பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரையில் ஜூன் 29 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு வருகை தந்த பிரதமரை, விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் வரவேற்றார். தேரருடன் சுமூகமாகக் கலந்துரையாடிய பிரதமர், விகாரையின் போதி மலுவவிற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைத்த பிரதமர், தர்ம பாடசாலை மாணவர்களினால் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, பொரளஸ்கமுவ நகர சபைத் தலைவர் நிஷாந்த வெதமுல்ல உள்ளிட்ட முக்கிய அதிதிகள், பிரதேசவாசிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பௌதிக வளங்களை மேம்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒவ்வொரு பிரஜையின் இதயங்களிலும் சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி சாத்தியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

திவுலப்பிட்டிய பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த “அநுபுத்தாபி வந்தனா” பொசன் மகா பெரஹர அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக ஜூன் 28 ஆம் திகதி கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

மிஹிந்து மகா ரஹத் தேரரின் இலங்கை வருகையுடன், இலங்கையர்களுக்கு உன்னதமான சத்தர்மம் மட்டுமன்றி, உயர்ந்த கலாசார விழுமியங்கள், மனித நேயப் பண்புகள் மற்றும் தசராஜ தர்மத்தினால் போஷிக்கப்பட்ட அரச ஆட்சி முறைமை ஆகியன உரித்தானது. எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த தர்ம ஒளியினால், அற்புதமான நீர்ப்பாசனத் தொழில்நுட்பம், விண்ணைத் தொடும் மகா தூபிகள் ஊடாகச் சிங்களவர்களின் படைப்பாற்றல் திறமையை உலகிற்கே பறைசாற்ற முடிந்திருக்கின்றது.

உலகின் வேறெந்த நாட்டிலும் காண முடியாத, எமது பிரதான கலாசாரத் திருவிழாவான ஸ்ரீ தலதா பெரஹரவிற்கு இணையாக நடத்தப்படும் ’அநுபுத்தாபி வந்தனா’ பொசன் மகா பெரஹர போன்ற நிகழ்வுகள், நாட்டிற்குத் தேவையான உண்மையான அபிவிருத்தியை எட்டுவதற்குப் பெரும் பக்கபலமாக அமைகின்றன.

நமது நாட்டின் பெருமைமிக்க பெரஹர கலாசாரத்தை வெளிப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம், பிறரை மதிக்கும், சகோதரத்துவத்துடன் கூடிய, பொது நோக்கங்களுக்காகக் கூட்டு உணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு எதிர்காலச் சந்ததியை நாட்டில் உருவாக்க வழி பிறக்கும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலி வீரசேகர, திவுலப்பிட்டிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலய நிகழ்வு, 2026 ஜூன் 28 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் இந்த பொசன் வலய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி, வணக்கத்துக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் சமய வழிபாடுகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டல்களும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, பொசன் வலயத்தைத் திறந்து வைப்பதற்கான செய்தியடங்கிய பெட்டகத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சாரணர் இயக்கத்தைப் பாடசாலைக் கட்டமைப்பினுள் மேலும் விரிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என்றும், இவ்வாறான சமய மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் ஊடாக சமூகத்திற்குச் செய்யப்படும் சேவைகளைத் தாம் பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பொசன் வலயமானது ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களிலும் மாலை 6.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். அதற்கமைய, கொழும்பு 02, சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை சாரணர் தலைமையக வளாகம் உள்ளிட்ட, லேக்ஹவுஸ் வட்டத்திலிருந்து இலங்கை பொலிஸ் தலைமையகம் வரையிலான எல்லைக்குள் இந்த பொசன் வலய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, முப்படை மற்றும் பொலிஸ் பிரதானிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்தி

இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு நினைவூட்டும் மிகவும் உன்னதமானதொரு நாளாகும்.

பொசன் பௌர்ணமி என்பது இலங்கை வரலாற்றில் ஒரு மதம்சார்ந்த நிகழ்வு மாத்திரமல்ல, ஒரு தேசத்தின் சிந்தனை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். மஹிந்த மஹ ரஹத் அவர்களின் இலங்கை வருகையினால் இந்த நாட்டிற்குப் பரிசாகக் கிடைத்த பௌத்த தத்துவமானது, பல நூற்றாண்டுகளாக எமது தேசிய அடையாளத்தை வடிவமைத்துவரும் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாக மாறியுள்ளது.

உண்மையான அபிவிருத்தி மனிதனின் மனதிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை பொசன் பௌர்ணமி எமக்கு நினைவூட்டுகிறது. கருணை, இரக்கம், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு போன்ற உன்னதமான பௌத்த விழுமியங்களை சமூகத்தின் அடித்தளமாக மாற்றி அமைக்க முடியுமாயின், அமைதியான, நீதியான, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதானது எமக்கு இலகுவானதாக அமையும்.

இன்று எமது நாடு புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு புதிய பாதையை அடைந்திருக்கின்றது. அந்தப் பயணத்தை வெற்றிகொள்ள பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது, ஒழுக்க விழுமியங்களால் செழுமைப்படுத்தப்பட்ட சமூகமும் அவசியமாகின்றது. பொசன் பௌர்ணமியின் உண்மையான சாரமாகிய ஒழுக்கம், அகிம்சை மற்றும் மனிதநேயம், ஆகியன மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நீதியான, சுபீட்சமான நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் இலக்கினை அடைவதற்கான வழிகாட்டிகளாகும்.

மலர்ந்திருக்கும் இந்த உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, அனைத்து பௌத்த மக்களின் வாழ்விலும் அமைதி, நிம்மதி, அறிவு மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு புண்ணியகரமான நாளாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அறிவு, திறமை மற்றும் ஆற்றல் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாகும்.

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவசியமெனவும், அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 27 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் (IIESL) 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பட்டயப் பொறியியலாளர்கள் Chartered Engineers, ஒன்றிணைந்த பொறியியலாளர்கள் (Incorporated Engineers) மற்றும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் (Engineering Technicians) ஆகியோரை உள்ளடக்கிய பொறியியல் துறை சார்ந்த உலகளாவிய அமைப்பின் முக்கிய பிரிவினரான ’ஒன்றிணைந்த பொறியியலாளர்களின்’ தொழில்சார் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வின்போது, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க புதிய அங்கத்தவர்களுக்கு பிரதமரினால் அங்கத்துவச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பொறியியல் வல்லுநர்கள் தேசிய அபிவிருத்திக்கு ஆற்றும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியதோடு, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்களும் முயற்சிகளும் அதன் உறுப்பினர்கள் தமது தொழில்சார் பயணத்தில் முன்னேற உறுதுணையாக அமைவதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் தொடர்ந்து வலுச்சேர்க்கவும் காரணமாக அமைவதாகத் தெரிவித்தார்.

வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில், திறன்கள் மற்றும் ஆற்றல்கள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் ஒப்பிடப்படும் சூழலில், சில பொறியியல் தகைமைகளுக்குக் குறைவான அங்கீகாரம் கிடைப்பது பல திறமையான நிபுணர்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இச்சவால்களை எதிர்கொள்ளுதல் தனிப்பட்ட பயிற்சியாளர்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி, இலங்கையின் பொறியியல் திறனை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் இன்றியமையாததாக அமையும் எனக் கூறினார்.

கல்வித் துறையில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், உயர்கல்வியின் தொடர்ச்சியான மேம்பாடு ஒரு தேசிய முன்னுரிமையாகும் எனத் தெரிவித்தார். தனிநபர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தவும், திறன்களை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்த இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில்சார் அமைப்புகள், கைத்தொழில் துறை மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கிடையில் தொடர்ச்சியான உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை ஒருங்கிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் எம்.பி. ஆனந்த குணவர்தன, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச, இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி திலக் டி சில்வா, சபையின் உறுப்பினர்கள், நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், புதிய அங்கத்தவர்கள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட, பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை பல் வைத்திய சங்கம் (SLDA) அதன் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வை ஜூன் 26 ஆம் திகதி கொழும்பு, Cinnamon Life ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. விஞ்ஞான புத்தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வாய்வழி சுகாதாரப் பராமரிப்பினை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள், தங்கப் பதக்கம் வென்றவர்கள், சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமர்வை ஆரம்பித்து வைத்த பிரதமர், சான்றுகள் அடிப்படையிலான மற்றும் புத்தாக்கத்தை நோக்கிய சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் இலங்கையின் கல்வி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பை இந்தச் சாதனைகள் பிரதிபலிக்கின்றதாகத் தெரிவித்தார்.

ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை பல் வைத்திய சங்கம், அறிவுப் பரிமாற்றம், தொழில்சார் தரங்களைப் பேணுதல் ஆகியன மூலமாக ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

அத்தோடு, பொதுச் சுகாதாரம் என்பது வெறும் மருத்துவமனை சிகிச்சையை மாத்திரம் சார்ந்தது அல்ல என்றும், நல்ல உடல்நலம், தடுப்பு சார்ந்த வாழ்க்கைமுறை தேர்வுகளில் இருந்தே அது ஆரம்பமாகிறது என்றும் தெரிவித்தார்.

“வாய்வழி சுகாதாரம் இந்தப் பயணத்தின் முக்கியமானதொரு பகுதியாகும்” எனக் கூறிய பிரதமர், “ஆரோக்கியமான புன்னகை என்பது பலமான பற்கள் இருப்பது மட்டுமல்ல, அது நல்ல ஊட்டச்சத்துடனும், ஒரு குழந்தையின் கற்றல் திறனுடனும், ஒரு வளர்ந்தோரின் உழைப்புத் திறனுடனும், ஒவ்வொரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வு, கௌரவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்” எனத் தெரிவித்தார்.

உலகளாவிய தரவுகளை எடுத்துக்காட்டிய பிரதமர், உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கையில், குழந்தைகளிடையே பல் சொத்தை, பெரியவர்களிடையே பரவலாகக் காணப்படும் ஈறு நோய், மற்றும் புகையிலை பயன்பாடு, பாக்கு மெல்லுதல், வெற்றிலை உபயோகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புடைய ஆண்களிடையே அதிக அளவில் காணப்படும் வாய்வழி புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

தொற்றா நோய்களின் தேசிய சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பு சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பாடசாலை பல் மருத்துவ சேவைகள் மற்றும் சமூக ரீதியிலான சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட வெற்றிகரமான முன்முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார்.

மருத்துவ சமூகமானது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கவும், உள்நாட்டு ஆராய்ச்சித் திறன்களைப் பலப்படுத்தவும், நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளைத் தமக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பல் மருத்துவத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், இத்துறையில் அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதுடன், நிபுணத்துவ பயிற்சி, ஆராய்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் பதவிகளிலும் அவர்களுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, இலங்கை பல் வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, முன்னணி பல் வைத்திய நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு