வெசாக் பண்டிகைக்கு இணைவாக ’புத்த ரஸ்மி வெசாக் வலயம்’ இம்முறையும் 4 நாட்கள் இடம்பெறும்.

2025 வருடாந்த வெசாக் பண்டிகைக்கு இணைவாக இடம்பெறவுள்ள, கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காராம விகாரை மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்யும் ’புத்த ரஸ்மி வெசாக் வலயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ தலைமையில் மார்ச் 12ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

’புத்த ரஸ்மி வெசாக் வலயம் 2025’ மே மாதம் 13ஆம் திகதியிலிருந்து இடம்பெறவுள்ளதுடன் ஹூணுப்பிட்டிய கங்காராம விகாரை, அலரி மாளிகை வளாகம், பெரஹெர மாவத்தை மற்றும் பேர வாவியை அண்மித்ததாக வெசாக் வலயம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முப்படையினர், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சிறைச்சாலை கைதிகளினால் வெசாக் அலங்காரங்கள், வெசாக் தோரணம் மற்றும் வெசாக் வெளிச்ச கூடுகள் கண்காட்சி இடம்பெறும். இதற்கு இணைவாக அரச பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் விசேட மத நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கங்காராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம ரதனசார தேரர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் எச்.எஸ்.எஸ்.துய்யகொந்தா, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யு.பீ.சேனாதீர, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்றிகோ உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்கள் பலவற்றின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு