​தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான குழுவின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதமரின் விசேட கவனம்

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் மார்ச் 23ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

​இதன்போது, தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக அக்குழுவினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததோடு, குழு உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பிலும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது என்பது நீண்டகால மற்றும் சிக்கலானதொரு செயல்முறை என்பதை வலியுறுத்திய பிரதமர், அவசரமான தீர்மானங்களைத் தவிர்த்து, உயர்கல்வித் தரநிலைகளுக்கு இணங்கவும், தற்போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் கே. எல். வசந்த குமார, அகில இலங்கை தாதியர் சபையின் பிரதநிதிகள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

​பிரதமர் ஊடகப் பிரிவு