உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
குறிப்பாக இலங்கையின் பசுமைப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பேண்தகு முன்முயற்சிகளை முன்கொண்டுசெல்வதில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான முக்கிய துறைகள் குறித்த பயனுள்ள கலந்துரையாடலொன்று இதன்போது இடம்பெற்றது.
திருமதி ஹெலினா மெக்லியோட் மற்றும் அவரது தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், நாட்டில் பேண்தகு அபிவிருத்தியை மேம்படுத்துவதில் GGGI இன் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார். பெரிய அளவிலான விவசாயத் திட்டங்ளுக்கு வசதிகளை அளிப்பதில் பேண்தகு நிதியளிப்பு பொறிமுறைகளின் பங்கு உட்பட பல முக்கியமான விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து கவனம் செலுத்தும் " Clean Sri Lanka " திட்டத்தின் முன்னேற்றத்துடன், சூழல் பாதிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பேண்தகு போக்குவரத்து தீர்வுகளுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி பிரதமர் இதன்போது விளக்கினார்.
இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, சுற்றாடல் அமைச்சின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் குலானி கருணாரத்ன, அமைச்சின் சமுத்திர வளங்கள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் துலஞ்சி ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு