பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமர் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவையும் சீன வர்த்தக அமைச்சரையும் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே மே 30 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன.

அதன்படி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்மாலி ஹேமச்சந்திர, ஓஷானி உமங்கா மற்றும் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார் , வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் திரு. வாங் வென்டாவோ, பிரதமரைச் சந்தித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் Qi Zhenhong மற்றும் சீன அரசாங்க சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் (இருதரப்பு), தர்ஷன எம். பெரேரா மற்றும் அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், மே 30 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் புலமைப்பரிசில் மாணவியாக, இந்தியாவில் நான் இருந்த காலம் வெறுமனே முறைசார் கல்வி அனுபவமாக மட்டுமல்லாமல், இந்திய நாகரிகம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியங்களின் செழுமை மற்றும் பன்முகத்தன்மை பற்றிய பரிதலை பெற அருமையான வாய்ப்பாகவும் அமைந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார உறவானது மிகவும் ஆழமானதாகும்.

1998 ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தர் கலாசார மையம் (SVCC), எங்களிடையே கலாசார பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான ஒரு செயற்திறன்மிக்க தளத்தை உருவாக்கியது. ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட கலாசார நிகழ்வுகளை (கண்காட்சிகள், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், யோகா மற்றும் ஆயுர்வேத அமர்வுகள் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் உட்பட) நடத்திவரும் இந்த மையம், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆறு இலங்கை கலாசாரக் குழுக்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கப்பட்டுள்ளன. கலாசார இராஜதந்திரம் எவ்வாறு எல்லைகளைக் கடந்து, அரசியலைக் கடந்து, பரஸ்பர மரியாதையை வளர்க்கிறது என்பதை இந்தப் பரிமாற்றங்கள் அழகாகக் காட்டுகின்றன.

அதேபோன்று இந்தியாவில் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளுக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசுகளுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

நேரு, ராஜீவ் காந்தி, மௌலானா ஆசாத், கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (பொதுநலவாய), AYUSH, லதா மங்கேஷ்கர் போன்ற மதிப்புமிக்க புலமைப்பரிசில் திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இலங்கையில் 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் (ஆயுர்வேதம், மானிடவியல் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்) ICCR இன் முன்னாள் மாணவர்கள் என்பது இந்த உறவின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும். மேலும் ஆனந்த சமரக்கோன், நந்தா மாலினி, பிரதீப் ரத்நாயக்க போன்ற புகழ்பெற்ற கலைஞர்களும் இதில் ஒரு பகுதியாக உள்ளனர் என்பதையும் கூற வேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நாகரிகம், வரலாறு, மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கட்டிடக்கலை மற்றும் கலை மரபுகள் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களாக மாறியுள்ளன.

2024 பெப்ரவரி மாதம் இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) விசேட விருந்தினர்கள் நிகழ்ச்சியில் அனுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகளுடன் பங்கேற்றார். இதன்போது குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தனது இந்திய பயணத்தின் போது, கேரளாவில் அரச தகவல் தொழில்நுட்பத் துறையும், குஜராத்தின் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடும் அனுர குமார திசாநாயக்க அவர்களின் விசேட கவனத்தை ஈர்த்ததாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட விசேட அதிதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் இந்திய மொழிகள் மற்றும் அரங்கியல் கலைகளை கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

போலந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார்.

நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், அத்துடன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழிலாளர்கள் இடம் பெயர்வு, உயர் மட்ட சுற்றுலா, டிஜிட்டல் நிர்வாக முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகள் குறித்து பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, போலந்து செல்லும் இலங்கையர்கள் முகம்கொடுக்கும் விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு. ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி தெரிவித்தார்.

இரு நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் EEAS துணைத் தலைவர் மோனிகா பைலெய்ட், புதுடில்லியில் உள்ள போலந்து தூதரகத்தின் பொறுப்பதிகாரி பியோட்ர் ஸ்விட்டல்ஸ்கி மற்றும் புதுடில்லியில் உள்ள போலந்து தூதரகத்தின் பிரதிநிதிகள் Joanna Dopierała-Konkołowicz, Marta Stachowiz, Marta Stachowich, Małgorzata Kopeć, மற்றும் Konrad Laskowski ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்கள் செயற்திறன்மிக்க பங்களிப்பினை வழங்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்களின் செயல்திறன்மிக்க பங்கினை வகிக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் (29) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை புத்திஜீவிகள் தொழிற்துறையாளர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தற்போதைய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களை கௌரவித்தல் மற்றும் 50வது நினைவு முத்திரையை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளும் பிரதமரின் பங்கேற்பில் இடம்பெற்றன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இலங்கை தொழில்துறையாளர்கள் அமைப்பு (OPA) இலங்கையின் தொழில்சார் சமூகத்தை ஐக்கியப்படுத்தி அவர்களின் விசேட நிபுணத்துவம், கருத்துக்கள் மற்றும் பங்களிப்பு என்பவற்றிற்கான பலத்த குரலாக மாறுவதற்கு ஐந்து வருடங்களாக மேற்கொண்ட பிரயத்தனங்களை வரவேற்பதாகவும், அதன் பரப்பு மற்றும் விடயதானங்கள் என்பன அதன் விசேடத்துவமாக இருப்பதுடன், 34 தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 உறுப்புரிமை சங்கங்களைக் கொண்ட, 60,000 தொழிற்துறையாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் பிரதான சங்கமாக இலங்கையின் தொழிற்துறையில் OPA விசேட கடமைகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, OPA என்பது வெறுமனே ஒரு அமைப்பு மாத்திரமல்ல,மாறாக தொழில் தரம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கென பொதுவான அர்ப்பணிப்புகளுடன் கூடிய பல்வேறு துறைகளை இணைக்கும் ஒரு மேடையாகவும் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பொறியியல் விஞ்ஞானம், வைத்திய விஞ்ஞானம், சட்டம், நகர திட்டமிடல் போன்ற துறைகளைச் சேர்ந்த தொழிற்துறையாளர்கள் இலங்கையின் முன்னேற்றத்திற்கென அத்தியாவசியமான பங்களிப்பினை ஆற்றி வரும் அதேநேரம், நாட்டின் நிலையான மற்றும் நியாயமான அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு, ஒழுக்க ரீதியிலான தரநிலைகள் மற்றும் நாட்டிற்கு தேவையான தூரநோக்கு கண்ணோட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றிலும் பங்காற்றி வருகின்றன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நடைமுறைரீதியாக பரிணாமமடைந்த நாட்டை உருவாக்கும் தருணத்தில், அதற்கென புதிய யோசனைகள் பிறப்பதற்கும், அது சார்ந்த கலந்துரையாடல்களை இலகுபடுத்துவதற்கும் OPA போன்ற அமைப்புகள் முக்கியமான பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமெனவும் பிரமதர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இளம் தொழிற்துறையாளர்களின் மன்றத்தை பலப்படுத்துவதற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கென இளம் தொழில் முயற்சியாளர்களின் அதிக செயற்திறன்மிக்க பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தொழிற்துறையாளர்களுக்கே உரித்தான பங்களிப்பிற்க்கு அப்பாற் சென்ற பாரிய பொறுப்புக்கள் தமக்கு உள்ளதென்பதை இளைய தலைமுறையினர் புரிந்துகொள்வது அவசியமாகும் எனவும், ஆலோசனையை மேம்படுத்தல், ஒழுக்க ரீதியிலான தர நிலைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் கூட்டு தலைமைத்துவத்தை ஊக்கப்படுத்துவதன் ஊடாக இலங்கை தொழில் சமூகத்திற்கு தொடர்ச்சியாக வழிகாட்டுதல்களை வழங்குதல் முடியுமென்பபதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி சோபித்த ராஜகருணா, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, புத்திஜீவிகள், தொழிற்துறையாளர்கள், சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுஜீவ லால் தஹநாயக்க, பொதுச் செயலாளர் திசர டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்துறையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டம் பிரதமரால் பொதுமக்களிடம் கையளிப்பு

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை பிரிவுகளில் நீண்டகாலமாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தரமான மற்றும் போதுமானளவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டம் இன்று (29) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக 25.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது ஒரு நாளைக்கு 4,000 கன மீட்டர் நீர் சுத்திகரிப்பு கொள்ளவைக் கொண்டதாகும். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2028 ஆம் ஆண்டில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கொரியா நாட்டின் தூதுவர் மியோன் லீ ஆகியோர் நினைவுப் பலகையை திறந்து வைத்ததைத் தொடர்ந்து முதல் நீர் விநியோகமும் தன்னியக்கமாக திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றினார்.

இன்று முதல், ருவன்வெல்லை பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், அதற்காகவே இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கமாக, இதுபோன்ற திட்டங்களுக்கு நாங்கள் பெரும் தொகையைச் செலவிடுகிறோம். அது ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் இன்று உங்களுக்கு வழங்கப்படும் இந்த திட்டத்தைப் பாதுகாத்து, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று நான் உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.

"வளமான நாடு அழகான வாழ்க்கை" என்பது எமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமாகும். அதனை மக்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் வழங்குகவதற்காகத்தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இது போன்ற ஒரு திட்டத்தை உங்களுக்கு வழங்குவது என்பது உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி அழகுபடுத்துவதாகும்.

ருவன்வெல்லை மேல் மாகாணத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு பிரதேசம், அத்தோபடு அது சுற்றுலாத் துறைக்கும் பிரசித்திபெற்றதாகும், எனவே இதுபோன்ற ஒரு நீர் திட்டம் அத்தகைய பகுதிக்கு மிகவும் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்.

இத்திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார, சுகாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக தாமதமானது. இந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்க வழிசெய்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய கொரிய நாட்டின் EXIM வங்கிக்கும் எமது அரசாங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் தீப்தி யு. சுமனசேகர மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பெருமளவான பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் நேர்மறையான ​போக்கினை வெளிப்படுத்துதலே மதிப்பீட்டின் முக்கியத் தன்மையாகும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2025 மே 27ம் திகதி கொழும்பு, மெரியட் கோட்யாட் ஹோட்டலில் இடம்பெற்ற மதிப்பீடு சம்மேளனத்தின் 2025, மதிப்பீட்டு செயன்முறைகளின் எதிர்காலம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் வெளிப்படுவது நேர்மறையான போக்காகும் எனவும், பல தரப்பினரின் பங்கேற்பினை காணக் கிடைக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந மாநாடானது அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பரந்த சமூக தரப்பினர்களுக்கான ஒரு மேடையாகும் என்பதை
சுட்டிக்காட்டிய பிரதமர், அபிவிருத்தி செயமுறைகள் தோல்வியடையும் போது அதன் தாக்கம் நிதி ரீதியாக மாத்திரமன்றி, வாழ்க்கை, ஜீவனோபாயம் மற்றும் சந்தர்ப்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

கொள்கை மற்றும் நிகழ்ச்சிகளின் முழுமையான செயற்பாட்டை மதிப்பீடு செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே அவதானங்களை அடையாளம் காண்பதற்கும், முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கும், தேவையான சரிப்படுத்தல்களுக்கான சந்தர்ப்பமும் உருவாகுமென பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், காலநிலை, மனித செயற்பாடுகள் போன்ற பிரிவுகள் ஊடாக பிரதிபலன்களை வலுப்படுத்துவதற்கும், மனிதர்களுக்கும் சூழலுக்கு சிறந்த நன்மைகளை பெறுவதற்கும் இது உதவியாக அமையும் எனவும், நம்பிக்கைக்குரிய சாட்சியங்கள் ஊடாக கொள்கைகளின் செயல்திறனை புரிந்துகொள்வதற்கும் இவ்வாறான மதிப்பீடு உதவுமெனவும் சுட்டிக்காட்டிய பிரதமர், அது வெறுமனே வெற்றி மாத்திரமன்றி, விசேடமாக நியாயம் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்க்கும் போதும், கொள்கைகளை திட்டமிடும் போதும், செயற்படுத்தலின் போதும் காணப்படும் பலவீனங்களை சுட்டிக்காட்டுவதற்கும் காரணமாக அமையுமென குறிப்பிட்டார்.

மதிப்பீட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கென நிறுவன கொள்ளளவை கட்டியெழுப்புதல், நம்பிக்கைக்குரிய தரவுகளுக்கென காலத்திற்கேற்ற அணுகல் உட்பட சாட்சியங்கள் மற்றும் தொடர் கல்வியை வரவேற்கும் நிர்வாக கலாசாரமொன்றை மேம்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசிற்கு தமது செயற்பாடுகளின் பிரதிபலன்கள் குறித்தும், தேவைகளுக்கமைய வழங்கல் இடம்பெறுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கும் மதிப்பீட்டு செயன்முறைகள் காரணமாக சந்தர்ப்பங்கள் உருவாகுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பூகோள பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பீடு மன்றத்தின் தலைவர் கபீர் ஹாசிம், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ, தெற்காசிய மதிப்பீட்டாளர்களின் தலைவர் கலாநிதி ராஜீப் நந்தி, பிரிக்ஸ் புதிய அபிவிருத்தி வங்கியின் சுயாதீன மதிப்பீடு அலுவலக பணிப்பாளர் நாயகம் அஸ்வானி முது, UNFPA சுயாதீன மதிப்பீடு அலுவலகத்தின் பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட அதிகாரிகளும் இளைஞர்கள் மற்றும் வளர்ந்துவரும் மதிப்பீட்டாளர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு