பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமரின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பரஸ்பர உறவுகளின் புதிய மறுமலர்ச்சியாகும்.

குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, சுப நேரத்தில் சுப காரியங்களை ஆரம்பித்து இந்தப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக இது அமைய வேண்டும் என முதலில் பிரார்த்திக்கின்றேன்.

ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட குணாம்சமாகும். பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், ஒரு குடும்பமாகவும் ஒரு நாடாகவும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு இக்காலப்பகுதி எமக்கு ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்குகின்றது.

மனப் பேதங்களையும் கசப்புணர்வுகளையும் களைந்து, சகோதரத்துவத்துடனும் சிநேகத்துடனும் ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதே புத்தாண்டின் உண்மையான ஆசீர்வாதமாகும். குறிப்பாக, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் ஒரு தேசமாக நாம் பல்வேறு இயற்கை மற்றும் பொருளாதாரச் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட விதம் முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாகும். அந்தக் கூட்டுச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்தச் சுப வேளையில், வெளிநாடுகளில் தமது குடும்பத்தினதும் தேசத்தினதும் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நமது சகோதர சகோதரிகள் அனைவரையும் நான் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூருகின்றேன். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

எதிர்கொள்ள நேரிடும் எல்லாவித தடைகளையும் வென்று, இன்னும் சிறப்பானதும் சுபீட்சமானதுமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் புதிய சிந்தனைகளுடன் திடசங்கற்பம் பூணுவோம். ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக, உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியும் உதயமாகும் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் அயராது உழைப்போம்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.

நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையத்தைப் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்

பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை உறுதிப்படுத்தப்படும்

ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும், பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மத்திய பஸ் நிலையம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, ஏப்ரல் 08 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான, வசதியான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

மறுசீரமைப்புப் பணிகளின் போது பெண்களின் வசதிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தமையைப் பிரதமர் இதன்போது பாராட்டினார். குறிப்பாக, தூர இடங்களிலிருந்து வருகை தரும் பாலூட்டும் தாய்மார்களுக்காக, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஓய்வறை பிரதமரின் விசேட பாராட்டைப் பெற்றது.

பயணிகளுக்கான ஆசன ஒதுக்கீடு முறைகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பஸ் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு அறை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது, பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடிய பிரதமர், நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் போக்குவரத்துச் சேவையின் தரம் குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பொதுமக்கள் கௌரவமான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான சேவையாகவும் மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என இதன்போது பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திற்கு நவீனமயமாக்கும் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

கோட்டை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் பணிகளுக்காக 2,162 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று ஏப்ரல் 09, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த "புகையிரத வினைத்திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக", ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதிப் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2,162 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி முதலீடு செய்யப்படவுள்ளது.

அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக, தினசரி புகையிரதச் சேவையைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக,

பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக நவீன தானியக்க பயணச்சீட்டு வழங்கல் முறைமைகளை அறிமுகப்படுத்துதல். விசேட தேவையுடையோர் மற்றும் முதியோர் தடையின்றிப் பயணிக்கும் வகையில் நவீன மின்தூக்கிகள் மற்றும் மேம்பாலக் கட்டமைப்புகளை நிர்மாணித்தல். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கட்டடத் தொகுதிகள் மற்றும் உயர்தரத்திலான சுகாதார வசதிகளை நிறுவுதல் ஆகியன உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இத்திட்டம் பூர்த்தி செய்யப்படும்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பயணிகளை மையப்படுத்திய, வினைத்திறனான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரதான போக்குவரத்து மையமாக மாற்றமடையும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

அபிவிருத்தியடைந்த பொதுப் போக்குவரத்து இல்லாத ஒரு நாட்டை, அபிவிருத்தியடைந்த நாடாகக் கருத முடியாது. எமது கொள்கையின் நோக்கம் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாகவும் கௌரவமாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான போக்குவரத்து கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர்களான பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர, கொழும்பு பிரதி முதல்வர் ஹேமந்த வீரசிங்க ஆகியோரும் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட அமைச்சு மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி

கிறிஸ்தவப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும், இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூருகின்ற இந்த உன்னதமான ஈஸ்டர் தினம், உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் இறை ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈஸ்டர் திருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

மரணத்தின் பின்னர் உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் உலகிற்கு வழங்கிய செய்தி யாதெனில், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் வெற்றியடைய முடியும் என்பதாகும்.

நமது வாழ்விலும் பல்வேறு சவால்கள், துன்பங்கள் மற்றும் தடைகள் ஏற்படுவது இயல்பானதே. இருப்பினும், எந்தவொரு இருண்ட இரவும் நிரந்தரமானதல்ல என்பதையும், ஒவ்வொரு சவாலுக்குப் பின்னாலும் நம்பிக்கையின் விடியல் பிறக்கும் என்பதையும் ஈஸ்டர் செய்தி எமக்கு நினைவூட்டுகின்றது. வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் இது எம்மை ஊக்குவிக்கின்றது.

ஈஸ்டர் தினக் கொண்டாட்டங்களை நாம் வெகு விமர்சையாக முன்னெடுத்த போதிலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் துரதிர்ஷ்டவசமான போர்ச் சூழலினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. வெறுப்பு மற்றும் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வும் மேலோங்கிய, போர் அச்சம் நீங்கிய அமைதியானதொரு உலகம் உதயமாக வேண்டும் என இந்தப் புனிதமான ஈஸ்டர் நாளில் நான் பிரார்த்திக்கின்றேன்.

கிறிஸ்து பெருமான் போதித்த அன்பு மற்றும் அமைதி ஆகிய பண்புகளை முன்னிலைப்படுத்தி, எமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னதப் பண்புகளால் போஷித்துக்கொள்வோமாக. அனைத்துப் பேதங்களையும் களைந்து, சகோதரத்துவமும் சமாதானமும் மிக்க ஒரே மனிதக் குடும்பமாக இலங்கையைக் கட்டியெழுப்பக் கைகோத்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
ஏப்ரல் 5, 2026

​நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட ’Silver Age Center’ முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

​அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும், உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

​அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும், முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க வேண்டும் எனவும், அது அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் பொறுப்பாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

​நவீன வசதிகளுடன் கதிர்காமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ’Silver Age Center’ முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ’Zoom’ ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு மார்ச் 31ஆம் திகதி செத்சிரிபாய புதிய கட்டடத்தில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது, முதியோர்களுக்கான நிறுவன ரீதியான பராமரிப்பை வழங்கும் நிலையங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கட்டளைகள் மற்றும் வழிகாட்டல் வரைபினை, முதியோர்களுக்கான தேசிய சபையின் பிரதிநிதிகள் பிரதமரிடம் கையளித்தனர்.

​அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அந்தத் திட்டத்தை நாம் மீண்டும் ஆரம்பித்து இன்று மக்கள் பாவனைக்காகக் கையளிக்கின்றோம்.

எமது கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, அனைவருக்கும் பாதுகாப்பான, உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் அந்த உரிமை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்.

சனத்தொகையின் அடிப்படையில், எமது நாட்டில் பெருமளவிலானோர் மிக வேகமாக முதியவர்களாக மாறி வருகின்றனர். ஆயினும் 60 வயது என்பது சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கக்கூடிய ஒரு சுறுசுறுப்பான வயதெல்லை ஆகும். அவர்கள் முதியவர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கும் பல்வேறு தேவைகள் இருக்கவே செய்கின்றன. திறமையும் அனுபவமும் மிக்க அவர்களாலும் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடியும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதியோர்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தகைய நிறுவனங்களை முறையாகப் பராமரிப்பது ஒரு சமூகப் பொறுப்பாகும். குடும்பத்தினரோடு சுதந்திரமாகவும், பல்வேறு நிறுவனங்களுக்குள்ளும் வாழும் அனைத்து முதியோர்களுக்கும் பாதுகாப்பையும் தேவையான சேவையையும் வழங்கி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிக அவசியமானதாகும்.

முதியோர்களுக்கான ஆரோக்கியம், போக்குவரத்து, முதியோர் கல்வி, சுதந்திரம், மகிழ்ச்சி போன்றே அவர்களின் உரிமைகள் மற்றும் ஆன்மீக நல்வாழ்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வழக்கமான ’முதியோர் இல்லம்’ என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகி, முதியோர்களின் தேவைகளுக்கேற்ப சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நிறுவனங்களாக, அவர்கள் தமது அந்திமக் காலத்தைக் கௌரவமாகக் கழிக்கக் கூடிய வகையில் இந்நிலையங்களைப் பராமரிப்பது அவசியமாகும், என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

​வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் ’Silver Age Center’ முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க உள்ளிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் பிரதமருடன் இணையவழிக் கூடாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு

சிக்கலான உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ’டிட்வா’ சூறாவளியின் பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும்

சிக்கலான உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் மார்ச் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பு முகாம்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சுருக்கமான அறிக்கையை, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான திரு. பிரபாத் சந்திரகீர்த்தி பிரதமரிடம் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, சூறாவளியினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையற்ற மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

2025ஆம் ஆண்டு ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியினால் விளைந்த சேதங்களைச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுக்களினதும் உபகுழுக்களினதும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 20,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கவும், பகுதியளவில் சேதமடைந்த 1,15,000 வீடுகளைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சமூகத்தினரின், குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையோரின் உடல், உள மற்றும் சமூக நலன்கள் குறித்துச் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் விசேட குழுக்கள் ஊடாகத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும்போது, மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நகர்ப்புற பொது வசதிகளைக் கொண்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதன் அவசியத்தையும், மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படாத பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்வதன் தேவையையும், பொதுமக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹவத்த, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.சி. தர்மதிலக, சிவில் சமூகப் பிரதிநிதிகளான ரோஹண ஹெட்டியாரச்சி, கௌதமன் பாலவன் உட்பட 33 சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு