பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சிக்கலான உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ’டிட்வா’ சூறாவளியின் பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும்

சிக்கலான உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் மார்ச் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ள கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பு முகாம்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய சுருக்கமான அறிக்கையை, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான திரு. பிரபாத் சந்திரகீர்த்தி பிரதமரிடம் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, சூறாவளியினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையற்ற மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

2025ஆம் ஆண்டு ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியினால் விளைந்த சேதங்களைச் சீர்செய்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுக்களினதும் உபகுழுக்களினதும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 20,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கவும், பகுதியளவில் சேதமடைந்த 1,15,000 வீடுகளைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சமூகத்தினரின், குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடையோரின் உடல், உள மற்றும் சமூக நலன்கள் குறித்துச் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் விசேட குழுக்கள் ஊடாகத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும்போது, மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நகர்ப்புற பொது வசதிகளைக் கொண்ட பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதன் அவசியத்தையும், மீண்டும் அனர்த்தங்கள் ஏற்படாத பாதுகாப்பான இடங்களைத் தெரிவு செய்வதன் தேவையையும், பொதுமக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹவத்த, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.சி. தர்மதிலக, சிவில் சமூகப் பிரதிநிதிகளான ரோஹண ஹெட்டியாரச்சி, கௌதமன் பாலவன் உட்பட 33 சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நவீன உலகின் சவால்கள், மீளெழும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு “அபியோகய” (சவால்) எனும் இந்த நூல் ஒரு காத்திரமான, காலத்திற்குப் பொருத்தமான பங்களிப்பாகும். அத்தோடு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான பெறுமதிமிக்க நுண்ணறிவையும் இந்நூல் கற்றுக்கொடுக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட “அபியோகய - உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா, 2026 மார்ச் 28 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தாமரை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட இந்நூல், சமகால உலக மற்றும் தனிப்பட்ட சவால்கள், புத்தாக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனவுறுதியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. கல்விசார் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான வெளிப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தூண்டுதல் மிக்க பார்வையை இது வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்கின்றது. இந்த நூல் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியன இதன்போது பிரதமரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்த முக்கியமான வெளியீட்டிற்காக ஆசிரியருக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், இத்தகைய கல்விசார் படைப்புகள் எதிர்காலச் சந்ததியினரை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், சவால்களை ஏற்றுக்கொள்ளவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் ஒரு முற்போக்கான, அதேநேரத்தில் அனைவரையும் உள்வாங்கிய கல்விச் சூழலை உருவாக்குவதில் அறிவுப் பகிர்வு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நூலில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற அறிவை அதிகளவான வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்நூலின் 5,000 பிரதிகளை மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாகப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தையும் பிரதமர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் திரு. எரங்க வீரரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, பேராசிரியர் சுரங்க நாணயக்காரவின் குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சகல பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறைமையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் இளம் தலைமுறையினரின் தொழில்நுட்பத் திறன்களைச் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதனை நோக்கமாகக் கொண்டு, கொழும்பு புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் இன்று 28 நடைபெற்ற ’உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 66 அணிகள் பங்கேற்றதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வளர்ச்சியாகும். “Robots Meet Culture” (ரோபோக்கள் கலாசாரத்தைச் சந்திக்கின்றன) எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 500க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டதோடு, உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் நவீன பொறியியல் துறைகளை ஒருங்கிணைத்த அவர்களது புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

"வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டின் தேசிய முன்னுரிமையாக அமைய வேண்டும். உலக ரோபோ ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகள், எமது இளம் தலைமுறையினருக்குத் தர்க்க சிந்தனை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற அத்தியாவசியத் திறன்களைப் பயிற்சி செய்வதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைகின்றது.

2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை முதன்முறையாக இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எமது பிள்ளைகளுக்குக் கிடைத்த மிக முக்கியமானதொரு அனுபவமாகும். நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகள் உரித்தாகும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்" எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி டயனி மெண்டிஸ், எத்தியோப்பியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி என்.ஐ.டி. பரணவிதான, ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.ஐ. பஸீஹா அஸ்மி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் குமார சந்திரசிறி மற்றும் பாலஸ்தீனத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம். பாரூக் எம். பௌஸர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் தேசிய நலன்களை முன்னெடுப்பதில் அவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன், நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதில் அவர்களின் கூட்டுப் பொறுப்பு குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தத்தமது நாடுகள் மற்றும் சர்வதேசத் தளங்களில் நிலையான, தொழில்முறை சார்ந்த மற்றும் மூலோபாய ரீதியான ஈடுபாடுகளின் ஊடாக, சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றிய நேர்மறையான மற்றும் நம்பகமான பிம்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகக்கூடிய, குறிப்பாகப் பேண்தகு நிலை, புத்தாக்கம் மற்றும் நீண்டகாலப் பெறுமதியினை அதிகரிக்கச் செய்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் உயரிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு தூதுக்குழுத் தலைவர்களைப் பிரதமர் ஊக்கப்படுத்தினார்.

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் பன்முகப்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிதல் மற்றும் வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இச்சந்திப்பின்போது விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் நியமனம் பெற்ற தூதுக்குழுத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான கியூபா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவர் Patricia Lazara Pego Guerra அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய இரு தரப்பினரும், இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இரு நாடுகளினதும் மனித வளத்தைப் பலப்படுத்துவதற்கான பரிமாற்ற வேலைத்திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்பது உட்பட, கல்வித்துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், விவசாயத்துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. விளையாட்டுத் துறையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. இரத்தினசிங்கம் கோகுலரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) முறைமையானது, தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான, பொருத்தமான, அதேநேரத்தில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக்கொடுப்பதுடன், பசுமையான நிலையான எதிர்காலத்தை நோக்கிய பொறுப்புமிக்க புத்தாக்கங்களை உருவாக்கவும் வழிவகுக்கின்றது. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையைப் பொறுத்தவரை, இந்த மாற்றமானது ஒரு தேசிய முன்னுரிமையாகும்.

பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC) மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ’காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்’ எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு இன்று (மார்ச் 24) கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் ’டிஜிட்டல், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்காக TVET முறைமையை உருமாற்றுதல்’ எனும் ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக இம்மாநாடு அமைகின்றது. இதில் பூட்டான், பீஜி, மலேசியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய கொழும்புத் திட்ட (CPSC) உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, காலநிலைத் தன்மைகளைத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமைத் திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப் பகிர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது இலங்கையின் தேசிய முன்னுரிமையாகும்.

கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது, தனிநபர் வாய்ப்புகள், கௌரவம் மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும்.

பாடத்திட்டங்களில் பசுமைத் திறன்களை உள்ளடக்குதல், புதிய பயிற்சி வசதிகளில் முதலீடு செய்தல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் வளர்ந்து வரும் பசுமைத் தொழில்துறைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கல்வி முறையில் ஒருங்கிணைக்க வேண்டும்.

பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், இளம் பெண்கள், விசேட தேவையுடையோர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் உட்பட அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்களிப்புகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அத்தகைய உறவுகளை உண்மையான நன்மைகளாகவும் செயற்திறன் மிக்க கூட்டுறவுகளாகவும் மாற்றுவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) திருமதி சமந்தி சேனநாயக்க, கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கலாநிதி சுரேஷ் கே. தமேஜா, TVET நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய நாடுகளின் சர்வதேசப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு