பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சரியான நேரத்தில், துல்லியமாகக் கிடைக்கும் தரவுகள் வினைத்திறன்மிக்க தீர்மானங்களை எடுப்பதற்கு அத்தியாவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி (World Bank), மற்றும் ஐக்கிய நாடுகள் திட்டச் சேவைகள் அலுவலகம் (UNOPS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றிய பிரதமர், அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமைகள் பற்றி, தினசரி சரியான நேரத்தில் வினைத்திறன்மிக்க முடிவுகளை எடுப்பதற்கு, முறையான தகவல் மற்றும் தரவு சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு முயற்சிகளை வழிநடத்துவதற்கு துல்லியமான தரவுப் பரிமாற்றங்கள் அத்தியாவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது, UNDP-இன் பேரிடருக்குப் பிந்தைய மதிப்பீடு (Global Rapid Post-Disaster Damage Estimation - GRADE) முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் தேவை மதிப்பீட்டுச் செயல்முறையை சர்வதேசப் பிரதிநிதிகள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர். இது புவியியல் தகவல் தொழில்நுட்பம் (GIS), செய்மதிப் படங்கள் (satellite imagery) மற்றும் தரைமட்டத் தரவுகளை ஒருங்கிணைத்து, பேரிடருக்குப் பிந்தைய நிகழ்நேரத்தில், நடைமுறைப்படுத்தக்கூடிய நுண்ணறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்ட இடங்கள், சமூகங்கள், உள்கட்டமைப்புச் சேதங்கள், கழிவுகளின் அளவு பற்றிய மதிப்பீடுகள் மற்றும் நிலப்பயன்பாட்டின் மாற்றங்களை அடையாளம் காண்பதற்கு இது மிகவும் அவசியமான தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய UNDP பிரதிநிதிகள், அனர்த்தத்திற்குப் பிந்தைய தீர்வுகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பில் நெருக்கமாக ஒத்துழைக்கவும், தொடர்ச்சியான பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் கலாநிதி கெவோர்க் சர்க்ஸ்யன் Dr. Gevorg Sargsyan, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா Ms. Azusa Kubota, ஐக்கிய நாடுகள் செயற்றிட்ட சேவைகள் அலுவலகத்தின் (UNOPS) தெற்காசியப் பணிப்பாளர், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. சாகரிகா போகஹாவத்த மற்றும் தேசியத் திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி.

’திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினர் அதற்குரிய காசோலையை 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, நிதியத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோரும், பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 நவம்பர் 27ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகளைச் சந்திப்பதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு அவர் டிசம்பர் 07ஆம் திகதி விஜயம் செய்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த விஜயமானது, கல்விசார் கட்டடங்கள், மாணவர் வசதிகள் மற்றும் பிரதான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களை நேரடியாகப் பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் போது, முகாமைத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பீடங்கள், தகவல் தொழில்நுட்ப நிலையம், CDCE, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை எடுத்துக்கூறி, பாதிப்பின் தீவிரத்தன்மை குறித்துப் பல்கலைக்கழக அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இந்தப் பேரழிவினால் கல்விச் செயற்பாடுகளுக்கும், மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய விதம் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 110 இற்கும் அதிகமான கணினிகள், அத்தியாவசியமான ஆய்வுகூட உபகரணங்கள், பரீட்சை ஆவணங்கள் மற்றும் நான்கு பிரதான தகவல் தொழில்நுட்ப வழங்கிகள் (Server) ஆகியன அழிவடைந்துள்ளதாகவும், ஆரம்பச் சேத மதிப்பீடு 6 பில்லியன் ரூபாயை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனர்த்தத்தை அடுத்து மகாவலி ஆற்றங்கரையில் அமைந்திருந்த விடுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்களை விரைவாக வெளியேற்றியமைக்காகப் பிரதமர் பாராட்டினைத் தெரிவித்தார். அத்துடன், நெருக்கடி காலத்தில் வளாகத்தில் தங்கியிருந்த சுமார் 11,000 மாணவர்கள் வெளிப்படுத்திய மன உறுதியையும் அவர் பாராட்டினார். அணுகல் மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகத் தடைப்பட்டிருந்த போதிலும், உணவு, நீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்தமைக்காக இலங்கை இராணுவம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூர் நன்கொடையாளர்களுக்கும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

கூட்டுப் பொறியியற் குழுவின் அறிக்கையின்படி, வெள்ளத்தால் சூழப்பட்ட பல்கலைக்கழகக் கட்டடங்கள் கட்டமைப்பு ரீதியாக உறுதியான நிலையில் இருக்கின்றன. ஆயினும், பல கட்டடங்களுக்கு அவசர திருத்தங்கள் தேவைப்படுகின்றன. டிசம்பர் 15ஆம் திகதி வரை கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும், கல்வி மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்துத் துணைவேந்தர் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கான குழுக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல்களின்போது, உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களைப் பிரதமர் வழங்கினார். அவற்றில், நீர், மின்சாரம் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பான பாதைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுத்தல்; கடுமையாகப் பாதிக்கப்பட்ட பீடங்கள் மற்றும் ஆய்வுகூடங்களைத் துரிதமாகப் புனரமைத்தல்; வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளுக்கான முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்; மற்றும் ஆற்றங்கரைகளைப் பாதுகாத்தல், வடிகால் அமைப்பை மேம்படுத்துதல், பாதிக்கப்படக்கூடிய வசதிகளை இடமாற்றம் செய்தல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளை அமுல்படுத்துதல் என்பன உள்ளடங்குகின்றன. அரசாங்கத்தின் உதவியை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய பிரதமர், பேராதனையைப் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு உறுதி அளித்தார்.

இந்தக் கூட்டத்தில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக்க கலுவெவ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.டபிள்யூ.பல்லேகம, பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு

தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரப் பிரதேச அதிகாரிகளின் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பு அவசியம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதுகாப்பு முகாம்களில் தங்கி இருக்கும் சிறுவர்களே மனநலன் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவர பிரதேச மட்ட அதிகாரிகளின் வினைத்திறனான ஒத்துழைப்பு அவசியம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் காரணமாக கண்டி மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் குறித்துப் பார்வையிட்டதன் பின்னர், கண்டி உடபலாத்த பிரதேச செயலகத்தில், 2025 டிசம்பர் 07ஆம் திகதி நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுச் சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

கெலிஓயா, உடபலாத்த மற்றும் தொளுவ பிரதேசங்களில் அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நிவாரண விநியோகப் பணிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

உடபலாத்த மற்றும் தொளுவ பிரதேசங்களை உள்ளடக்கி மின்சாரத் தடங்கல்கள் பெரும்பாலும் வழமை நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பிரதான வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய கிராமிய வீதிகள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர். பிரதேசத்திற்குத் தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதுடன், தகவல் தொடர்புத் வழமை நிலைக்கு வந்த பின்னர் வங்கிக் கடமைகளும் உரிய முறையில் சீரமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

அனர்த்தத்திற்கு உள்ளான மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் வழமை நிலைக்குக் கொண்டு வர நாமனைவரும் மீண்டெழும் தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் அப்போதே அது சாத்தியமாகும். குறிப்பாக, பாதுகாப்பு முகாம்களில் உள்ள குழந்தைகளின் மனநலன் குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இத்தகைய பயங்கரமான பேரழிவின் போது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததற்கான காரணம், இவ்வாறான அனர்த்த நிலைமைகள் பற்றிய அனுபவம் இருந்தோ இல்லாமலோ, நீங்கள் புரிந்த அர்ப்பணிப்பே ஆகும்.

மிகவும் இக்கட்டான இந்த சந்தர்ப்பத்தில் கடமைக்கு அப்பால் சென்று, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான பஸ்மின் சரீப், தனுஜ திசாநாயக்க, மேலதிக மாவட்டச் செயலாளர் லலித் அட்டம்பாவல, உடபலாத்த பிரதேச செயலாளர் ஆத்மா ஜயரத்ன, தொளுவ பிரதேச செயலாளர் யமுனா தயாரத்ன ஆகியோரும், மின்சார சபை, நீர் வழங்கல் வடிகால் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மீட்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு அரசாங்கம் விளக்கம் அளித்தது; சுற்றுலாச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன, சர்வதேச ஆதரவு பலப்படுத்தப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025 டிசம்பர் 04ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில், இலங்கைக்கான இராஜதந்திர சமூகத்தினருக்காக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. விஜித ஹேரத் ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை ஆரம்பித்து வைத்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை அடுத்து உடனடியாக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியமைக்காக இராஜதந்திர சமூகத்தினருக்குத் தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். சமீப ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மிகவும் கடுமையான அனர்த்தங்களில் ஒன்றை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், மக்களின் மீள் எழுச்சித் திறனும் அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் காரணமாக விரைவான தீர்வுகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்தார். அனர்த்தத்தின்போது ஒரு சுற்றுலாப் பயணியேனும் பாதிக்கப்படவில்லை என்றும், முன்னர் அணுக முடியாத பகுதிகளையும் இப்போது அடைய முடிந்துள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார். நிலங்கள் மற்றும் பொது இடங்கள் மீண்டும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தப் பாரிய சுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பாடல்கள் சீர் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மீட்பு, அப்புறப்படுத்தல் மற்றும் அவசர உதவிகள் ஆகியவை முப்படையினர், பொலிஸ், அரச அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் தெளிவுபடுத்தினார். உட்கட்டமைப்பை மறுசீரமைத்தல், மீள்குடியேற்றத் தேவைகள் மற்றும் நீண்டகால அனர்த்தத் தணிப்புப் பணிகள் உள்ளிட்ட தொடர்ச்சியான சவால் இருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், பங்காளி நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப, மனிதாபிமான மற்றும் நிதி உதவிகளையும் பாராட்டினார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட, அனர்த்தத்தின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, வெளியேற்ற மையங்கள், சேத மதிப்பீடுகள் மற்றும் மீட்புத் திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனங்களுடனான தற்போதைய ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார். இந்தச் சூறாவளி ஏறத்தாழ முழு நாட்டையும் பாதித்ததுடன், 22 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்கள் 540 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சியையும், மணிக்கு 70 கி.மீ. வரையிலான வேகத்திலான காற்றையும் பதிவு செய்தன. இதனால் பரவலான உட்கட்டமைப்புச் சேதங்கள் ஏற்பட்டன. வெள்ளத்தால் மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 1.8 மில்லியன் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப மதிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் 40,152 கர்ப்பிணிப் பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகள், வரைபடத் திறன்கள் மற்றும் காலநிலை பதிலளிப்புத் தொழில்நுட்பங்கள் போன்ற மேலதிக தொழில்நுட்ப ஒத்துழைப்பு முக்கியமானதாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அறிக்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. புத்திக ஹேவாவசம் அவர்கள், அனர்த்தத்தின் சுற்றுலாத் துறை மீதான தாக்கம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு விளக்கமளித்தார். பிரதான சுற்றுலாப் பிரதேசங்கள் தொடர்ந்து இயங்குவதாகவும், பாதுகாப்பு மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும், வரவிருக்கும் பருவத்தில் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பதற்கும், தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் குறுகிய கால நடவடிக்கைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இக்கூட்டத்தில் இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் அசோகா ஹெட்டிகொட அவர்கள், மாரவிலை முதல் பாசிக்குடா வரையிலான கடற்கரையில் ரிசார்ட் ஹோட்டல்கள் இயங்கி வருவதாகவும், பல ஹோட்டல்கள் 60-65 சதவீத ஆக்கிரமிப்பைப் பெற்றிருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். அத்துடன், நுவரெலியாவில் உள்ள ஹோட்டல்கள் பகுதியளவில் இயங்குவதாகவும், சுற்றுலா மூலம் தொடர்ந்து ஆதரவு வழங்குவதே சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கக்கூடிய சிறந்த உதவி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதன்போது இராஜதந்திரிகள் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தமது இரங்கலைத் தெரிவித்ததுடன், உடனடி நிவாரண முயற்சிகள் மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு உதவுவதற்குத் தமது அரசாங்கங்கள் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினர். அரசாங்கத்தின் வெளிப்படையான ஈடுபாட்டிற்கும் நெருக்கடியை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்காக இராஜதந்திரிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, வினைத்திறன் மிக்க மீள் எழுச்சியை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அனர்த்தத் தயார்நிலை, காலநிலை மீள் எழுச்சித் திறன் மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்துதல் ஆகியவை இலங்கையின் எதிர்கால தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கேந்திரமாக அமையும் என்பதையும் இச்சந்திப்பில் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் திரு. அருண் ஹேமச்சந்திர, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி. அருணி ரணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,

நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் அதிகபட்ச வயது எல்லையான 40, இந்தச் சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 45 வயது வரை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களுக்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வயது எல்லையைத் திருத்தியமைத்து, தனித்தனியாகப் பரீட்சைகளை நடத்தி, ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையின் 3.1.அ தரத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு