பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

போர்த்துக்கல் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ Paulo Rangel, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் பெப்ரவரி 24ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விசேட கவனம் செலுத்தினர். அத்துடன், பரஸ்பர நலன் சார்ந்த ஏனைய துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. காலநிலை மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்களை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இத்தகைய சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட கல்வித்துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பிரதமர் இங்கு குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள போர்த்துக்கல் தூதுவர் João Ribeiro de Almeida, போர்த்துக்கல் வெளிவிவகார அமைச்சின் பிரதி அரசியல் பணிப்பாளர் கலாநிதி Alexandra Bilreiro, பணிக்குழாம் பிரதானி கலாநிதி Filipe Ramalho Ortigão ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தூதுக்குழு சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வலுசக்தி வினைத்திறன் தேசிய அபிவிருத்தியின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான பங்களிப்பாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையும் வலுசக்தி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த “இலங்கை தேசிய வலுசக்தி வினைத்திறன் விருது வழங்கல்” விழா, பெப்ரவரி 24ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“Energy Efficiency: Refueling the Economy” (வலுசக்தி வினைத்திறன் மூலம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரளித்தல்) எனும் தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், கொழும்பு உலக வர்த்தக மையத்தின் (WTC) திரு. ஜீவக துஷார அவர்கள் ’சிறந்த முகாமையாளர்’ விருதினைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் National Cleaner Production Center, Forbes Marshall Lanka, World Trade Center Colombo, BiC and DENTA Manufacture மற்றும் MAS Fabrics Thulhiriya ஆகிய நிறுவனங்கள் வலுசக்தி வினைத்திறனுக்கான தங்க விருதுகளைத் தனதாக்கிக்கொண்டன.

விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

“வலுசக்தி வீண்விரயத்தைக் குறைப்பதன் ஊடாக வெளிநாட்டுச் செலாவணியைச் சேமிக்க முடிவதுடன், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் முடியும். கடந்த வருடத்தில் மிகுந்த வினைத்திறனுடன் வலுசக்தியைப் பயன்படுத்திய அரச மற்றும் தனியார் நிறுவனங்களை இங்கு விசேடமாகப் பாராட்ட வேண்டும். பாரிய தொழிற்சாலைகள் முதல் சிறு வணிகங்கள் வரை வலுசக்தி முகாமைத்துவத்தைப் பிரபல்யப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ’பாரிஸ் உடன்படிக்கை’ போன்ற சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைய ஒரு நாடாகச் செயற்படுவது மிக முக்கியமாகும். அத்துடன், வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கையாள்வது மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்களை நோக்கித் திரும்புவது குறித்தும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது, என தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி உரையாற்றுகையில்:

2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை 70% வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். ஊழல் மற்றும் வினைத்திறனற்ற தன்மையால் வீழ்ச்சியடைந்திருந்த நிறுவனக் கட்டமைப்பை மாற்றி, முறையான தேசியக் கொள்கையின் கீழ் நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. தவறான வழிகளில் பணம் சம்பாதித்தவர்கள் எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களால் கலக்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் போது அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

முறையான வழிமுறைகளின் கீழ் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, வலுசக்தி வினைத்திறனின் உண்மையான நன்மைகளை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வலுசக்தி பிரதி அமைச்சர் பொறியியலாளர் அர்க்கம் இல்லியாஸ், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல், எனும் இந்த நூல், கொள்கை வகுப்பு, இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற ஒரு காலோசிதமான, காத்திரமான பங்களிப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

"Reimagining International Relations from a Global South Perspective" உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல், எனும் இந்த நூல், கொள்கை வகுப்பு, இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற ஒரு காலோசிதமான, காத்திரமான பங்களிப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் (BCIS) புதிய வெளியீடான இந்நுால் வெளியீட்டு விழா, பெப்ரவரி 24ஆம் திகதி BCIS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரும், BCIS நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் கல்வி விவகாரச் சபையின் உறுப்பினருமான ஓய்வுபெற்ற சிறப்புநிலை பேராசிரியர் காமினி கீரவெல்லவினால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்யும் வகையில் இந்நூல் மிகக் காத்திரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நூல் வெளியீட்டிற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகள் எவ்வாறு மீள்கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதன் பல்வேறு பாதைகளைக் கண்டறிவதற்கும் இந்த வெளியீடு ஒரு காலோசிதமான, முக்கியமான பங்களிப்பாக அமைகிறது எனக் குறிப்பிட்டார். சர்வதேச உறவுகளை ஒரு உண்மையான பன்முகத்தன்மை கொண்ட துறையாக மீள்வரைவு செய்ய இந்நூல் அழைப்பு விடுப்பதாகவும், இது சர்வதேச உறவுகள் என்ற துறைக்கு மாத்திரமன்றி அனைத்துப் பாடத்துறைகளுக்கும் பொருந்தும் ஒரு விடயம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பண்டாரநாயக்க சர்வதேச கல்வி நிறுவனத்தின் (BCIS) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், பண்டாரநாயக்க தேசிய ஞாபகார்த்த அறக்கட்டளை முகாமைத்துவ சபையின் பிரதிநிதிகள், BCIS நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்விமான்கள், அதிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கலாநிதி விக்டர் ரத்நாயக்க நமது நாட்டிற்குக்கிடைத்த உன்னதப் பரிசு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தினால் கலாநிதி விக்டர் ரத்நாயக்கவைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “சுபாவித கீதயே சிட்டுவரயானோ... கலாநிதி விக்டர் ரத்நாயக்க அபிநந்தனாபிஷேக” எனும் விசேட பாராட்டு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பெப்ரவரி 24ஆம் திகதி இலங்கை வானொலியின் ’குமாரதுங்க முனிதாச’ கலையகத்தில் நடைபெற்றது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்நாட்டு இசைத்துறைக்கும் வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி விக்டர் ரத்நாயக்க ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டுவதே இவ்விழாவின் நோக்கமாகும். இதன் ஓர் அங்கமாக, வானொலிக் கூட்டுத்தாபன வளாகத்தில் அவரது திருவுருவப்படம் ஒன்றும் பிரதமரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

நானும் கலாநிதி விக்டர் ரத்நாயக்கவின் தீவிர ரசிகை என்பதால் இந்தத் தருணம் எனக்கு மிகவும் விசேடமானது. எனது வாழ்நாளில் உங்களை இவ்வளவு நெருக்கமாக நின்று கௌரவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, இது மிகவும் மகிழ்ச்சியானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான தருணமாகும்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் நமது நாட்டின் இசைத்துறைக்கு ஆற்றிய சேவை ஈடுஇணையற்றது. இலங்கையில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட உங்களது தனிநபர் இசை நிகழ்ச்சியான ’ச’ பிரசங்கமே, எனது சிறுவயதில் நான் பார்த்து ரசித்த முதலாவது இசை நிகழ்ச்சியாகும்.

சிங்கள மொழியின் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது உங்களது பாடல்களே. உங்களது பாடல்கள் காதல் பற்றிய நுட்பமான, அதேவேளை அற்புதமான படைப்புகளாக அமைந்திருந்தன. இசையும் மொழியும் இணைவதன் மூலம் எம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை உங்களது பாடல்கள் மூலமே நான் உணர்ந்தேன்.

அதேபோல், உங்களது பாடல்களில் பொதிந்துள்ள இன நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்த கருத்துக்கள் நாம் வெகுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். ’சருங்களே’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ’ஒப யன கமனே’ போன்ற பாடல்களின் இசையமைப்பும் பாடிய விதமும், பல்லினக் கலாசாரங்களின் அழகியலை மிகவும் தத்ரூபமாக எமக்குக் கற்றுத் தந்தன. உண்மையிலேயே உங்களைப் போன்றதொரு பெறுமதிமிக்கப் பரிசு எமது நாட்டிற்குக் கிடைத்தமைக்காக நாம் பெருமையடைகின்றோம்."

வாழ்க்கையின் எல்லாவிதமான முக்கிய தருணங்களுக்கும் பொருத்தமான படைப்புகள் விக்டர் ரத்நாயக்க அவர்களின் ஆக்கங்களுக்கு மத்தியில் காணப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 18ஆம் திகதி தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய கலாநிதி விக்டர் ரத்நாயக்க, நீண்ட ஆயுளுடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென வாழ்த்திய பிரதமர், இவ்வாறானதொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்திற்கு நன்றி தெரிவித்தார். ஊடகத்துறையில் தற்போது காணப்படுகின்ற போட்டிகளுக்கு மத்தியிலும், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் அனைத்துச் சவால்களையும் முறியடித்து முன்னோக்கிச் செல்லும் சக்தியைக் கொண்டிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கலைத்துறையைச் சார்ந்த தலைசிறந்த கலைஞர்களைப் பாராட்டும் வகையில் இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் இத்தகைய வேலைத்திட்டங்களைப் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர, கலாநிதி விக்டர் ரத்நாயக்கவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிப்பொன் நிலையத்தின் 40-வது ஆண்டு நிறைவு மற்றும் வண. மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் (SNECC) 40-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அதன் பொதுச் செயலாளரும் அத்துல்கோட்டை ஸ்ரீ மஹிந்தாராமய விகாராதிபதியும் மேல் மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கருமான சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலானதொரு நட்புறவுப் பாலமாகச் செயற்பட்டு, இந்நாட்டுப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார மத்திய நிலையம் ஆற்றிய மகத்தான சேவையைப் பாராட்டுவதே இவ்விழாவின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இங்கு உரையாற்றிய பிரதமர்,

இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்குவதற்காக நிப்பொன் நிலையத்தினூடாக வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரர் முன்னெடுக்கும் சமூகப் பணி மிகுந்த பாராட்டுக்குரியதாகும் எனத் தெரிவித்தார். திறமையான பிள்ளைகளை நாட்டுக்குப் பங்களிக்கக்கூடிய நற்பண்புகள் மிக்க பிரஜைகளாகக் கட்டியெழுப்புவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்நிறுவனம் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தசாப்தங்களாக நிப்பொன் நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் "நிப்பொன் புலமைப்பரிசில்" திட்டத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பாடசாலை உபகரணங்கள், மாதாந்த நிதி உதவி, மருத்துவ உதவி மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படுவதுடன், ஜப்பானிய மொழிப் பயிற்சியை வழங்கி ஜப்பானில் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு வழிகாட்டப்படுகின்றது. அத்துடன், இரு நாட்டு மாணவர்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஜப்பான் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விசேட தருணத்தைக் குறிக்கும் வகையில், 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரருக்குப் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது சமூகப் பணிகளைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான வலிமை கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோட்டை மாநகர முதல்வர் ஆரோஷ அத்தப்பத்து, ஜப்பானிய அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விப் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் ’சிந்தனை தினத்தை’ (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் பெப்ரவரி 22-ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, சாரணர் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பேடன் பவல் பிரபுவின் சிலைக்குப் பிரதமர் மலரஞ்சலி செலுத்தித் தனது மரியாதையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர்,

சாரணர் இயக்கம் என்பது வெறும் பதவிகளை வகிப்பதல்ல, அது ’தயார் நிலையில் இருப்பதற்கும்’, பிறருக்கு உதவுவதற்கும் சேவை செய்வதற்கும் கிடைக்கப்பெறும் ஒரு உன்னதமான பயிற்சியாகும், எனத் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அதேவேளை, பிறரை மதிக்கும், ஒழுக்கமான, புத்திசாலித்தனமான ’ஸ்மார்ட்’ சாரணர்களாகச் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், மரம் நடுதல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல்நேயச் செயற்திட்டங்கள் ஊடாக, பொறுப்புணர்வுடன் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்குமாறு சாரணர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில், சாரணர் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் சில மாவட்டங்களுக்கு அடையாள ரீதியாக மடிக்கணினிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இலங்கைச் சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அவர்களினால் பிரதமருக்கு விசேட சாரணர் முத்திரைத் தொகுப்பும் நினைவு உறையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சாரணர் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான சாரண மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு