ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் அரசியல் கலாசாரம் தற்போது மீண்டும் திருப்ப முடியாத வகையில் சாதகமான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார்.
அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவதுடன், பொருளாதார அபிவிருத்தியின் பயன்கள் அனைத்து இன மக்களுக்கும் சமமாகச் சென்றடையும் வகையிலான ஓர் ஆட்சி தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாக, நிகழ்வில் உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய அரசியல் கூட்டங்கள் போன்றன்றி, அங்கு வருகை தந்திருந்த இலங்கையர்கள் பிரதமர் மற்றும் அமைச்சரிடம் நேரடியாகக் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் திறந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டுக் குழுவினர், இரவு உணவு உட்பட அனைத்துச் செலவுகளும் பங்கேற்றவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டதோடு, பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப் பழகிய எதிர்க்கட்சித் தரப்பினர், இத்தகைய வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயற்பாடுகளைக் கண்டு குழப்பமடைவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு