பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

“மகத்தான கலையானது இன, மத மற்றும் மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாகும். மனிதநேயமும் ஒற்றுமையுமே அதன் உண்மையான மொழியாகும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“கலாநிதி சுஜாதா அத்தநாயக்க போன்ற கலைஞர்கள் அந்த உண்மையை நமக்குக் கற்றுத் தந்தவர்கள் ஆவர்”

மகத்தான கலையானது இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என்றும், மனிதநேயமும் ஒற்றுமையுமே அதன் உண்மையான மொழியாகும் எனவும், கலாநிதி சுஜாதா அத்தநாயக்க போன்ற கலைஞர்களின் படைப்புகள் அந்த உண்மையை எனக்கு உணர்த்தியிருக்கின்றன எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவுக்காக நடத்தப்பட்ட கௌரவப் பாராட்டு விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “கலாநிதி சுஜாதா அத்தநாயக்க பிரணாம” விசேட கௌரவமளிப்பு விழா ஜூலை 28 ஆம் திகதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, நாட்டின் இசைத்துறைக்கும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி சுஜாதா அத்தநாயக்க எனும் பாடகி ஆற்றிய சேவையைப் பாராட்டி கௌரவிப்பதே இந்த விழாவின் நோக்க அமைந்தது. அத்தோடு அவரைக் கௌரவிக்கும் வகையில், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் அவருடைய புகைப்படமொன்றைத் திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர், எட்டு வயதுச் சிறுமியாக ஆரம்பமான கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவின் இசைப் பயணம் பல தலைமுறைகளின் அன்பை வென்றெடுத்த ஒரு தனித்துவமான கலைப் பயணமாக அமைந்தது எனக் கூறியதோடு, ஒரு தேசத்தின் கலாசார நினைவுகளானவை வரலாற்றுப் புத்தகங்களால் மாத்திரம் கட்டியெழுப்பப்படுவதில்லை என்றும், மாறாக, மக்களின் இதயங்களில் வாழும் படைப்புகள், ஸ்வரங்கள் மற்றும் நினைவுகள் மூலமாகவே அது கட்டியெழுப்பப்படுகின்றது என்றும் தெரிவித்தார். ஆகையினால் அத்தகைய படைப்பாளிகளே ஒரு தேசத்தின் அடையாளத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிகளாவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, அதற்குப் பாடகி கலாநிதி சுஜாதா அத்தநாயக்க சிறந்ததொரு உதாரணமாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலான காலமாக அவரது குரல் இலங்கை மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருப்பதோடு, மக்களின் சந்தோஷம், துக்கம், அன்பு, பக்தி உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் முகங்கொடுக்கும் உணர்வுகளோடு அந்தப் பாடல்கள் பின்னணியாக அமைந்தன என்பதை நினைவுகூரிய பிரதமர், "கலாநிதி சுஜாதா அத்தநாயக்க வெறும் பாடல்களை மாத்திரம் பாடவில்லை, உணர்வுகளையும் பாடினார்” எனக் குறிப்பிட்டார்.

பாடுதல் என்பது எத்தகைய ஆத்மார்த்தமான ஒரு கலை ஊடகமாகும் என்பதை கலாநிதி சுஜாதா அத்தநாயக்க தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளார் எனக் கூறிய பிரதமர், அவரது குரல் ஒருபோதும் ஒரு இனத்திற்கோ, மொழிக்கோ அல்லது ஒரு கலாசாரத்திற்கோ வரையறுக்கப்பட்டதாக இருக்கவில்லை என்பதை வலியுறுத்தினார். சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய கலாசாரப் பாடல்களைப் பாடியதன் மூலமும், பல்வேறு சமூகங்களுடனும் கலை ரீதியிலான பிணைப்புகளைக் கட்டியெழுப்பியதன் மூலமும் அவர் சகவாழ்வையும் பரஸ்பர பரிவையும் பலப்படுத்திய ஒரு கலைஞராவார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விழாவில் மேலும் உரையாற்றிய பிரதமர், ஜூலை மாதமானது நாட்டின் கடந்தகாலத்தின் பல இருண்ட நினைவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு மாதமாகும் என்பதை நினைவூட்டியதோடு, அந்தத் துன்பகரமான நினைவுகள் எதிர்கால சந்ததியினரின் மனங்களில் குரோத உணர்வுகளாக இருப்பதற்குப் பதிலாக, நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் நினைவுகளை அவர்களின் மனங்களில் விட்டுச்செல்ல நாம் முயற்சிக்க வேண்டும் எனக் கூறியதோடு, “கறுப்பு ஜூலை” என்ற அறிமுகத்திற்கு அப்பால் சென்று, ஜூலை மாதத்தை அனைத்து இலங்கையர்களையும் ஒருவரையொருவர் நெருக்கமாக நேசிக்கும் சகோதரத்துவத்தின் மாதமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“நமது கலையும் கலாசாரமும் ஒருபோதும் ஒரு தனிப்பட்ட இனத்தின் அல்லது ஒரு தனிப்பட்ட மக்கள் பிரிவின் உருவாக்கம் அல்ல. இந்த நாட்டின் பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் கலாசார மரபுகள் ஒன்று கலந்தே நமது தேசிய அடையாளம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. நமது பாடல் இதயங்களுக்கு நெருக்கமானதும், நமது சினிமா உலகத்தால் அடையாளம் காணப்பட்ட கலை ஊடகமாக மாறியதும், நடனம் உள்ளிட்ட அனைத்துக் கலை அம்சங்களும் ஈடு இணையற்ற அழகோடு மிளிர்ந்ததும் அந்தப் பன்மைத்துவத்தினாலேயே ஆகும். காலத்தால் அழியாத விலைமதிப்பற்ற படைப்புகள் பிளவுபட்டுப் பிரியும்போது உருவாவதில்லை, ஒருவரையொருவர் கரம்கோர்த்து, வேறுபாடுகளை மதித்து முன்னெடுத்துச் செல்லும்போது உருவாகின்றன. எனவே, நமது நாட்டின் எதிர்காலத்தினைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அனைவரும் ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும், ஒத்துழைப்புடனும், பரஸ்பர மரியாதையுடனும் முன்னோக்கிச் சென்றால் மாத்திரமே அது சாத்தியமாகும். அந்த உண்மையை கலாநிதி சுஜாதா அத்தநாயக்க போன்ற அதிதிறமை வாய்ந்த கலைஞர்கள் தங்களது வாழ்க்கையின் மூலம், தங்களது கலையின் மூலம், அதேபோன்று தங்களது மனிதநேயப் பிணைப்பின் மூலம் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்" என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர, கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, மூத்த கலைஞர் நவரத்ன அத்தநாயக்க உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

“நேர்மையான கலாசாரம் - தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மையான கலாசாரம் - தூய்மையான இலங்கை” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான விழிப்புணர்வுப் பட்டறை, பிரதமரின் செயலாளரின் பங்கேற்பில் ஜூலை 27 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகவுள்ள இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பும் இலக்கை அடைவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ’க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் ஒழுக்கப் பண்பாடுகளைப் பலப்படுத்துவதே இந்த விழிப்புணர்வுப் பட்டறையின் நோக்கமாகும்.

இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் வகையில் “நேர்மையான கலாசாரம் - தூய்மையான இலங்கை” எனும் தலைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நேர்மை வாரம், 2026 ஜூலை 27 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெறும். இது இந்த ஒரு வாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்ட விழாவாக அன்றி, அரச சேவையின் அடிப்படைகளை நிலையானதாக மாற்றுவதற்கான குறுகியகால, நடுத்தரகால மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்திற்கான ஆரம்பமாகும்.

இந்த விழிப்புணர்வுப் பட்டறையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்,

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நல்லாட்சி எனும் எண்ணக்கருவைப் பற்றி மீண்டும் சிந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதாகவும், ஊழல் குறித்த கண்ணோட்டக் குறியீட்டின்படி (Corruption Perceptions Index - CPI) உலகளாவிய ரீதியில் இலங்கை 14 நாடுகளை முந்திச் சென்று முன்னிலைக்கு வந்துள்ளதையும் வலியுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வுப் பட்டறை, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரதீபா சேரசிங்க அவர்களின் வளவாளர் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் பதவிநிலை அதிகாரிகள், பிரிவுகளின் பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான, 2026 ஜூலை 24 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள் பெரும்பாலும் வாய்ப்பேச்சு மற்றும் தனிநபர் தாக்குதல்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும் வலியுறுத்தினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் எதிர்கொள்ள நேரிட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது, அதேபோன்று எந்தவொரு வகையிலும் அதனை நியாயப்படுத்தவும் இயலாது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும், சம்பவத்திற்கு முன்னரும், சம்பவத்தின்போதும், அதற்குப் பின்னரும் அவரது நடத்தை மக்கள் நம்பிக்கையை மீறும் வகையில் அமைந்திருந்தது என்றும் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளைத் தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

சபையில் எழுப்பப்படும் கூச்சலினாலோ, தனிப்பட்டத் தாக்குதல்களினாலோ, குரோதத்தனமான வாசகங்களினாலோ உண்மை உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

இன்றும் இங்கு எமக்குக் கேட்க நேரிட்டிருப்பது உண்மையைத் திரிபுபடுத்துதல், தகவல்களைத் தவறாக முன்மொழிதல், அரைகுறை உண்மைகள் மற்றும் அமைச்சரவை அமைச்சரொருவர் மீது வஞ்சகத் தாக்குதலைத் தொடுத்தல் ஆகியவற்றை மாத்திரமே ஆகும். இத்தகைய விடயங்களால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நோக்கம் உறுதிப்படுத்தப்படப்போவதில்லை.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னிருந்தே சிறைச்சாலை முறைமையில் நிலவிவந்த கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்தன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டிலிருந்து சிறைச்சாலைத் திணைக்களத்தில் வெற்றிடங்கள் இருந்துவந்த போதிலும், தற்போதைய அரசாங்கமே அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் 695 சிறைச்சாலைக் காவலர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 190 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, அத்துடன் 18 உதவிச் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வெற்றிடங்களை நிரப்ப ஆரம்பிக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பலப்படுத்துவதற்காக வெற்றிடங்களை நிரப்புதல், அத்தியாவசிய உபகரணங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்தல், கொள்முதல் செயன்முறையை ஆரம்பித்தல் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

விளக்கமறியல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் அவசியம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நஞ்சு வகைகள் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் சட்டத்தைத் திருத்துவது உள்ளிட்ட சட்டச் சீர்திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அச்சீர்திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் இப்பிரச்சினைகளைப் பொருட்படுத்தவில்லை எனக் கூற இயலாது. சட்டச் சீர்திருத்தம் என்பது ஒரே இரவில் மேற்கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. அதற்குரிய நடைமுறைச் செயன்முறையொன்று இருக்கின்றது. அச்செயன்முறை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலைகளின் நிலைமையை மேம்படுத்துவதற்காகத் தற்போதைய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பிரதமர் தெளிவுபடுத்தினார். சுகாதார அமைச்சுடன் இணைந்து கைதிகளுக்கும் சிறைச்சாலை ஊழியர்களுக்குமான சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்துதல், உள்நோயாளி மற்றும் நிபுணத்துவ மருத்துவச் சேவைகளை அறிமுகப்படுத்துதல், புதிய சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகலை மேம்படுத்துதல் என்பன அவற்றுள் அடங்குகின்றன.

அத்துடன் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காகச் சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் தொழிற்பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, விடுதலையான பின்னர் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களைக் கைதிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

நீதித்துறையில் விரிவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர்,

சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்பவுமே எமக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது.

பல ஆண்டுகளாக நிலவிவந்த முறைமைசார் ஊழல், நிறுவன வினைத்திறனின்மை மற்றும் கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் காரணமாகச் சீர்குலைந்திருந்த நீதித்துறை முறைமையுடனேயே தற்போதைய அரசாங்கத்திற்குப் பணியாற்ற நேரிட்டுள்ளது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இத்தகைய ஊழல் நிறைந்த முறைமையொன்றை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. இச்சம்பவமும் கடந்த காலத்தில் சிறைச்சாலை முறைமை எவ்வாறு இயங்கியது என்ற பரந்த பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். இத்தகைய ஊழல் நிறைந்த முறைமையைக் கட்டியெழுப்பும் பொறுப்பே நீதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்காக நிறுவனத்திற்குள்ளேயே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அது இலகுவான காரியமல்ல. இருப்பினும் இந்த அரசாங்கம் அச்சவாலை ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

எதிர்க்கட்சியினர் இதுவரை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தகவலையோ அல்லது சாட்சியங்களையோ முன்வைக்கத் தவறிவிட்டனர். ஆகையினால், இது வெறுமனே வாய்ப்பேச்சு மூலமாக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் அவதூறு மட்டுமே என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இது நீதித்துறை முறைமை பற்றிய விடயம் அல்ல அரசாங்கமும் அமைச்சும் நடைமுறைப்படுத்தி வரும் சீர்திருத்தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு அரசியல் முயற்சியும், கவன ஈர்ப்பிற்கான பிரயத்தனமும் மட்டுமே ஆகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பாராளுமன்றத்தில் கூடியது.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த மாவட்டக் கழிவு முகாமைத்துவ உபகுழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஜூலை 22 , பாராளுமன்றத்தில் கூடியது.

இதன்போது, முன்னைய கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட மேல் மாகாணத்தின் நகர்ப்புறத் திண்மக் கழிவுகளை அகற்றும் வசதிகள் மற்றும் திண்மக் கழிவுகளினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் மக்களிடையே கம்போஸ்ட் குப்பைத் தொட்டிகளை உரிய முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள கொள்கைகளைச் சரிவர நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், குப்பைக் கழிவுகளைச் சரிவர அகற்றுவதற்கான பிரஜைகளின் பொறுப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார, மேல் மாகாணப் பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார, மாவட்டச் செயலக அதிகாரிகள், கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் (WMA) அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட அரசாங்க பங்களாக்களை மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாங்களைப் பயன்படுத்தாமை தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 22, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அக்கட்டிடங்களைப் பயன்படுத்தாதபோதிலும் அவை பாழடைந்து போகாமல் பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட அத்தகைய அனைத்து இடங்களையும் வணிக ரீதியிலான அல்லது ஏனைய பொதுப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், சில உத்தியோகபூர்வ பங்களாக்களில் தற்போது நீதித்துறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் நீதித்துறைச் செயன்முறையை மேலும் வினைத்திறனுடையதாக்குவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது பங்களாக்களில் வசித்து வருவதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் கூற்றுகளை முற்றாக நிராகரித்த பிரதமர், தற்போதைய அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சரும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கவில்லை என்றும், சிலர் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் மாத்திரமே வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் திட்டமிட்டபடி ஒரு துளியும் பிசகாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற போலியான தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தவறான கருத்துக்களைப் பாராளுமன்றத்தில் கேள்விகளாக எழுப்புவது பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் கவனம்

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காகப் பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech நிறுவனம், இலங்கை விமானப்படை, ஸ்ரீலங்கா டெலிகொம், டயலொக் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 21 , பாராளுமன்றத்தில் கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான டிஜிட்டல் வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையின்கீழ் நியமிக்கப்பட்ட விசேட செயலணியின் வழிகாட்டலின் கீழ், கடந்த ஆண்டில் பாடசாலைகளின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைத்தல், Smart boards, இணையவசதிகள் மற்றும் கணினிகளை வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட NEMIS (தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் அமைப்பு / National Education Management Information System) கட்டமைப்பின் HRM மொடியுலின் நான்கு மாகாணங்களுக்குரிய பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து மாகாணங்களின் தகவல்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் உள்வாங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் இடமாற்றங்களுக்கு இந்த NEMIS கட்டமைப்பு எதிர்வரும் காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஏற்கனவே சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் ஆசிரியர் இடமாற்றப் பணிகள் இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், தரவுகள் உள்ளிடப்பட்டுள்ள மனிதவள முகாமைத்துவ மொடியுலை இற்றைப்படுத்தல் பணிகளும் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்போது, பாடசாலைகளுக்கு இணையவசதிகளை வழங்குவதற்கு ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதோடு, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவ்வசதிகளை வழங்கி முடிப்பதற்கும், ஃபைபர் தொழில்நுட்பத்தின் கீழ் இணையவசதிகளை வழங்குவது நடைமுறையில் கடினமாகவுள்ள பாடசாலைகளுக்குக் கம்பியில்லா Wireless or Satellite தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்துச் சேவை வழங்குநர்களின் போட்டித்தன்மைமிக்க முன்மொழிவுகளையும் பரிசீலித்து, எதிர்கால நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்கொள்ளப்படும்.

LMS (Learning Management System) மற்றும் NEMIS (National Education Management Information System) கட்டமைப்புகளை முழுமையாகச் செயற்படுத்தி அனைத்துப் பாடசாலைகளையும் அவற்றுடன் இணைத்தல், ’ஈ-தக்சலாவ’ (e-Thaksalawa) கற்றல் தளத்தை இற்றைப்படுத்தல் மற்றும் கல்வி டிஜிட்டல்மயமாக்கலுக்காகக் கல்வி அமைச்சுக்கும் GovTech நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், டிஜிட்டல் பொருளாதார விவகாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு