சுபவேளையில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைத்து, புத்தாண்டுச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பு
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன.
சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் காரக சங்க சபை உறுப்பினரும், மெதகம ஸ்ரீ சுனந்தாராம தர்மதூத பிரிவெனா மகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய துன்மோதர சமித்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா திரு. தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கலாசார விழாவில் பங்கேற்ற பிரதமர், ’வேலை ஆரம்பிக்கும்’ சுபவேளை உதயமானதும், இல்லத்தினரின் அழைப்பின் பேரில் அவ்வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டுவைத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இதன்போது பிரதமருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் அங்கிருந்த சிறுவர்களுடன் பாரம்பரிய தேசிய விளையாட்டுகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வந்த சுபவேளையில், கல்வி கற்பதில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுடன் இணைந்து அவர்களுக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வழிகாட்டிய பிரதமர், நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கல்வி மேம்பாட்டுக்கான சுப ஆரம்பத்தையும் உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமரும் ஏனைய அதிதிகளும் இல்லத்தினருடன் கைவிசேடம் செய்தல், பரிசுப் பரிமாற்றம் ஆகியவற்றில் பங்கேற்றனர். பின்னர் புத்தாண்டுக்கான உணவு உண்ணும் சடங்கிலும் கலந்துகொண்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சௌபாக்கியம் மிக்க புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இலங்கை எதிர்கொண்ட பல்வேறு சவால்களைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்குப் பங்களிப்பு வழங்கிய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், "சூரியப் புத்தாண்டானது புத்துணர்வையும் தூய்மையையும் பிரதிபலிப்பதுடன், சூரியன் நம் அனைவருக்கும் உயிர் கொடுப்பதை இது நினைவூட்டுகின்றது" எனக் குறிப்பிட்டு, அனைவருக்கும் அமைதி மற்றும் சௌபாக்கியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர், மாநகர முதல்வர், பிரதேசச் செயலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு