பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பணியாளர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முறையான பொறிமுறை மூலமாக அரச சேவையின் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான பொறிமுறையின் ஊடாக, எதிர்காலத்தில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே 2025 நவம்பர் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தற்போது இலங்கையில் வேலைவாய்ப்பு அற்றோர் எண்ணிக்கை மூன்று இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்றாகும். வேலையின்மையைக் குறைப்பதற்காக அரசாங்கம் குறுகிய கால, நடுத்தர, மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் பலவற்றை எடுத்திருக்கின்றது.

இதன்படி, பருப்பொருளியல் இலக்காக (Macro Economic Target), எதிர்வரும் ஆண்டுகளில் வேலையின்மையை, 2025ஆம் ஆண்டில் 4.4% ஆகவும், 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் 4.2% ஆகவும் அதனை குறைக்க வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

தற்போதைய அரசாங்கம் 35,000 முதல் 40,000 வரையிலான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக ஒரு முன்னோக்குத் திட்டத்தைத் தயாரித்திருக்கிறது. அதற்கமைய, அரச சேவையில் காலியாக உள்ள பதவிகளுக்கு, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான பொறிமுறைகளின் ஊடாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது, 12,309 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்குப் பணியாளர் முகாமைத்துவக் குழுவின் ஊடாக அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆட்சேர்ப்புகள் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை ஆசிரியர் சேவையின் 3 - I (அ) தரத்திற்கு 25,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவுடன் அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி 37,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் குறிப்பிட்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோலாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற 6% என்ற விடயத்தில் எந்த தர்க்கமும் இல்லை

கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை 6% என்பது ஒரு சர்வதேச அளவுகோல் என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் 6% என்ற விடயத்தில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் 2025 நவம்பர் 26 பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

அன்றும் 6% போராட்டத்திற்கு ஆதரவாக நின்றோம், இன்றும் அதற்காக நிற்கிறோம். ஆறு சதவீதம் என்பது ஒரு சர்வதேச அளவுகோல். இது யுனெஸ்கோ வழங்கிய அளவுகோல்.

அது நாமோ பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கமோ மட்டுமல்ல முழு நாடும் சர்வதேச சமூகமும் ஆதரிக்க வேண்டிய ஒரு அளவுகோலாகும் என்றே நான் நினைக்கிறேன். அதற்காக எமது நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

நாம் அந்தப் போராட்டத்தை 2011-ல் ஆரம்பித்தோம். 2011 முதல் 2024 வரை, நாட்டை ஆண்டதும், கல்விக்காக நிதி ஒதுக்கியதும் எமது அரசாங்கம் அல்ல. இப்போது இதை ஒப்புக்கொள்பவர்கள் ஆட்சியில் இருந்த ஒரு காலமும் இருந்தது. அப்படியானால் அவர்கள் அந்த ஆறு சதவீத போராட்டத்தில் தலையிட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் தலையிடவில்லை. நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டபோது, கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒன்று புள்ளி பூஜ்ஜியம் நான்கு சதவீதமாகவே இருந்தது.எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே நாம் அதை அதிகரித்தோம். இரண்டாவது வரவு செலவுத் திட்டத்திலும் அதை அதிகரித்துள்ளோம். இந்த ஆறு சதவீத இலக்கை அடைய நாங்கள் பாடுபடுகிறோம் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

2011 முதல் 2024 வரை ஆட்சி செய்தவர்கள் அந்த இலக்கை நோக்கிச் செல்லும் திசையில் இருக்கவில்லை, மாறாக இன்னும் கீழ்நோக்கிய திசையிலேயே சென்றுகொண்டிருந்தனர். இப்போது நாம் இந்த அதிகரிப்பு திசைக்கு வரும்போது, அவர்கள் ஏன் 6% கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற 6% பிரச்சினையில் எனக்கு எந்த தர்க்கமும் தெரியவில்லை ஆயினும் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.

கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்பதையும், படிப்படியாக நிதி ஒதுக்கி வருகிறோம் என்பதையும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நாம் காட்டியுள்ளோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் படிப்படியாக ஆறு சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்பதை கூறியுள்ளோம். அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

மேலும், தேசிய பாடசாலைகளில் கணிஷ்ட ஊழியர்களிடையே அதிகபடியானவர்கள் இல்லை என்றாலும், மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் தொழிலாளர்கள் சேவையை விட்டுச்செல்லுதல், பதவி உயர்வுகள் மற்றும் ஓய்வு பெறுதல் காரணமாக ஊழியர் வெற்றிடங்கள் உள்ளன.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது நிலவும் கனிஷ்ட ஊழியர் வெற்றிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்புகள் செய்யப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. - கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயல்படுத்தப்பட வேண்டும்.

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், திட்டங்களைத் தயாரிப்பதற்கும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த அரசாங்கத்தினால் முடிந்திருக்கிறது என்றும், நிதி ஒதுக்குவதால் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது என்பதால் நிறுவனங்களைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் அவர்கள்,

"கல்வி பற்றிப் பேசும்போது, ஒரு நாட்டில் தரமான கல்வியை உருவாக்க வேண்டுமானால், கல்வி தொடர்பான முடிவுகள் கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். இரண்டாவது, கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலுவான நிறுவனக் கட்டமைப்பு அவசியம். இவை இரண்டையும் செய்யப் பணம் இருக்க வேண்டும். நம் நாட்டின் வரலாற்றில் இந்த மூன்று அம்சங்களும் சரியாகச் செய்யப்படாததால்தான் இன்று நாம் கல்வித் துறையில் பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கல்விக்காகச் செய்யும் சேவை காரணமாக கல்வியின் தரத்தைப் பேண முடிந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் நாம் மேற்கொண்ட மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நமது கல்வித்துறை சார்ந்த தீர்மானங்களை இயற்றுதல், நிறுவனங்களை இனம் கண்டு, நிலவுகின்ற பிரச்சினைகளை முறையாகத் தீர்த்து, நிறுவனக் கட்டமைப்புகளைச் சரிசெய்து, கொள்கைத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, கொள்கை திட்டங்களுக்கு அமைய பணத்தை உரிய முறையில் பயன்படுத்தி, 2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற கல்விச் சீர்திருத்தங்களுக்காகச் செயற்பட்டமையே ஆகும்.

கொள்கைகளை உருவாக்குவதால் மாத்திரம் தரமான கல்வியை நடைமுறைப்படுத்திவிட இயலாது. அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த திட்டம் இருத்தல் வேண்டும். அதிகாரிகளுக்குச் சரியான இலக்குகளைக் கொடுக்க வேண்டும். பொறுப்புகள் சரியாகப் பகிரப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்த கல்விக் கொள்கைகளைப் பார்க்கும்போது, பாடசாலைகளில் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான பரிந்துரைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆயினும், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திட்டமிடல், நிறுவனக் கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைச் சீராகச் செய்யப்படாததாலேயே அந்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணமாக இருந்திருக்கின்றன.

2025இல் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குப் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எம்மால் எடுக்க முடிந்தது. அதற்கான நிறுவன அமைப்பை உருவாக்க எம்மால் முடிந்தது. கல்வி அமைச்சு முடிவுகளை எடுக்கும்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய நான்கு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. அவை: சமத்துவத்தின் மூலம் கல்வித் துறையின் வேற்றுமைகளைத் தளர்த்துதல், தரத்தை அதிகரித்தல், ஆளுகை (Governance) மற்றும் தரவு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றின் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளைத் தயாரித்தல் ஆகியனவாகும். இந்த நான்கு அம்சங்களின் அடிப்படையில் கொள்கைகளைத் தயாரிக்கவும், திட்டங்களைத் தயாரிக்கவும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கவும் எம்மால் முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் பிரச்சினையை ஆராய நாம் நியமித்த குழு வெளியிட்ட அறிக்கையில், கடந்த காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறை எந்த அளவிற்குச் சீர்குலைந்திருந்தது என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. செயலில் இருக்க வேண்டிய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்குப் பதிலாக, மிகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் முடிவுகள் எடுக்கப்பட்டதால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தரம் சீர்குலைந்தது இருப்பதோடு அதனால் அந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமையினாலும், நிறுவனக் கட்டமைப்புகளில் பலவீனங்கள் இருந்ததாலும், கல்வி தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இவ்வாறு வீழ்ச்சியடைந்தே இருந்தன. 2025ஆம் ஆண்டில் அந்த நிலைமையைச் சரியான இடத்திற்குக் கொண்டு வர எம்மால் முடிந்திருக்கின்றது.

பல வருடங்களின் பின்னர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது 7.04 பில்லியன் ரூபா. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.04% ஆகும். முதல் வருடத்திலேயே கல்விக்காக 6% விகிதத்தை ஒதுக்குவோம் என நாம் கூறவில்லை. கொள்கைகளை உருவாக்கி, நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும் என்பதை நாம் அறிவோம். பணத்தை ஒதுக்கிக் கொடுப்பதால் மாத்திரம் அனைத்தும் நடந்தேறிவிடாது. நிறுவனங்களைப் பலப்படுத்தி, கொள்கைகளை நடைமுறைப்படுத்திப் பணத்தை ஒதுக்குவோம்.

கல்விச் சீர்திருத்தங்களுக்காக 3,000 மில்லியன் ரூபா கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமையவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2025இல் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட செலவினம் குறித்தும் இங்கு பேசப்பட்டது. ஆயினும் எமது வரவுசெலவுத் திட்டம் ஏப்ரல் மாத இறுதியிலேயே நிறைவேற்றப்பட்டது. மே மாதத்திலிருந்தே பண ஒதுக்கீடு ஆரம்பமானது. அதன்படி, எமது நிதித் துறையின் முன்னேற்றம் 18% ஆகும். டிசம்பர் மாதத்திற்குள் எமது அந்த முன்னேற்றம் 69% ஆக வந்துபடும். இதற்கு முன் கல்விக்காக இந்த அளவு திறமையான செயல் திறன் வெளிப்பட்டதில்லை. செயலாளர்கள் உட்பட அதிகாரிகளுக்கு இலக்குகளைப் பெற்றுக் கொடுத்து, கண்காணிக்கப்பட்டே இந்த முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இதைவிட அதிக முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியும்.

சவால்கள் இருக்கவே செய்கின்றன. பலவிதமான பலவீனங்கள் இருந்து வருகின்ற ஒரு துறையையே நாம் மேம்படுத்தி வருகிறோம். இதற்கு மேலும் இத்துறையின் செயல்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பிரச்சினை எழும்போது அதன் மீது திறமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருந்து வருகின்ற வரையறைகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயாரித்து, படிப்படியாக எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்," எனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மிக முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரம் மீதும், அவர்களின் பாதுகாப்பு மீதும் விசேட கவனம் செலுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மிகவும் முக்கியமான வயதெல்லையில் இருக்கும் முன்பள்ளிச் சிறார்களின் கல்வியின் தரத்தையும்,அவர்களின் பாதுகாப்பையும் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மூலம் ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக முறையான செயற்றிட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஷ்வ முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் 2025, நவம்பர் 24ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகப் பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தகுதியான பயிற்றுவிப்பாளர்களைத் தெரிவு செய்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதற்காக நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

முன்பள்ளிகளை ஒழுங்குபடுத்துதல், மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகள் மூலம் ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வியை வழங்குவதன் முக்கியத்துவம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் அரசாங்கத்திற்கும் முன்பள்ளிகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி பற்றிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாகப் பாடத்திட்டத்தைத் தயாரித்தல், முன்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி. சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சமன்மாலீ குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பினால் (Asian Productivity Organization) வெளியிடப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு (APO) மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தினால் (Korea Development Institute) சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் (National Productivity Roadmap) மற்றும் உற்பத்தித்திறன் நிபுணர்களுக்கான அங்கீகாரச் சான்றிதழை வெளியிடுவதற்கு இணையாக, நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இலங்கைக்கான தேசிய உற்பத்தித்திறன் முன்னோக்குத் திட்டம் கையளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பிரதான கைத்தொழில் துறைகளான விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் ஆகியன எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், இலங்கையின் தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன், இந்தத் திட்டத்தின் மூலம் கைத்தொழில்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, குறுகிய காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய புதிய கைத்தொழில்களின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் கொள்கைத் திட்டங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டியதோடு, உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும், உலகளாவிய தளத்திற்கான மூலோபாய அணுகல் வழிகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

மேலும், முன்னேற்றம் கண்டுவரும் ஒரு மூலோபாய அணுகல் வழியாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதில் அதன் விரிவான பங்கு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. ஜே.எம். திலகா ஜயசுந்தர, ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி Indra Pradana Singawinata, ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவர் திரு. Arsyoni Buana மற்றும் கொரிய அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்துகொண்டது.

பிரதமர் ஊடகப் பிரி

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தூதுவர் திருமதி. Julie Jiyoon Chung அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் சமாதானப் படையின் (Peace Corps) கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும், ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விளக்கப்படுத்தியதுடன், Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

சர்வதேசக் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்னணிப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமான Fulbright புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும், கல்விமான்களுக்கும் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை வழங்கி வருகின்றது.

பரீட்சையை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பிலிருந்து ஒத்துழைப்புமிக்க கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்காக, கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் மனித அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் அறிவாளிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில், அமெரிக்கப் பொது விவகார அதிகாரி திருமதி. Menaka Nayyar, அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இலங்கை Fulbright ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி Patrick McNamara, மற்றும் பாலின சமத்துவம், பாலின அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய (SGBV) நிலையத்தின், அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாணவர் பகிடிவதைத் தடுப்பு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பிரபா மனுரத்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகஹவத்த, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி. பிரமுதித்தா மனுசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு