பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தறை எமது அன்னை ஆலயத்தின் 118-வது வருடாந்த பெருவிழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செப்டம்பர் 13ஆம் திகதி கலந்துகொண்டார்.

இந்த வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்ட பிரதமருக்கு, பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க ஆகியோரால் விசேட ஆசீர்வாத பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேவாலயத்தின் பிரதான மண்டபத்தில் மாத்தறைப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து மதத் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் போது நீண்ட வரலாறு கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் கலந்துகொள்ள கிடைத்தமை ஒரு பாக்கியம் எனத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் சார்பில் திருவிழாவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"இந்த தேவாலயத்திற்கும், நகரிலுள்ள ஏனைய மதஸ்தலங்களுக்கும் இடையில் நிலவும் சகோதரத்துவம் மற்றும் பிணைப்பின் மூலம் ஒற்றுமை, நீதி மற்றும் சமத்துவம் என்ற விழுமியங்களுக்காக வழங்கப்படும் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மாத்தறை நகருக்கு மட்டுமல்லாது இந்த நாட்டுக்கே இது அவசியமானதாகும். இந்த முன்மாதிரி நமக்குத் மிகவும் தேவையானது. இந்த முன்மாதிரியை எமக்கு பெற்றுத்தரும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அத்துடன், சமூகத்திற்காக நீங்கள் செய்யும் இந்த சேவைக்கும், சமூக நீதிக்காக நீங்கள் மேற்கொள்ளும் இந்த பங்களிப்புக்கும் மேலும் வலிமையும் தைரியமும் கிடைக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜூட் நிஷாந்த சில்வா, காலி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ரேமண்ட் விக்கிரமசிங்க, காலி மறைமாவட்டத்தின் துணைத் தலைவர் அதிவணக்கத்துக்குரிய மைக்கேல் இராஜேந்திரம், தேவாலயத்தின் நிர்வாகி அருட்தந்தை ஜூட் சம்பத் விலேகொட உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், மாத்தறை கோட்டை இரத்னபால பிரிவெனாவின் தலைமை நிர்வாகியும், மகா மந்தின்த பிரிவெனாவின் தலைமை நிர்வாகியும் ஆகிய சாஸ்திரவேதி பண்டிதர் அதிவணக்கத்துக்குரிய திஸ்ஸமஹாராம இந்திரானந்த தலைமைத் தேரர், மாத்தறை கோட்டேகொடை ஜயசுமனாராம விகாரையின் விஹாராதிபதி அதிவணக்கத்துக்குரிய யட்டிகல சோமதிலக தலைமைத் தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

பிள்ளைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்கி வைப்பது நமது பொறுப்பல்ல, மாறாக அறிவுபூர்வமாகவும், விவேகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அதனைப் பயன்படுத்த அவர்களுக்கு வழிகாட்டுவதே நமது பொறுப்பாகும். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செப்டம்பர் 11ஆம் திகதி கொழும்பு ITC ரத்னதீப் ஹோட்டலில் நடைபெற்ற விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை TikTok சமூக வலைத்தளம் மூலம் சமூகமயப்படுத்தும் "STEM Feed" அறிமுக விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகில், TikTok மூலம் கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், அறிவைப் பகிர்தல், கல்வியை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான பின்புலத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் இளைஞர்களுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

சமமான அணுகல், எதிர்காலத்திற்கு ஏற்றதும் குழந்தைகளுக்குத் தாங்குபிடிக்கக்கூடியதுமான ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்காக கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தனியார் துறை பங்காளிகள் ஆகியோர் உள்வாங்கப்பட்ட ஒரு செயலணியை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை வலியுறுத்தினார்.

தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து STEM துறைகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவை பெறுவதற்கான புதிய வழிகளை அறிமுகப்படுத்துவதற்கும் TikTok போன்ற உலகளாவிய தளங்களின் ஆதரவைப் பாராட்டிய பிரதமர், ஒரு புதிய, சமநிலையான மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு கலை மற்றும் மனிதநேயத் துறைகள் உட்பட STEAM துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் பொது உறவுகளின் தலைவர் Ferdous Mottakin, இலங்கையில் STEM Feed ஐ அறிமுகப்படுத்துவது கல்வி உள்ளடக்கங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதுடன், அத்தகைய கற்றல் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலில் நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் TikTok சமூக வலைத்தளத்தின் தெற்காசிய அரச கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் Ferdous Mottakin, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு

பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிக்கிறேன். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

"எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளர் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவை அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இதை வெறுமனே அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருத முடியாது. தெற்காசியாவில் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் இதுவாகும். இவ்வாறான சூழ்நிலையிலும் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நான் வன்முறையாகவும் துன்புறுத்தலாகவுமே பார்க்கிறேன். இந்த கலாசாரத்தை ஒழிப்பதற்கே நாம் முயற்சி செய்கிறோம். இன்று காலையிலும் இந்த குழுவினர் இதேபோன்றுதான் இங்கு நடந்து கொண்டார்கள்.

எனவே, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம், இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் விடயங்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவே இச்சம்பவம் தொடர்பான மக்களின் வெளிப்பாடாக இருக்கின்றது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். இந்த சம்பவம் எவ்வளவு அருவருப்பானது என்பதை நீங்களே பாருங்கள். இந்த நாட்டு மக்கள் இதற்கு மேலும் இந்த முறையை விரும்பவில்லை.

நாம் கடுமையாக உழைத்தே 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருக்கிறோம். இன்று அந்தப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை இவ்வாறான வாய்மொழி அச்சுறுத்தல்களாகவே ஆரம்பமாகின்றன. புதிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் திறமைகள் இந்தப் பாராளுமன்றத்திற்கு ஒரு சவாலாக அமைந்திருக்கின்றது. இதுவே ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சவாலாகவே அமைந்திருக்கிறது, இதுதான் இங்குள்ள பிரச்சனை. இந்த நாட்டின் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். இந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பேசும்போது அவர்களை அச்சுறுத்துவது என்பது ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். மக்களின் கருத்தைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நீங்களும் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கும் நாட்டின் இளம் சிறுமிகளும் ’ஒரு நாள் நானும் அவர்களைப் போல் வரவேண்டும்’ என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவுகளையே நீங்கள் சிதைக்கிறீர்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான தரக்குறைவான நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குங்கள். இந்த பாராளுமன்றத்தில் இப்போது இருக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கையை விட மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பாராளுமன்றத்திற்குள்ளும் அந்த மாற்றம் தேவைப்பட்டதனாலேயே, மக்கள் எதிர்க்கட்சியை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளனர்" எனக் கூறிய பிரதமர், விவாதம் செய்யும் அதே நேரம் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் ஊடகப்பிரிவு

டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான aigov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

டிஜிட்டல் பொருளாதார மாதத்துடன் இணைந்ததாக செயற்கை நுண்ணறிவு பற்றிய aigov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படும் என்றும் , பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (10) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்

டிஜிட்டல் மயமாக்கலால் வலுவூட்டப்பட்ட நாடாக நமது நாட்டை மாற்றி அமைக்கும் பயணத்தை துரிதப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். செப்டம்பர் மாதத்தில் அதற்கான நிகழ்ச்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் டிஜிட்டல் கருவிகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இ-அரச தளங்கள், டிஜிட்டல் முறைமையிலான நிதித் தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்கங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி பயனடைவதை துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் வருகின்ற கூட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் திட்டங்களை துரிதப்படுத்துவதன் மூலம் அதன் நன்மைகளை குடிமக்களும் வர்த்தகர்களும் விரைவாக அடைவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க டொலர் 15 பில்லியனாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக டிஜிட்டல் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் சவாலான இலக்கை அடைவதுடன், டிஜிட்டல் துறையில் ஏற்றுமதியை அமெரிக்க டொலர் 5 பில்லியனாகவும், டிஜிட்டல் துறைசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இரண்டு இலட்சமாகவும் அதிகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அபிலாஷைகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையிலும், இலக்குகளை அடைவதற்காகவும் அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து இந்த டிஜிட்டல் பொருளாதார மாதத்தை ஒரு தளமாக உருவாக்கப்படுகின்றது. தெற்காசிய பிராந்தியத்தில் தொழில்நுட்பப் புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்ட துறைகளின் வளர்ச்சிக்கு சிறந்த மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.

டிஜிட்டல் பொருளாதார மாதம் என்பது வெறுமனே ஒரு அடையாள முன்னெடுப்பு மாத்திரமல்ல, விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் அபிலாஷைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதற்கான ஒரு நடைமுறைச் செயற்பாடாகும், அதன் மூலம் உருவாகும் புத்தாக்கம், செயல்திறன் மற்றும் வாய்ப்புகள் எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு நேரடி நன்மைகளை பெற்று கொடுப்பதற்கான ஒரு திட்டமுமாகும். அதற்கமைய, டிஜிட்டல் மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஆரம்ப தொழில்முனைவுகள், தொழில்முனைவோர், புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் செப்டம்பர் 17, 18, 19, 20 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருக்கின்றன.

அதற்கான இலங்கை நிதி தொழில்நுட்ப மாநாடு, டிஜிட்டல் நிதி பயன்பாடுகளுக்குத் தம்மைப் தயார்படுத்திக் கொள்வதற்கான புதிய தீர்வுகளை ஊக்குவித்தல் ஆகியன செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு தேசிய கண்காட்சி (National AI Expo) செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது. இந்த நூறு நாட்களில், டிஜிட்டல் மயமாக்கல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வுகள், டிஜிட்டல் அரச சேவைகள் மற்றும் காகிதப் பயன்பாடற்ற தீர்வுகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் கண்காட்சிகள், டிஜிட்டல் கருவிகளின் நன்மைகள் குறித்து பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊடகப் பிரசாரம், திறன் மேம்பாடு மற்றும் கல்வி, டிஜிட்டல் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ளுதல் குறித்து இளைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கான பயிற்சி வகுப்புகள், செயலமர்வுகள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகளின் எதிர்கால தொழில்களை ஊக்குவிப்பதற்கான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள், இ-அரசு தீர்வுகள் குறித்த மாகாண மட்டத்திலான விழிப்புணர்வுகள், டிஜிட்டல் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இத்துறை சார் முன்னோடிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடல்கள், புத்திஜீவிகளின் கலந்துரையாடல்கள் ஆகியன நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அத்தோடு, டிஜிட்டல் மாதத்துடன் இணைந்து இலங்கை கணினி அவசர சேவை பதிலளிப்பு ஒன்றியத்தின் மூலம் தேசிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தல், தேசிய சான்றிதழ் அதிகார சபையின் நடவடிக்கைகளை ஆரம்பித்தல், தேசிய இணையப் பாதுகாப்பு மூலோபாயத்தை அறிமுகப்படுத்துதல், வாகன அபராதங்களை அந்த இடத்திலேயே செலுத்தக்கூடிய வகையில் அரசாங்கத்தின் டிஜிட்டல் கொடுப்பனவு தளமான govpayஐ விரிவுபடுத்துதல், பயணிகளுக்கு வங்கிக் அட்டைகள் மற்றும் QR குறியீடுகள் மூலம் பஸ் கட்டணத்தைச் செலுத்துவதற்கான தேசிய போக்குவரத்து கட்டண செலுத்தல் தளத்தை நிறுவுதல், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செயற்கை நுண்ணறிவு தளமாகிய aigov.lk-ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதார அனுபவ மையத்தை மேம்படுத்துதல், சிம் கார்டுகளைப் பதிவு செய்யும் தானியங்கி செயல்முறையை ஆரம்பித்தல், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் 5G வசதிகளை அறிமுகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்புத் தேவைகள் குறித்து ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. நிதர்சனமாக, கல்வி அமைச்சு ஏற்கனவே மாகாண, கல்வி வலய, பாடசாலை மட்டத்தில் நிலவி வருகின்ற தேவைகளைக் கண்காணித்து வருகிறது. அதேபோன்று, டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கல்வி அமைச்சும், டிஜிட்டல் அமைச்சும் இணைந்து தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை வகுத்திருக்கின்றது. இதேபோல், ஏனைய அமைச்சுகளிலும் டிஜிட்டல் மயமாக்கலுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்படும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அப்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தற்போது கற்பிக்கப்பட்டு வரும் பாடநெறிகளைப் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்துக் கற்பித்தல் அல்லது தற்போது கற்று வரும் பாடநெறிகளுக்கு இணையான பிற பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இணைத்தல், அதேபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகளை தற்போது செயல்பட்டு வரும் விதத்திலேயே செயல்பட விடுவதோடு தேவையான வளங்கள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் தற்போதைய பாடநெறிகளை முறையாகவும் தரமாகவும் செயல்படுத்துவது என இரண்டு பிரதான தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கிறது.

இந்த இரண்டு பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குச் சிறிது காலம் தேவைப்படும். அதற்கமைய, ஒவ்வொரு பாடநெறிக்கும் மிகவும் பொருத்தமான பரிந்துரையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். ஆகவே, முதலாவது குழுவின் பட்டப்படிப்பு முடிவடைவதற்குள் விரைவாகத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவற்றில் எந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தினாலும், தற்போதுள்ள பாடநெறிகளின் சிறப்பம்சங்களை மாற்றலாகாது என குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்டதொரு பாடநெறி இந்த நாட்டில் இந்தப் பல்கலைக்கழகத்தில் திறம்படக் கற்பிக்கப்படுமாயின், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, மிகவும் பொருத்தமான சிறப்பம்சத்தைக் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதேச சுகாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பீடம் (Faculty of Indigenous Health Sciences & Technology), BSc (Hons) in Indigenous Medicinal Resources, BHSc (Hons) in Indigenous Pharmaceutical Technology ஆகிய பட்டப்படிப்புகளின் பாடத்திட்டத்தை பொருத்தமான வகையில் மாற்றுவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் (Stakeholders Consultations) 2025.07.25 அன்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. ஏனைய கற்கைநெறிகளுக்கும் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துமாறு மேற்குறிப்பிட்ட குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

பட்டப்படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பாக தொழில் வாய்ப்பு வழங்குனர்களை (Employers) அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறான வேலைவாய்ப்புகள் காணப்படாத அல்லது பிரச்சனைகள் காணப்படுகின்ற கற்கைநெறிகளை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் சீர்திருத்தல் அல்லது வேலைவாய்ப்புகளை உறுதி செய்யக்கூடிய பாடத்திட்டங்களுக்கு மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தில் நிலவி வருகின்ற இடவசதி பற்றாக்குறைக்கு விரைவாகத் தீர்வு காண தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நுகேகொடையில் அமைந்திருக்கும் பீடத்தைக் கம்பஹாவில் தேவையான இடவசதிகள் இருக்கின்ற இடத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Faculty of Indigenous Health Sciences & Technology, Faculty of Indigenous Social Science & Management மற்றும் Faculty of Graduate Studies ஆகிய பீடங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (University Grants Commission) ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ளும்போது ஏற்பட்டிருக்கும் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப்பிரிவு

தரவுகள் மீது மாத்திரம் தங்கியிராது, உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய படைப்பாற்றல் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் பாடசாலைகள் மத்தியில் 100 புத்தாக்க சங்கங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரின் தலைமையில் செப்டெம்பர் 8ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இப் புத்தாக்க சங்கங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் வகையில் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய 9 பாடசாலைகளுக்கு, பிரதமரின் கையால் புத்தாக்க நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு, பாடசாலை மட்டத்திலான புத்தாக்க வாய்ப்புகள் மற்றும் சவால்கள், புத்தாக்கச் சங்கங்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளைப் பெறுவதன் முக்கியத்துவம், மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் புத்தாக்கங்கள் மூலம் ஒரு படைப்பாற்றல் மிக்க தொழிலாளர் படையை நாட்டில் உருவாக்குதல் ஆகிய முக்கிய விடயங்கள் பற்றி இந்நிகழ்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

புதிய உலகில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது, நடைமுறையில் உள்ள பாரம்பரியக் கல்வி முறைக்கு அப்பாலான புதிய கல்வி முறையின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய கண்டுபிடிப்பாளரின் மதிப்பு என்பது அவர்களின் கல்வித் தகுதிகள், பெற்றிருக்கும் பட்டம், அல்லது தனதாக்கிக் கொண்டிருக்கும் காப்புரிமைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும், நிகழ்கால சமூகத்தை மேலும் சிறப்பாக மாற்றி அமைப்பதற்கு புதிய கண்டுபிடிப்பாளர் வழங்கும் பங்களிப்பே மிக முக்கியமானது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமூகம் பற்றிய உணர்வையும், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வையும் கொண்ட, இரக்கமும் மனிதாபிமானமும் மிக்க புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதும், அவர்களை ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் தெரிவித்தார்.

"எனக்குத் தேவைப்படுவது தரவுகளைப் பற்றி அறிந்த ஒரு தலைமுறை மாத்திரம் அல்ல. அந்தத் தரவுகளின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய, ஆழ்ந்த அறிவையும் புதிய கண்ணோட்டத்தையும் கொண்டுள்ள, திரட்டப்பட்ட தரவுகளையும் வெறும் புத்தக அறிவையும் பயன்படுத்தி உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய மனப்பான்மையும் படைப்பாற்றலும் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது. புதுவிதத்தில் சிந்தித்து, ஒரு விடயத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து, கிடைத்திருக்கும் தரவுகள், தகவல்கள் ஆகியவற்றை தமது அறிவை முன்னிலைப்படுத்தி செயல்படத் தெரிந்த, இந்த உலகம் பற்றிய ஆர்வத்தைக் கொண்ட திறமைசாலிகளே நமக்குத் தேவைப்படுகின்றனர்" என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும், அப்பணியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிற்கும், கல்வி அமைச்சிற்கும் உள்ள பொறுப்புகள் பற்றியும் சுட்டிக்காட்டினார். அத்தோடு, இந்த நாட்டிற்கு இருக்கும் விசேடமான சொத்து, நாட்டிற்காக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதற்காக எதிர்காலத்தில் கனவு காணும் ஒரு புதிய தலைமுறையே எனக் கூறிய அமைச்சர், புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான உச்சகட்ட ஒத்துழைப்பை மாணவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் என்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல். மொஹமட் நவவி, இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் வெரஞ்ச கருணாரத்ன உள்ளிட்ட விருந்தினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப்பிரிவு