பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

புதிதாக நியமனம் பெற்ற கனடிய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது ’திட்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கனடா நாட்டின் அனுதாபங்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்கக் கனடா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார். மீட்பு மற்றும் உடனடி நிவாரண நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனர்த்தத்திற்குப் பின்னரான இரண்டாம் கட்டத்தை இலங்கை தற்போது அடைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகம் வழங்கிய உதவிக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பெரும்பாலான பாடசாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பாடசாலைகளை டிசம்பர் 16 முதல் மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இயல்பு நிலைக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தையும், பொருத்தமான இடங்களில் நிவாரண மையங்களைப் படிப்படியாகக் குறைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்து, விவசாயத் துறையை ஆதரிப்பதில் கனடா கவனம் செலுத்துவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மீண்டும் பயிர்ச்செய்கையைத் தொடங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு உதவ ஏற்கனவே நிவாரண உதவி நடவடிக்கைகளைத் ஆரம்பித்திருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு கருவிகளின் சாத்தியமான பயன்பாட்டைக் குறிப்பிட்டு, அனைத்துக் குடிமக்களையும் உள்ளடக்கிய மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக உத்தியோகபூர்வ மொழிக் கொள்கைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். கல்வித் துறையில், குறிப்பாக ஆசிரியர் பரிமாற்றத் திட்டங்களில், ஏற்கனவே உள்ள மாணவர் ஒத்துழைப்பு முயற்சிகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் தெரிவித்த பிரதமர், பொதுநலவாய கற்றலுடன் (COL) இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு பற்றியும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பாக, அரசியல் மற்றும் வர்த்தகப் பதில் ஆலோசகர் பேட்ரிக் பிக்கெரிங் (Patrick Pickering) மற்றும் கூட்டுறவுத் தலைவர் கிரில் ஐயோர்தனோவ் (Kiril Iordanov) ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி. பிரமுதிதா மனுசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவ

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

’திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த முயற்சிகளுக்கு உதவும் வகையில் சர்வதேசச் சமூகம் வழங்கிவரும் ஆதரவையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது, இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கசகஸ்தானின் முதலீட்டை அதிகரித்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். கல்வித் துறையில், குறிப்பாக மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டுக் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பரஸ்பர கரிசனைக்குரிய ஒரு பகுதியாக அமைந்தது.

கசகஸ்தான் குடியரசின் தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தூதரகக் குழுவின் தலைவர் ருஸ்தெம் ஜமன்குலோவ் (Rustem Jamankulov) கலந்துகொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சமரி ரொட்ரிகோ, மற்றும் வெளியுறவு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. இரோஷா கூரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நாடு தழுவிய நிகழ்ச்சியின் ஒன்பதாவது கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன் போது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 361 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 36.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

"இதுவரை, விசேட அதிகாரம் அல்லது பதவிகளை வகிப்பவர்களுக்கு மாத்திரம் நன்மையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்த, சாதாரண மக்கள் பயனடைவது கடினமானதும் சிக்கலானதுமான செயல்முறையாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை, இணையவழியில் (Online) மற்றும் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய எளிய முறைமைக்கு கொண்டுவர எமது அரசாங்கம் வழி வகுத்திருக்கின்றது.

இந்தச் செயற்திட்டங்கள் அனைத்தையும் நாம் மேற்கொள்வது, நமது மனித வளத்தை தற்போதைய உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தி, முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவே ஆகும். இன்றைய உலகின் சிக்கலான தன்மைகளைப் புரிந்துகொண்டு பயணிக்கக்கூடிய மனித வளத்தை உருவாக்க ஒரு அரசாங்கம் என்ற வகையிலேயே நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

அந்த நோக்கத்திலேயே 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர விசேட வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். உற்பத்தித்திறன் மிக்க நல்ல பிரஜையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

சுற்றுச்சூழலை நேசிக்கும், அதனைப் பாதுகாப்பதில் முன்னிற்கும், தலைமைத்துவப் பண்பு கொண்ட, கருணை மற்றும் கூட்டுமுயற்சி பற்றிய உணர்வுள்ள, ஜனநாயகத்தை மதிக்கும் பொறுப்புமிக்க மனித வளத்தை உருவாக்குவதே எமது தேவையாக இருக்கின்றது.

சகல அரசாங்கங்களும் உங்கள் கல்விக்காகப் பங்களித்துள்ளன. இந்தப் பங்களிப்பு, நாட்டின் அனைத்து மக்களினதும் வரிப் பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் அந்தச் சமூகத்திற்காகச் சேவையாற்றவும், தலைமைத்துவத்தை வழங்கவும் கூடிய திறமையானவர்கள் நீங்கள் என்பதாலேயே, நீங்கள் எமக்கு மிகவும் பெறுமதியானவர்களாகின்றீர்கள்.

இன்று வழங்கப்படும் இந்தக் கௌரவமானது, நாம் உங்களுக்குகாக மேற்கொள்ளும் ஒரு முதலீடாகும். அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, அரசாங்கத்தின் பங்களிப்பினால் பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த விழாவில் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான திரு. அனில் ஜயந்த,

மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு நிதி உதவி பெறக்கூடிய நிதியமாகவே மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிதியம் பிரபலமாக இருந்துவந்தது. ஆயினும் புதிய அரசாங்கத்தின் கீழ், அதன் பயன்பாட்டுக்கான செயற்பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைய கல்வியையும் ஒரு விசேட துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், எவரையும் கைவிடாது (Inclusivity), அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையும் ஜனாதிபதி நிதியமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரோஷன் கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சந்தன சூரியஆரச்சி, திரு. சந்திம ஹெட்டியாராச்சி, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி நிதியத்தின் முகாமைத்துவ சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள், புலமைப்பரிசு பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது. அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளியுங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இந்த நேரத்தில் அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பேரிடர் காலத்தில் ஒருவர்மீது ஒருவர் கருணைமிக்க ஆரோக்கியமான பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நுவரெலியா மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பாடசாலைகளை 2025 டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்த போதிலும், பேரிடர் நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்த வலயங்களில் அமைந்துள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்றும், பிரவேசப் பாதைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், அனர்த்தங்களை எதிர்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியான உடையை அணியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எத்தகைய தடைகளுக்கு மத்தியிலும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் 51% நிறைவடைந்துள்ளதாகவும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பேரிடர் நிலைமைக்குப் பின்னரும் நாட்டை முன்பை விடச் சிறப்பாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீரஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான கலைச்செல்வி, அனுஷ்கா திலகரத்ன உட்பட மக்கள் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி. துஷாரி தென்னக்கோன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து அவுஸ்திரேலியாவின் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருடன் பிரதமர் கலந்துரையாடல்

அவுஸ்திரேலிய குடியுரிமை, நெறிமுறைகள் மற்றும் பல் கலாசார விவகாரங்களுக்கான உதவி அமைச்சரும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான திரு. ஜூலியன் ஹில் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க அவுஸ்திரேலிய அரசு நன்கொடையாக வழங்கிய 3.5 மில்லியன் டொலர் நிதி பங்களிப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். தற்போது காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் நாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருதற்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கல்வித் துறை, இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. கல்விக்கான உதவி வழங்குதல், உயர்கல்வித் துறையை விரிவுபடுத்தல் மற்றும் அவுஸ்திரேலிய அரசு வழங்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பிரதமர் பாராட்டினார்.

இலங்கையின் நீண்டகால மூலோபாய பங்காளியாக நாட்டின் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. அதன்படி, இலங்கையின் கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டுசெல்வதில் நம்பகமான பங்காளியாக தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய மேத்யூ டக்வர்த் (Matthew Duckworth), முதல் உதவிச் செயலாளர் கரேன் ஆன் சாண்டர்காக் (Karen Ann Sandercock), பணிக்குழாம் பிரதானி கேமரூன் ஜெஃப்ரி கிரீன் (Cameron Geoffrey Green) , கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஸ்தானிகர் ரூத் பெயர்ட் (Ruth Baird) மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வ, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, உயர்கல்விப் பிரிவின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) அப்சரா கல்தேரா மற்றும் கல்வி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு பங்ஙிய மீளாய்வு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு குறித்து முதற்கட்ட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது நடைமுறையில் உள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்ததாக புதிய டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறிப்பாக வலியுறுத்தப்பட்டது.

கல்விச் சீர்திருத்தங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டச் சீர்திருத்தம், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, நிர்வாகக் கட்டமைப்புச் சீர்திருத்தம் உள்ளிட்ட ஐந்து அடிப்படை அம்சங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்தக் டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போதைய வரைவு பிரதானமாகப் பாடத்திட்டம் சார்ந்த விடயங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளதாகவும், முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, டிஜிட்டல் எழுத்தறிவு, NEMIS (National Education Management Information System) மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதன் முக்கியத்துவம் ஆகியன குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி முறைமையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதோடு, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

யுனிசெஃப் நிறுவனப் பிரதிநிதிகளான டாக்டர் எம்மா பிரிகாம் (Dr. Emma Brigham), டெபோரா வைபர்ன் (Deborah Wyburn), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு