பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க “19-ஆம் நூற்றாண்டின் இலங்கைக் காட்சிகள்” கலைக் கண்காட்சியில் பிரதமர் பங்கேற்பு

ஜார்ஜ் கீட் அறக்கட்டளை மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “19-ஆம் நூற்றாண்டின் இலங்கைக் காட்சிகள்” (19th Century Views of Ceylon) கலைக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்நிகழ்வு பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் ஜூலை 30-ஆம் திகதி நடைபெற்றது.

வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் பொதுமக்களுக்காக நடத்தப்படும் முதலாவது கலைக் கண்காட்சி என்ற வகையில் இக்கண்காட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைகின்றது. எட்வர்ட் லியர் (Edward Lear), ஆண்ட்ரூ நிக்கோல் (Andrew Nicholl) மற்றும் கான்ஸ்டன்ஸ் கார்டன் கம்மிங் (Constance Gordon Cumming) உள்ளிட்ட புகழ்பெற்ற பிரித்தானியக் கலைஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட, இலங்கையைச் சித்தரிக்கும் அரிய கலைப்படைப்புகளின் தொகுப்பே இதில் காட்சிப்படுத்தப்பட்டது. பெரும்பாலும் தனிநபர் சேகரிப்புகளிலிருந்து பெறப்பட்ட இக்கலைப்படைப்புகள் பல, முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதுடன், அக்காலப்பகுதியில் வருகை தந்த கலைஞர்களின் பார்வையில் இலங்கையின் இயற்கை நிலப்பரப்புகள், கட்டிடக்கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க காட்சிப் பதிவுகளாக விளங்குகின்றன.

கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் கலைகளின் ஊடாக சர்வதேச கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், ஏற்பாட்டாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இக்கண்காட்சி, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் வரலாற்று ரீதியிலான உறவுகளைப் பிரதிபலிப்பதுடன், இலங்கையின் வளமான கலைப் பாரம்பரியம் பற்றிய ஆழமான மதிப்பீட்டையும் எடுத்துரைக்கின்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick), ஜார்ஜ் கீட் அறக்கட்டளையின் தலைவர் மாலக தல்வத்த, ஜார்ஜ் கீட் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், கலைஞர்கள், கலாசாரப் பிரமுகர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு