பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது வெறுமனே ஒரு திட்டமல்ல, அது அடிமட்டத்திலிருந்தே தீர்வு காணப்பட வேண்டிய ஒரு தேசிய முன்னுரிமையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அது அடிமட்ட மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

’போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்கான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம்’ குறித்த விளக்கமளிக்கும் கூட்டம், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரின் பங்கேற்புடன் இன்று (மார்ச் 13) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் அதிகரித்து வரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட, சான்றுகளின் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகமயப்படுத்தல் ஆகிய பணிகளைப் பலப்படுத்துவதை இந்த மூலோபாயத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிதல், தொடர்ச்சியான பராமரிப்பு, சமூகம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் குணமடைந்த நபர்களை மீண்டும் சமூகத்தில் இணைத்தல் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. ஆரம்ப சுகாதார மற்றும் வெளிநோயாளி மட்டங்களில் பரிசோதனைகளைப் பலப்படுத்துதல், வைத்தியசாலை சிகிச்சை மற்றும் கண்காணிப்புச் சேவைகளை மேம்படுத்துதல், புனர்வாழ்வு பெறுவதற்கான வதிவிட வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுக்கும் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற முக்கிய பரிந்துரைகள் இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள் இருக்கும் தாய்மார் மற்றும் சிறைக்கைதிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிரான தேசியப் பொறிமுறையைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது குடும்பங்களின் ஸ்திரத்தன்மைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் பாரிய சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகச் சட்ட அமுலாக்கத்திற்கும் புனர்வாழ்வுக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் ஊடகங்களின் பொறுப்புமிக்க செய்தி அறிக்கையிடல் ஆகியவற்றை இந்த தேசிய மூலோபாயத்தின் முக்கிய அங்கங்களாக உள்வாங்குவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், இலங்கை பொலிஸ், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்

’INCO 2026’ கண்காட்சியின் ஆரம்ப விழாவில் பிரதமர் தெரிவிப்பு

உள்நாட்டுக் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமைகளில் ஒன்றாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 20ஆவது முறையாக நடைபெறும் ’INCO 2026’ கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சியை இன்று (13) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நிறுவனம் (IIESL) ஏற்பாடு செய்துள்ள இந்த ’INCO 2026’ கைத்தொழில் கண்காட்சி இன்று முதல் மார்ச் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அங்கு உரையாற்றிய பிரதமர்,

பொறியியல் துறை என்பது ஒரு நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும், வினைத்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரதான சக்தியாகும். குறிப்பாக மாணவர் சமூகத்தைப் புத்தாக்கங்களை நோக்கி ஊக்குவிப்பதற்கு இவ்வாறான கண்காட்சிகள் வழங்கும் ஆதரவு மிகவும் பெறுமதியானது.

நாட்டின் கைத்தொழில் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, ’தேசிய கைத்தொழில் தகவல் தொகுதி’ (NIIS) மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் மத்திய டிஜிட்டல் தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’சுழற்சி நிதியங்கள்’ (Revolving Funds) ஊடாகக் கைத்தொழிலாளர்களுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இம்முறை கண்காட்சியில் வெளிநாடுகளின் பங்களிப்பும் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும். இதன் மூலம் உள்நாட்டு முயற்சியாளர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளையும் சர்வதேச தொழில்நுட்பங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. பொறியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் முயற்சியாளர்கள் எனப் பெருமளவிலானோரின் பங்களிப்புடன் நடைபெறும் இக்கண்காட்சி, நாட்டின் கைத்தொழில் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகும்" எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, தேசிய காகித நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க, இலங்கை ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் ஆனந்த குணவர்தன உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, அது எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று, 2026 மார்ச் 13 கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வு ’மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்’ (Languages Unite: Diverse Voices, Shared Humanity) எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கல்வி அமைச்சு ஆகியன இணைந்து, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை சாரணர் சங்கம் மற்றும் இலங்கை பெண் சாரணர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் குறும்படப் போட்டித் தொடர்களில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் இதன்போது பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழி, அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கிடையிலான ஆழமான தொடர்பை நினைவூட்டும் வலிமையானதொரு நாளாக அமைகின்றது.

இந்த உலகளாவிய நினைவுகூரலானது பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தொலைநோக்கு சிந்தனையுடனான முயற்சியினால் உருவானதாகும். பங்களாதேஷத்தின் இந்த முன்னெடுப்பானது, ஒரு தேசிய நினைவுகூரலை மனிதகுலத்தின் மொழிசார் பாரம்பரியத்தைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக மாற்றியுள்ளது.

இலங்கையின் மொழிப் பன்முகத்தன்மை எமது பல்லினப் பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பன்முகத்தன்மையானது முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலாகப் பார்க்கப்படாமல், மதிக்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்பட வேண்டிய ஒரு பலமாகப் பார்க்கப்பட வேண்டும்.

நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம். ஒருவருக்கொருவர் தமது சொந்த மொழிகளில் செவிமடுக்கும்போது, ஒருவருக்கொருவர் மனிதநேயத்தை உறுதிப்படுத்துகிறோம். பிளவுகள் எளிதில் வேரூன்றக்கூடிய இக்காலகட்டத்தில், மொழிப் பன்முகத்தன்மை மீதான மரியாதை, ஒத்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு பாலமாக அமையும்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள டிஜிட்டல் யுகத்தில், இணையவெளியில் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இன்று அழியும் நிலையில் உள்ளன. கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியான ஆக்கபூர்வமான முயற்சிகள் இல்லையெனில், பல மொழிகள் மௌனமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும்.

பல்லினத்தன்மை, கலாசாரப் புரிதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட அர்ப்பணிப்புகளுடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருவதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Andalib Elias, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான FAO பிரதிநிதி விம்லேந்திர சரண், இலங்கை பெண் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், இராஜதந்திரிகள், இலங்கை சாரணர் மற்றும் பெண் சாரணர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இது வெறும் புலமைப்பரிசில் திட்டமல்ல, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் தீர்க்கமான செயர்த்திட்டமாகும்

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு 2026.03.12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர்.

மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம்.

இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள்.

இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம்.

நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (11) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிலிப்பைன்ஸின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் (IRRI) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி யுவோன் பின்டோவை (Yvonne Pinto) சந்தித்த பிரதமர், இலங்கையின் நெற்பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்துறையின் நிலையான அபிவிருத்திக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இலங்கை நெல் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, நெல் உற்பத்தியில் காணப்படுகின்ற தடைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் விவசாயிகளை நவீன தொழில்நுட்ப முறைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்துப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அதற்கமைய, காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) கொண்டுள்ள உலகளாவிய ஆராய்ச்சி அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள இணக்கம் காணப்பட்டது.

அத்தோடு, இலங்கையின் விவசாய நிறுவனங்களின் கொள்ளளவை மேம்படுத்துதல், ஆராய்ச்சிப் கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் புத்தாக்கங்கள் மூலம் இலங்கையின் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சர்வதேச ஒத்துழைப்பு பெரிதும் உதவும் என இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு