பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 18 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணமானார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி, அபிவிருத்திக் கற்கை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகள் பலவற்றில் பிரதமர் கலந்துகொள்ளவிருக்கின்றார்.
அத்தோடு, இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் ஐக்கிய இராச்சியத்தின் கல்வித் திணைக்களத்தில், அந்நாட்டின் கல்வி இராஜாங்க செயலாளர் திருமதி பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து, கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் திருமதி இவெட் கூப்பரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
அத்தோடு, 22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் 2026 நிர்வாகச் சபைக் கூட்டத்திற்கு இணையாக, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி ஷெர்லி அயோர்கொ போச்வேயையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இடம்பெறும் பொது நிகழ்வொன்றிலும் கலந்துகொள்ளவுள்ள பிரதமர், அந்நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலும் பங்கேற்கவுள்ளார். மேலும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான கல்விப்பீடத்தில் உரையாற்றவுள்ள பிரதமர், அதனைத் தொடர்ந்து அங்குள்ள கல்விமான்கள் மற்றும் மாணவர்களுடனான வினா விடை அமர்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.
பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் கல்வி, ஆராய்ச்சி, கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் சர்வதேச கல்வி நிறுவனங்கள், சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகளுடன் இலங்கையின் ஈடுபாட்டையும் கூட்டுறவையும் மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது
பிரதமர் ஊடகப் பிரிவு





