பிரதமருக்கும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் கௌரவ லீ மியோன் (Lee Miyon) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 2025 ஒக்டோபர் 21ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கல்விச் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதிலும் இலங்கையின் கல்வித் துறையின் டிஜிட்டல்மயப்படுத்தல் மீதும் விசேட கவனம் செலுத்தி, இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, குளியாப்பிட்டிய தேசிய கல்வியியற் கல்லூரியை ஒரு மாதிரித் தொழில் பயிற்சி நிறுவனமாக அபிவிருத்தி செய்தல், தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் தொழில்சார் பாடங்களை உள்வாங்குதல், இப் பிரிவில் விசேட ஆசிரியர் பயிற்சியை வழங்குதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது, இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கொரியக் குடியரசு தொடர்ச்சியாக ஆதரவளிப்பைப் பெற்றுத் தருவதாக, தூதுவர் லீ மியோன் (Lee Miyon) உறுதியளித்தார். அத்தோடு குறிப்பாக, கல்வித் துறையை பெரும்பாலான மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் விரிவாக்குவதில் அந்நாடு கொண்டிருக்கும் ஆர்வத்தினையும் அவர் வெளிப்படுத்தினார்.

இச்சந்திப்பில் இரு தரப்பினதும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கொரியத் தூதுக்குழுவில், பிரதி தூதுவர் Ms. Eunji Kang, கொழும்பிலுள்ள கொரியக் குடியரசின் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர்Ms. Soojung Lee ஆகியோரும், இலங்கைத் தூதுக்குழுவில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புதந்திரி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கிழக்காசிய மற்றும் ஓசனியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சவித்ரி பனபோக்க , உதவிப் பணிப்பாளர் திருமதி அனுராதா ஜெயசிரிஆகியோரும் இடம்பெற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு