நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அது அடிமட்ட மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
’போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்கான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம்’ குறித்த விளக்கமளிக்கும் கூட்டம், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரின் பங்கேற்புடன் இன்று (மார்ச் 13) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் அதிகரித்து வரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட, சான்றுகளின் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகமயப்படுத்தல் ஆகிய பணிகளைப் பலப்படுத்துவதை இந்த மூலோபாயத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிதல், தொடர்ச்சியான பராமரிப்பு, சமூகம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் குணமடைந்த நபர்களை மீண்டும் சமூகத்தில் இணைத்தல் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. ஆரம்ப சுகாதார மற்றும் வெளிநோயாளி மட்டங்களில் பரிசோதனைகளைப் பலப்படுத்துதல், வைத்தியசாலை சிகிச்சை மற்றும் கண்காணிப்புச் சேவைகளை மேம்படுத்துதல், புனர்வாழ்வு பெறுவதற்கான வதிவிட வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுக்கும் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற முக்கிய பரிந்துரைகள் இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள் இருக்கும் தாய்மார் மற்றும் சிறைக்கைதிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிரான தேசியப் பொறிமுறையைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது குடும்பங்களின் ஸ்திரத்தன்மைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் பாரிய சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகச் சட்ட அமுலாக்கத்திற்கும் புனர்வாழ்வுக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் ஊடகங்களின் பொறுப்புமிக்க செய்தி அறிக்கையிடல் ஆகியவற்றை இந்த தேசிய மூலோபாயத்தின் முக்கிய அங்கங்களாக உள்வாங்குவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், இலங்கை பொலிஸ், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு