பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமரின் சுற்றாடல் தின செய்தி

எமது இலங்கை தேசமானது, ஒரு தனித்துவமான சமுத்திர வலயத்தால் சூழப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நதிகளைக் கொண்ட, தீவு முழுவதும் பரந்துகாணப்படும் தரமான மண் அடுக்குகள் மற்றும் வியத்தகு உயிர் பல்வகைமை ஆகியவற்றைக் கொண்ட ஒரு எழில்மிகு சுற்றாடல் முறைமையாகும்.

இந்த தனித்துவமான சூழல் பன்முகத்தன்மை காரணமாக, ஒரு நாடு என்ற வகையில் நமது நாடு உலகலாவிய கவனத்தை ஈர்த்துவருகின்றது,இருப்பினும், பல தசாப்தங்களாக சூழலியல் பெறுமானங்களைப் பாதுகாப்பதில் விட்ட கவனக்குறைவினால் நீர் வளங்கள், உயிரியல் வளங்கள் மற்றும் வளமான மண் ஆகியவற்றை இழந்து வருகிறோம். மனிதகுலத்திற்கும் சூழலுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் விரிசலின் காரணமாக இயற்கை வளங்கள் பெருமளவில் இழக்க நேரிடுவது உண்மையிலேயே கவலைக்குறிய விடையமாகும்.

இந்த மண்ணில் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். தேசிய மக்கள் சக்தியாக, அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதி செய்யும் நிலைபேறான சூழல் என்ற தொலைநோக்கினை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கருத்திற் கொண்டு,சூழல் நீதி மற்றும் சமத்துவத்திற்காக நாம் அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய உறுதிபூண்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக சுற்றாடல் தினத்தின் கருப்பொருள் "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்" என்பதாகும். அரசாங்கமாகவும் பொதுமக்களாகவும் Clean sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம், பிளாஸ்டிக்கினால் உபயோகத்தினால் எமது சூழல் அழிவுக்குள்ளாவதை துரிதமாக தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

மே மாதம் 30 ஆந் திகதி ஆரம்பமான சுற்றாடல் வாரம், எம்மைச் சுற்றியுள்ள சூழல் முறைமையின் பெறுமானங்களை விளங்கி, அதைப் பாதுகாக்க நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கவும், அதற்காக செயற்திறமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

"துளிர்த்து வளர வழிவிடுவோம்" என்பது இந்த ஆண்டு தேசிய சுற்றாடல் தின கருப்பொருளாகும். இலங்கை என்ற நாமம் உலகில் உயர்ந்துநிற்க, இந்த தேசத்தின் சூழல் முறைமைக்கும் இத்தேசத்தின் பிள்ளைகளான அனைத்து மனிதர்களினதும் மானிடப் பண்புகள், சமூக அந்தஸ்து மற்றும் அவர்களது பொருளாதாரம் ஆகியன துளிர்த்து செழித்து வளர வழிவகுக்கும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.
2025 ஜூன் மாதம் 05 ஆம் திகதி

இலங்கை பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதி பிரதமரின் சந்திப்பு

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று (ஜூன் 3) கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரபூர்வ தூதரக இல்லத்தில் நடைபெற்றது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான இராஜதந்திர விஜயத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான நீண்டகால மற்றும் வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளைச் சுட்டிக்காட்டினார். அரசியல், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சவாலான சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்த நம்பிக்கைக்குரிய எதிர்பார்ப்பையும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வெளிவிவகாரம், வர்த்தகத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை பாதுகாப்புப் பிரிவின் பிரதம அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயார்

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் மாதம் 03ஆந் திகதி பிரிட்டிஷ் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கை கல்வி மாநாடு 2025" நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அனைவருக்கும் சமமான மற்றும் அணுகக்கூடிய கல்வி முறையை உருவாக்க பரந்த ஒத்துழைப்பு தேவை. இதற்கு, தேசிய மற்றும் மாகாண அரச அதிகாரிகள், கல்வி அமைச்சின் பிரதிநிதிகள், அபிவிருத்தி பங்காளிகள், தனியார் துறை பங்குதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்கள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குத் தேவை.

அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கியதன்மை மற்றும் தரத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆங்கிலக் கல்வியை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களை வலுவூட்டுவதன் மூலம் ஆங்கில மொழிக் கற்பித்தலை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கம் மற்றும் கற்றலுக்கான டிஜிட்டல் கருவிகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு மாணவரையும் தொடர்ச்சியாக மாறிவரும் எதிர்காலத்திற்கு எவ்வாறு தயார்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கில மொழி தொடர்பான தற்போதைய "மொழி அடிமைத்தன" மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, ஆங்கில மொழியை சமூகத்தில் ஒரு பயனுள்ள கருவியாக ஊக்குவிக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சமூக வகுப்பு, புவியியல் அமைவிடம் அல்லது குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதில், ஆங்கில மொழி கற்பித்தலை பரீட்சையில் சித்திபெற வேண்டிய ஒரு பாடமாக மட்டும் கருதுவதற்குப் பதிலாக, பேச்சு மற்று எழுத்தின் ஊடாக மாணவர்கள் ஆங்கில மொழியை உண்மையில் பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்போது மொழியைப் பயன்படுத்துவது குறித்த பிள்ளைகளின் பயத்தைக் குறைக்க ஆசிரியர்கள் செயற்திறமாகத் தலையிடுவது மிகவும் முக்கியம். ஆங்கிலத்தில் பேசுவதை வெளிநாட்டினரால் புரிந்துகொள்ள முடியுமாக இருந்தால் போதுமானது என்பதை பிள்ளைகள் நம்ப வைக்க வேண்டும். மேலும், ஆங்கில மொழிக்கான மதிப்பீட்டு முறையும் மாற வேண்டும். புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய கூறுகளாக இவற்றை நாங்கள் கருதியுள்ளோம்.

புதிய பாடத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஆசிரியர் கல்வி முறைகளை வலுப்படுத்துதல், முன் சேவை மற்றும் சேவைக்கால பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்துதல், பாடத்திட்ட நவீனமயமாக்கல் மற்றும் புதிய பாடத்திட்டங்களை கற்பிக்க ஆசிரியர்களை தயார்படுத்துதல். தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவையைக் கருத்திற் கொண்டு, தற்போது ஆங்கில மொழி மூலக் கல்வியை வழங்கும் 825 பாடசாலைகள் என்ற எண்ணிக்கையை குறைந்தபட்சம் 1000-ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், இருமொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பம், கற்பித்தல் மற்றும் கற்றல் உலகம் வேகமாக மாறி வருகிறது, ஆனால் வரம்பற்ற வகையில் கருவிகளை அணுகக்கூடிய மாணவர்களுக்கும் எந்த உபகரணத்தையும் வாங்க முடியாத மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் எமது பாடசாலை முறைமையில் காணப்படுகிறது. இந்த இடைவெளியைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும், இது புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய தொழில்நுட்ப கருவிகளை அணுகும் வகையில் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று பிரதமர் கூறினார்.

டிஜிட்டல் உலகின் ஆபத்துகள் குறித்தும் நாம் கரிசனை கொள்ள வேண்டும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் பாடசாலை பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க அனைவரின் ஆதரவும் தேவை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சின் அதிகாரிகள், பிரிட்டிஷ் கவுன்சிலின் அதிகாரிகள், ஆங்கில மொழி அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவையும் சீன வர்த்தக அமைச்சரையும் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே மே 30 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன.

அதன்படி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்மாலி ஹேமச்சந்திர, ஓஷானி உமங்கா மற்றும் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார் , வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் திரு. வாங் வென்டாவோ, பிரதமரைச் சந்தித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் Qi Zhenhong மற்றும் சீன அரசாங்க சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் (இருதரப்பு), தர்ஷன எம். பெரேரா மற்றும் அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், மே 30 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் புலமைப்பரிசில் மாணவியாக, இந்தியாவில் நான் இருந்த காலம் வெறுமனே முறைசார் கல்வி அனுபவமாக மட்டுமல்லாமல், இந்திய நாகரிகம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியங்களின் செழுமை மற்றும் பன்முகத்தன்மை பற்றிய பரிதலை பெற அருமையான வாய்ப்பாகவும் அமைந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார உறவானது மிகவும் ஆழமானதாகும்.

1998 ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தர் கலாசார மையம் (SVCC), எங்களிடையே கலாசார பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான ஒரு செயற்திறன்மிக்க தளத்தை உருவாக்கியது. ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட கலாசார நிகழ்வுகளை (கண்காட்சிகள், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், யோகா மற்றும் ஆயுர்வேத அமர்வுகள் மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் உட்பட) நடத்திவரும் இந்த மையம், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆறு இலங்கை கலாசாரக் குழுக்கள் இந்தியாவில் நிகழ்ச்சிகளை நடத்த அழைக்கப்பட்டுள்ளன. கலாசார இராஜதந்திரம் எவ்வாறு எல்லைகளைக் கடந்து, அரசியலைக் கடந்து, பரஸ்பர மரியாதையை வளர்க்கிறது என்பதை இந்தப் பரிமாற்றங்கள் அழகாகக் காட்டுகின்றன.

அதேபோன்று இந்தியாவில் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளுக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசுகளுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

நேரு, ராஜீவ் காந்தி, மௌலானா ஆசாத், கலாநிதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (பொதுநலவாய), AYUSH, லதா மங்கேஷ்கர் போன்ற மதிப்புமிக்க புலமைப்பரிசில் திட்டங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இலங்கையில் 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் (ஆயுர்வேதம், மானிடவியல் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்) ICCR இன் முன்னாள் மாணவர்கள் என்பது இந்த உறவின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும். மேலும் ஆனந்த சமரக்கோன், நந்தா மாலினி, பிரதீப் ரத்நாயக்க போன்ற புகழ்பெற்ற கலைஞர்களும் இதில் ஒரு பகுதியாக உள்ளனர் என்பதையும் கூற வேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நாகரிகம், வரலாறு, மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கட்டிடக்கலை மற்றும் கலை மரபுகள் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களாக மாறியுள்ளன.

2024 பெப்ரவரி மாதம் இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின் (ICCR) விசேட விருந்தினர்கள் நிகழ்ச்சியில் அனுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகளுடன் பங்கேற்றார். இதன்போது குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தனது இந்திய பயணத்தின் போது, கேரளாவில் அரச தகவல் தொழில்நுட்பத் துறையும், குஜராத்தின் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடும் அனுர குமார திசாநாயக்க அவர்களின் விசேட கவனத்தை ஈர்த்ததாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட விசேட அதிதிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் இந்திய மொழிகள் மற்றும் அரங்கியல் கலைகளை கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

போலந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார்.

நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், அத்துடன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழிலாளர்கள் இடம் பெயர்வு, உயர் மட்ட சுற்றுலா, டிஜிட்டல் நிர்வாக முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகள் குறித்து பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, போலந்து செல்லும் இலங்கையர்கள் முகம்கொடுக்கும் விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு. ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி தெரிவித்தார்.

இரு நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் EEAS துணைத் தலைவர் மோனிகா பைலெய்ட், புதுடில்லியில் உள்ள போலந்து தூதரகத்தின் பொறுப்பதிகாரி பியோட்ர் ஸ்விட்டல்ஸ்கி மற்றும் புதுடில்லியில் உள்ள போலந்து தூதரகத்தின் பிரதிநிதிகள் Joanna Dopierała-Konkołowicz, Marta Stachowiz, Marta Stachowich, Małgorzata Kopeć, மற்றும் Konrad Laskowski ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு