தேசிய மாணவ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மாணவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அலரி மாளிகையைப் பார்வையிடும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
புதிய கல்வி மறுசீரமைப்பானது மாணவர்கள் என்ற ரீதியில் நேரடியாகத் தங்களைப் பாதிக்கும் ஒரு விடயம் என்றும், புதிய தொழில்நுட்ப உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு கல்வி மறுசீரமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் புத்தாக்கம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் குறிப்பிட்ட மாணவ பாராளுமன்றப் பிரதிநிதிகள், கல்வி மறுசீரமைப்பிற்காகத் தமது நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்:
புதிய கல்வி மறுசீரமைப்பை அண்மையில் நாம் முதலாம் தரத்திலிருந்து ஆரம்பித்தோம். இவ்வருடம் 6ஆம் தரத்திற்குப் பிரவேசிக்கும் பிள்ளைகளைப் புதிய கல்வி மறுசீரமைப்பிற்குள் உள்வாங்குவது குறித்துத் தற்போது கலந்துரையாடி வருகின்றோம். புதிய கல்வி மறுசீரமைப்புகளை நாம் நிறுத்தப்போவதில்லை. குறைகளற்ற முறையில் முறையாகப் புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்கவே நாம் முயற்சிக்கின்றோம். அதற்காக ஐந்து பிரதான துறைகளின் ஊடாகச் செயற்பட்டு வருகின்றோம். ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதும்; மனிதநேயம் மிக்க, சுற்றுச்சூழலை நேசிக்கின்ற, மனிதாபிமானப் பண்புகள் நிறைந்த, சமூகத்திற்குப் பொறுப்புக்கூறத்தக்க ஒரு பிரஜையை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும், எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதித் கல்விப் பணிப்பாளர் கசுன் குணரத்ன உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவ பாராளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு