பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

உலக சுற்றாடல் தின வாழ்த்துச் செய்தி

சுற்றாடல் என்பது நமது இருப்பின் அஸ்திவாரமாகும். அந்த வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான, வளமான அதே நேரத்தில் பசுமையான பூமியைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.

"Urgent Climate Action" – "அவசர காலநிலை நடவடிக்கை" எனும் உலகளாவிய கருப்பொருளுக்கு இணங்க, " நிலையான உயிர்க்கோளம் - பசுமையான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையுடன், இலங்கை இவ்வருடம் உலக சுற்றாடல் தினத்தை மிகவும் நெருக்கடியானதொரு காலப்பகுதியிலேயே கொண்டாடுகிறது. அண்மையில் நாம் எதிர்கொண்ட காலநிலை சவால்களிலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில், மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் மண்டலத்தை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சினால் இவ்வருட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "முளைப்பதற்கு இடமளிப்போம்" (Let it sprout) என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடைமுறை வேலைத்திட்டங்கள் ஊடாக, சமயக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு, தியவன்னா ஓயாவைப் பாதுகாத்தல், வனஜீவராசிகள் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நீர் மூலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மூலிகைப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம், சுற்றாடல் பாதுகாப்பு என்பதை வெறும் எண்ணக்கருவாக மாத்திரம் மட்டுப்படுத்தாது நடைமுறைச் செயற்பாடாக மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட "வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக இதுவரை அறுபத்து மூவாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டு நமது நாடு வரலாற்றில் பதியப்படுகின்ற இந்த முக்கியமான தருணத்தில், நாட்டு மக்கள் என்ற வகையில் சுற்றுச்சூழலுடன் இசைந்து வாழ்வதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்ளுதல் வேண்டும்

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு, ஜூன் 04 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு யுனிசெஃப் (UNICEF) அமைப்பினால் வழங்கப்படும் ஒத்துழைப்பிற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, ’தித்வா’ சூறாவளியின் பின்னர் யுனிசெஃப் அமைப்பினால் உடனடியாக வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் உதவிகளைப் பாராட்டினார்.

சிறுவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துதல், சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுத்தல் மற்றும் சிறுவர்களின் போசாக்கின்மை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கியமான வாய்ப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், இலங்கையில் வலுவான கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு இருந்தபோதிலும், சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கும்போது, அந்தக் கொள்கைகள் மற்றும் சட்டங்களை வினைத்திறன் மிக்க விதத்தில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் அமுல்படுத்துதல் என்பனவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்தச் செயன்முறையைப் பாராட்டிய யுனிசெஃப் பிரதிநிதிகள், சிறுவர்களை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் யுனிசெஃப் நிறைவேற்றுச் சபையின் தலைவர் Rein Tammsaar (Estonia), உப தலைவர் Sophia Tesfamariam (Eritrea) , உப தலைவர் Alejandra Hernandez Gonzalez (Dominican Republic) உள்ளிட்ட யுனிசெஃப் நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“பிரஜா சக்தி” வேலைத்திட்டமானது, மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்

"பிரஜா சக்தி" வேலைத்திட்டமானது மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமென்றும், பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மக்கள்நேய ஆட்சியின் கீழ் மக்கள் எதிர்பார்த்த உண்மையான அர்த்தத்தை உள்வாங்கி, கிராமிய அபிவிருத்தி மூலம் நாட்டின் அபிவிருத்தியில் மக்களைப் பங்களிப்புச் செய்ய வைப்பதற்காக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜா சக்தி" வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் "ஆயிரம் கிராமங்களில், ஆயிரம் பணிகள்" திட்டத்தின் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்வு, நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஜூன் 02 ஆம் திகதி நடைபெற்ற ’பிரஜா சக்தி’ அபிவிருத்தி சபையினால் தரிசுநிலங்களாகக் கிடந்த வயல்களை மீண்டும் பயிர்செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"அரசின் மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக ’பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தலாம். இந்தத் திட்டத்தின் பெயரின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மக்கள்நேய ஆட்சி என்பது அரசு மாத்திரம் செயற்படுவதல்ல, மாறாக அது அரசு, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சி என்பதை உணர்ந்துகொள்வதாகும். தேர்தல்காலங்களில் மாத்திரம் ஆட்சியாளர்கள் மக்களுடன் இணைந்து இயங்குவது அல்ல, மாறாக மக்களை ஆட்சியின் ஓர் அங்கமாக மாற்றிச் செயற்பாட்டுரீதியாகவே அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் எண்ணக் கருவை, இந்த ’பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் ஊடாக சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்வாங்கும் விதத்தில் ஸ்தாபித்திருக்கின்றோம்.

பெயரளவிலான வலுவூட்டல் திட்டங்கள் இதற்கு முன்பும் இருந்தன. ஆனால், அவற்றின் மூலம் மக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே வலுவடைந்தனர். சார்ந்திருக்கும் மனநிலையிலிருந்து விடுபட்ட மக்கள், 2024 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மாற்றத்தை அடுத்து, நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பைத் தம் கைகளில் எடுத்து இந்த வேலைத்திட்டத்துடன் இணைகிறார்கள். பொருளாதார வலுவூட்டலை இலக்காகக் கொண்டு, தமது பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையைக் கண்டறிந்து அதனைக் கட்டியெழுப்புவதை இந்தத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ள முடியும்.

உலக அரசியல் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமையில், பொருளாதாரப் பாதுகாப்புக்காகத் தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையானது எந்தவொரு நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது. இறக்குமதி செய்ய வேண்டியவற்றை மாத்திரம் இறக்குமதி செய்வதோடு, உற்பத்தி செய்யக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய பொருளாதாரத்தை, உணவுப் பாதுகாப்பின் மூலம் நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

அரசு, உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலம், இந்தத் திட்டங்களின் ஊடாக மக்களின் வறுமை ஒழிக்கப்படும்போது ஒரு வளமான நாடு உருவாவதோடு இயல்பாகவே அழகானதொரு வாழ்க்கையும் உருவாகும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, கஸ்பாவ நகர சபைத் தலைவர் சாமர மத்தும கலுகே, பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவர் பிரதீப் நிஷாந்த வெதமுல்ல, நகர சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் மற்றும் பிலியந்தலை, கொலன்னாவை ஆகிய வெசாக் விழாக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

கங்காராம விகாரையின், வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்காராம விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வையும் பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

மே மாதம் 31 ஆம் திகதி பிற்பகல், பிலியந்தலை தர்ம சாஸ்த்ரோத பிரிவென் விகாரையில் நடைபெற்ற ஸ்ரீ சர்வஜ்ஞ தாது (புனித சின்ன) கண்காட்சியின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டார். அவ்விகாரைக்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, விகாராதிபதி தேரரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர், தர்மசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தாதுக்களைத் தரிசித்தார். அதன் பின்னர், பொதுமக்களும் அப்புனித சின்னங்களை வழிபடும் வகையில் புனித சின்னக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.

இதனை அடுத்து, மாதின்னாகொட ஸ்ரீ சுரம்யாராம விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய தொடங்கொல்லே பஞ்ஞானந்த தேரரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட கொட்டிகாவத்தை – முல்லேரியாவை வெசாக் வலயத்தினையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், யமா மகா பெலஹரையை மையமாகக் கொண்டு, கொட்டிகாவத்தை – முல்லேரியாவை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணத்தைப் பிரதமர் ஒளியேற்றி ஆரம்பித்து வைத்தார். ஐக்கிய வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வுடன், கொலன்னாவை இளைஞர் பௌத்த சங்கமும், கொலன்னாவை கிழக்கு மற்றும் மேற்கு சாசன பாதுகாப்பு மன்றங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பௌத்த பக்திப் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் மகாசங்கத்தினர், அமைச்சர்களான வசந்த சமரசிங்க, சுனில் வடகல, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி, வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழைப்பின்பேரில், மே 30 ஆம் திகதி Cathedral of Christ the Living Saviour தேவாலயத்தில் நிகழ்த்திய, பேராயர் சிறில் அபேநாயக்க ஞாபகார்த்த விரிவுரையின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“21 ஆம் நூற்றாண்டில் இலங்கை மற்றும் அதற்கு அப்பாலான கல்வியின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையின் போது, இலங்கையின் பல்மத ஒற்றுமை மற்றும் சமூகப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கையின் கல்விக் கொள்கையின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த பிரதமர், 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையை மேற்கோள் காட்டி, நாட்டில் நிலவும் “திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு இடையிலான பொருத்தமின்மை” மற்றும் அரசத் துறை வேலைவாய்ப்புகளை நோக்கிய “வரிசையில் காத்திருக்கும் நிலை” ஆகியன பொருளாதார சவால்களுக்கு காரணமாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார். பல தசாப்தங்களாக STEM கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், அதன் மூலம் நாட்டின் கட்டமைப்புரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அச் சீர்திருத்தங்களால் இயலாது போயிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

இலவசக் கல்வியின் உண்மையான நோக்கம் தொழிலாளர் படையை உருவாக்குவது மட்டுமல்ல, ஜனநாயக சமூகத்தை முன்னெடுத்துச் செல்லத் தக்க, அரசியல் விழிப்புணர்வும், ஒழுக்கம்மிக்க நிலைப்பாடும் விமர்சன ரீதியான சிந்தனையும் கொண்ட நாட்டு மக்களை உருவாக்குவதாக அது அமைய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

அத்தோடு கல்வி கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய ஐந்து முக்கிய நெருக்கடிகளைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். கல்வி நிறுவனங்களுக்கிடையில் நிலவுகின்ற இடைவெளி, சமூகப் பொறுப்புணர்வுமிக்க குடிமக்களை உருவாக்குவதில் காணப்படும் இயலாமை, பெண்களின் கல்விரீதியிலான வெற்றிகள் மற்றும் தொழிலாளர் படையில் இணைந்து கொள்வதில் காணப்படும் இடைவெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்களைத் தழுவிக்கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வியை வெறுமனே சான்றிதழ்களைப் பெறுவதற்கான கருவியாக மாத்திரம் கருதும் நிலை.

செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள வேண்டுமாயின் டிஜிட்டல் கல்வியறிவையும் இணையவழிப் பாதுகாப்பையும் பலப்படுத்துவது அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி என்பது உலகைப் புரிந்து அதை மாற்றியமைக்கும் ஒரு செயற்பாடாகும் என்றும், ஆசிரியர் தொழிலை மீண்டும் சமூக மரியாதைக்குரிய ஒரு உயரிய தொழிலாக நிலைநிறுத்த வேண்டுமெனவும், கல்விச் சீர்திருத்தங்களின் இறுதி இலக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவதாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரு தோரணங்கள் பிரதமரால் திறந்து வைப்பு

மே மாதம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்புப் பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு வெசாக் தோரணங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

பொரளை மகசின் ஐக்கிய வர்த்தகர்களின் ஸ்ரீ வைசாக்ய சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “சம்புலா ஜாதகக் கதை” அடங்கிய தோரணத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் அமைக்கப்பட்ட “சமுத்திர வாணிஜ ஜாதகக் கதையை” மையமாகக் கொண்ட தோரணத்தையும், சம்பிரதாய முறைப்படி தேங்காய் எண்ணெய் விளக்கேற்றி ஒளியூட்டித் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், ஏனைய மத குருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நஜித் இந்திக, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, திலித் ஜயவீர, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு, மகசின் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் பாலித ஹேரத் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரதேச மக்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு