பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அனர்த்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு உறுதி

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இன்று (2025 டிசம்பர் 23) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இலங்கை மீளக்கட்டியெழுப்பும் பணிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாகவே இந்தச் சந்திப்பு அமைந்தது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளக்கட்டியெழுப்புதல், விவசாயத் துறையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், வலுவான சட்ட, நிர்வாக மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளின் ஆதரவுடன், பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறைகளைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினரும் தற்போதைய நிவாரண முயற்சிகளை மீளாய்வு செய்ததுடன், மீட்பு நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னரான மீட்புச் செயற்பாடானது, உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதன்போது இந்திய அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நேரத்தின்போது வெளிப்பட்ட மக்களின் ஒற்றுமை, அவர்களின் தன்னார்வத் தொண்டு மற்றும் கூட்டுச் செயற்பாடுகளைப் பாராட்டிய பிரதமர், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம், அனர்த்தங்களுக்குள்ளாகும் தன்மையைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் இந்தியத் தூதுவர் திரு.Santosh Jha , இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் (IOR) திரு.Puneet Agrawal, இணைச் செயலாளர் திரு.Sandeep Kumar Bayyapu, பிரதித் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேSatyanjal Pandey ஆகியோரும், இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாணிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) திரு. சமந்த பத்திரண மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி டயானா பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தால் சேதமடைந்த ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப நிலையம் இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் எண்ணக்கருவின் அடிப்படையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்தும் செயலணியும் OREL IT தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தை இரண்டு நாட்களுக்குள் இயல்புநிலைக்கு கொண்டுவந்து இன்று (டிசம்பர் 22) மாணவர்களிடம் கையளித்தன.

அண்மையில் ஏற்பட்ட திட்வா புயல் காரணமாக ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையம் கடுமையாக சேதமடைந்தது.

திடீர் அனர்த்த நிலைமை காரணமாக, நாட்டில் உள்ள ஏராளமான ப்டசாலைகளின் உட்கட்டமைப்பு அழிவடைந்ததுடன், பிரதமரின் செயலாளரின் அழைப்பின் பேரில் சேதமடைந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பை மீட்டெடுக்க OREL IT நிறுவனம் தனது உதவியை வழங்கியது.

அனுராதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த பல பாடசாலைகளின் தகவல் தொழில்நுட்ப நிலையங்கள், பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், OREL IT நிறுவனத்தால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டன. அதைத் தொடர்ந்து, OREL IT மற்றும் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணி ஆகியவை ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தை இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவந்து மாணவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம், பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான செயலணி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி அர்ஜுன ரத்நாயக்க, OREL IT நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி உபேந்திர பீரிஸ், OREL IT நிறுவனத்தின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது எமது அரசாங்கத்தின் கொள்கையல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2025 டிசம்பர் 21 கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் ’நெலும் பியச’ மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 300 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்,

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது எமது கொள்கையல்ல. மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நாம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகிறோம். ’திட்வா’ புயலினால் நாட்டின் பல மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீதிகள் சேதமடைந்தன. சுமார் ஐம்பதாயிரம் மக்கள் இன்னமும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

யுத்தம் காரணமாக வடபகுதி மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்வு முகாம்களில் வாழ்ந்த கசப்பான அனுபவங்களை அறிவோம். எனவே, புயலினால் பாதிக்கப்பட்டவர்களை அத்தகைய முகாம்களில் நீண்டகாலம் வைத்திருக்க எமது அரசாங்கம் விரும்பவில்லை. இதற்காக 500 பில்லியன் ரூபா மதிப்பிலான குறைநிரப்புப் பிரேரணையை அண்மையில் நிறைவேற்றினோம். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முறையான பொருளாதார முகாமைத்துவத்தால், இதற்காகக் கடன் வாங்காமலேயே நிதியை ஒதுக்க முடிந்தது.

கல்வித் துறை மீது நாம் விசேட கவனம் செலுத்தி வருகிறோம். பிள்ளைகளின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தவே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். 2025ஆம் ஆண்டு முதல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, கல்வி முறையைப் பலப்படுத்துவோம். வவுனியா மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழகங்களின் தண்ணீர் மற்றும் தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம்.

அண்மையில் நடத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வின்படி, வட மாகாணத்தின் கல்வித்துறை சார் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும். 2026ஆம் ஆண்டில் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் ஒரு கல்வி மையம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கல்வியின் தரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எமது இலக்கு என தெரிவித்தார்.

விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள்,

ஜனாதிபதி நிதியம் என்பது இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. 44 ஆண்டுகளாக இந்நிதியம் இருந்தபோதிலும், 2025 ஜனவரியில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னரே அதன் உண்மையான பணிகள் மக்களிடம் சென்றடைந்தன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை பிரதேச செயலக மட்டத்திற்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 4,200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஜனாதிபதி நிதியிலிருந்து கல்விக்காக 4,899 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கனத்த அறிவித்தார்

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் இராமலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவனேந்திரராஜா, இளங்குமரன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, மாகாண மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்படப் பல அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பிரதமரிடம் தெரிவிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2025 டிசம்பர் 20 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயற்பட்டதற்கு திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பாராட்டு தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகளின் அனுபவங்களுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டை முழுமையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், இந்த பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் அரசியல் அதிகார தரப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆற்றிய பணி சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு, குறிப்பாக மாவட்டத் தலைமை முதல் பிரதேச மட்டத்தில் கீழ் மட்ட அதிகாரிகள் வரை அனைவரின் கூட்டு முயற்சியே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை முறையாக நிர்வகிப்பதற்கும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் யுனிசெப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட தருணத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதன்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் இதன்போது விளக்கினார்.

மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களுக்கு அண்மையிலுள்ள பாடசாலைகளை மீண்டும் அதே இடங்களில் திறப்பது ஆபத்தானது என்பதால், அத்தகைய பாடசாலைகளை இனங்கண்டு, விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையில் அவற்றை மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களுக்கு மேலதிகச் சுமையை ஏற்படுத்தாத வகையில் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டிற்கு அடுத்தபடியாகப் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் பாடசாலை என்பதால், அங்கு அவர்களின் உள ஆரோக்கியம் மேம்படும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல், சில பாடசாலைகளை ஒன்றிணைத்து நடத்திச் செல்லல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் மூலம் கற்றல் - கற்பித்தல் செயன்முறையை எளிதாக்குதல் மற்றும் விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்ற விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து நீண்டகாலத் தீர்வுகளைக் காண்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், அதற்காகச் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் பாராட்டிய யுனிசெப் பிரதிநிதிகள், அரசாங்கத்திற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், எதிர்கால நடவடிக்கைகளை இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham), லட்சுமி சுரேஷ்குமார், நிஷாந்த சுபாஷ், யஷிங்க ஜயசிங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விப் பணிப்பாளர் தக்‌ஷிண கஸ்தூரியாராச்சி, பிரதிப் பணிப்பாளர் கசுன் குணரத்ன மற்றும் உதார திக்கும்புர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாம் உறுதியளிக்கிறோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நல்வாழ்வுக்காகவே பாடசாலைகள் திறக்கப்பட்டன. குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், இன்று டிசம்பர் 19 ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.

அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது.

நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம்.

எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகி றோம்.

பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம்.

2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது.

குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது.

இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும்.

மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.

தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு