பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

விழுமியங்களைப் பாதுகாத்து, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி, அனுபவங்களின் அடிப்படையில் சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவைப்படுகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் நடைபெற்றது.

முப்படைகளுக்கான உயரிய இராணுவக் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், 19ஆவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 26 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 149 பயிற்சிப் பணியாளர்களுக்கு இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன. இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

கல்விச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு Golden Owl Award, Golden Pen Award மற்றும் Commandant’s Honours ஆகிய மூன்று சிறப்பு விருதுகளைப் பிரதமர் வழங்கியதுடன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சஞ்சிகையின் (Defence and Security Journal) 10ஆவது பதிப்பு மற்றும் ’Owlet’ சஞ்சிகை என்பனவும் உத்தியோகபூர்வமாகப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர்:

’தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டியதுடன், உயிரிழந்த அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தேசிய நெருக்கடியின் போது முப்படையினர் மக்களுடனும் சிவில் நிறுவனங்களுடனும் இணைந்து, பாரிய அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டமைக்காகப் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தக் கற்கையில் வெளிநாட்டுப் பயிற்சிப் பணியாளர்களின் பங்குபற்றல், சர்வதேச அனுபவப் பரிமாற்றம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்காலத் தலைவர்கள் சட்டத்தை மதித்து, ஒழுக்க விழுமியங்களைப் பேணி, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொண்டு, கற்றல் அனுபவங்களுக்கமையச் செயற்படுவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்துடன் இராணுவச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த போதிலும், சரியான தீர்மானத்தை எடுத்தல், ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தலைமைத்துவத்தின் அடிப்படை அம்சங்களாக என்றும் நிலைத்திருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இக்கல்லூரியில் கட்டியெழுப்பப்பட்ட தொழில்சார் தொடர்புகள், எதிர்காலச் சமாதான நடவடிக்கைகள், மனிதாபிமானப் பணிகள், சர்வதேச பயிற்சிகள் மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியமானதாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள், DSCSC இன் முன்னாள் கட்டளைத் தளபதிகள், தற்போதைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், ஏனைய கௌரவ விருந்தினர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 16ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான வழிமுறைகளின்றி மேற்கொண்டதன் காரணமாகவே இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்றும், சம்பள முரண்பாடுகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஆண்டில் இதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தரமான உயர்கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (2025 டிசம்பர் 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவப் பிரதமர் அவர்கள் முன்வைத்த இந்த முன்மொழிவுக்கு அமைய, இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் நிறுவனங்களுடனும் கூட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பின்வரும் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது:

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ’பெல்ட் அண்ட் ரோட்’ பிராந்தியங்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் அமைப்புகளின் கூட்டணி (ANSO): காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பான சர்வதேச நீர் உச்சிமாநாட்டை நடத்துவது தொடர்பான திட்ட ஒப்பந்தம்.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஹொங்கொங் சீனப் பல்கலைக்கழகம்: மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus) நோய் பரவுதல், அவற்றின் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை மற்றும் மரபணு பன்முகத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்யும் நோக்கிலான ’ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ (Research Collaboration Agreement) மற்றும் ’பொருள் பரிமாற்ற ஒப்பந்தம்’ (Material Transfer Agreement).

களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் கியோத்தோ தகவல் அறிவியல் பட்டதாரிப் கல்லூரி: கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தல், பீடங்கள் மற்றும் மாணவர்களுக்கிடையிலான கல்வி, தொழில்சார் மற்றும் கலாசார நடவடிக்கைகள் மூலம் நட்புறவை வளர்த்தல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்துதல் போன்ற நோக்கங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் (IIT Madras): இருதரப்பு இணக்கப்பாட்டுடன் கூடிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஏற்படுத்துதல், கல்வித் தகவல்கள் மற்றும் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளுதல், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் கூட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்துதல் போன்ற நோக்கங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாசார உறவுகள் பேரவை (ICCR): வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வருகைதரு பேராசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஆகியவற்றுக்கே அமைச்சரவையின் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிதாக நியமனம் பெற்ற கனடிய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது ’திட்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கனடா நாட்டின் அனுதாபங்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்கக் கனடா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார். மீட்பு மற்றும் உடனடி நிவாரண நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனர்த்தத்திற்குப் பின்னரான இரண்டாம் கட்டத்தை இலங்கை தற்போது அடைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகம் வழங்கிய உதவிக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பெரும்பாலான பாடசாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பாடசாலைகளை டிசம்பர் 16 முதல் மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இயல்பு நிலைக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தையும், பொருத்தமான இடங்களில் நிவாரண மையங்களைப் படிப்படியாகக் குறைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான முக்கியத்துவத்தை அங்கீகரித்து, விவசாயத் துறையை ஆதரிப்பதில் கனடா கவனம் செலுத்துவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மீண்டும் பயிர்ச்செய்கையைத் தொடங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு உதவ ஏற்கனவே நிவாரண உதவி நடவடிக்கைகளைத் ஆரம்பித்திருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு கருவிகளின் சாத்தியமான பயன்பாட்டைக் குறிப்பிட்டு, அனைத்துக் குடிமக்களையும் உள்ளடக்கிய மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக உத்தியோகபூர்வ மொழிக் கொள்கைகளைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். கல்வித் துறையில், குறிப்பாக ஆசிரியர் பரிமாற்றத் திட்டங்களில், ஏற்கனவே உள்ள மாணவர் ஒத்துழைப்பு முயற்சிகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் தெரிவித்த பிரதமர், பொதுநலவாய கற்றலுடன் (COL) இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு பற்றியும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பாக, அரசியல் மற்றும் வர்த்தகப் பதில் ஆலோசகர் பேட்ரிக் பிக்கெரிங் (Patrick Pickering) மற்றும் கூட்டுறவுத் தலைவர் கிரில் ஐயோர்தனோவ் (Kiril Iordanov) ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி. பிரமுதிதா மனுசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவ

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 2025 டிசம்பர் 15ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

’திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது அத்தியாவசிய உட்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் விவசாய வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த முயற்சிகளுக்கு உதவும் வகையில் சர்வதேசச் சமூகம் வழங்கிவரும் ஆதரவையும் அவர் தெளிவுபடுத்தினார்.

பேச்சுவார்த்தையின் போது, இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கசகஸ்தானின் முதலீட்டை அதிகரித்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, பொருளாதார ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். கல்வித் துறையில், குறிப்பாக மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டுக் ஆராய்ச்சி முயற்சிகள் மூலம் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் பரஸ்பர கரிசனைக்குரிய ஒரு பகுதியாக அமைந்தது.

கசகஸ்தான் குடியரசின் தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தூதரகக் குழுவின் தலைவர் ருஸ்தெம் ஜமன்குலோவ் (Rustem Jamankulov) கலந்துகொண்டார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சமரி ரொட்ரிகோ, மற்றும் வெளியுறவு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. இரோஷா கூரே ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நாடு தழுவிய நிகழ்ச்சியின் ஒன்பதாவது கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன் போது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 361 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 36.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

"இதுவரை, விசேட அதிகாரம் அல்லது பதவிகளை வகிப்பவர்களுக்கு மாத்திரம் நன்மையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்த, சாதாரண மக்கள் பயனடைவது கடினமானதும் சிக்கலானதுமான செயல்முறையாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை, இணையவழியில் (Online) மற்றும் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய எளிய முறைமைக்கு கொண்டுவர எமது அரசாங்கம் வழி வகுத்திருக்கின்றது.

இந்தச் செயற்திட்டங்கள் அனைத்தையும் நாம் மேற்கொள்வது, நமது மனித வளத்தை தற்போதைய உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தி, முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவே ஆகும். இன்றைய உலகின் சிக்கலான தன்மைகளைப் புரிந்துகொண்டு பயணிக்கக்கூடிய மனித வளத்தை உருவாக்க ஒரு அரசாங்கம் என்ற வகையிலேயே நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

அந்த நோக்கத்திலேயே 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர விசேட வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். உற்பத்தித்திறன் மிக்க நல்ல பிரஜையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

சுற்றுச்சூழலை நேசிக்கும், அதனைப் பாதுகாப்பதில் முன்னிற்கும், தலைமைத்துவப் பண்பு கொண்ட, கருணை மற்றும் கூட்டுமுயற்சி பற்றிய உணர்வுள்ள, ஜனநாயகத்தை மதிக்கும் பொறுப்புமிக்க மனித வளத்தை உருவாக்குவதே எமது தேவையாக இருக்கின்றது.

சகல அரசாங்கங்களும் உங்கள் கல்விக்காகப் பங்களித்துள்ளன. இந்தப் பங்களிப்பு, நாட்டின் அனைத்து மக்களினதும் வரிப் பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் அந்தச் சமூகத்திற்காகச் சேவையாற்றவும், தலைமைத்துவத்தை வழங்கவும் கூடிய திறமையானவர்கள் நீங்கள் என்பதாலேயே, நீங்கள் எமக்கு மிகவும் பெறுமதியானவர்களாகின்றீர்கள்.

இன்று வழங்கப்படும் இந்தக் கௌரவமானது, நாம் உங்களுக்குகாக மேற்கொள்ளும் ஒரு முதலீடாகும். அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, அரசாங்கத்தின் பங்களிப்பினால் பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த விழாவில் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான திரு. அனில் ஜயந்த,

மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு நிதி உதவி பெறக்கூடிய நிதியமாகவே மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிதியம் பிரபலமாக இருந்துவந்தது. ஆயினும் புதிய அரசாங்கத்தின் கீழ், அதன் பயன்பாட்டுக்கான செயற்பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைய கல்வியையும் ஒரு விசேட துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், எவரையும் கைவிடாது (Inclusivity), அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையும் ஜனாதிபதி நிதியமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரோஷன் கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சந்தன சூரியஆரச்சி, திரு. சந்திம ஹெட்டியாராச்சி, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி நிதியத்தின் முகாமைத்துவ சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள், புலமைப்பரிசு பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு