கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை பிரிவுகளில் நீண்டகாலமாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தரமான மற்றும் போதுமானளவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ருவன்வெல்லை நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டம் இன்று (29) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக 25.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது ஒரு நாளைக்கு 4,000 கன மீட்டர் நீர் சுத்திகரிப்பு கொள்ளவைக் கொண்டதாகும். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2028 ஆம் ஆண்டில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கொரியா நாட்டின் தூதுவர் மியோன் லீ ஆகியோர் நினைவுப் பலகையை திறந்து வைத்ததைத் தொடர்ந்து முதல் நீர் விநியோகமும் தன்னியக்கமாக திறந்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றினார்.
இன்று முதல், ருவன்வெல்லை பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், அதற்காகவே இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கமாக, இதுபோன்ற திட்டங்களுக்கு நாங்கள் பெரும் தொகையைச் செலவிடுகிறோம். அது ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் இன்று உங்களுக்கு வழங்கப்படும் இந்த திட்டத்தைப் பாதுகாத்து, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று நான் உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.
"வளமான நாடு அழகான வாழ்க்கை" என்பது எமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமாகும். அதனை மக்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் வழங்குகவதற்காகத்தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இது போன்ற ஒரு திட்டத்தை உங்களுக்கு வழங்குவது என்பது உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தி அழகுபடுத்துவதாகும்.
ருவன்வெல்லை மேல் மாகாணத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு பிரதேசம், அத்தோபடு அது சுற்றுலாத் துறைக்கும் பிரசித்திபெற்றதாகும், எனவே இதுபோன்ற ஒரு நீர் திட்டம் அத்தகைய பகுதிக்கு மிகவும் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்.
இத்திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார, சுகாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக தாமதமானது. இந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்க வழிசெய்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய கொரிய நாட்டின் EXIM வங்கிக்கும் எமது அரசாங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் தீப்தி யு. சுமனசேகர மற்றும் அரசாங்க அதிகாரிகள் உட்பட பெருமளவான பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு