பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

6ஆம் தர மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது; கற்றல் தொகுதிகளை அச்சிட்டதால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை

பாடப்புத்தக அச்சிடல் மற்றும் கற்றல் தொகுதிகள் (Module) தொடர்பாக இன்று (03) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

"2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் பாடப்புத்தகங்களை ஓடர் செய்வதற்கு முறையான தரவு அமைப்பு ஒன்று இருக்கவில்லை. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஓடர் ஆவணங்கள் மூலமே அவை பெறப்பட்டன. பாடசாலைகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் எஞ்சியிருந்த பாடப்புத்தகங்கள் கணக்கிடப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. இதனால் எஞ்சிய புத்தகங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிதிப் பெறுமதியைக் கணக்கிட முடியாமலிருக்கின்றது.

2023 முதல் 2025 வரை பாடப்புத்தகங்களை ஓடர் செய்யும் நடைமுறை தரவு அமைப்பு மூலமே முன்னெடுக்கப்பட்டது. அதனால் அவை முறையாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஆண்டின் ஆரம்பத்திலேயே அடுத்த ஆண்டிற்குத் தேவையான பாடப்புத்தகத் தரவுகள் அந்த அமைப்பின் ஊடாகப் பெறப்படுகின்றன. தரவு அமைப்பு மற்றும் கையிருப்பிலுள்ள புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, விற்பனை மற்றும் அவசர அனர்த்தங்களின் போது ஏற்படும் தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

பாடப்புத்தக விநியோகம் மற்றும் அச்சிடுவதற்குத் தேவைப்படும் காலம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே கொள்முதல் செயல்முறை முன்னெடுக்கப்படுகின்றது. அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்களை அச்சிடுகின்றனர். களஞ்சியங்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கப்பெறும் முறைமைக்கு ஏற்ப, அவை விரைவாக விநியோகிக்கப்படுகின்றன.

பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் (Modules) ஆகியன வெவ்வேறானவை. தற்போது அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களின்படி, 6ஆம் தரத்தின் முதலாம் தவணைக்காகக் கற்றல் தொகுதிகள் (Modules) அச்சிடப்பட்டன. அந்தத் தொகுதிகள் அனைத்தையும் நாம் நீக்கிவிடவில்லை. 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த கற்றல் தொகுதிகளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானித்துள்ளோம். ஆயினும் கற்றல் தொகுதிகள் எவையும் அகற்றப்படவில்லை. அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் நாம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. 6ஆம் தர மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை பெப்ரவரி மாதத்தில் நாம் விநியோகிப்போம்.

6ஆம் தர மாணவர்களுக்கு எவ்விதத்திலும் அநீதி இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

தேசிய மாணவ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மாணவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அலரி மாளிகையைப் பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

புதிய கல்வி மறுசீரமைப்பானது மாணவர்கள் என்ற ரீதியில் நேரடியாகத் தங்களைப் பாதிக்கும் ஒரு விடயம் என்றும், புதிய தொழில்நுட்ப உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் புத்தாக்கம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் குறிப்பிட்ட மாணவ பாராளுமன்றப் பிரதிநிதிகள், கல்வி மறுசீரமைப்பிற்காகத் தமது நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய கல்வி மறுசீரமைப்பை அண்மையில் நாம் முதலாம் தரத்திலிருந்து ஆரம்பித்தோம். இவ்வருடம் 6ஆம் தரத்திற்குப் பிரவேசிக்கும் பிள்ளைகளைப் புதிய கல்வி மறுசீரமைப்பிற்குள் உள்வாங்குவது குறித்துத் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். புதிய கல்வி மறுசீரமைப்புகளை நாம் நிறுத்தப்போவதில்லை. குறைகளற்ற முறையில் முறையாகப் புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்கவே நாம் முயற்சிக்கின்றோம். அதற்காக ஐந்து பிரதான துறைகளின் ஊடாகச் செயற்பட்டு வருகின்றோம். ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதும்; மனிதநேயம் மிக்க, சுற்றுச்சூழலை நேசிக்கின்ற, மனிதாபிமானப் பண்புகள் நிறைந்த, சமூகத்திற்குப் பொறுப்புக்கூறத்தக்க ஒரு பிரஜையை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதித் கல்விப் பணிப்பாளர் கசுன் குணரத்ன உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவ பாராளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பில் நடைபெற்ற FICAC தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பெப்ரவரி 02ஆம் திகதி நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பெப்ரவரி 01 முதல் 04 வரை நடைபெறவுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் தெற்காசியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இராஜதந்திரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு நம்பகமான மற்றும் நிலையான தேசமாக நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயற்படும் ஒரு தருணத்தில், இம்மாநாட்டை நடத்தும் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு விசேட சந்தர்ப்பமாகும், எனக் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் இலங்கையின் தயார்நிலை குறித்துக் கவனம் செலுத்தியதுடன், அந்த அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்குச் சர்வதேசப் பங்காளிகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டினார். இத்தகைய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பு, பொறுப்பு மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அவசியம் என்பதையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

அரச துறையின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சேவைகளை வழங்குவதிலும் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இலங்கை அரசாங்கம் தெளிவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாகப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்புடன் உள்ளது. நிதி ஒழுக்கம், நிலையான கடன் முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் ஊடாக வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் ஊடாக, மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவளிப்பதற்காக நாம் சமூக நலத்திட்டங்களைப் பலப்படுத்தி வருகின்றோம், எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையை ஒரு ஸ்திரமான மற்றும் நம்பகமான சர்வதேசப் பங்காளியாக நிலைநிறுத்துவதுடன், உலக அரங்கில் இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, FICAC தலைவர் Nikolaos K. Margaropoulos, இலங்கைத் தூதர்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மோசடியையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை ’மில்கோ’ நிறுவனம் நிரூபித்திருக்கின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்று, அதன் நன்மைகளை அனைவரும் பெற்றுக்கொள்ளும் புதியதொரு மாற்றத்தினை நோக்கிய யுகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என நாம் நம்புகிறோம்

மாற்றத்திற்கான ஒரு யுகத்தை உருவாக்குவதற்காகப் பொருளாதாரச் செயல்பாட்டுக்குள் அனைவரையும் உள்வாங்கி, அதன் பலன்களை அனைவரும் அடையக்கூடிய ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அரசாங்கம் நம்புவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி 02ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற ’மில்கோ கிரிகோவி அபிமன்’ எனும் பால் உற்பத்தியாளர்களுக்கான விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும், அவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குமான தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

’பாலினால் செழிப்பான வளமான நாடு’ எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த விழா, 2025ஆம் ஆண்டில் மிக உயர்ந்த விற்பனை வருவாயுடன் வரலாற்றில் அதிகப்படியான நிகர லாபத்தைப் பதிவு செய்த மில்கோ நிறுவனத்தின் அந்த வெற்றிக்குத் தோள் கொடுத்த பால் உற்பத்தியாளர்களைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மில்கோ நிறுவனத்துடன் இணைந்திருக்கும் சுமார் 22,000 பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. இன்றைய விழாவில் இரண்டாயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு அடையாள ரீதியாக இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடெங்கிலும் உள்ள மில்கோ நிறுவன பால் உற்பத்தியாளர்களுக்குப் போனஸ் வழங்குதல் மற்றும் கள உத்தியோகத்தர்களைக் கௌரவித்தல் ஆகியனவும் இடம்பெற்றன.

அத்தோடு சமூக பாதுகாப்பு நிதியமும் மில்கோ நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதிய அங்கத்துவச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

தற்போதைய அரசாங்கம் ’பொருளாதார ஜனநாயகம்’ சார்ந்த பொருளாதார முறைமையைச் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும், உற்பத்திச் செயல்முறையில் நாட்டின் அனைத்து உற்பத்தியாளர்களையும் இணைத்துக்கொண்டு அதன் நன்மைகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வது பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாகும் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு நிறுவனங்களுக்குள் ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைத்து, முறையான முகாமைத்துவத்துடனும் இலக்கு மிக்க தலைமைத்துவத்துடனும் நிர்வகிப்பதன் மூலம், அவற்றை வலுவான மற்றும் மக்களுக்குப் பயனளிக்கும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பதை மிகக் குறுகிய காலத்திற்குள் மில்கோ நிறுவனம் நிரூபித்துள்ளது, எனத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்:

இந்த லாபப்பங்கினை 21 வருடங்களுக்குப் பின்னரே எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கின்றது. இதற்கு முன்னர் 21 வருடங்களுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி அவர்கள் விவசாய அமைச்சராக இருந்த குறுகிய காலத்திலேயே இவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீண்டும் அந்த நிலைக்கு வருவதற்கு 21 வருடங்கள் கடந்துள்ளன. இதிலிருந்து கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய பொய்யைக் கூறினார்கள் என்பது தெளிவாகிறது. எம்மால் 15 அல்லது 16 மாதங்களில் இவ்வாறானதொரு சாதனையை அடைய முடிந்தது என்றால், இத்தனை ஆண்டுகளாக இந்த நிறுவனங்களைப் பொறுப்பேற்றிருந்தவர்கள் செய்த மோசடி எத்தகையது என்பது நன்கு புலப்படுகின்றது. அவற்றைச் சரிசெய்து, பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரையும் இணைத்து, அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய மற்றும் நிறுவனங்களைச் சரியாகக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது, எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கிய மில்கோ நிறுவனத்தைக் குறுகிய காலத்திற்குள் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைத்த தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், இவ்வாறான சாதனைகளுக்குத் தேசிய முக்கியத்துவம் வழங்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன, அதிகாரிகள் மற்றும் நாடெங்கிலுமிருந்து வருகை தந்திருந்த பால் உற்பத்தியாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அபிவிருத்தி என்பது சூழலைப் புறக்கணித்துவிட்டு அடையக்கூடிய ஒரு வெற்றியல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

சுற்றாடல் பாதுகாப்பை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அதனை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், சூழலை மறந்துவிட்டு முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தியும் இவ்வுலகில் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பத்தரமுல்ல “அபே கம” வளாகத்தில் இன்று (02) நடைபெற்ற உலக சதுப்புநில தின நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, “சதுப்பு நிலங்களையும், பாரம்பரிய அறிவுடன் பின்னிப்பிணைந்த கலாசார மரபுரிமைகளையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளிலான தேசிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, ’கோனமெரியாவ’ எனும் பிரதேசத்தைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகச் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தினார். அத்துடன், நீர்வீழ்ச்சிகளின் விபரத் திரட்டு (Waterfall Directory), மற்றும் “Wetlands Sri Lanka” சஞ்சிகை ஆகியன இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அகில இலங்கைச் சித்திரப் போட்டியின் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நமது நாட்டின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைமை மற்றும் விவசாய நடைமுறைகளுக்குள் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத ஒருவித விசேட விஞ்ஞான அறிவு பொதிந்திருக்கின்றது. அறிவு என்பது ஒரு வடிவத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எமது பிள்ளைகள் இந்தப் பாரம்பரிய அறிவைக் கற்க வேண்டும். எமது நீர்ப்பாசன மற்றும் விவசாய முறைமைகள் இயற்கையைப் பாதுகாக்கும் ஒருவித விஞ்ஞானமாகும்.

சதுப்பு நிலங்கள் என்பது வெறும் சேற்று நிலங்கள் மாத்திரமல்ல; அவை நாட்டின் நீர் பாதுகாப்பு, காலநிலை ஸ்திரத்தன்மை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஓர் இயற்கைக் கேடயமாகும். அண்மையில் ஏற்பட்ட சூறாவளி போன்ற காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குச் சூழலைச் சரியான முறையில் பாதுகாப்பது அவசியமாகும். ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ எனும் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படை அத்திவாரம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதேயாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த இடமான குஜராத் பிரதேசத்தில் 60களில் கண்டெடுக்கப்பட்டதும், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான புத்த பெருமானின் இந்த உடல்சார் புனிதச் சின்னங்களை நாட்டு மக்கள் வழிபடுவதற்காக இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி அவர்களின் பங்களிப்புடன் கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஜனவரி 31ஆம் திகதி இது குறித்த விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறாக, இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் கொண்டுவரப்படும் இப்புனிதச் சின்னங்கள், பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்குக் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் காட்சிப்படுத்தப்படும்.

அதிகளவிலான பக்தர்கள் வழிபடுவதற்காக புனிதச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்படும் நிகழ்வு 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் அதேவேளை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட முன்னுரிமை வரிசை முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சமய நிகழ்விற்கு வருகை தரும் பக்தர்களுக்காகப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை முறைப்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கமைய புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் சேவைகள் இணைந்து விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை முன்னெடுப்பதோடு, பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குவிதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளனர்.

வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்காகத் ’அன்னதானம்’ மற்றும் உபசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட வர்த்தகச் சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தி, பக்தர்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இன்றி இந்த அரிய புனிதச் சின்னங்களை வழிபடுவதற்கான அனைத்து ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த விசேட கலந்துரையாடலில் கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு