பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று 2025 டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேராசிரியர் நிஹால் பெரேரா அவர்கள் விசேட உரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்லும்போது, நாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என்னவென்றால், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்படும் தரவுகளை ஓரிடத்தில் தொகுப்பதற்குரிய பொறிமுறை இல்லாமையேயாகும்.

அடித்தளத்தில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். கிராமிய மட்டத்திலான தகவல்களைச் சரியாக அறிந்திருப்பது அவர்களே. அதனால், பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சரியான தரவுகளைச் சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனப் பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன:

மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்தளவிற்குப் பிரயோசனமானவை என்பதை ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம். வெள்ள நிலைமையின்போது கடுவெல பிரதேச மக்கள் பங்கேற்புடன் நாம் செயற்பட்ட விதம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. அதன் போது எமக்கு கொட்டகச் சபை முறைமை மிகவும் பிரயோசனமாக இருந்தது. தரவு சேகரிப்புச் செயற்பாட்டிற்கும் சமூக சக்தி கொட்டகச் சபை போன்றதொரு பொறிமுறையைப் பயன்படுத்த முடியுமானால் மிகவும் பிரயோசனமாக அமையும்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்:

தரவுகள் தொடர்பான விடயத்தில் அரச நிறுவனங்களுக்கிடையில் முறையான தொடர்பின்மை பிரதான பிரச்சினையாகும். நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையும், தமது எல்லைக்குள் உள்ள கடமைகளைச் செய்வதற்கு மாத்திரம் அதிகாரிகள் செயற்படுவதும் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் ஒன்றிணைத்த தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனத் தெரிவித்தார்.

தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதன் அவசியம் மற்றும் அது தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகளையும் மக்களையும் அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.

பிரதமரின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

’திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசிகளை வேண்டி நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள்!

’திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசியையும், உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், 2025 டிசம்பர் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

அதன் ஒரு அங்கமாக, கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தலைமைத் தேரரின் வழிகாட்டலில், கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையின் சீமா மாலகையில் சர்வராத்திரி பிரித் பாராயணம் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் புனிதச் சின்னங்களுக்கு மலர் பூஜை செய்து வணங்கியதை அடுத்து மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திடீர் அனர்த்த நிலைமையினால் நாடளாவிய ரீதியில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக பக்தர்களால் திரட்டப்பட்ட 128 மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

மல்வத்தை பீடத்தின் அநுநாயக்கத் தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், பெரும் எண்ணிக்கையிலானோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு மாவட்டத்தில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இதற்கு மேல் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம்.

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 டிசம்பர் 09ஆம் திகதி கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

கொழும்பு மாவட்டம் வெள்ள நிலைமையால் இவ்வளவு தூரம் ஆபத்துக்குள்ளாகியிருப்பதற்கு, எந்தவொரு திட்டமிடலோ அல்லது சட்டதிட்டங்கள் குறித்த தெளிவோ இன்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே காரணமாகும். மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாகவே மாவட்டமும் மக்களும் இந்த ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நிலைமையால் அதிகளவான உயிர் மற்றும் சொத்துச் சேதங்கள் ஏற்பட்ட மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்த போதிலும், எதிர்காலத்தில் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட தலையீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் விசேடமாக விவாதிக்கப்பட்டது. வருடாந்தம் ஏற்படும் வெள்ளம் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க இயலாது. அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுத் திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்படத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் படுத்த வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தீர்வை வழங்குவது தொடர்பில் நாம் இப்போதே கலந்துரையாடி வருகிறோம் என்றும், ஊடகங்களிடம் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான அருண பனாகொட, சந்தன சூரியஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சரியான நேரத்தில், துல்லியமாகக் கிடைக்கும் தரவுகள் வினைத்திறன்மிக்க தீர்மானங்களை எடுப்பதற்கு அத்தியாவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP), உலக வங்கி (World Bank), மற்றும் ஐக்கிய நாடுகள் திட்டச் சேவைகள் அலுவலகம் (UNOPS) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது உரையாற்றிய பிரதமர், அனர்த்தத்திற்குப் பிந்தைய நிலைமைகள் பற்றி, தினசரி சரியான நேரத்தில் வினைத்திறன்மிக்க முடிவுகளை எடுப்பதற்கு, முறையான தகவல் மற்றும் தரவு சேகரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், குறுகிய மற்றும் நீண்ட கால மீட்பு முயற்சிகளை வழிநடத்துவதற்கு துல்லியமான தரவுப் பரிமாற்றங்கள் அத்தியாவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதன்போது, UNDP-இன் பேரிடருக்குப் பிந்தைய மதிப்பீடு (Global Rapid Post-Disaster Damage Estimation - GRADE) முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் தேவை மதிப்பீட்டுச் செயல்முறையை சர்வதேசப் பிரதிநிதிகள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர். இது புவியியல் தகவல் தொழில்நுட்பம் (GIS), செய்மதிப் படங்கள் (satellite imagery) மற்றும் தரைமட்டத் தரவுகளை ஒருங்கிணைத்து, பேரிடருக்குப் பிந்தைய நிகழ்நேரத்தில், நடைமுறைப்படுத்தக்கூடிய நுண்ணறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். பாதிக்கப்பட்ட இடங்கள், சமூகங்கள், உள்கட்டமைப்புச் சேதங்கள், கழிவுகளின் அளவு பற்றிய மதிப்பீடுகள் மற்றும் நிலப்பயன்பாட்டின் மாற்றங்களை அடையாளம் காண்பதற்கு இது மிகவும் அவசியமான தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய UNDP பிரதிநிதிகள், அனர்த்தத்திற்குப் பிந்தைய தீர்வுகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் தொடர்பில் நெருக்கமாக ஒத்துழைக்கவும், தொடர்ச்சியான பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் கலாநிதி கெவோர்க் சர்க்ஸ்யன் Dr. Gevorg Sargsyan, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா Ms. Azusa Kubota, ஐக்கிய நாடுகள் செயற்றிட்ட சேவைகள் அலுவலகத்தின் (UNOPS) தெற்காசியப் பணிப்பாளர், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. சாகரிகா போகஹாவத்த மற்றும் தேசியத் திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி.

’திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினர் அதற்குரிய காசோலையை 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, நிதியத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோரும், பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பல்கலைக்கழகத்தை மேலும் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவளிக்கும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2025 நவம்பர் 27ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகளைச் சந்திப்பதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு அவர் டிசம்பர் 07ஆம் திகதி விஜயம் செய்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த விஜயமானது, கல்விசார் கட்டடங்கள், மாணவர் வசதிகள் மற்றும் பிரதான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களை நேரடியாகப் பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் போது, முகாமைத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பீடங்கள், தகவல் தொழில்நுட்ப நிலையம், CDCE, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை எடுத்துக்கூறி, பாதிப்பின் தீவிரத்தன்மை குறித்துப் பல்கலைக்கழக அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இந்தப் பேரழிவினால் கல்விச் செயற்பாடுகளுக்கும், மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய விதம் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 110 இற்கும் அதிகமான கணினிகள், அத்தியாவசியமான ஆய்வுகூட உபகரணங்கள், பரீட்சை ஆவணங்கள் மற்றும் நான்கு பிரதான தகவல் தொழில்நுட்ப வழங்கிகள் (Server) ஆகியன அழிவடைந்துள்ளதாகவும், ஆரம்பச் சேத மதிப்பீடு 6 பில்லியன் ரூபாயை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனர்த்தத்தை அடுத்து மகாவலி ஆற்றங்கரையில் அமைந்திருந்த விடுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்களை விரைவாக வெளியேற்றியமைக்காகப் பிரதமர் பாராட்டினைத் தெரிவித்தார். அத்துடன், நெருக்கடி காலத்தில் வளாகத்தில் தங்கியிருந்த சுமார் 11,000 மாணவர்கள் வெளிப்படுத்திய மன உறுதியையும் அவர் பாராட்டினார். அணுகல் மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகத் தடைப்பட்டிருந்த போதிலும், உணவு, நீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்தமைக்காக இலங்கை இராணுவம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூர் நன்கொடையாளர்களுக்கும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

கூட்டுப் பொறியியற் குழுவின் அறிக்கையின்படி, வெள்ளத்தால் சூழப்பட்ட பல்கலைக்கழகக் கட்டடங்கள் கட்டமைப்பு ரீதியாக உறுதியான நிலையில் இருக்கின்றன. ஆயினும், பல கட்டடங்களுக்கு அவசர திருத்தங்கள் தேவைப்படுகின்றன. டிசம்பர் 15ஆம் திகதி வரை கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும், கல்வி மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்துத் துணைவேந்தர் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கான குழுக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல்களின்போது, உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களைப் பிரதமர் வழங்கினார். அவற்றில், நீர், மின்சாரம் மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பான பாதைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுத்தல்; கடுமையாகப் பாதிக்கப்பட்ட பீடங்கள் மற்றும் ஆய்வுகூடங்களைத் துரிதமாகப் புனரமைத்தல்; வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளுக்கான முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்; மற்றும் ஆற்றங்கரைகளைப் பாதுகாத்தல், வடிகால் அமைப்பை மேம்படுத்துதல், பாதிக்கப்படக்கூடிய வசதிகளை இடமாற்றம் செய்தல் போன்ற நீண்டகால நடவடிக்கைகளை அமுல்படுத்துதல் என்பன உள்ளடங்குகின்றன. அரசாங்கத்தின் உதவியை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய பிரதமர், பேராதனையைப் பலமாகவும் பாதுகாப்பாகவும் மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு உறுதி அளித்தார்.

இந்தக் கூட்டத்தில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக்க கலுவெவ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.டபிள்யூ.பல்லேகம, பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு