பிரதமருக்கும் JICA நிறுவனத்தின் புதிய தலைமைப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அபிவிருத்தி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பிரதிநிதி திரு. கென்ஜி குரோனுமாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 5 ஆந் திகதி இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, JICA நிறுவனம் குறிப்பாக கல்வித் துறையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். புதிதாக நியமனம் பெற்றிருக்கும் திரு. குரோனுமாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், JICA நிறுவனம் இலங்கைக்கு வழங்கிவரும் தொழில்நுட்ப உதவிக்கு நன்றி தெரிவித்தார். தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பின் இலக்குகளுக்கு பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய புதிய சீர்திருத்தங்களுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் பிரதமர் வலியுறுத்தினார்.

விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கான கல்வியை வலுப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய துறைகளில் அனைத்து துறைகளிலும் விசேட கல்விப்பிரிவுகளை நிறுவுதல், ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டங்களை திருத்துதல் மற்றும் முக்கிய தேவை மதிப்பீடுகளை நடத்துதல் ஆகியவை அடங்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு தொழில் பயிற்சி, மற்றும் ஜப்பானிய மொழி பயிற்சி திட்டங்களை நடத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் சிரேஷ்ட JICA அதிகாரிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் உட்பட பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த வெளியுறவு அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் ருவன்தி தெல்பிட்டிய, உதவி பணிப்பாளர் கயங்கா டயஸ் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு