இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அபிவிருத்தி மற்றும் சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் விசா பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து சுவீடன் அரசாங்கம் கவனம்

இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான சுவீடன் தூதுவர் திரு. ஜான் தெஸ்லெஃப் அவர்களுக்கும் இடையில் நேற்று (2024.10.04) பிற்பகல் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதன்போது புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு சுவீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார்.

சுவீடன் அரசாங்கத்தின் முதலீடுகள் முதன்மையாக இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுவீடன் தூதுவர் திரு. ஜான் தெஸ்லெஃப் குறிப்பிட்டார்.

சிறுவர் போஷாக்கு பிரச்சினை தொடர்பில் சுவீடன் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டுவந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதாரக் குறிகாட்டிகளைப் பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்களிடையே போசாக்கு சவால்கள் இன்னமும் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வீசா சிரமங்கள் குறித்தும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுவீடன் தூதுவர் திரு.ஜான் தெஸ்லெப்பின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சுவீடனுக்கான இலங்கை தூதுவர் சஞ்சய் சுமந்திரி குலதுங்க, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி கே குணசேகர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு