகிறோம். நிச்சயமாக அந்த ஆசிரியர்கள் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இன்னும் அதிபர்கள் முறையாக நியமிக்கப்படாத நிலைமை இருந்து வருகின்றது. இந்த வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்ப நாம் கடந்த ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய பாடசாலை, சிறிய பாடசாலை என்ற வேறுபாடு இல்லாது, அனைத்துப் பாடசாலைகளிலும் இருப்பது எமது பிள்ளைகளே என்ற சமத்துவ நிலைமையை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்வி வலையத்திலும் ஒரு பாடசாலையை நாம் அபிவிருத்தி செய்வோம். அந்தப் பாடசாலைகளைத் தெரிவு செய்து அனுப்புமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். ஒவ்வொரு இரண்டாம் நிலை பாடசாலையிலும் ’திறன் வகுப்பறை’ (Smart Class Room) ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் இந்த ஆண்டு முதல் முதலாம் தரத்திற்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வியை வழங்க ஆரம்பித்துள்ளோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே எம்மை மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவந்தார்கள், அதை நாம் செய்தே தீருவோம். பொருளாதாரத்திற்காகப் பெண்களே அதிகளவு உழைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கே மிகக் குறைந்த ஊதியம் கிடைக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எனவே, வீட்டிலிருந்தே சுயதொழில் செய்வதற்கு அல்லது வேலையில் ஈடுபடும்போது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் (Daycare Centers) உருவாக்கப்பட வேண்டும்" எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உட்பட மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பெண்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு