கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் மூலம் பிள்ளைகள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையில் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
“கல்வித் துறையில் இடைவிலகும் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். எவரையும் கைவிட முடியாது. தொழிற்கல்வி என்பது இடைவிலகும் பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஏதேனும் ஒரு மருந்தல்ல. தொழிற்கல்வி பற்றி நாம் அப்படி சிந்திக்க கூடாது. தொழிற்கல்வியும் கல்வியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பாடசாலை கல்வி முறையிலேயே தொழிற்கல்வி பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
எல்லோரும் பொறியியலாளராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்க முடியாது. அப்படியிருக்கவும் வேண்டியதில்லை. அத்தகைய சமூகம் சமநிலையான சமூகம் அல்ல. சமூகம் இருப்பதற்கு பல தொழில்கள், திறன்கள் மற்றும் ஆற்றல்கள் அவசியம். கல்வி அமைப்பிலும் அந்தப் பாதை திறக்கப்பட வேண்டும். அத்தகைய வாழ்க்கைப் பாதைகளைத் திறக்கும் கல்வி முறையை நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.
குறிப்பாக 9 ஆம் வகுப்பிலிருந்து அந்த வகையில் அவர்கள் செல்லக்கூடிய திசையை விரிவுபடுத்தும் கல்வியை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். நீங்கள் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டியது கற்க முடியாது என்பதால் அல்ல. அது ஒரு தெரிவாகவே இருக்க வேண்டும். வைத்தியராவதைத் தேர்ந்தெடுப்பதும், விவசாயம், தச்சு போன்ற தொழில்களைத் தேர்ந்தெடுப்பதும் சம பெறுமானமுள்ள தேர்வாக இருக்க வேண்டும். அந்த மாற்றம் கல்வி முறையிலும் சமூகத்திலும் ஏற்பட வேண்டும். அதுதான் எங்களின் திட்டம்.
இது ஒரேயடியாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல, ஆனால் பத்து வருடங்களில் எந்தக் பிள்ளையும் கற்றலை கைவிடாத கல்வி முறையை உருவாக்க முயற்சிக்கிறோம். அதற்காக, பாடசாலை பாடத்திட்டத்தை மாற்றி, பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயிற்சியை சிறப்பாகச் செய்து, பொதுமக்களின் செயற்திறமான பங்களிப்பைப் பெறுவதற்கான திட்டத்தை தயாரித்துள்ளோம்.
இங்கு பொலன்னறுவை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, தற்போதுள்ள அத்தியாவசிய பாடசாலை உபகரண தட்டுப்பாடு, பாடசாலை கட்டிடங்கள் தொடர்பான பிரச்சினைகள், தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளால் பிள்ளைகள் வருகையின்மை, வன விலங்குகளால் பாடசாலைகளுக்கு ஏற்படும் சேதம் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
இந்த சந்திப்பில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார, சுனில் ரத்னசிறி, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏகநாயக்க, வடமத்திய மாகாண சபையின் தலைமைச் செயலாளர் ஜே.எம்.ஆர்.பி ஜயசிங்க, வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு