பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், நேற்று (ஏப்ரல் 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

’டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகப் பிரதமர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

பரஸ்பர கௌரவம், நட்பு மற்றும் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது நினைவுகூர்ந்தனர்.

அத்துடன் கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதும், ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் இச்சந்திப்பின் அடிப்படை நோக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லத்தீப், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹாவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் கலாநிதி Purna Bahadur Nepali, ஏப்ரல் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

கலாநிதி Purna Bahadur Nepali அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்காக ஆற்றிய சேவையைப் பிரதமர் இதன்போது பாராட்டியதோடு, குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வளர்ப்பதற்கு அவர் வழங்கிய பங்களிப்பிற்காகப் பிரதமரின் நன்றியையும் தெரிவித்தார்.

நேபாளத்துடனான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், இரு நாடுகளினதும் பரஸ்பர முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகப் பிரதமர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் மே தினச் செய்தி

இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும்.

1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர். ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமான தொழிற்சங்க இயக்கத்தின் வழிவந்த தொழிலாளர் குரல், அரசியல் ரீதியாகப் பலம்பெற்றது. 1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தம், 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தம் போன்ற தீர்க்கமான திருப்புமுனைகள், இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் “முன்னோடிகள்” உழைக்கும் மக்களே என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின. அன்று தொட்டு இன்று வரை தோட்டத்துறை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களும் ஆற்றிய பங்களிப்பு, இன்று நாம் அனுபவிக்கும் பல தொழில்சார் உரிமைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றது என்பதைப் பெருமையுடன் நினைவுகூருகின்றேன்.

1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் 8 மணித்தியால வேலை நேரக் கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க தொழிலாளர்கள் உள்ளிட்ட, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எமது மரியாதையை செலுத்தி, இம்முறையும் சர்வதேச தொழிலாளர் தினத்தை நாம் கௌரவத்துடன் கொண்டாடுகின்றோம். இந்த மே தினமானது, மக்கள் சக்தியால் உருவான அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படுவதனால் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது.

உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அதற்கமைய, நடைமுறையிலுள்ள சேவைகளை விரிவுபடுத்தி, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டுமென நாம் உறுதிபூண்டுள்ளோம்.

அத்தோடு, அனைத்துப் பிரஜைகளுக்கும் நியாயமான, சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். அதற்கமைய, விசேட தேவையுடையோர் உட்பட அனைவருக்கும் கண்ணியமான தொழில்சார் வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவது எமது பொறுப்பாகும். ஊதியமற்ற உழைப்பை இனங்காணக்கூடிய மற்றும் அத்தகைய தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய தேசிய சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவுவது எமது அரசாங்கத்தின் முதன்மைக் கடமைகளுள் ஒன்றாகும்.

அனைத்து விதமான உழைப்பையும் மதிக்கின்ற, உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, சமத்துவமிக்க ஒரு நாட்டை உருவாக்குவதற்காக ஒன்றுபட்டு முன்னேறுவதன் முக்கியத்துவத்தை இந்த மே தினத்தில் நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களின் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மூலம், நம் அனைவரதும் பொதுவான இலக்கான “வளமான நாடு — அழகான வாழ்க்கை” என்பதை மிக விரைவில் அடைவதற்குரிய வலிமை கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தினதும் (IFAD) இலங்கை அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் ’சிறு அளவிலான விவசாய முயற்சிப் பங்காளித்துவத் திட்டத்தின்’ (SAPP) ஊடாக, கிராமப்புற இளைஞர், யுவதிகளை விவசாய முயற்சிகளில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட "SAPP" தேசிய இளைஞர் விவசாய - முயற்சிக் கண்காட்சி மற்றும் வர்த்தகங்களுக்கிடையிலான (B2B) தொடர்பாடல் மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் இன்று (28) முற்பகல் பத்தரமுல்லை வொட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்:

நாட்டில் காணப்படுகின்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இவ்விழாவை ஏற்பாடு செய்தமையைப் பாராட்டுகின்றேன். நாட்டின் விவசாயத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் நீங்கள் அனைவரும் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றி வருகின்றீர்கள். உங்களைப் போன்ற திறமைமிக்க விவசாய முயற்சியாளர்களைக் காணக் கிடைத்ததையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பாதுகாப்பு, ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றது. ’Grow and Sell’ போன்ற எண்ணக்கருக்களினால் உற்பத்திப் பொருளாதாரம் பலம்பெறுகின்றது.

கொவிட் நெருக்கடி காலத்திலோ அல்லது தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழல்களின் போதோ நாடுகளின் உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிடின், அந்நாடுகளின் பொருளாதாரம் சவாலுக்குள்ளாகும். குறிப்பாக, தலைவர்களின் சிறிய தீர்மானங்களினால் கூட விநியோகச் சங்கிலி பாதிக்கப்படக்கூடும்.

அதேபோல், காலநிலை மாற்றங்களினாலும் விவசாயத்திற்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மற்றும் சுற்றாடல் நிலைமைகளை முன்கூட்டியே எதிர்வு கூறுவது கடினமாகும்போது விவசாயத் துறை பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாய முயற்சியாளர்களாகிய உங்களது பங்களிப்பு என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மாத்திரமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்பின் ஊடாகத் தேசியப் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒரு பங்களிப்புமாகும். உங்களது திறமைகளை வெளிப்படுத்துவது உங்களுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது, எனத் தெரிவித்தார்.

IFAD மற்றும் SAPP போன்ற நிறுவனங்களின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், ஆற்றல்மிக்க இளைஞர் சமூகத்திற்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர் லதீஷா பிரியந்தி, SAPP பணிப்பாளர் சுனிமல் சந்திரசிறி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்...

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார்.

முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான சங்கநாயகருமான வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த நாயக தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பிரதமர், அதன்பின் வரலாற்று சிறப்புமிக்க கிரிவெஹெரயில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம விஷ்ணு மஹா தேவாலயத்தின் மாலை நேர பூஜையில் கலந்துகொண்ட பிரதமர், கதிர்காமம் ஸ்ரீ அபிநவாராம விஹாரஸ்தானத்தின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான ஆதிகரண சங்கநாயகருமான சாஸ்திரபதி வணக்கத்துக்குரிய கபுகம சரணதிஸ்ஸ நாயக தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, ஹொரண வாசனா பேக்கர்ஸ் நிறுவனத்தின் அதிபர் தயானந்த போம்புவல, கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். எம். ஹேரத், ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா” பிரதமரின் தலைமையில்

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த “நட்புறவு புத்தாண்டு விழா”, ஏப்ரல் 25ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

“அனைவருக்கும் துன்பங்கள் அற்ற, அமைதியான, இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றேன். அத்தோடு, நீங்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் கடமைகளையும் வழங்கிவரும் ஆதரவையும் பாராட்டுகின்றேன். இந்நாட்டு மக்களுக்காகப் பிரதமர் அலுவலகம் முன்னெடுக்க வேண்டிய சேவைகளை மென்மேலும் நேர்த்தியாக ஆற்றுவதற்கான வலிமையும் உறுதியும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டுப்புற விளையாட்டுகளையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய இந்த “நட்புறவு புத்தாண்டு விழா” நாள் முழுவதும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் உட்படப் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு