பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

’திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஜூன் 12 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

“திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி - ஏப்ரல் 2026)” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது. பதிலளிக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பக் கட்டத்தில் எட்டப்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தலையீடுகள் குறித்து கலந்துரையாடவும் இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இடைவிடாத கல்வியை உறுதிசெய்தல், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Emma Brigham, யுனிசெப் பிரதிநிதி Begona Arellano உள்ளிட்ட யுனிசெப் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது , உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேக்கரித் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ஷாங்கிரி-லாஹோட்டலில் ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நாடு பொருளாதார ரீதியாக ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இந்தத் தீர்க்கமான தருணத்தில், பேக்கரித் தொழில்துறையை வெறும் மாவு சார்ந்த தயாரிப்புகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது, அதனை நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாக மாற்ற முடியும் என நான் நம்புகிறேன்.


உணவு உற்பத்தியில் தரமும் ஆரோக்கியமுமே அடிப்படையாக இருக்க வேண்டும். எனவே, சுவைக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்காது, செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் அற்ற, அதிக சத்துமிக்க ஆரோக்கியமான தயாரிப்புகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரிசி மா, குரக்கன், தினை, பயறு மற்றும் உள்நாட்டு கிழங்கு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட (Value-added) புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், உலகளாவிய தரத்திலான ’ஆரோக்கியமான உணவு’ (Health-conscious diet) எனும் போக்கினைப் பேக்கரித் துறையினரால் வெற்றிகொள்ளக்கூடியதாக அமையும்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பலமாக அமையும். உள்ளூர் வர்த்தகர்களைப் பலப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. மூலப்பொருள் இறக்குமதிச் சிக்கல்களைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களுக்கான சலுகைக் கடன் வசதிகளை வழங்குதல் மற்றும் சர்வதேசத் தரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சி மற்றும் சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு, தொழில் அமைச்சின் ஊடாக அரசாங்கம் ஏற்கனவே வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

ஆதிவாசி மக்கள் தமது பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 12 பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆதிவாசித் தலைவர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

ஆதிவாசி மக்கள் எவ்விதத் தடங்கலுமின்றித் தமது பாரம்பரிய காணிகளை அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என்றும், அதற்காகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.

அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதை ஆதிவாசித் தலைவர் எடுத்துரைத்தார். இதன்போது, பிரதமர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.

தம்பானை பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

ஜூன் 15 முதல் 21 வரை கொழும்பு மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ’விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்திருக்கின்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 12 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி, தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள சுமார் 39,100 டெங்கு நோயாளர்களில் 25.8% விகிதத்தினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு மாவட்டம் ’அதி-அபாய’ மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வைரஸின் தன்மை மற்றும் அதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் போதிய அவகாசம் பெறாமை என்பன இந்நோய் பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக, அண்மையில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இம்முறை டெங்கு பரவல், வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 15 முதல் 21 வாரத்தில் அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானங்களை ஏற்பாடு செய்தல். பிரதேச செயலகங்கள் ஊடாக அதி-அபாய வலயத்திலுள்ள வீடுகளைப் பரிசோதனை செய்தல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், பதாதைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் 10 ஆம் தரத்திற்குக் கீழ் உள்ள மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர் எவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பாடசாலை அதிகாரிகளிடம் சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மாவட்ட அரசியல் தலைமைத்துவம், சர்வமதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய ’சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ​

2026 ஜூன் 11 இடம்பெற்ற, புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், கல்வி, தொழில்சார் பயிற்சி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய மையமாகச் செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

நிகழ்வின்போது, சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் நினைவுப் பலகையை பிரதமர் திரைநீக்கம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா ஆகியோரின் முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சிற்கும் சசகாவா அமைதி அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு நீண்டகால கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளால் செழுமையடைந்திருக்கின்றது. இயற்கை, கலாசாரம், கல்வி மற்றும் சமூக விழுமியங்களை மதிப்பதில் இரு நாட்டு மக்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றனர்.

ஜப்பானிய மொழிக் கல்வியை மேம்படுத்துவதிலும், இலங்கை-ஜப்பான் மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும் சசகாவா நிலையம் ஆற்றி வரும் பணி அளப்பரியது. புதிய நிலையம் கலாசாரப் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவும் இக்காலகட்டத்தில்,பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானத்திற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டுறவானது முன்னெப்போதையும் விட மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அமைதி, செழுமை மற்றும் மானிட கௌரவத்தை ஊக்குவிக்கும் சர்வதேச ஒழுங்கிற்காகவும், சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து உறுதிபூண்டிருக்கின்றன, எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அக்கியோ இசொமடா, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, ஜப்பான் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா , சசகாவா நிலைய அறக்கட்டளையின் தலைவர் பிரேமலால் பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளும் கௌரவ அதிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தலை அறிமுகப்படுத்துகின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே, வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொடவிதான எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, பிரதமர் ஜூன் மாதம்10ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையின் 2025/2030 புதுப்பிக்கத்தக்க அபிவிருத்தித் திட்டத்திற்கமைய, காற்றுச் சக்தி மூலம் 1264 மெகாவோட் மற்றும் சூரிய சக்தி மூலம் 2071 மெகாவோட் என பல்வேறு கொள்முதல் முறைகளின் கீழ் தேசிய கட்டமைப்பில் உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உள்வாங்குவதற்காகத் தேசிய மின்சாரப் பரிமாற்ற மற்றும் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாக, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய வலுசக்தி சேமிப்பு முறைமைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது உபயோகத்தில் இருக்கின்ற நீர்மின் நிலையங்களின் நிறுவப்பட்ட கொள்ளளவை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு