பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கொழும்பில் நடைபெற்ற FICAC தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பெப்ரவரி 02ஆம் திகதி நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பெப்ரவரி 01 முதல் 04 வரை நடைபெறவுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் தெற்காசியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இராஜதந்திரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு நம்பகமான மற்றும் நிலையான தேசமாக நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயற்படும் ஒரு தருணத்தில், இம்மாநாட்டை நடத்தும் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு விசேட சந்தர்ப்பமாகும், எனக் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் இலங்கையின் தயார்நிலை குறித்துக் கவனம் செலுத்தியதுடன், அந்த அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்குச் சர்வதேசப் பங்காளிகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டினார். இத்தகைய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பு, பொறுப்பு மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அவசியம் என்பதையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

அரச துறையின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சேவைகளை வழங்குவதிலும் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இலங்கை அரசாங்கம் தெளிவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாகப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்புடன் உள்ளது. நிதி ஒழுக்கம், நிலையான கடன் முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் ஊடாக வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் ஊடாக, மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவளிப்பதற்காக நாம் சமூக நலத்திட்டங்களைப் பலப்படுத்தி வருகின்றோம், எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையை ஒரு ஸ்திரமான மற்றும் நம்பகமான சர்வதேசப் பங்காளியாக நிலைநிறுத்துவதுடன், உலக அரங்கில் இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, FICAC தலைவர் Nikolaos K. Margaropoulos, இலங்கைத் தூதர்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மோசடியையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை ’மில்கோ’ நிறுவனம் நிரூபித்திருக்கின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்று, அதன் நன்மைகளை அனைவரும் பெற்றுக்கொள்ளும் புதியதொரு மாற்றத்தினை நோக்கிய யுகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என நாம் நம்புகிறோம்

மாற்றத்திற்கான ஒரு யுகத்தை உருவாக்குவதற்காகப் பொருளாதாரச் செயல்பாட்டுக்குள் அனைவரையும் உள்வாங்கி, அதன் பலன்களை அனைவரும் அடையக்கூடிய ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அரசாங்கம் நம்புவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி 02ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற ’மில்கோ கிரிகோவி அபிமன்’ எனும் பால் உற்பத்தியாளர்களுக்கான விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும், அவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குமான தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

’பாலினால் செழிப்பான வளமான நாடு’ எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த விழா, 2025ஆம் ஆண்டில் மிக உயர்ந்த விற்பனை வருவாயுடன் வரலாற்றில் அதிகப்படியான நிகர லாபத்தைப் பதிவு செய்த மில்கோ நிறுவனத்தின் அந்த வெற்றிக்குத் தோள் கொடுத்த பால் உற்பத்தியாளர்களைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மில்கோ நிறுவனத்துடன் இணைந்திருக்கும் சுமார் 22,000 பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. இன்றைய விழாவில் இரண்டாயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு அடையாள ரீதியாக இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடெங்கிலும் உள்ள மில்கோ நிறுவன பால் உற்பத்தியாளர்களுக்குப் போனஸ் வழங்குதல் மற்றும் கள உத்தியோகத்தர்களைக் கௌரவித்தல் ஆகியனவும் இடம்பெற்றன.

அத்தோடு சமூக பாதுகாப்பு நிதியமும் மில்கோ நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதிய அங்கத்துவச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

தற்போதைய அரசாங்கம் ’பொருளாதார ஜனநாயகம்’ சார்ந்த பொருளாதார முறைமையைச் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும், உற்பத்திச் செயல்முறையில் நாட்டின் அனைத்து உற்பத்தியாளர்களையும் இணைத்துக்கொண்டு அதன் நன்மைகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வது பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாகும் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்குள் ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைத்து, முறையான முகாமைத்துவத்துடனும் இலக்கு மிக்க தலைமைத்துவத்துடனும் நிர்வகிப்பதன் மூலம், அவற்றை வலுவான மற்றும் மக்களுக்குப் பயனளிக்கும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பதை மிகக் குறுகிய காலத்திற்குள் மில்கோ நிறுவனம் நிரூபித்துள்ளது, எனத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்:

இந்த லாபப்பங்கினை 21 வருடங்களுக்குப் பின்னரே எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கின்றது. இதற்கு முன்னர் 21 வருடங்களுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி அவர்கள் விவசாய அமைச்சராக இருந்த குறுகிய காலத்திலேயே இவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீண்டும் அந்த நிலைக்கு வருவதற்கு 21 வருடங்கள் கடந்துள்ளன. இதிலிருந்து கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய பொய்யைக் கூறினார்கள் என்பது தெளிவாகிறது. எம்மால் 15 அல்லது 16 மாதங்களில் இவ்வாறானதொரு சாதனையை அடைய முடிந்தது என்றால், இத்தனை ஆண்டுகளாக இந்த நிறுவனங்களைப் பொறுப்பேற்றிருந்தவர்கள் செய்த மோசடி எத்தகையது என்பது நன்கு புலப்படுகின்றது. அவற்றைச் சரிசெய்து, பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரையும் இணைத்து, அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய மற்றும் நிறுவனங்களைச் சரியாகக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது, எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கிய மில்கோ நிறுவனத்தைக் குறுகிய காலத்திற்குள் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைத்த தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், இவ்வாறான சாதனைகளுக்குத் தேசிய முக்கியத்துவம் வழங்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன, அதிகாரிகள் மற்றும் நாடெங்கிலுமிருந்து வருகை தந்திருந்த பால் உற்பத்தியாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அபிவிருத்தி என்பது சூழலைப் புறக்கணித்துவிட்டு அடையக்கூடிய ஒரு வெற்றியல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

சுற்றாடல் பாதுகாப்பை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அதனை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், சூழலை மறந்துவிட்டு முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தியும் இவ்வுலகில் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பத்தரமுல்ல “அபே கம” வளாகத்தில் இன்று (02) நடைபெற்ற உலக சதுப்புநில தின நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, “சதுப்பு நிலங்களையும், பாரம்பரிய அறிவுடன் பின்னிப்பிணைந்த கலாசார மரபுரிமைகளையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளிலான தேசிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, ’கோனமெரியாவ’ எனும் பிரதேசத்தைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகச் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தினார். அத்துடன், நீர்வீழ்ச்சிகளின் விபரத் திரட்டு (Waterfall Directory), மற்றும் “Wetlands Sri Lanka” சஞ்சிகை ஆகியன இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அகில இலங்கைச் சித்திரப் போட்டியின் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நமது நாட்டின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைமை மற்றும் விவசாய நடைமுறைகளுக்குள் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத ஒருவித விசேட விஞ்ஞான அறிவு பொதிந்திருக்கின்றது. அறிவு என்பது ஒரு வடிவத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எமது பிள்ளைகள் இந்தப் பாரம்பரிய அறிவைக் கற்க வேண்டும். எமது நீர்ப்பாசன மற்றும் விவசாய முறைமைகள் இயற்கையைப் பாதுகாக்கும் ஒருவித விஞ்ஞானமாகும்.

சதுப்பு நிலங்கள் என்பது வெறும் சேற்று நிலங்கள் மாத்திரமல்ல; அவை நாட்டின் நீர் பாதுகாப்பு, காலநிலை ஸ்திரத்தன்மை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஓர் இயற்கைக் கேடயமாகும். அண்மையில் ஏற்பட்ட சூறாவளி போன்ற காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குச் சூழலைச் சரியான முறையில் பாதுகாப்பது அவசியமாகும். ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ எனும் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படை அத்திவாரம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதேயாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த இடமான குஜராத் பிரதேசத்தில் 60களில் கண்டெடுக்கப்பட்டதும், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான புத்த பெருமானின் இந்த உடல்சார் புனிதச் சின்னங்களை நாட்டு மக்கள் வழிபடுவதற்காக இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி அவர்களின் பங்களிப்புடன் கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஜனவரி 31ஆம் திகதி இது குறித்த விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் கொண்டுவரப்படும் இப்புனிதச் சின்னங்கள், பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்குக் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் காட்சிப்படுத்தப்படும்.

அதிகளவிலான பக்தர்கள் வழிபடுவதற்காக புனிதச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வு 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் அதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட முன்னுரிமை வரிசை முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சமய நிகழ்விற்கு வருகை தரும் பக்தர்களுக்காகப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முறைப்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கமைய புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை முன்னெடுப்பதோடு, பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குவிதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளனர்.

வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்காகத் ’அன்னதானம்’ மற்றும் உபசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட வர்த்தகச் சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தி, பக்தர்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி இந்த அரிய புனிதச் சின்னங்களை வழிபடுவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த விசேட கலந்துரையாடலில் கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

No child should be deprived of vocational or higher education due to poverty - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that all government strategic plans must be formulated in a manner that ensures no child in the country is deprived of vocational education or any other educational opportunity due to economic hardship.

The Prime Minister made these remarks while addressing a workshop on budget formulation and strategic planning of institutions affiliated with the vocational education sector, held on 29th and 30th of January 2026 at the Grand Monarch.

The workshop was organized with the participation of heads and senior officials of nine institutions, including two universities affiliated with the vocational education sector.

The Prime Minister pointed out that it is essential to align the development plans of key institutions and the affiliated institutions with the National Economic Development Plan.

The Prime Minister stated that while educational institutions produce individuals with vocational knowledge, reforms must also nurture compassion, empathy, care for others, and ethical values. The Prime Minister noted that the objective of this initiative is to nurture professionals enriched by humanity.

She further emphasized that it is the responsibility of the government to further expand pathways for children who are experiencing economical disadvantages to access vocational education and secure their future.

Attention was also drawn to the sectors of AI revolution and the future of vocational education. The Prime Minister observed that there is still no comprehensive global understanding of the changes taking place in the world of work and vocational fields due to artificial intelligence (AI). She stressed that integrating vocational education into the mainstream education process through educational reforms is an urgent necessity at this time.

The revolution brought about by AI technology is often driven by profit. Just as we were exploited during past industrial revolutions, we must ensure that we are not left behind or marginalized in this revolution. We must not merely confine ourselves to a data center.

The Prime Minister highlighted that while teaching and learning activities can be carried out online, the impact of technology is limited in professions involving human care and compassion, such as childcare and caregiving services underscoring the importance of developing soft skills and adopting a human-centered approach.

It was discussed that the flexible pathways should be created to enable a student to progress continuously through vocational education up to doctoral level, as well as to re-enter education while being employed (lateral entry). While ensuring such flexibility in the system, maintaining high standards and quality in education was highlighted as essential to ensuring credibility.

The event was attended by the Deputy Minister of Education and Higher Education Dr. Madhura Senevirathna, Deputy Minister of Vocational Education Nalin Hewage, Secretary to the Ministry of Education Nalaka Kaluwewa, Vice Chancellor of the University of Vocational Technology Professor Prasanna Premadasa, Vice Chancellor of the Ocean University Professor Nalin Rathnayake, Chairman of NIBM Dr. G. Thantirigama, Director General D.M.A. Kulasooriya, and several other officials.

Prime Minister’s Media Division

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு காத்திரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நமது நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாக்க வேண்டுமாயின், தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பிரதான கருவி கல்வியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வித் துறையில் ஒரு பரிவர்த்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்ட போதிலும், உரிய இலக்கும் நோக்கமும் இருப்பதால் அவை அனைத்தையும் வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வோம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

2023/2024 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான கல்விச் கூட்டுறவுச் சங்க (EDCS) உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக இன்று (31) அலரி மாளிகையில் நடைபெற்ற "EDCS சிசு நெண பிரணாம" கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், வரையறுக்கப்பட்ட கல்விக் கூட்டுறவுச் சிக்கன சங்கத்தினால் (EDCS) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், வெறும் கல்வி உதவித்தொகை வழங்குவது மாத்திரமன்றி, நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் ஒரு உன்னதமான சந்தர்ப்பமாகும் எனத் தெரிவித்தார்.

1930ஆம் ஆண்டில் 58 உறுப்பினர்களுடனும் ஒரு ரூபாய் அங்கத்துவக் கட்டணத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம், இன்று சுமார் இரண்டு இலட்சத்து பதினைந்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாக வளர்ச்சி பெற்றிருப்பது ஒரு விசேட வெற்றியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம் வேகமாக மாற்றமடைந்து வரும் விதம் மற்றும் பொருளாதார, சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மனித வள மேம்பாட்டின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைக் கல்வியிலிருந்தே இன்றைய உலகிற்குப் பொருத்தமான வகையில் கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களுக்குப் பிரவேசிக்கும் மாணவர்கள் இந்த மாற்றத்தின் முன்னோடிகளாகவும் பங்குதாரர்களாகவும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஆரம்பக் கல்வியில் இணையும் சுமார் மூன்று இலட்சம் மாணவர்களில் 40,000 பேர் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர் என்பதால், அந்த அரிய வாய்ப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துமாறு பிரதமர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும் தொழில் பிரதி அமைச்சருமான மகிந்த ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ஊழலற்ற செயற்பாடுகள் காரணமாக இதற்கு முன்னர் 1,200 மில்லியன் ரூபாவாக இருந்த சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை, ஒன்பது மாதக் குறுகிய காலத்திற்குள் 1,700 மில்லியன் ரூபா வரை வளர்ச்சி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுத் திட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2,292 பிள்ளைகளுக்காக 13.7 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

1984ஆம் ஆண்டு 15 மாணவர்களுடனும் 3,500 ரூபாவுடனும் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 41 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 75,000 ரூபா வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது ஆசிரியர் சமூகத்தின் கூட்டு வலிமையைப் பிரதிபலிக்கின்றது.

இதன்போது, அடையாளச் சின்னமாக பிரதமரினால் சில மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் கல்விச் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் லால் குமார, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு