பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட தருணத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதன்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் இதன்போது விளக்கினார்.
மண்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களுக்கு அண்மையிலுள்ள பாடசாலைகளை மீண்டும் அதே இடங்களில் திறப்பது ஆபத்தானது என்பதால், அத்தகைய பாடசாலைகளை இனங்கண்டு, விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையில் அவற்றை மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களுக்கு மேலதிகச் சுமையை ஏற்படுத்தாத வகையில் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டிற்கு அடுத்தபடியாகப் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் பாடசாலை என்பதால், அங்கு அவர்களின் உள ஆரோக்கியம் மேம்படும் எனத் தாம் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல், சில பாடசாலைகளை ஒன்றிணைத்து நடத்திச் செல்லல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் மூலம் கற்றல் - கற்பித்தல் செயன்முறையை எளிதாக்குதல் மற்றும் விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்ற விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து நீண்டகாலத் தீர்வுகளைக் காண்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், அதற்காகச் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் பாராட்டிய யுனிசெப் பிரதிநிதிகள், அரசாங்கத்திற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், எதிர்கால நடவடிக்கைகளை இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham), லட்சுமி சுரேஷ்குமார், நிஷாந்த சுபாஷ், யஷிங்க ஜயசிங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விப் பணிப்பாளர் தக்ஷிண கஸ்தூரியாராச்சி, பிரதிப் பணிப்பாளர் கசுன் குணரத்ன மற்றும் உதார திக்கும்புர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு