மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவச் செயல்பாட்டினைப் பின்பற்றியது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.
வெசாக் வாரத்தில் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.
ஏனைய நாடுகளில் நிலவுவதைப் போல் வலுசக்தி நெருக்கடியினால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை முகாமைத்துவம் செய்து, மக்களுக்குச் சுமை ஏற்படாதவாறு அந்தச் செலவை அரசாங்கமே பொறுப்பேற்று, நிலைபேறான முகாமைத்துவச் செயன்முறையொன்றைப் பின்பற்றியதாகவும், எனினும் நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் 15 ஆம் திகதி நடைபெற்ற, அரச சேவையைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அரச நிறுவனங்களுக்குள் வலுசக்தியைச் சேமிப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ’வலுசக்தி முகாமைத்துவ அதிகாரி’ (Energy Manager) ஒருவரை நியமிப்பது குறித்தும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலாதாரங்களை நோக்கிச் செல்ல வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், ’Clean Sri Lanka’ தேசியத் திட்டத்தின் கீழ் அரசாங்கக் கட்டிடங்களைப் பசுமைக் கட்டிடக் கோட்பாட்டிற்கு (Green Building Concept) அமைய வடிவமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் எரிபொருள் சலுகைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இதுவரை நடைமுறையிலிருந்த ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினை நீக்கி, QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதுடன், இவ்வருடத்தின் எஞ்சிய மாதங்களுக்குத் தேவையான எரிபொருளும் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
மின்சார நுகர்வினை நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதை நோக்கமாகக் கொண்டு, ’Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மின்சார நுகர்வினை முறையாக முகாமைத்துவம் செய்யும் வீடுகளைத் தெரிவு செய்து பாடசாலை மாணவர்கள் ஊடாக மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
எதிர்கால கட்டுமானத் திட்டங்களில் பசுமைக் கட்டிடக் கருத்தை Green Building அறிமுகப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கம் முறையான வலுசக்தி முகாமைத்துவத்தை முன்னெடுப்பதனால், மக்கள் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து அதிக கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஏனைய நாடுகளில் எரிபொருள் வரிசைகள் மற்றும் மின்சாரத் தடைகள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் அந்த நெருக்கடியைச் சரியான முறையில் கையாண்டோம். எனினும், நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராததால் நாம் இது குறித்துத் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும். நிலைபேறான வலுசக்தி முகாமைத்துவம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வெசாக் வாரத்தில் தடையின்றி மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.ஜி.எஸ்.பி. ரோஷன் உள்ளிட்ட அரச நிர்வாகம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வலுசக்தி ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு





