புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துதல் மற்றும் ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுதல் ஆகிய பணிகளுக்காக மேற்கொண்ட பயணத்தின் இடையே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையத்தைப் பார்வையிடுவதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (17) பிற்பகல் சென்றார்.
தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையம் இயங்கிவரும் பழைய மருந்துக் களஞ்சியசாலைக்குச் சொந்தமான கட்டடத்திற்குப் பதிலாக, நிரந்தரக் கட்டடமொன்றை நிர்மாணிப்பது குறித்தும், அதுவரை நிர்வாக மற்றும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான தற்காலிகக் கட்டடமொன்றைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நகர சபைக்குச் சொந்தமான கட்டடமொன்றைத் தற்காலிகமாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகப் புத்தளம் நகர முதல்வர் ரின்ஷாட் அஹமட் இணக்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன உள்ளிட்ட புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாணக் கல்வி அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு