இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.
அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.
“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”
“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”
மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், அனர்த்தச் சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள்
மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, ’டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பார்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
’Rebuilding Sri Lanka’ திட்டத்தின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், இன்று (21) அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அனர்த்த நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கலைத் துரிதப்படுத்தி, உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை விரைவாக மறுசீரமைப்பதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.
’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களுக்காக 500 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நிறைவடைய வேண்டுமென்றும் குறிப்பிட்ட பிரதமர், இழப்பீடு வழங்கல் தாமதமாவதற்குப் பிரதேச மட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
இதன்போது, ’டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்குச் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு தெரிவித்தார். அதற்கேற்ப வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள், மீன்பிடித்துறை, தொழில் மற்றும் வாழ்வாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
25,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இதுவரை 99% நிறைவடைந்துள்ளதோடு, மீள்குடியேற்றத்திற்கான 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் 95% முடிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ’சுரக்ஷா’ நிவாரண மையங்களை மூடும் பணி 99% வரை முடிவடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு மேலதிகமாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா வழங்குதல். அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒவ்வொருவரினது குடும்பத்திற்கும் 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குதல். பெற்றோர் எவரையாவது அல்லது இருவரையும் இழந்த சிறுவர்களுக்கான இழப்பீடு வழங்கல். விசேட தேவையுடைய பாதிக்கப்பட்ட நபர்களுக்கான இழப்பீடு வழங்கல். சேதமடைந்த விவசாயச் செயற்பாடுகளுக்கான இழப்பீடு வழங்கல். பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்துதல். புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை மறுசீரமைத்தல், பிரதேச மட்டத்தில் துல்லியமான புள்ளிவிவரங்களை விரைவில் சேகரித்தல் மற்றும் உட்கட்டமைப்புகளை விரைவாக அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் தலைவரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜயந்த பண்டார மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி திரு.ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அலரி மாளிகைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றதோடு, இந்தியாவின் உப ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்காக திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனக் குறிப்பிட்ட இந்திய உப ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புகளுக்காகத் தனது நன்றியினையும் இதன்போது வெளிப்படுத்தினார்.
இச்சந்திப்பில் இந்தியத் தூதுக்குழு சார்பில் இந்திய மீன்பிடி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மன், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும்,
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
சுபவேளையில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைத்து, புத்தாண்டுச் சடங்குகளில் பிரதமர் பங்கேற்பு
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன.
சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கம்பஹா, மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது, இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் காரக சங்க சபை உறுப்பினரும், மெதகம ஸ்ரீ சுனந்தாராம தர்மதூத பிரிவெனா மகா விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்திற்குரிய துன்மோதர சமித்த தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, கம்பஹா திரு. தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கலாசார விழாவில் பங்கேற்ற பிரதமர், ’வேலை ஆரம்பிக்கும்’ சுபவேளை உதயமானதும், இல்லத்தினரின் அழைப்பின் பேரில் அவ்வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டுவைத்தார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இதன்போது பிரதமருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் அங்கிருந்த சிறுவர்களுடன் பாரம்பரிய தேசிய விளையாட்டுகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வந்த சுபவேளையில், கல்வி கற்பதில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுடன் இணைந்து அவர்களுக்கு எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வழிகாட்டிய பிரதமர், நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கல்வி மேம்பாட்டுக்கான சுப ஆரம்பத்தையும் உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமரும் ஏனைய அதிதிகளும் இல்லத்தினருடன் கைவிசேடம் செய்தல், பரிசுப் பரிமாற்றம் ஆகியவற்றில் பங்கேற்றனர். பின்னர் புத்தாண்டுக்கான உணவு உண்ணும் சடங்கிலும் கலந்துகொண்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சௌபாக்கியம் மிக்க புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், இலங்கை எதிர்கொண்ட பல்வேறு சவால்களைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்குப் பங்களிப்பு வழங்கிய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி உரையாற்றுகையில், "சூரியப் புத்தாண்டானது புத்துணர்வையும் தூய்மையையும் பிரதிபலிப்பதுடன், சூரியன் நம் அனைவருக்கும் உயிர் கொடுப்பதை இது நினைவூட்டுகின்றது" எனக் குறிப்பிட்டு, அனைவருக்கும் அமைதி மற்றும் சௌபாக்கியம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம மற்றும் கம்பஹா மாவட்டச் செயலாளர், மாநகர முதல்வர், பிரதேசச் செயலாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.
புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பரஸ்பர உறவுகளின் புதிய மறுமலர்ச்சியாகும்.
குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து, சுப நேரத்தில் சுப காரியங்களை ஆரம்பித்து இந்தப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக இது அமைய வேண்டும் என முதலில் பிரார்த்திக்கின்றேன்.
ஒரே சுப வேளையில், பலவிதமான கலாசாரச் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைபிடிப்பதன் மூலம், முழு நாடும் ஒரே தாளத்தின் கீழ் ஒன்றிணைவதே இந்தப் புத்தாண்டில் நாம் காணும் விசேட குணாம்சமாகும். பல்வேறு வேலைப்பழுக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும், ஒரு குடும்பமாகவும் ஒரு நாடாகவும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு இக்காலப்பகுதி எமக்கு ஒரு பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்குகின்றது.
மனப் பேதங்களையும் கசப்புணர்வுகளையும் களைந்து, சகோதரத்துவத்துடனும் சிநேகத்துடனும் ஒரு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதே புத்தாண்டின் உண்மையான ஆசீர்வாதமாகும். குறிப்பாக, இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் ஒரு தேசமாக நாம் பல்வேறு இயற்கை மற்றும் பொருளாதாரச் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட விதம் முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியாகும். அந்தக் கூட்டுச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.
இந்தச் சுப வேளையில், வெளிநாடுகளில் தமது குடும்பத்தினதும் தேசத்தினதும் எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நமது சகோதர சகோதரிகள் அனைவரையும் நான் மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூருகின்றேன். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
எதிர்கொள்ள நேரிடும் எல்லாவித தடைகளையும் வென்று, இன்னும் சிறப்பானதும் சுபீட்சமானதுமான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் புதிய சிந்தனைகளுடன் திடசங்கற்பம் பூணுவோம். ஒரு பாரிய சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக, உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியும் உதயமாகும் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் அயராது உழைப்போம்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு.
பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை உறுதிப்படுத்தப்படும்
ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும், பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
1964 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மத்திய பஸ் நிலையம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு, ஏப்ரல் 08 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான, வசதியான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.
மறுசீரமைப்புப் பணிகளின் போது பெண்களின் வசதிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தமையைப் பிரதமர் இதன்போது பாராட்டினார். குறிப்பாக, தூர இடங்களிலிருந்து வருகை தரும் பாலூட்டும் தாய்மார்களுக்காக, அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஓய்வறை பிரதமரின் விசேட பாராட்டைப் பெற்றது.
பயணிகளுக்கான ஆசன ஒதுக்கீடு முறைகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பஸ் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு அறை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிரதமர் நேரில் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடிய பிரதமர், நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் போக்குவரத்துச் சேவையின் தரம் குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பொதுமக்கள் கௌரவமான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான சேவையாகவும் மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என இதன்போது பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் ஊடகப் பிரிவு