பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் அபிவிருத்திப் பயணத்திற்கு கொழும்புத் திட்டம் அமைப்பினால் வழங்கப்பட்ட பங்களிப்பு பாராட்டத்தக்கது

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 03ஆம் திகதி கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய தமது பயணத்தில், மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்திலேயே, அதாவது இதற்கு 75 வருடங்களுக்கு முன்னரே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தை எமது நாட்டின் ’கொழும்பு’ என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படுவதும், அதற்கான உபசரிப்பை வழங்கக் கிடைத்தமையும் ஒரு நாடு என்ற வகையில் எமக்கு பெருமை சேர்க்கின்றது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், நிலையான போக்குவரத்து முறைமைகள் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலி வலையமைப்புகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் தற்போதைய பின்னணியில், கொழும்புத் திட்டத்தின் கீழ் இந்நாட்டின் வலுசக்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகால முதலீடுகள், இன்றும் இலங்கையின் அபிவிருத்தியின் அடித்தளத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன.

அதேபோன்று, குறிப்பாக, இளைஞர்கள், பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக, கொழும்புத் திட்டத்தின் ’போதைப்பொருள் ஆலோசனை நிகழ்ச்சி’ (DAP) ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கதாகும். ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கம் பொதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதற்காகக் கொழும்புத் திட்டம் வழங்கும் ஒத்துழைப்பை நாம் பாராட்ட வேண்டும்.

தொழினுட்ப மாற்றங்கள், காலநிலை சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்குகள் காரணமாக இன்றைய உலகம் 1951ஆம் ஆண்டை விட மிகவும் வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது. இச்சூழலில், கொழும்புத் திட்டம் போன்ற பிராந்திய அமைப்புகளின் பங்களிப்பு தற்காலத்திற்கு ஏற்றவாறு மேலும் விரிவானதாகவும் நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும் அமைய வேண்டும். அத்துடன், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிய தலைமுறையினரிடையே சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பை எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கடந்த நான்கு வருடங்களாக கொழும்புத் திட்டம் அமைப்பின் பொதுச்செயலாளராக குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி விடைபெறும் கலாநிதி பெஞ்சமின் பி. ரெய்ஸ் அவர்களுக்கு இதன்போது விசேட பாராட்டு வழங்கப்பட்டதோடு, கொழும்புத் திட்டத்தின் புதிய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சூளாமி சார்ட்சுவான் (H.E. Chulamee Chartsuwan) அவர்களும் இதன்போது அன்போடு வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விசேட நினைவு முத்திரையும், “Colombo Plan 75 Years – 75 Stories” எனும் விசேட நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான வியட்நாம் தூதுவரும் கொழும்புத் திட்டம் அமைப்பின் பேரவைத் தலைவியுமான த்ரின் தி டாம் (Trinh Thi Tam) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கைக்கான தமது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சுவிட்சர்லாந்து தூதுவர், கலாநிதி சிறி வோல்ட் (H.E. Dr. Siri Walt) அவர்கள், 2026 ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதற்காக, அவர் தனது பதவிக்காலத்தில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து, விசேடமாக தொழினுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் துறையில் நிலவும் தொழிலாளர் சந்தை தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இளைஞர், யுவதிகளின் திறன்களை மேம்படுத்தக்கூடிய தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கைத்தொழில் துறையின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கல்வியை பலப்படுத்துவதன் மூலம், உழைக்கும் சக்தியின் திறன்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மற்றும் இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும் என தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, இருதரப்பு நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் தமது கவனத்தைச் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Justine Boillat), குடியேற்ற விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் Andrea Kienast), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூலை 03ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இத்தூதுக்குழுவினர் பிரதமருக்கு விளக்கமளித்ததோடு, பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது சுயாதீன சட்டரீதியான நிறுவனம் இந்த தேசிய மகளிர் ஆணைக்குழுவாகும் என்பதை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஆணைக்குழு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியதோடு, இலங்கையில் பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் ஆகியன தொடர்பில் ஆணைக்குழு முன்னின்று உழைப்பதைப் பாராட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம், ஆணையாளர்களான ஜெயந்தி குருஉதும்பால, ஜனஹா செல்வராஜ், கலாநிதி பத்மா குணரத்ன, எம்.யு. கயானி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.டி.ஆர். ஒல்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

"டிஜிட்டல் மயமாக்கல்" மூலமாக அரச சேவைகளை மிகுந்த வினைத்திறனும், வெளிப்படைத்தன்மையும் மிக்க இலகுவான முறையில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அரச நிறுவனங்களில் வங்கி அட்டைகள் (POS இயந்திரங்கள்) மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு, ஜூலை 02, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பதிவாளர் பிரிவு மற்றும் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரப் பிரிவு ஆகியவற்றில் POS இயந்திரங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர், அடையாள நிமித்தமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கை வங்கியின் (BOC) நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக, மக்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும் சந்தர்ப்பங்களில் கிரெடிட் (Credit) மற்றும் டெபிட் (Debit) அட்டைகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் பணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

தற்போதைய உலகில் வேகமாக இடம்பெற்று வரும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப இலங்கையின் அரச துறையை நவீனமயப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், இந்த முறையின் மூலம், சேவை பெறுநர்கள் பணத்தை எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், மிகக் குறுகிய காலத்திற்குள் தமக்குத் தேவையான சேவைகளை வினைத்திறனாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய POS கட்டண முறையினால் மக்கள் பெறக்கூடிய நன்மைகளாக,

பண நோட்டுக்களை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமின்றி, வங்கி அட்டைகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு. பரிவர்த்தனைகளை மிக விரைவாக முடிக்க முடிவதால், மக்கள் சேவை பெறுவதற்குச் செலவாகும் நேரம் குறைதல். பெரும் தொகைப் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாததால், பண மோசடிகள் மற்றும் பணம் காணாமல் போகும் அபாயங்கள் குறைதல். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்குத் தாராளமாகப் பங்களிப்புச் செய்தல். அனைத்து பரிவர்த்தனைகளையும் கணக்காய்வு செய்வதற்கு வசதியாகக் கிடைப்பதனால், அரசாங்க வருமானம் சரியாகப் பதிவு செய்யப்படுதல்.

இன்று முதல் கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இந்த வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் சேவை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இலங்கையின் அரச சேவையில் நிதி நிர்வாகம் மிகவும் வெளிப்படையான அதே நேரத்தில் மக்கள் நேயமிக்கதாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, மேல் மாகாண பிரதம செயலாளர் கே. பி. பிரதீப் யசபாலன, கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட பதிவாளர் நாயகம், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், திணைக்களத் தலைவர்கள், மேலதிக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பிரஜையினதும் மொழி உரிமைக்கும் மதிப்பளிக்கும், சமத்துவத்தைப் பாதுகாக்கும், பன்முகத்தன்மையை ஒரு சக்தியாக மாற்றியமைக்கும் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் வாரத்திற்குச் சமாந்தரமாக நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஜூலை 01 முதல் 05 ஆம் திகதி வரை நடைபெறும் அரச கரும மொழிகள் வாரத்தின் ’பாடசாலை தினத்திற்கு’ அமைவாக, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப் போட்டியின் நிறைவு விழா, ஜூலை 02, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், "அரச கரும மொழிக் கொள்கை மற்றும் அதன் பயன்பாட்டின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்ற விவாதப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலைக் குழுக்களுக்கு பிரதமர் விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

பாடசாலை மாணவர்களிடையே இருமொழிப் பயன்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் ஒன்றும் இதன்போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

அரச கரும மொழிகள் வாரம் என்பது வெறுமனே மொழிகளைக் கொண்டாடும் வாரம் மாத்திரமல்ல. இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் தனது சொந்த மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வாரமுமாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் எமது பொறுப்பை மீண்டும் நினைவுகூரும் தருணமாகும்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, மொழி உரிமைகளை மிகவும் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம், ஒவ்வொரு பிரஜையும் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் அரச சேவைகளைப் பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமையானது மேலும் உறுதிப்படுத்தப்படும்.

ஒரு மொழியினை இன்னும் ஒரு மொழியை விட உயர்ந்ததாகக் கருதும் நாட்டை உருவாக்க நாம் முயற்சிக்கவில்லை. சகல மொழிக்கும் சமமான கௌரவம் அளிக்கப்படும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும், நீதியான, அந்நியோன்னிய புரிதல் மிக்கதொரு அரசையே நாம் கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம்.

தொடர்ந்தும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்,

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் சைகை மொழியையும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "உங்கள் தாய்மொழியை உங்கள் கௌரவமாகவும், ஏனைய மொழிகளை உங்கள் நட்பின் பாலமாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புதிய வார்த்தையும் மனிதர்களிடையே புரிதலையும், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் ஒரு படியாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்" என மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்

நிகழ்வில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார,

"பல தசாப்தங்களாக நாட்டில் நிலவிய இன முரண்பாடுகளை நோக்கும்போது, பன்முகத்தன்மையை ஒடுக்குவதன் மூலம் அல்ல, மாறாக அதனைக் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதன் மூலமே நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பது உறுதியாகிறது" எனச் சுட்டிக்காட்டியதோடு, மொழி, மதம், இனம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருப்பினும், ஒவ்வொரு பிரஜைக்கும் சமமான கௌரவமும் உரிமைகளும் கிடைக்கப் பெறுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது பிள்ளைகளுக்கு நாம் கையளிக்க வேண்டிய மிக முக்கியமான தேசிய உரிமையாகும் என்பதை வலியுறுத்தினார்.

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்காக அனைவரும் ஒரே மொழியைப் பேச வேண்டியதில்லை, மாறாக மற்றவர்களின் மொழிகளையும் கலாச்சாரங்களையும் மதிப்பதே அவசியமாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் சமாதானம் என்பது அதிகாரத்தினாலோ அல்லது வெறுப்பினாலோ அல்லாது, மற்றவர்கள் மீது காட்டும் கௌரவம் மற்றும் நாகரிகமான மனிதநேயத்தின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஆர். ரணவக, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சிரேஷ்ட பேராசிரியர் சந்தகோமி கோபரஹேவா, பேராசிரியர் எஸ். ஜே. யோகராஜா, கலாநிதி சி. டி. எச். எம். பிரேமரத்ன, அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்த ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகள், அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா பெருமிதக் கொண்டாட்டம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்ளத்தக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்க வேண்டும்

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ளத்தக்க திறமைமிக்க சுகாதாரப் பணியாளர் குழாமை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையின் மிக முக்கியமான தேசிய பயிற்சி நிறுவனமாகிய களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் (NIHS) நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு விழா மாநாட்டை, நேற்று (01) களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் இந்த நிறுவனம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆற்றி வரும் மகத்தான சேவையைப் பாராட்டிய பிரதமர், தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் நூற்றாண்டு விழா என்பது இலங்கையின் பொதுச் சுகாதார வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கலாகும் என்றும், நாட்டின் பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதிலும், நோய் தடுப்பு சுகாதார சேவைகளை மேம்படுத்துவதிலும் ஒரு நூற்றாண்டு காலமாக இந்த நிறுவனம் ஆற்றிய பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமே இதுவாகும் என்றும் தெரிவித்தார்.

தாய் மற்றும் சேய் நலம், நோய்த்தடுப்புத் திட்டங்கள், நோய்த்தடுப்பு போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகள், பலமான பொதுச் சுகாதார நிறுவனங்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

அத்துடன், முதுமை அடையும் சனத்தொகை, தொற்றா நோய்களின் பரவல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் புதிய சுகாதார அனர்த்தங்களை வெற்றிகொள்வதற்கு, மாற்றம் அடைந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையக்கூடிய திறமையான சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நவீன சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள், ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அரசாங்கம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தியதுடன், வைத்தியர் துஷார பெர்னாண்டோ "NIHS – Past, Present and Future" எனும் தலைப்பில் முதன்மை உரையை நிகழ்த்தினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில் "NIHS – 100 Years" ஞாபகார்த்த நூல் வெளியீடும், நூற்றாண்டு விழா ஞாபகார்த்த அஞ்சல் முத்திரை ஆகியனவும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள், பங்காளி நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், சுகாதார வல்லுநர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அழைக்கப்பட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு