தெற்காசியாவிலேயே அரசியல் குடும்பப் பின்னணியின்றி பிரதமர் பதவிக்கு தெரிவான முதல் பெண் பிரதமராக புதிய பிரதமர் பதவியேற்பு

இலங்கையின் 16வது பிரதமராக பதவியேற்ற கலாநிதி ஹரிணி அமரசூரிய 24, செப்டம்பர் 2024 பிற்பகல் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெற்காசியாவிலேயே அரசியல் குடும்பப் பின்னணி எதுவுமின்றி பிரதமர் பதவிக்கு தெரிவான முதல் பெண் பிரதமர் ஆவார்.

மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அதற்காக அனைவரது அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமரின் செயலாளர் திரு. ஜி. பிரதீப் சபுதந்திரி அவர்களும் பிரதமர் செயலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர்களான ஹர்ஷ விஜேவர்தன, மஹிந்த குணரத்ன, சிரேஷ்ட உதவிச் செயலாளர் டி. மாஷங்க எச்.லியனகே மற்றும் பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு