பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

ஆதிவாசி மக்கள் தமது பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 12 பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆதிவாசித் தலைவர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

ஆதிவாசி மக்கள் எவ்விதத் தடங்கலுமின்றித் தமது பாரம்பரிய காணிகளை அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என்றும், அதற்காகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.

அண்மையில் ஏற்பட்ட ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதை ஆதிவாசித் தலைவர் எடுத்துரைத்தார். இதன்போது, பிரதமர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.

தம்பானை பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

ஜூன் 15 முதல் 21 வரை கொழும்பு மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ’விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீர்மானித்திருக்கின்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 12 ஆம் திகதி கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழுவின் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் அறிக்கைகளின்படி, தற்போது நாடு முழுவதும் பதிவாகியுள்ள சுமார் 39,100 டெங்கு நோயாளர்களில் 25.8% விகிதத்தினர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு மாவட்டம் ’அதி-அபாய’ மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வைரஸின் தன்மை மற்றும் அதற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் போதிய அவகாசம் பெறாமை என்பன இந்நோய் பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக, அண்மையில் நிலவிய கடும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இம்முறை டெங்கு பரவல், வீடுகளை விட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அகற்றப்படாத திண்மக் கழிவுகள் மற்றும் வடிகால் அமைப்புகள் நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 15 முதல் 21 வாரத்தில் அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகளைச் சூழவுள்ள பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கான சிரமதானங்களை ஏற்பாடு செய்தல். பிரதேச செயலகங்கள் ஊடாக அதி-அபாய வலயத்திலுள்ள வீடுகளைப் பரிசோதனை செய்தல் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிச் செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், பதாதைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் 10 ஆம் தரத்திற்குக் கீழ் உள்ள மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர் எவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் பாடசாலை அதிகாரிகளிடம் சுகாதார உத்தியோகத்தர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்திற்கு மாவட்ட அரசியல் தலைமைத்துவம், சர்வமதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய ’சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ​

2026 ஜூன் 11 இடம்பெற்ற, புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கலாசாரப் பரிமாற்றம், கல்வி, தொழில்சார் பயிற்சி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய மையமாகச் செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

நிகழ்வின்போது, சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதைக் குறிக்கும் நினைவுப் பலகையை பிரதமர் திரைநீக்கம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா ஆகியோரின் முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சிற்கும் சசகாவா அமைதி அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு நீண்டகால கலாசார மற்றும் ஆன்மீகத் தொடர்புகளால் செழுமையடைந்திருக்கின்றது. இயற்கை, கலாசாரம், கல்வி மற்றும் சமூக விழுமியங்களை மதிப்பதில் இரு நாட்டு மக்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றனர்.

ஜப்பானிய மொழிக் கல்வியை மேம்படுத்துவதிலும், இலங்கை-ஜப்பான் மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும் சசகாவா நிலையம் ஆற்றி வரும் பணி அளப்பரியது. புதிய நிலையம் கலாசாரப் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பிற்கான ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது.

உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவும் இக்காலகட்டத்தில்,பரஸ்பர மரியாதை மற்றும் சமாதானத்திற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டுறவானது முன்னெப்போதையும் விட மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அமைதி, செழுமை மற்றும் மானிட கௌரவத்தை ஊக்குவிக்கும் சர்வதேச ஒழுங்கிற்காகவும், சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து உறுதிபூண்டிருக்கின்றன, எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் அக்கியோ இசொமடா, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, ஜப்பான் நிப்பான் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் யோஹேய் சசகாவா , சசகாவா நிலைய அறக்கட்டளையின் தலைவர் பிரேமலால் பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளும் கௌரவ அதிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தலை அறிமுகப்படுத்துகின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே, வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொடவிதான எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, பிரதமர் ஜூன் மாதம்10ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபையின் 2025/2030 புதுப்பிக்கத்தக்க அபிவிருத்தித் திட்டத்திற்கமைய, காற்றுச் சக்தி மூலம் 1264 மெகாவோட் மற்றும் சூரிய சக்தி மூலம் 2071 மெகாவோட் என பல்வேறு கொள்முதல் முறைகளின் கீழ் தேசிய கட்டமைப்பில் உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உள்வாங்குவதற்காகத் தேசிய மின்சாரப் பரிமாற்ற மற்றும் விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான நடவடிக்கையாக, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய வலுசக்தி சேமிப்பு முறைமைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது உபயோகத்தில் இருக்கின்ற நீர்மின் நிலையங்களின் நிறுவப்பட்ட கொள்ளளவை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

’திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பாடசாலைகளின் நிலை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தோட்டப் புறப் பாடசாலை மாணவர்களின் 13 வருட இடைவிடா கல்வி மற்றும் தமிழ் மொழி மூலமான தொழில் கல்வி ஆகியவற்றின் மீது அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது

’திட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த ஒவ்வொரு பாடசாலையின் தற்போதைய நிலை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உத்தியோகத்தர்களுக்குப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார்.

தோட்டப் புறப் பாடசாலைகள் தொடர்பில் ஜூன் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

’திட்வா’ சூறாவளியால் தோட்டப் புறப் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணி தொடர்பான பிரச்சினைகள், ஆசிரியர் வெற்றிடங்கள், பாடசாலை அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாணப் பணிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சூறாவளியினால் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த மற்றும் இடம்பெயர வேண்டியுள்ள பாடசாலைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சூறாவளியின் பின்னர் மாகாண சபைகள் ஊடாகப் பல்வேறு தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. அமைச்சின் அதிகாரிகள் இது குறித்து விழிப்புடன் செயற்பட்டு துல்லியமான தரவுகளைச் சேகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை வேறு பாடசாலைகளில் இணைத்தவுடன் அனைத்தையும் முடித்துவிட்டதாகக் கருத இயலாது. அந்த மாணவர்கள் முறையாகப் பாடசாலைக்கு வருகை தருகிறார்களா, கல்வி கற்கின்றார்களா மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன என்பது குறித்துப் பின்தொடர் கண்காணிப்பு அவசியம்.

சில பாடசாலைகளில் மாணவர்கள் இணைக்கப்பட்டாலும் அவர்கள் அங்கு செல்லவில்லை என அறியக்கிடைக்கிறது. அப்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியுங்கள். அதேபோல் தற்காலிகப் பாடசாலைகளை அமைப்பதிலும் விரைவாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தோட்டப் புறப் பாடசாலைகளுக்கென பிரத்தியேகமான உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களுடன் ஒருங்கிணைந்து துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சபை அதிகாரிகளை இதன்போது முறையாக ஒருங்கிணைக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நீங்களும் இந்த விடயங்களில் தலையிட வேண்டும்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் புதிய தமிழ் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இம்முறை இடம்பெறும் ஆசிரியர் ஆட்சேர்ப்பின் போது, மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நியமனம் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்.

தோட்டப் புறப் பாடசாலை மாணவர்களின் 13 வருட இடைவிடா கல்வியை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மொழி மூலமான தொழில் கல்வி குறித்தும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது, எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர்களான மதுர செனவிரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

’திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் விரிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகம், குறு, சிறு நடுத்தர மற்றும் பெரும் அளவிலான தொழில்முயற்சியாளர்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் விரிவான நிவாரண வேலைத்திட்டமொன்று முன்னெடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’திட்வா’ அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஜூன் 09 ஆம் திகதி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கடல் மற்றும் நன்னீர் மீனவர்களுக்காக விசேட நிவாரணங்களை வழங்க மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முற்றாகச் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளுக்குப் பதிலாகப் புதிய படகுகளை வழங்கவும், பகுதியளவில் சேதமடைந்த படகுகளைத் திருத்திக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடைய மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி வலைகளை வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்வாவினால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, வருடாந்தம் 3% சலுகை வட்டி விகிதத்திலான கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைக் கொண்ட இந்த வேலைத்திட்டம் 15 வங்கிகள் ஊடாகச் செயற்படுத்தப்படுகிறது. 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி வரை, 2,800 தொழில்முயற்சியாளர்களுக்கு 3,812 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலை விரைவாகச் செயற்படுத்துவதற்காக 6 மாத கால சலுகைக் காலத்துடன், அதிகபட்சம் 3 வருட மீளச் செலுத்தும் காலமும் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த தொழில் சூறாவளிக்கு முன்னரும் இயங்கிக் கொண்டிருந்தது என்பதையும், பாதிப்புக்குள்ளானது என்பதையும் உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரை கட்டாயமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனையின்படி, அனுமதிப் பெற்ற வங்கிகள் ஊடாக 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை கடன் மீளச் செலுத்துதலை இடைநிறுத்தவும், தண்டனை வட்டி அறவிடப்படாமலிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகள், உரிய அமைச்சுக்களின் சுற்றறிக்கைகள் மற்றும் அனர்த்த நிவாரண வழிகாட்டுதல்களுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் ஊடகப் பிரிவு