பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உயர்தரப் பரீட்சை சாதனையாளர்களைப் பாராட்டும் நாடு தழுவிய நிகழ்ச்சியின் ஒன்பதாவது கட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 2025 டிசம்பர் 14ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன் போது, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மேல் மாகாண மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 361 சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 36.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

"இதுவரை, விசேட அதிகாரம் அல்லது பதவிகளை வகிப்பவர்களுக்கு மாத்திரம் நன்மையைப் பெறுவதற்கு இலகுவாக இருந்த, சாதாரண மக்கள் பயனடைவது கடினமானதும் சிக்கலானதுமான செயல்முறையாக இருந்த ஜனாதிபதி நிதியத்தை, இணையவழியில் (Online) மற்றும் தத்தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய எளிய முறைமைக்கு கொண்டுவர எமது அரசாங்கம் வழி வகுத்திருக்கின்றது.

இந்தச் செயற்திட்டங்கள் அனைத்தையும் நாம் மேற்கொள்வது, நமது மனித வளத்தை தற்போதைய உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தி, முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காகவே ஆகும். இன்றைய உலகின் சிக்கலான தன்மைகளைப் புரிந்துகொண்டு பயணிக்கக்கூடிய மனித வளத்தை உருவாக்க ஒரு அரசாங்கம் என்ற வகையிலேயே நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

அந்த நோக்கத்திலேயே 2026 ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர விசேட வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். உற்பத்தித்திறன் மிக்க நல்ல பிரஜையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

சுற்றுச்சூழலை நேசிக்கும், அதனைப் பாதுகாப்பதில் முன்னிற்கும், தலைமைத்துவப் பண்பு கொண்ட, கருணை மற்றும் கூட்டுமுயற்சி பற்றிய உணர்வுள்ள, ஜனநாயகத்தை மதிக்கும் பொறுப்புமிக்க மனித வளத்தை உருவாக்குவதே எமது தேவையாக இருக்கின்றது.

சகல அரசாங்கங்களும் உங்கள் கல்விக்காகப் பங்களித்துள்ளன. இந்தப் பங்களிப்பு, நாட்டின் அனைத்து மக்களினதும் வரிப் பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. ஆகையினால் அந்தச் சமூகத்திற்காகச் சேவையாற்றவும், தலைமைத்துவத்தை வழங்கவும் கூடிய திறமையானவர்கள் நீங்கள் என்பதாலேயே, நீங்கள் எமக்கு மிகவும் பெறுமதியானவர்களாகின்றீர்கள்.

இன்று வழங்கப்படும் இந்தக் கௌரவமானது, நாம் உங்களுக்குகாக மேற்கொள்ளும் ஒரு முதலீடாகும். அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, அரசாங்கத்தின் பங்களிப்பினால் பாராட்டுப் பெறும் நீங்கள், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த விழாவில் கருத்துத் தெரிவித்த தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான திரு. அனில் ஜயந்த,

மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு நிதி உதவி பெறக்கூடிய நிதியமாகவே மக்கள் மத்தியில் ஜனாதிபதி நிதியம் பிரபலமாக இருந்துவந்தது. ஆயினும் புதிய அரசாங்கத்தின் கீழ், அதன் பயன்பாட்டுக்கான செயற்பரப்பு விரிவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைய கல்வியையும் ஒரு விசேட துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், எவரையும் கைவிடாது (Inclusivity), அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையும் ஜனாதிபதி நிதியமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரோஷன் கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. சந்தன சூரியஆரச்சி, திரு. சந்திம ஹெட்டியாராச்சி, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி நிதியத்தின் முகாமைத்துவ சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள், புலமைப்பரிசு பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது. அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளியுங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி மாணவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இந்த நேரத்தில் அவர்களின் மனநல மற்றும் சமூக நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பேரிடர் காலத்தில் ஒருவர்மீது ஒருவர் கருணைமிக்க ஆரோக்கியமான பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நுவரெலியா மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பாடசாலைகளை 2025 டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்த போதிலும், பேரிடர் நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்த வலயங்களில் அமைந்துள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர் தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்றும், பிரவேசப் பாதைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், அனர்த்தங்களை எதிர்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியான உடையை அணியும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எத்தகைய தடைகளுக்கு மத்தியிலும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், அது தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் 51% நிறைவடைந்துள்ளதாகவும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பேரிடர் நிலைமைக்குப் பின்னரும் நாட்டை முன்பை விடச் சிறப்பாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றி கொள்ள வேண்டும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீரஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான கலைச்செல்வி, அனுஷ்கா திலகரத்ன உட்பட மக்கள் பிரதிநிதிகள், நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி. துஷாரி தென்னக்கோன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து அவுஸ்திரேலியாவின் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருடன் பிரதமர் கலந்துரையாடல்

அவுஸ்திரேலிய குடியுரிமை, நெறிமுறைகள் மற்றும் பல் கலாசார விவகாரங்களுக்கான உதவி அமைச்சரும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான திரு. ஜூலியன் ஹில் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க அவுஸ்திரேலிய அரசு நன்கொடையாக வழங்கிய 3.5 மில்லியன் டொலர் நிதி பங்களிப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். தற்போது காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் நாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருதற்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கல்வித் துறை, இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. கல்விக்கான உதவி வழங்குதல், உயர்கல்வித் துறையை விரிவுபடுத்தல் மற்றும் அவுஸ்திரேலிய அரசு வழங்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பிரதமர் பாராட்டினார்.

இலங்கையின் நீண்டகால மூலோபாய பங்காளியாக நாட்டின் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. அதன்படி, இலங்கையின் கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டுசெல்வதில் நம்பகமான பங்காளியாக தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய மேத்யூ டக்வர்த் (Matthew Duckworth), முதல் உதவிச் செயலாளர் கரேன் ஆன் சாண்டர்காக் (Karen Ann Sandercock), பணிக்குழாம் பிரதானி கேமரூன் ஜெஃப்ரி கிரீன் (Cameron Geoffrey Green) , கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஸ்தானிகர் ரூத் பெயர்ட் (Ruth Baird) மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வ, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, உயர்கல்விப் பிரிவின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) அப்சரா கல்தேரா மற்றும் கல்வி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு பங்ஙிய மீளாய்வு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு குறித்து முதற்கட்ட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது நடைமுறையில் உள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்ததாக புதிய டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறிப்பாக வலியுறுத்தப்பட்டது.

கல்விச் சீர்திருத்தங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டச் சீர்திருத்தம், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, நிர்வாகக் கட்டமைப்புச் சீர்திருத்தம் உள்ளிட்ட ஐந்து அடிப்படை அம்சங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்தக் டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போதைய வரைவு பிரதானமாகப் பாடத்திட்டம் சார்ந்த விடயங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளதாகவும், முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, டிஜிட்டல் எழுத்தறிவு, NEMIS (National Education Management Information System) மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதன் முக்கியத்துவம் ஆகியன குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி முறைமையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதோடு, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

யுனிசெஃப் நிறுவனப் பிரதிநிதிகளான டாக்டர் எம்மா பிரிகாம் (Dr. Emma Brigham), டெபோரா வைபர்ன் (Deborah Wyburn), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும், - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உள்ளூர் ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்துவதன் மூலம், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறை, முதலீட்டு அங்கீகாரம் ஆகியவற்றை வினைத்திறனாக்கவும், ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த, 27ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா 2024/25இல் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

2024/2025 நிதியாண்டில் இலங்கையின் மிகச்சிறந்த ஏற்றுமதியாளர்களைப் பாராட்டும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த விழாவில், மொத்தமாக 15 விருதுகளும், உற்பத்தி மற்றும் சேவைத் துறை சார்ந்த 92 விருதுகளும் உட்பட 107 விருதுகள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் செயல்திறன் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான ஏற்றுமதிப் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுடைய பிரிவுகளுக்கான தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஏற்றுமதிச் சந்தை பல்வகைப்படுத்தல், தொழில் உருவாக்கம், ஏற்றுமதி வருமான வளர்ச்சி, ஏற்றுமதி வருமானத்தை நாட்டிற்குள் கொண்டுவருதல், சுற்றாடல் நிலைத்தன்மை மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு, கூட்டு மதிப்பை அதிகரித்தல் (Value Addition) உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் விருது பெற தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஏற்றுமதித் துறையில் உயரிய செயல்திறனை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான வருடத்தின் மிகச்சிறந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹதுன்னெத்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள்.

ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது விழாவானது, கொள்கைகள் அல்லது நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாது, உற்பத்தி செய்தல், பெறுமதியை ஏற்படுத்துதல், மற்றும் சர்வதேச ரீதியில் போட்டியிடும் திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இலங்கையின் முன்னேற்றம் தங்கியுள்ளது என்பதை நினைவூட்டுகின்றது.

கடந்த வருடத்தில் நாம் பல சவால்களை எதிர்கொண்டோம். அதனால் உலகச் சந்தை, விநியோகச் சங்கிலிகளில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது, இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. இதனால் பல ஏற்றுமதியாளர்களுக்கு மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ள நேர்ந்தது, அத்தோடு உற்பத்திச் செயல்முறைகளை மீள் ஒழுங்கமைக்கவும், வாடிக்கையாளர்களைப் பல்வகைப்படுத்தவும், சந்தையில் போட்டித்தன்மையுடன் நிலைத்திருக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்லவும் நேர்ந்தது.

’திட்வா’ சூறாவளியின் தாக்கத்தினாலும் ஏற்றுமதித் துறையின் பல கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உற்பத்தி நிலையங்கள், களஞ்சிய வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியன சேதமடைந்தன. உற்பத்திச் சங்கிலிகளுக்கும் மற்றும் விநியோக அட்டவணைகளுக்கும் இடையூறு ஏற்பட்டன.

இத்தகைய கடினமான சூழ்நிலைகளின் கீழ் சர்வதேச ஏற்றுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் வேளையில், சில ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார்கள்.

திடீர் அனர்த்தத்தினால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், அவர்களின் செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கும், அவர்கள் மீண்டும் எழுச்சிபெறுவதற்கும் அரசாங்கம் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இயற்கை அனர்த்தங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்துவதற்கும், அத்தகைய நிலைமைகள் மீண்டும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலவிய ஸ்திரமின்மை, கொள்கை முரண்பாடுகள் மற்றும் நிர்வாகச் செயற்திறனின்மை காரணமாக நாடு பின்தங்கியிருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருந்ததோடு, வர்த்தகர்களுக்கு எதிர்காலத் திட்டங்களை வகுப்பதும் கடினமானது.

ஆயினும், தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் நிர்வாகத்தின் அடிப்படையில் செயற்படுகிறது. இது குறுகிய கால அணுகுமுறை அல்ல. நாடு நிச்சயமற்ற நிலைக்கு மீண்டும் செல்லாத ஒரு நீண்ட காலச் செயன்முறையாகும்.

இதற்காக அரசாங்கம் வலுவான நிதி முகாமைத்துவம், எதிர்வு கூறக்கூடிய கொள்கைகள், தெளிவான மற்றும் எளிய விதிமுறைகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், முக்கிய நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் புதிய சீர்திருத்தங்கள், வர்த்தகங்கள் எதிர்காலத் திட்டங்களை வகுக்கக்கூடிய, முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய மற்றும் தேவையற்ற தடைகள் குறைக்கப்படும், தனியார் துறையின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேசியச் செலவினங்களைப் பேணுவதற்காக நாம் நீண்டகாலமாகச் சர்வதேசக் கடன்களையே பெரிதும் நம்பியிருந்தோம். ஆனால், உறுதியான எதிர்காலத்திற்கு அந்த முறைமை தவறான வழியாகும்.

எமது முன்னேற்றம் என்பது வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தொடர்புகள், ஈடுபாடு ஆகியன மூலம் எம்மால் ஈட்டிக்கொள்ளக்கூடிய திறனிலேயே தங்கியிருக்கின்றது.

இலங்கையின் நிபுணத்துவத்தையும் ஆக்கத்திறனையும் உலகிற்குக் கொண்டுச் செல்லும் உங்களின் திறன் முழு நாட்டிற்கும் பலமாகும். அதற்கான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.

கொள்கை முரண்பாடுகள், செயற்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கும் தாமதங்கள், போட்டித்தன்மை மிக்க நிதி வசதிக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் குறைபாடுகள், வர்த்தக வசதிகளில் உள்ள குறைபாடுகள், சந்தை அணுகலை விரிவாக்குவதில் உள்ள மந்தமான முன்னேற்றம் ஆகிய விடயங்கள் உங்களைப் பாதித்துள்ளதை நாம் அறிவோம். இந்தச் சிக்கல்களை அரசாங்கம் நேரடியாகக் கையாளும் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்.

வினைத்திறன் மிக்க, வெளிப்படையான மற்றும் எதிர்வு கூறக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், வர்த்தக விநியோகம், சுங்கச் செயல்முறைகள், முதலீட்டு அங்கீகாரங்கள் மற்றும் ஏற்றுமதி வசதிகளை மேம்படுத்துவதற்கும், அத்துடன் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் பூகோளச் சந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான குமார ஜயகொடி, இராமலிங்கம் சந்திரசேகரன், சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, எரங்க வீரரத்ன, அருண் ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர, முதித ஹன்சக்க விஜயமுனி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கல விஜேசிங்க ஆகியோரும், தூதுவர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள் உட்படப் பெருமளவானோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று 2025 டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேராசிரியர் நிஹால் பெரேரா அவர்கள் விசேட உரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்லும்போது, நாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என்னவென்றால், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்படும் தரவுகளை ஓரிடத்தில் தொகுப்பதற்குரிய பொறிமுறை இல்லாமையேயாகும்.

அடித்தளத்தில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். கிராமிய மட்டத்திலான தகவல்களைச் சரியாக அறிந்திருப்பது அவர்களே. அதனால், பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சரியான தரவுகளைச் சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனப் பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன:

மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்தளவிற்குப் பிரயோசனமானவை என்பதை ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம். வெள்ள நிலைமையின்போது கடுவெல பிரதேச மக்கள் பங்கேற்புடன் நாம் செயற்பட்ட விதம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. அதன் போது எமக்கு கொட்டகச் சபை முறைமை மிகவும் பிரயோசனமாக இருந்தது. தரவு சேகரிப்புச் செயற்பாட்டிற்கும் சமூக சக்தி கொட்டகச் சபை போன்றதொரு பொறிமுறையைப் பயன்படுத்த முடியுமானால் மிகவும் பிரயோசனமாக அமையும்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்:

தரவுகள் தொடர்பான விடயத்தில் அரச நிறுவனங்களுக்கிடையில் முறையான தொடர்பின்மை பிரதான பிரச்சினையாகும். நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையும், தமது எல்லைக்குள் உள்ள கடமைகளைச் செய்வதற்கு மாத்திரம் அதிகாரிகள் செயற்படுவதும் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் ஒன்றிணைத்த தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனத் தெரிவித்தார்.

தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதன் அவசியம் மற்றும் அது தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகளையும் மக்களையும் அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.

பிரதமரின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு