பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 24ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான சமாதான நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து, சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்களாபிதான மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த சமாதான நடைப்பயணம் இலங்கையில் நடைபெறுவது, ஒரு நாடு என்ற வகையில் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோல், உலக சமாதானம் என்பது நம் அனைவரதும் பிரார்த்தனையாகும். அந்த வகையில், இந்நிகழ்வில் பங்குபற்றக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர்,

இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் குறித்து அரசாங்கம் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் விசாரணைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டிற்கு எதிர்க்கட்சி அவசியமானது; ஆனால், எதிர்க்கட்சியிடமிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அவர்கள் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை. இதனாலேயே அடிப்படை ஆதாரமற்ற விடயங்களை முன்வைத்து அரசாங்கத்தைச் சிரமப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாகக் கூறினார்கள். எனது கருத்துகளை முன்வைக்க வாய்ப்புக் கிடைக்கும் வரை நானும் காத்திருக்கின்றேன்.

கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு, மருத்துவக் கல்வி தொடர்பிலும் ஒரு குழுவை நியமித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சர்வதேச புகழ்பெற்ற “சமாதான நடைப்பயணம்” (Walk For Peace) மூன்றாம் நாள் நடைப்பயணம் பிரதமரின் பங்கேற்புடன் ஆரம்பம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைமை தாங்கிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நாட்டிற்கு வருகை தந்து, தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம விகாரையை நோக்கி அவர்கள் ஆரம்பித்த சமாதான நடைப்பயணத்தின் மூன்றாம் நாள், உபய விகார மகா சங்கத்தினரதும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினதும் பங்கேற்புடன் இன்று (24) முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமானது.

மூன்றாம் நாள் நடைப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உட்பட மகா சங்கத்தினரும், பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களும் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தலதா மாளிகையின் பத்திரிப்புவ முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் மகா சங்கத்தினர் பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம், மாவனெல்ல பெலிகம்மன வித்யாவர்த்தன பிரிவேனா பொத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளதுடன், ஏப்ரல் 28ஆம் திகதி இச்சமாதான நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் உபய விகார மகா சங்கத்தினர், மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி. அபேகோன், தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல என்றும், இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகக் காணப்படும் பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெறும் “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், ஏப்ரல் 21ஆம் திகதி உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பராமரிப்புச் சேவைகள் பொருளாதார மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் அடிப்படை அம்சங்களாகும் என்றும், அதனை இனிமேலும் புறக்கணிக்க இயலாது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 21 முதல் 24 வரை நடைபெறும் இந்தப் பிராந்திய நிகழ்ச்சியானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி, நாடுகளுக்கிடையிலான அனுபவப் பகிர்வு, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் பாலின ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிலையான பொருளாதாரத்திற்கான வழிகளைக் கண்டறியும் ஒரு பிராந்திய மேடையாகச் செயற்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

பெண்கள் மேற்கொள்ளும் பராமரிப்புச் சேவைகள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமை குறித்த பிரச்சினைகளை இதற்கு மேலும் புறக்கணிக்க இயலாது. இது பொருளாதாரச் செயற்பாடுகளையும் சமூகத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவசியமான ஒரு அங்கமாகும். வீட்டுப் பணி, சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு அல்லது சமூக ஒத்துழைப்பு என எதுவாக இருப்பினும், அவை முறைசார்ந்த மற்றும் முறைசாரா பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன. பராமரிப்புச் சேவை என்பது வெறும் பராமரிப்போடு மாத்திரம் நின்றுவிடுவதில்லை. குறிப்பாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் மூலமாக பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் இனங்காண வேண்டும்.

ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக இருக்கின்றது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தலாகாது. அதேநேரம், பெண்கள் தொழில் சந்தையில் இணைவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். குடும்பத்தையும் சமூகத்தையும் கொண்டு நடத்துவதற்காக அவர்கள் ஊதியமின்றி மேற்கொள்ளும் பணிகள் மூலம் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தின் மிக முக்கியமான, அதேநேரம் இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படாத ஒரு துறையாகும்.

இலங்கையின் பராமரிப்புச் சேவைகள் குறித்துக் கவனம் செலுத்துகையில், பெண் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஏனைய காரணிகளால் அவர்கள் தொழில் சந்தையிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். முறைசாரா மற்றும் ஊதியமற்ற உழைப்பு ஆகிய இரண்டு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றை வரையறுக்கும் விதம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழில் சந்தைப் பங்களிப்பு என்பது வெறும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவது மாத்திரமல்ல; அது வாய்ப்புகள், கௌரவம் மற்றும் உள்வாங்கப்படுதல் பற்றிய விடயமாகும். ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ உழைப்பை வழங்குதல், முறைசார்ந்த அல்லது முறைசாரா உழைப்பு என எதுவாக இருந்தாலும் அதனை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடலாகாது. பராமரிப்புச் சேவை என்பது பொருளாதார ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பும் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான துறையாகும்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் தொடர்பான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இச்செயற்பாட்டின் மூலம், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை தேசிய வளர்ச்சிக்கான அத்தியாவசிய அங்கமாக அங்கீகரித்தல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தல், பராமரிப்புப் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம், என, குறிப்பிட்டார்.

ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புச் சேவைகள், சமூக மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளின் இன்றியமையாத பிரிவுகளாகும் என்றும், அவை தொழிலாளர் சந்தைப் பங்கேற்பைச் சாத்தியமாக்கி, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளித்து, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வலியுறுத்தியுள்ளது. தெற்காசியா முழுவதிலும் இப்பராமரிப்புச் சேவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தரமான பராமரிப்புச் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதே பாலின சமத்துவமின்மைக்கான காரணமாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, ’கௌரவமான பணியும் பராமரிப்புப் பொருளாதாரமும்’ தொடர்பான முன்மொழிவு ஒன்றினை ILO அங்கீகரித்துள்ளது. பராமரிப்பைத் தொழில் சந்தையின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியாக இனங்கண்டு, உயர்ந்த தரத்திலான சேவைகளை வழங்குவதற்கும், பராமரிப்புப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த உரையாடல்கள் மூலமாக தெற்காசியா முழுவதிலும் பராமரிப்புச் சேவை அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி, ’டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், அனர்த்தச் சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள்

மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, ’டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பார்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’Rebuilding Sri Lanka’ திட்டத்தின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், இன்று (21) அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அனர்த்த நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கலைத் துரிதப்படுத்தி, உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை விரைவாக மறுசீரமைப்பதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களுக்காக 500 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நிறைவடைய வேண்டுமென்றும் குறிப்பிட்ட பிரதமர், இழப்பீடு வழங்கல் தாமதமாவதற்குப் பிரதேச மட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்போது, ’டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்குச் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு தெரிவித்தார். அதற்கேற்ப வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள், மீன்பிடித்துறை, தொழில் மற்றும் வாழ்வாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

25,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இதுவரை 99% நிறைவடைந்துள்ளதோடு, மீள்குடியேற்றத்திற்கான 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் 95% முடிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ’சுரக்ஷா’ நிவாரண மையங்களை மூடும் பணி 99% வரை முடிவடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு மேலதிகமாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா வழங்குதல். அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒவ்வொருவரினது குடும்பத்திற்கும் 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குதல். பெற்றோர் எவரையாவது அல்லது இருவரையும் இழந்த சிறுவர்களுக்கான இழப்பீடு வழங்கல். விசேட தேவையுடைய பாதிக்கப்பட்ட நபர்களுக்கான இழப்பீடு வழங்கல். சேதமடைந்த விவசாயச் செயற்பாடுகளுக்கான இழப்பீடு வழங்கல். பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்துதல். புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை மறுசீரமைத்தல், பிரதேச மட்டத்தில் துல்லியமான புள்ளிவிவரங்களை விரைவில் சேகரித்தல் மற்றும் உட்கட்டமைப்புகளை விரைவாக அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் தலைவரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜயந்த பண்டார மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்தியாவின் உப ஜனாதிபதி திரு. ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி திரு.ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

​அலரி மாளிகைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றதோடு, இந்தியாவின் உப ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்காக திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

​இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனக் குறிப்பிட்ட இந்திய உப ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புகளுக்காகத் தனது நன்றியினையும் இதன்போது வெளிப்படுத்தினார்.

​இச்சந்திப்பில் இந்தியத் தூதுக்குழு சார்பில் இந்திய மீன்பிடி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மன், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும்,

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழா

சுபவேளையில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைத்து, புத்தாண்டுச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பு

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன.

சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் காரக சங்க சபை உறுப்பினரும், மெதகம ஸ்ரீ சுனந்தாராம தர்மதூத பிரிவெனா மகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய துன்மோதர சமித்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா திரு. தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கலாசார விழாவில் பங்கேற்ற பிரதமர், ’வேலை ஆரம்பிக்கும்’ சுபவேளை உதயமானதும், இல்லத்தினரின் அழைப்பின் பேரில் அவ்வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டுவைத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இதன்போது பிரதமருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் அங்கிருந்த சிறுவர்களுடன் பாரம்பரிய தேசிய விளையாட்டுகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து வந்த சுபவேளையில், கல்வி கற்பதில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுடன் இணைந்து அவர்களுக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வழிகாட்டிய பிரதமர், நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கல்வி மேம்பாட்டுக்கான சுப ஆரம்பத்தையும் உறுதிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரும் ஏனைய அதிதிகளும் இல்லத்தினருடன் கைவிசேடம் செய்தல், பரிசுப் பரிமாற்றம் ஆகியவற்றில் பங்கேற்றனர். பின்னர் புத்தாண்டுக்கான உணவு உண்ணும் சடங்கிலும் கலந்துகொண்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சௌபாக்கியம் மிக்க புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இலங்கை எதிர்கொண்ட பல்வேறு சவால்களைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்குப் பங்களிப்பு வழங்கிய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், "சூரியப் புத்தாண்டானது புத்துணர்வையும் தூய்மையையும் பிரதிபலிப்பதுடன், சூரியன் நம் அனைவருக்கும் உயிர் கொடுப்பதை இது நினைவூட்டுகின்றது" எனக் குறிப்பிட்டு, அனைவருக்கும் அமைதி மற்றும் சௌபாக்கியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர், மாநகர முதல்வர், பிரதேசச் செயலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு