பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.12.01 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

1957 இல், கொழும்பில் தூதரகப் பணியை ஆரம்பித்த முதல் அரபு நாடு என்ற வகையில் எகிப்துக்கு உரிய கௌரவத்தை அளித்து, நீண்ட காலமாக இருந்துவரும் இருதரப்பு உறவை நினைவுகூர்ந்து பிரதமர் எகிப்திய தூதுக்குழுவை வரவேற்றார்,

பல தசாப்தங்களாக இருந்துவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை நினைவு கூர்ந்த எகிப்து தூதுவர், சர்வதேச மட்டத்தில் இலங்கை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

எகிப்தின் தேயிலை சந்தைக்குள் மீள் பிரவேசம் மற்றும் எகிப்து ஊடாக ஏனைய ஆபிரிக்க நாடுகளின் தேயிலை சந்தைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஆடைகள் போன்ற உழைப்பை மையமாகக் கொண்ட கைத்தொழில்களைப் பார்க்கிலும் இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்திற்கு உயர்தொழில்நுட்ப உற்பத்திகளின் முக்கியத்துவம் குறி்த்து வலியுறுத்தப்பட்டது.

இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அரபு-இலங்கை வர்த்தக மன்றத்திற்கு எகிப்து ஏற்கனவே தமது உயர் முன்னுரிமையை வழங்கியுள்ளது.

இலங்கையின் சுற்றுலா வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம், உலகிற்கு வசதியான சுற்றுலாத் தலமாக நாட்டை ஊக்குவிப்பதில் தூதுவர் கவனம் செலுத்தினார்.

இலங்கை மாணவர்களுக்கு அரபு மொழி கற்பதற்கு வசதியாக சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்த அரபு மொழி ஆசிரியர்களை மீண்டும் அழைத்து வர எகிப்து தயாராக உள்ளதுடன், அதற்கான அனைத்து செலவுகளையும் எகிப்து அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கும் மேலதிக நன்மையை சேர்க்கும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, பிரதமரின் ஆலோசகர் சுசிறிபால தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு