பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகள், பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவே தொழில்சார் ஆலோசனைகளை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கத் தாம் எதிர்பார்ப்பதாகவும், விவசாயம், கட்டுமானத்துறை, மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு, அந்தந்த தொழில்சார் சங்கங்களின் ஊடாக முன்கூட்டிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் (Pre-advice) வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த OPA நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் தொழில்சார் மட்டத்தை மேம்படுத்துவதற்கும் தேசிய அபிவிருத்திக்குமாக தொழில்சார் வல்லுநர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், நாட்டினுள் தொழில்சார் தகைமையினையும் தேசிய பணியினையும் மேலோங்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர், உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறிமுறை - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் புதிய சுற்றறிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும்!

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்தல் அல்லது கட்டுப்படுத்தல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு, சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான புதிய தேசிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், 2027ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதைப் புதிய சுற்றறிக்கைக்கு அமைய மேற்கொவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, சண்முகம் குகதாசன், அஜந்த கம்மெத்தகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிலுஷா லக்மாலி கமகே ஆகியோரால் பாராளுமன்ற சபையில் எழுப்பப்பட்ட வாய்மூல வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே, ஜூன் 08, பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

16 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகப் பயன்பாட்டினால் எதிர்கொள்ளும் மனரீதியான, சுகாதார ரீதியான மற்றும் சமூக ரீதியான தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களை டிஜிட்டல் தளத்தில் பாதுகாப்பதற்கான கொள்கையொன்று தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கள், இலங்கை பொலிஸ், இலங்கை கணினி அவசர பதில் பிரிவு (SLCERT), தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து முதற்கட்டக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இதன் முற்போக்கான நகர்வாக, பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக தேசிய வழிகாட்டல் கோவையொன்றைத் தயாரிப்பதற்கும், ’Brain Health’ (மூளை ஆரோக்கியம்) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்டத்திலான கலந்துரையாடலொன்றை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இணையவழி மூலமாக பிள்ளைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ’வேர்ல்ட் விஷன்’ (World Vision) நிறுவனத்துடன் இணைந்து திட்டமொன்றைத் தயாரித்துள்ளதோடு, அதற்காக (UNICEF) அபிவிருத்தி நிதியத்தின் நிதி அனுசரரணையைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, யுனிசெப் (UNICEF) அமைப்பின் ஒத்துழைப்போடு ஆசிரியர்களுக்கான டிஜிட்டல் திறன் கட்டமைப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள Online Safety மொடியுளின் கீழ் சுமார் 750 பயிற்றுவிப்பாளர்கள் ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 106 தொலைக்கல்வி நிலையங்கள் ஊடாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், பாடசாலை மாணவர்களுக்கான ’Online Safety, Cyber Security மற்றும் Digital Well-being’ வழிகாட்டல் கோவை 2026 செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக குடும்பங்களை வலுவூட்டும் முன்னோடித் திட்டமொன்றும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துமிந்த குருகே தன்னிச்சையாகத் தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி வருகின்றார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையும் காலப்பகுதிக்குள், பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக அமைச்சரவை தீர்மானங்களுக்கு இணங்க, பல நிறுவனங்களின் பங்களிப்புடன் பன்முகக் கூட்டுப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். இப்பொறிமுறையின் கீழ், ’திவியட சவியக்’ திட்டத்தின் மூலம் அநாதரவான பிள்ளைகளுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் வழங்குவததோடு, ’அர்த்த’ திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த அநாதரவானப் பிள்ளைகளுக்காக மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி வருகின்றோம்.

இதற்கு மேலதிகமாக, பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத பிள்ளைகளுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுத்தல், பாடசாலை நேரத்தின் பின்னர் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகும் பிள்ளைகளுக்காக ரத்மலானை பிரதேசத்தை மையமாகக் கொண்டு “செனெஹச” எனும் பெயரில் பரீட்சார்த்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல், உடல் ரீதியான தண்டனைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் 2025-2029 தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பிள்ளைகள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் சாட்சியமளிக்கக் கூடிய வகையில், இரண்டு வீடியோ சாட்சியப் பதிவு மையங்கள் கராப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் நிறுவும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் போது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, 2027ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதத்திலான புள்ளிக் கட்டமைப்பை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக, 08 வருடங்களுக்கும் மேலாக அரசாங்கக் காணியொன்றில் வசித்து வரும் தரப்பினருக்கும், அதேபோல் 01 முதல் 06 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்தும் மின்சாரம், நீர் அல்லது மதிப்பீட்டு வரிப் பில்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 04 புள்ளிகள் வரை கிடைக்கும் வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் காத்திருப்புப் பட்டியலுக்குப் (Waitlist) புறம்பாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 50 வீத எல்லைக்குள் தற்காலிகக் காத்திருப்புப் பட்டியலைத் தயாரிக்குமாறு புதிய சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம், தேசிய அல்லது மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் பூர்வாங்க அனுமதியுடன் அதனை 100 வீதம் வரை திருத்தியமைக்க முடியும். அத்துடன், கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வகுப்பறையொன்றில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை குறித்து தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் அதற்குரிய கொள்கை ரீதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

திருகோணமலை மாவட்டத்தில் நெற்செய்கையை மேம்படுத்துவதற்காகக் கைவிடப்பட்டுள்ள குளங்களை மீண்டும் பயன்படுத்துதல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

2021ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, அம் மாவட்டத்தில் கைவிடப்பட்டிருந்த 210 குளங்களில் 15 குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டிருக்கின்றன, எஞ்சிய 195 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. அதேபோன்று, கைவிடப்பட்டிருந்த 25 அணைக்கட்டுகளில் 08 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 17 அணைகள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. இக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்புப் பணிகள் தாமதமடைவதற்குக் பிரதான காரணம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் இருந்துவந்த காணிகள், கமநல அபிவிருத்தித் திணைக்களத்திடம் கையளிக்காமையும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையினாலுமே ஆகும். எதிர்காலத்தில் இப்பிரச்சினைகளைத் தீர்த்து, விவசாய நடவடிக்கைகளுக்காக இக்குளங்களை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லைகளுக்குள் அமைந்திருந்தமையால் விவசாயிகளினால் பயன்படுத்த இயலாதிருந்த 195 குளங்களையும் 17 அணைகளையும் விடுவித்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்கு உரிய பிரதேச செயலகங்கள் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 33,563 ஏக்கர் நிலப்பரப்பிலும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 31,627 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைந்துள்ள கடற்படைத் தளப்பகுதி, பெரிய சோபர், சிறிய சோபர், சேருவில அல்லாய், திரிகோணமடு மற்றும் புறாத் தீவு போன்ற பழைய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பரிசோதிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு வசித்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கோ அல்லது மாற்றுக் காணிகளை வழங்குவதற்கோ நிலையான காணி நிர்வாக வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் காணி விடுவிப்புச் செயற்பாட்டின் ஊடாக, அக் காணிகளை விவசாய மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களங்களின் ஊடாக நெற்செய்கைக்குப் பொருத்தமான வகையில் சீரமைத்து மக்களிடம் ஒப்படைப்பதன் மூலம், நாட்டின் அரிசி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிள்ளைகளை புதிய தொழினுட்பத்தாலும் அறிவாலும் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் என்ற வகையில் நாம் நிறைவேற்றுவோம் -

உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்க்கக்கூடிய திறமைமிக்கவர்களே நமது பிள்ளைகள் என்றும், அவர்களை புதிய தொழினுட்பத்தாலும் அறிவாலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பலாங்கொடை வித்யாலோக வித்தியாலயத்தில் ஜூலை 04ஆம் திகதி நடைபெற்ற ’அருமெசிய’ கண்காட்சியைத் திறந்து வைத்தல் மற்றும் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

வித்யாலோக வித்தியாலய மாணவர்களின் புத்தாக்கங்கள் மற்றும் திறமைகளை உள்ளடக்கிய இக்கண்காட்சியைத் திறந்து வைத்த பிரதமர், அவர்களின் திறமைகளைப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

எமது நாட்டின் முதலாவது பெண் பிரதமர் கல்வி கற்ற பலாங்கொடை வித்யாலோக மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் நடைபெறும் இந்த விசேட விழாவில் கலந்துகொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வித்தியாலய மாணவச் செல்வங்களின் அரிய படைப்புகள் மற்றும் புத்தாக்கங்களை உள்ளடக்கிய கண்காட்சியை நான் பார்வையிட்டேன். வெறும் பாடப்புத்தகங்களுக்குள் மாத்திரம் முடங்கிவிடாமல், உலகை ஆக்கப்பூர்வமாகவும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும் பார்க்கக்கூடிய திறமையான பிள்ளைகள் நம்மிடம் உள்ளனர் என்பதை நான் அங்கு கண்டுகொண்டேன்.

மனப்பாடம் செய்யும் பரீட்சை மையக் கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறைச் சாத்தியமான, திறன்கள் நிறைந்த புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையொன்றை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வருகின்றோம். இதன் கீழ், வரவிருக்கும் 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கான அனைத்து முதற்கட்ட ஆயத்தங்களையும் தற்போது திட்டமிட்ட படி நாம் மிக நேர்த்தியாக நிறைவு செய்து வருகின்றோம்.

பாடசாலையை விட்டு பொது உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளுக்குப் பொருத்தமான, தொழில் சந்தையில் அதிக தேவையுள்ள தொழினுட்ப, தொழிற்பயிற்சியை வழங்குவதே எமது இன்றியமையாத இலக்காகும். பல்கலைக்கழகக் கல்வியைப் போன்றே, தொழிற்கல்வியும் சமமான மதிப்பும் அந்தஸ்தும் கொண்ட ஒரு துறையாக நாம் மாற்றி அமைப்போம்.

இறுதியாக, இக்கண்காட்சியை ஏற்பாடு செய்த பலாங்கொடை வித்யாலோக மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமிற்கும், இக்கண்காட்சியை வெற்றிகரமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அன்பு மாணவச் செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, பலாங்கொடை நகர முதல்வர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், வித்யாலோக மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் அபிவிருத்திப் பயணத்திற்கு கொழும்புத் திட்டம் அமைப்பினால் வழங்கப்பட்ட பங்களிப்பு பாராட்டத்தக்கது

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 03ஆம் திகதி கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய தமது பயணத்தில், மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்திலேயே, அதாவது இதற்கு 75 வருடங்களுக்கு முன்னரே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தை எமது நாட்டின் ’கொழும்பு’ என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படுவதும், அதற்கான உபசரிப்பை வழங்கக் கிடைத்தமையும் ஒரு நாடு என்ற வகையில் எமக்கு பெருமை சேர்க்கின்றது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், நிலையான போக்குவரத்து முறைமைகள் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலி வலையமைப்புகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் தற்போதைய பின்னணியில், கொழும்புத் திட்டத்தின் கீழ் இந்நாட்டின் வலுசக்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகால முதலீடுகள், இன்றும் இலங்கையின் அபிவிருத்தியின் அடித்தளத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன.

அதேபோன்று, குறிப்பாக, இளைஞர்கள், பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக, கொழும்புத் திட்டத்தின் ’போதைப்பொருள் ஆலோசனை நிகழ்ச்சி’ (DAP) ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கதாகும். ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கம் பொதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதற்காகக் கொழும்புத் திட்டம் வழங்கும் ஒத்துழைப்பை நாம் பாராட்ட வேண்டும்.

தொழினுட்ப மாற்றங்கள், காலநிலை சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்குகள் காரணமாக இன்றைய உலகம் 1951ஆம் ஆண்டை விட மிகவும் வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது. இச்சூழலில், கொழும்புத் திட்டம் போன்ற பிராந்திய அமைப்புகளின் பங்களிப்பு தற்காலத்திற்கு ஏற்றவாறு மேலும் விரிவானதாகவும் நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும் அமைய வேண்டும். அத்துடன், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிய தலைமுறையினரிடையே சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பை எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கடந்த நான்கு வருடங்களாக கொழும்புத் திட்டம் அமைப்பின் பொதுச்செயலாளராக குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி விடைபெறும் கலாநிதி பெஞ்சமின் பி. ரெய்ஸ் அவர்களுக்கு இதன்போது விசேட பாராட்டு வழங்கப்பட்டதோடு, கொழும்புத் திட்டத்தின் புதிய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சூளாமி சார்ட்சுவான் (H.E. Chulamee Chartsuwan) அவர்களும் இதன்போது அன்போடு வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விசேட நினைவு முத்திரையும், “Colombo Plan 75 Years – 75 Stories” எனும் விசேட நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான வியட்நாம் தூதுவரும் கொழும்புத் திட்டம் அமைப்பின் பேரவைத் தலைவியுமான த்ரின் தி டாம் (Trinh Thi Tam) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர், கலாநிதி சிறி வோல்ட் (H.E. Dr. Siri Walt) அவர்கள், 2026 ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதற்காக, அவர் தனது பதவிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து, விசேடமாக தொழினுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் துறையில் நிலவும் தொழிலாளர் சந்தை தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இளைஞர், யுவதிகளின் திறன்களை மேம்படுத்தக்கூடிய தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கைத்தொழில் துறையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கல்வியை பலப்படுத்துவதன் மூலம், உழைக்கும் சக்தியின் திறன்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும் என தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, இருதரப்பு நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் தமது கவனத்தைச் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Justine Boillat), குடியேற்ற விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Andrea Kienast), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இத்தூதுக்குழுவினர் பிரதமருக்கு விளக்கமளித்ததோடு, பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது சுயாதீன சட்டரீதியான நிறுவனம் இந்த தேசிய மகளிர் ஆணைக்குழுவாகும் என்பதை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஆணைக்குழு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியதோடு, இலங்கையில் பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் ஆகியன தொடர்பில் ஆணைக்குழு முன்னின்று உழைப்பதைப் பாராட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம், ஆணையாளர்களான ஜெயந்தி குருஉதும்பால, ஜனஹா செல்வராஜ், கலாநிதி பத்மா குணரத்ன, எம்.யு. கயானி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.டி.ஆர். ஒல்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு