இலங்கைக்காக ஆற்றிய 90 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இலங்கை முஸ்信லிம் பெண்கள் சங்கத்திற்கு (Ceylon Moor Ladies Union - CMLU) தனது பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இச்சங்கமானது தலைமுறைகள் கடந்து எண்ணற்ற உயிர்களை மாற்றியமைத்த கருணை, பெண் வலுவூட்டல் மற்றும் சமூகத் தலைமைத்துவத்திற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாகுமெனத் தெரிவித்தார்.
ஜூலை 18, கொழும்பு Ramada ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது பிரதமர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதையிட்டு இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தங்களது ஆரம்பக்கால நோக்கத்திற்கு உண்மையாகவும், சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்பவும் தங்களை மாற்றியமைத்துக்கொண்டு, ஒன்பது தசாப்தங்களாகத் தொடர்ச்சியான சேவையை முன்னெடுத்துள்ள தன்னார்வ நிறுவனங்கள் மிகச் சிலவே காணக்கூடியதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்நிகழ்வானது ஒரு நிறுவனத்தின் வரலாற்றைக் கொண்டாடுதல் மாத்திரமல்லாது, யாருடைய வாழ்வு மாற்றியமைக்கப்பட்டதோ அந்தப் பிள்ளைகளுக்கும், எவரது அர்ப்பணிப்பு இந்த அமைப்பைத் தக்கவைத்துள்ளதோ அந்தப் பெண்களுக்கும், இதன் பணிகளால் பலப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் முன்னேற்றமானது பெண்களின் அர்த்தமுள்ள பங்களிப்புடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை வலியுறுத்திய பிரதமர், கல்வி, பொருளாதாரம், சமூகத் தலைமைத்துவம் மற்றும் பொது வாழ்வில் சமமாகப் பங்களிப்பதற்காகப் பெண்களை வலுவூட்டுவதானது நிலையான அபிவிருத்திக்கும், பலமான குடும்பக் கட்டமைப்பிற்கும் மற்றும் அதிக நெகிழ்ச்சித்திறன் கொண்ட சமுதாயத்திற்கும் அடிப்படை அடித்தளமாகும் எனத் தெரிவித்தார். தரமான கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்புகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றிற்கான சமமான அணுகல் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
உண்மையான நலன்புரி என்பது உடனடி உதவிகளை வழங்குதல் மாத்திரம் அல்ல எனவும், கல்வி, திறன் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதன் மூலம், மனிதர்களுக்கு பாதுகாப்பான கௌரவமான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளத்தக்க வகையில் வலுவூட்டுதலாகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
பாதிப்புகளுக்கு உள்ளாகத்தக்க சமூகங்களைப் பாதுகாக்கும் அதேவேளையில், வலுவூட்டல் மற்றும் சுதந்திரத்திற்கான வழிகளை உருவாக்கும் நலன்புரி அமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதமர் வலியுறுத்தினார்.
சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பினைப் பற்றி கருத்து தெரிவித்த பிரதமர், அரசாங்கங்கள் கொள்கைகளை வகுத்து பொதுச் சேவைகளை வழங்கி வந்த போதிலும், பல சமூகச் சவால்களை எதிர்கொள்வதற்குச் சமூக அமைப்புகளின் கருணை, அர்ப்பணிப்பு, தலையீடு ஆகியன கட்டாயத் தேவைகள் ஆகும் எனக் குறிப்பிட்டார். அரசாங்க நிறுவனங்களுக்கும் இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கும் இடையிலான கூட்டுறவு மூலம், சிறுவர் பாதுகாப்பைப் பலப்படுத்துதல், குடும்பங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூகங்களைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்குப் பாரிய பங்களிப்பை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் வாழ்நாள் கால அங்கத்தவர்களுக்கான கௌரவிப்புகளை வழங்கி வைத்த பிரதமர், நற்பண்புகள் கொண்ட இளம் பெண்களை வளர்த்தெடுப்பதற்கும், அவர்களிடம் நெகிழ்ச்சித்திறன் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், கருணை மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும் அவர்கள் கொண்டுள்ள தளராத அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு, நிலையான அபிவிருத்தியை உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு இத்தகைய பண்புகள் இன்றியமையாதவை எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் 90ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விசேட நினைவு மலர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அதன் முதல் பிரதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்திய ரிஸ்வி சாலிஹ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ், மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வ்ராய் கெலீ பல்தஸார், தூதுவர்கள், இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், விசேட விருந்தினர்கள், பிள்ளைகள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு