பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை உறுதிப்படுத்தப்படும்
ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும், பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மத்திய பஸ் நிலையம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, ஏப்ரல் 08 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான, வசதியான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
மறுசீரமைப்புப் பணிகளின் போது பெண்களின் வசதிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தமையைப் பிரதமர் இதன்போது பாராட்டினார். குறிப்பாக, தூர இடங்களிலிருந்து வருகை தரும் பாலூட்டும் தாய்மார்களுக்காக, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஓய்வறை பிரதமரின் விசேட பாராட்டைப் பெற்றது.
பயணிகளுக்கான ஆசன ஒதுக்கீடு முறைகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பஸ் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு அறை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடிய பிரதமர், நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் போக்குவரத்துச் சேவையின் தரம் குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பொதுமக்கள் கௌரவமான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான சேவையாகவும் மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என இதன்போது பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் ஊடகப் பிரிவு