நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும்.
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ’குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாடு’ (EVAC) ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் (ஜூன் 23 மற்றும் 24) நடைபெறும் இந்த பிராந்திய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பும் (SAARC), தெற்காசியாவிற்கான யுனிசெப் (UNICEF) பிராந்திய அலுவலகமும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய அலுவலகங்களும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதியின் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், இப்பிராந்தியத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் கலந்து கொள்கின்றனர் .
அடுத்த இரண்டு நாட்களில், பங்கேற்கும் நாடுகள் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், தீங்கு விளைவிக்கும் சமூகப் பழக்கவழக்கங்கள், குழந்தை திருமணம், சிறுவர் தொழிலாளர், தரவு மற்றும் ஆதாரங்களில் காணப்படுகின்ற இடைவெளிகள், வளப் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வன்முறைகள், துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான சவால்களுக்கான தீர்வுகளை ஆராயவுள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முறைசார்ந்த அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, குழந்தை பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது நாட்டின் பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கிய ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
கல்வி முறையானது குழந்தைகளுக்கு மிகவும் பலமானதொரு சூழலாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்றும், அது கற்றலுக்கானதொரு இடமாக மாத்திரமின்றி, குழந்தை பாதுகாப்பிற்கான முக்கியமான தளமாகவும் செயல்படுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாடசாலைகள் கல்வி கற்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், உளவியல் சமூக ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் தலையீடுகளுக்கான முக்கியமான இடங்களுமாகும். பரிந்துரைக்கும் பொறிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை இலங்கை தொடர்ந்தும் பலப்படுத்தி வருகின்றது எனத் தெரிவித்தார்.
அத்தோடு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குழந்தை பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதல், கற்றல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் நிலையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகவே இவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் SAARC அமைப்பின் செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர், இலங்கையின் யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மல்லா மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு