பல நாடுகளில் இருந்து பிரதமருக்கு வாழ்த்து!

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவை 2024.10.02 ஆந் திகதி பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்த பல நாடுகளின் தூதுவர்கள், தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, கொரியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவில் பிரதமர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதமருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கியும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அமைதியான தேர்தல் குறித்தும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் கூடிய தொலைக்காட்சி ஒளிபரப்புகளை டிஜிட்டல் மயமாக்குதல், ஜப்பானின் மானியங்கள் மற்றும் கடன்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் அவர்கள், நாட்டில் நிலையான ஆட்சியைப் பேணுவதன் முக்கியத்துவம், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டதுடன் , இலங்கையில் ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று வலியுறுத்தினார்.

இலங்கையில் கல்வி அபிவிருத்தியின் முன்னேற்றத்திற்கு தற்போதுள்ள நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங், அமைதியான மற்றும் ஜனநாயகத் தேர்தலை நடத்தி, சுமூகமான ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ததற்காக இலங்கையைப் பாராட்டுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இரு நாடுகளும் கல்வி, பெண்களை வலுவூட்டுதல், சிறுவர் சுகாதாரம், சுதேச வாசிகளுக்கான பன்மொழி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்தும் வீட்டு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன. முதலீட்டை ஈர்ப்பதற்காக இலங்கையில் பொருளாதார வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. மேலும், வினைத்திறனை மேம்படுத்த வரி சேகரிப்பு முறைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கொரிய அரசாங்கத்தின் வாழ்த்துக்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் தெரிவித்த கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஒற்றைச் சாளர செயன்முறையை (Single window process) நடைமுறைப்படுத்துதல், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் சாதகமான முதலீட்டு சூழலை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் திரு. அண்டலிப் இலியாஸ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இரு நாடுகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அண்மைய நிகழ்வுகளில் இருந்து கற்றுக்கொண்ட பெறுமதிமிக்க பாடங்கள் மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நல்லாட்சியின் ஸ்திரத்தன்மைக்கு சுயாதீன ஆணைக்குழுவின் பங்களிப்பையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் திரு. மசூத் இமாட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மாலைதீவு பிரஜைகள் எதிர்கொள்ளும் வீசா சவால்கள் குறித்து கவனம் செலுத்திய உயர் ஸ்தானிகர், மாலைதீவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்த விருப்பம் தெரிவித்ததுடன், மாலைதீவு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கு பிரதமர் கலாநிதி அமரசூரிய நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, கொரியா, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு