இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் திருமதி Anne-Marie Descotes அவர்களை சந்தித்தார். டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் பற்றி பொதுச்செயலாளர் Descotes அவர்கள் இங்கு விளக்கினார். அத்துடன் சமுத்திரவியல் ஆய்வு தொடர்பான பிராந்திய நிலைய (RCMS) ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றியும் மேலும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், கல்வி, விசேடமாக கல்வியின் தரம், தொழிற்கல்வியை வலுவூட்டல், காலநிலை மாற்றங்கள், சூழல் பாதுகாப்பு மற்றும் சமுத்திரவியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலும் ஒன்றிணைந்து செயற்படல் குறித்து பொதுச்செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது இருநாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகளும் குறிப்பாக பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி ) திரு மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவிற்கான துணைப் பணிப்பாளர் A.T.U அதுரலிய ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர்.
பிரதமரின் ஊடக பிரிவு