அபிவிருத்தி என்பது சூழலைப் புறக்கணித்துவிட்டு அடையக்கூடிய ஒரு வெற்றியல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

சுற்றாடல் பாதுகாப்பை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அதனை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், சூழலை மறந்துவிட்டு முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தியும் இவ்வுலகில் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பத்தரமுல்ல “அபே கம” வளாகத்தில் இன்று (02) நடைபெற்ற உலக சதுப்புநில தின நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, “சதுப்பு நிலங்களையும், பாரம்பரிய அறிவுடன் பின்னிப்பிணைந்த கலாசார மரபுரிமைகளையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளிலான தேசிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, ’கோனமெரியாவ’ எனும் பிரதேசத்தைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகச் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தினார். அத்துடன், நீர்வீழ்ச்சிகளின் விபரத் திரட்டு (Waterfall Directory), மற்றும் “Wetlands Sri Lanka” சஞ்சிகை ஆகியன இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதோடு, உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அகில இலங்கைச் சித்திரப் போட்டியின் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நமது நாட்டின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைமை மற்றும் விவசாய நடைமுறைகளுக்குள் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத ஒருவித விசேட விஞ்ஞான அறிவு பொதிந்திருக்கின்றது. அறிவு என்பது ஒரு வடிவத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எமது பிள்ளைகள் இந்தப் பாரம்பரிய அறிவைக் கற்க வேண்டும். எமது நீர்ப்பாசன மற்றும் விவசாய முறைமைகள் இயற்கையைப் பாதுகாக்கும் ஒருவித விஞ்ஞானமாகும்.

சதுப்பு நிலங்கள் என்பது வெறும் சேற்று நிலங்கள் மாத்திரமல்ல; அவை நாட்டின் நீர் பாதுகாப்பு, காலநிலை ஸ்திரத்தன்மை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் ஓர் இயற்கைக் கேடயமாகும். அண்மையில் ஏற்பட்ட சூறாவளி போன்ற காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குச் சூழலைச் சரியான முறையில் பாதுகாப்பது அவசியமாகும். ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ எனும் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படை அத்திவாரம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதேயாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு