பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்தி

இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு நினைவூட்டும் மிகவும் உன்னதமானதொரு நாளாகும்.

பொசன் பௌர்ணமி என்பது இலங்கை வரலாற்றில் ஒரு மதம்சார்ந்த நிகழ்வு மாத்திரமல்ல, ஒரு தேசத்தின் சிந்தனை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். மஹிந்த மஹ ரஹத் அவர்களின் இலங்கை வருகையினால் இந்த நாட்டிற்குப் பரிசாகக் கிடைத்த பௌத்த தத்துவமானது, பல நூற்றாண்டுகளாக எமது தேசிய அடையாளத்தை வடிவமைத்துவரும் ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாக மாறியுள்ளது.

உண்மையான அபிவிருத்தி மனிதனின் மனதிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை பொசன் பௌர்ணமி எமக்கு நினைவூட்டுகிறது. கருணை, இரக்கம், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு போன்ற உன்னதமான பௌத்த விழுமியங்களை சமூகத்தின் அடித்தளமாக மாற்றி அமைக்க முடியுமாயின், அமைதியான, நீதியான, சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதானது எமக்கு இலகுவானதாக அமையும்.

இன்று எமது நாடு புதிய எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு புதிய பாதையை அடைந்திருக்கின்றது. அந்தப் பயணத்தை வெற்றிகொள்ள பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது, ஒழுக்க விழுமியங்களால் செழுமைப்படுத்தப்பட்ட சமூகமும் அவசியமாகின்றது. பொசன் பௌர்ணமியின் உண்மையான சாரமாகிய ஒழுக்கம், அகிம்சை மற்றும் மனிதநேயம், ஆகியன மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நீதியான, சுபீட்சமான நாட்டை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் இலக்கினை அடைவதற்கான வழிகாட்டிகளாகும்.

மலர்ந்திருக்கும் இந்த உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, அனைத்து பௌத்த மக்களின் வாழ்விலும் அமைதி, நிம்மதி, அறிவு மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துகின்ற ஒரு புண்ணியகரமான நாளாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அறிவு, திறமை மற்றும் ஆற்றல் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாகும்.

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவசியமெனவும், அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 27 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் (IIESL) 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பட்டயப் பொறியியலாளர்கள் Chartered Engineers, ஒன்றிணைந்த பொறியியலாளர்கள் (Incorporated Engineers) மற்றும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் (Engineering Technicians) ஆகியோரை உள்ளடக்கிய பொறியியல் துறை சார்ந்த உலகளாவிய அமைப்பின் முக்கிய பிரிவினரான ’ஒன்றிணைந்த பொறியியலாளர்களின்’ தொழில்சார் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வின்போது, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க புதிய அங்கத்தவர்களுக்கு பிரதமரினால் அங்கத்துவச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பொறியியல் வல்லுநர்கள் தேசிய அபிவிருத்திக்கு ஆற்றும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியதோடு, இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனம் முன்னெடுக்கும் திட்டங்களும் முயற்சிகளும் அதன் உறுப்பினர்கள் தமது தொழில்சார் பயணத்தில் முன்னேற உறுதுணையாக அமைவதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கவும் தொடர்ந்து வலுச்சேர்க்கவும் காரணமாக அமைவதாகத் தெரிவித்தார்.

வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில், திறன்கள் மற்றும் ஆற்றல்கள் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் ஒப்பிடப்படும் சூழலில், சில பொறியியல் தகைமைகளுக்குக் குறைவான அங்கீகாரம் கிடைப்பது பல திறமையான நிபுணர்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இச்சவால்களை எதிர்கொள்ளுதல் தனிப்பட்ட பயிற்சியாளர்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமன்றி, இலங்கையின் பொறியியல் திறனை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் இன்றியமையாததாக அமையும் எனக் கூறினார்.

கல்வித் துறையில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதமர், உயர்கல்வியின் தொடர்ச்சியான மேம்பாடு ஒரு தேசிய முன்னுரிமையாகும் எனத் தெரிவித்தார். தனிநபர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தவும், திறன்களை வலுப்படுத்தவும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இந்த இலக்குகளை அடைவதற்கு அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில்சார் அமைப்புகள், கைத்தொழில் துறை மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கிடையில் தொடர்ச்சியான உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை ஒருங்கிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் எம்.பி. ஆனந்த குணவர்தன, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச, இலங்கை பொறியியல் சபையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி திலக் டி சில்வா, சபையின் உறுப்பினர்கள், நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள், புதிய அங்கத்தவர்கள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட, பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை பல் வைத்திய சங்கம் (SLDA) அதன் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வை ஜூன் 26 ஆம் திகதி கொழும்பு, Cinnamon Life ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. விஞ்ஞான புத்தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வாய்வழி சுகாதாரப் பராமரிப்பினை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள், தங்கப் பதக்கம் வென்றவர்கள், சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமர்வை ஆரம்பித்து வைத்த பிரதமர், சான்றுகள் அடிப்படையிலான மற்றும் புத்தாக்கத்தை நோக்கிய சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் இலங்கையின் கல்வி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பை இந்தச் சாதனைகள் பிரதிபலிக்கின்றதாகத் தெரிவித்தார்.

ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை பல் வைத்திய சங்கம், அறிவுப் பரிமாற்றம், தொழில்சார் தரங்களைப் பேணுதல் ஆகியன மூலமாக ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

அத்தோடு, பொதுச் சுகாதாரம் என்பது வெறும் மருத்துவமனை சிகிச்சையை மாத்திரம் சார்ந்தது அல்ல என்றும், நல்ல உடல்நலம், தடுப்பு சார்ந்த வாழ்க்கைமுறை தேர்வுகளில் இருந்தே அது ஆரம்பமாகிறது என்றும் தெரிவித்தார்.

“வாய்வழி சுகாதாரம் இந்தப் பயணத்தின் முக்கியமானதொரு பகுதியாகும்” எனக் கூறிய பிரதமர், “ஆரோக்கியமான புன்னகை என்பது பலமான பற்கள் இருப்பது மட்டுமல்ல, அது நல்ல ஊட்டச்சத்துடனும், ஒரு குழந்தையின் கற்றல் திறனுடனும், ஒரு வளர்ந்தோரின் உழைப்புத் திறனுடனும், ஒவ்வொரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வு, கௌரவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்” எனத் தெரிவித்தார்.

உலகளாவிய தரவுகளை எடுத்துக்காட்டிய பிரதமர், உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கையில், குழந்தைகளிடையே பல் சொத்தை, பெரியவர்களிடையே பரவலாகக் காணப்படும் ஈறு நோய், மற்றும் புகையிலை பயன்பாடு, பாக்கு மெல்லுதல், வெற்றிலை உபயோகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்புடைய ஆண்களிடையே அதிக அளவில் காணப்படும் வாய்வழி புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் இன்னும் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

தொற்றா நோய்களின் தேசிய சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பு சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பாடசாலை பல் மருத்துவ சேவைகள் மற்றும் சமூக ரீதியிலான சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட வெற்றிகரமான முன்முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார்.

மருத்துவ சமூகமானது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கவும், உள்நாட்டு ஆராய்ச்சித் திறன்களைப் பலப்படுத்தவும், நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளைத் தமக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பல் மருத்துவத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை வரவேற்ற பிரதமர், இத்துறையில் அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதுடன், நிபுணத்துவ பயிற்சி, ஆராய்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் பதவிகளிலும் அவர்களுக்குச் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, இலங்கை பல் வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க, முன்னணி பல் வைத்திய நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக வழிபாட்டுத் தலங்களை மாற்றி அமைக்க எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விஹாரைகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத வழிபாடுகளுக்கு மட்டுமன்றி, நற்பண்புகளை வளர்க்கும், சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வாதுவ, பொஹொத்தரமுல்ல ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மஹா நிகாயவின் மஹிகர்ஜனாராம விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்தூபியின் கும்பத்தைத் திறந்து வைத்தல் மற்றும் பிக்கு வாசஸ்தலத்தை திறந்து வைத்தலுக்கான விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ஜூன் 26 ஆம் திகதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்தூபியின் கும்பத்தைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக, எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதிராஜ தர்மாயத்தனத்தின் அதிபரும், தெற்கு இலங்கையின் பிரதம சங்கநாயக்கரும், சிங்கப்பூர் மற்றும் மலேசிய போதிராஜ நிலையங்களின் அதிபருமான கலாநிதி வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்த பிரதமர், சூழல் தூய்மை மற்றும் பாடசாலைகளின் ஒழுக்கப் பண்புகளை மேம்படுத்தல் மற்றும் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

அதனைக் தொடர்ந்து, விஹாரையின் புதிய தூபியின் கும்பத்தினை திரைநீக்கம் செய்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், தூபிக்கு மலர் பூஜையைச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

இந்த விஹாரையின் தூபிக் கும்பத்தினை திரைநீக்கம் செய்து வைத்து, புதிய பிக்கு வாசஸ்தலத்தை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் இந்த உன்னதமான புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இது இந்த விஹாரையின் எதிர்காலப் பயணத்தில் எடுத்து வைக்கப்பட்ட ஒரு புதிய படியாகும்.

இது, கடந்த கால விழுமியங்களைப் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததிக்கு அந்த உறுதியான உரிமைகளைக் கையளிக்கும் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும்.

வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதென்பது வெறுமனே செங்கல், மணல் கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது மாத்திரமல்ல. அது மக்களின் இதயங்களை ஒன்றிணைத்து, நற்பண்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் சூழலை உருவாக்கும் ஒரு பணியாகும். அந்தப் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.

சமூகத்திற்கும் விகாரைக்கும் இடையே பெரும் பிணைப்பு இருக்கின்றது. அது சமூக வாழ்வுடனும் ஒழுக்கத்துடனும் ஒன்று கலந்த விடயமாகும்.

ஆயினும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்களின் வேலைப்பளு மிக்க வாழ்க்கை முறையினால் அந்தப் பிணைப்பு குறைந்திருப்பதை எம்மால் உணரக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், நமக்குத் துன்ப துயரங்கள் ஏற்படும்போது, சிக்கல்கள் வரும்போது முதலில் நினைவுக்கு வருவது நமது மதமே. ஏனெனில் அது நமது ஆன்மாவிற்குள் இருக்கும் ஒரு விடயமாகும். ஒரு நாடு பொருளாதாரத்தால் மாத்திரம் முன்னேறுவதில்லை.

மக்களின் சிந்தனைகள் தூய்மையாகி, ஒழுக்கம் மேலோங்கும்போதே ஒரு நாட்டில் உண்மையான மறுமலர்ச்சி ஏற்படும். அந்தப் பயணத்திற்கு மகா சங்கத்தினரும் இத்தகைய விகாரைகளும் பெற்றுக்கொடுத்து வரும் முழுமையான பங்களிப்பை நான் இந்த வேளையில் கௌரவத்துடன் பாராட்டுகிறேன்.

இந்நாட்டின் பண்டைய பௌத்த அறிவுடன் பின்னிப்பிணைந்திருக்கும் கலாச்சாரம் பற்றி ஆராய்வதற்காக அனுராதபுரம், திஸ்ஸமஹாராமய மற்றும் யாப்பஹுவ ஆகிய பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மல்வத்து மஹா விஹார பிரிவின் மேல் மாகாண பிரதம சங்கநாயக்கர், கொரொஸ்தூவ வஜ்ரகொத் மஹா விஹாராதிபதி, அகில இலங்கை சாசனாரக்ஷக பல மண்டலத்தின் முன்னாள் பதிவாளர் சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய கோனதுவே குணானந்த தேரர், யடவர தர்ம வர்தனாராமதிபதி மிள்ளனிய சாசனாரக்ஷக பல மண்டலத்தின் தலைவர் பாயாகல பிரதேச சங்க சபையின் உபாதயாய பரித்த பாணக்க பூஜ்ய யடவர ஞானசிறி தேரர், நெஹின்ன ஸ்ரீ விசுத்தாராமதிபதி வினய விசாரத பரித்த பாணக்க வணக்கத்துக்குரிய படதூவே சிறிவிமல நாயக்க தேரர் மற்றும் வாதுவ பொஹொத்தரமுல்ல ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ நிகாய மஹிகர்ஜனாராம விஹாரையின் நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி, பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், களுத்துறை பிரதேச சபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid தலைமையிலான யுனிசெப் பிரதிநிதிகள் குழு, ஜூன் 25 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேலும் பலப்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும் அவற்றுக்கு பதிலளிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது, குறிப்பாக ’தித்வா’ சூறாவளி பாதிப்பின் போது இலங்கைக்கும், கல்வி மற்றும் ஆரம்பகாலக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான முன்முயற்சிகளுக்கும் யுனிசெப் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் பாராட்டினார்.

இலங்கை கொள்கை உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய சவாலாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குழந்தை பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு தரப்பினருக்கிடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதன் அவசியத்தையும், குழந்தை பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முன்னிலை உத்தியோகத்தர்களின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

குழந்தை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பரிந்துரைக்கும் வழிமுறைகளில் காணப்படுகின்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை யுனிசெப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்தோடு, குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கும் உதவியைப் பெறுவதற்கும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய பொறிமுறைகளை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, முன்களப் பணியாளர்களின் திறன்களைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம், குறிப்பாக உளவியல்-சமூக ஆதரவு, முன்கூட்டிய கண்டறிதல், நேரடி அறிகுறிகளை இனங்காணுதல், திறம்பட செவிமடுக்கும் உத்திகள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய துறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்களில், குழந்தைகளை இணையவழி வன்முறை மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவமும், டிஜிட்டல் சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் தேவை ஆகிய விடயங்களை வைத்தியர் Najat Maalla M’jid அவர்கள் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid, யுனிசெப் பிரதிநிதி திருமதி Emma Brigham, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

2026 அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கின்ற "இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு (SLEIS 2026)" குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் நாட்டின் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், நாட்டின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்த உச்சிமாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என இலங்கை வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, பிரதி உப தலைவர் வினோத் ஹைட்ராமணி, செயலாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷிரான் பெர்னாண்டோ, பிரதி செயலாளர் நாயகம் / பிரதம செயற்பாட்டு அதிகாரி அலிகி பெரேரா மற்றும் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவின் பிரதம பொருளாதார நிபுணர் அனகி ரொட்ரிகோ-வீரசேகர உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு