பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பங்களாதேசத்தின் வெளிநாட்டுச் செயலாளர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

பங்களாதேசத்தின் வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டுச் செயலாளரும் தூதுவருமான அசாத் ஆலம் சியாம் (Asad Alam Siam) உள்ளிட்ட தூதுக்குழு நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தது.

வெளிநாட்டுச் செயலாளரையும் அவரது தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், தற்போதைய பிராந்திய நிலைமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்கள் குறித்துக் கலந்துரையாடினார். இதன்போது பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களுக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நிறுவனச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும், பயனுள்ள மற்றும் வெளிப்படையான நிர்வாக முறைமைகளை பலப்படுத்துவதற்கு ஊழலை ஒழிப்பதன் தேவையையும் பிரதமர் வலியுறுத்தினார். இரு தரப்பினரும் ஆர்வம் கொண்டிருக்கும் துறைகளில் இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

பங்களாதேசத் தூதுக்குழுவில் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அந்தலிப் இலியாஸ் (Andalib Elias), வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி இஷ்ரத் ஜஹான் (Ishrat Jahan), வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் (FSO) மனூவர் முகர்ரம் (Manuar Mukarram), வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திரு. மொஹமட் நஹித் ஜஹாங்கீர் (Mohammad Nahid Zahangir) ஆகியோர் இடம்பெற்றனர்.

இலங்கைத் தூதுக்குழுவில் பங்களாதேசத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கௌரவ தர்மபால வீரக்கொடி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) அவர்கள், நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

திரு. சசகாவாவை அன்புடன் வரவேற்றப் பிரதமர், அவரது இரண்டாவது இலங்கை விஜயத்தைப் பாராட்டினார். இதன்போது, ஜனாதிபதியின் பங்கேற்பில் இன்று காலையில் நடைபெற்ற, குஷ்டரோக (Leprosy) நிவாரணம் பற்றிய மாநாடு குறித்துத் திரு. சசகாவா பிரதமருக்கு விளக்கமளித்தார். அத்தோடு விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு உதவியளித்தல் உள்ளிட்ட, இலங்கையில் நிப்பான் நிதியத்தின் தொடர்ச்சியான செயற்றிட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

அத்தோடு இலங்கையில் இயங்கி வரும், செயற்கை மற்றும் எலும்பு முறிவுச் சாதனப் பாடசாலை (Sri Lankan School of Prosthetics and Orthotics) குறித்துக் கலந்துரையாடியதோடு, அரசாங்கத்தின் உதவியுடன் அந்த நிறுவனத்தைப் பல்கலைக்கழக அந்தஸ்திற்குத் தரமுயர்த்த வேண்டுமென முன்மொழிந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர், இந்த முன்மொழிவின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யும் பொறுப்பைக் கல்வி அமைச்சுக்குக் கையளிப்பதாகத் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் செயல்படுத்தி வரும், நிப்பான் நிதியத்தின் "100 பாடசாலைகள் திட்டத்தினை"ப் பாராட்டிய பிரதமர், விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களைச் சமூகமயப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு சில திட்டங்கள் எதிர்கொள்ளும் வளப் பற்றாக்குறையை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், அகியோ இசோமாட்டா​ைAkio Isomat, உடல் அல்லது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் சம வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களது சமூக நலன்களை மேம்படுத்துவதில் இலங்கையுடனான இருதரப்புக் கூட்டணி உறவை பலப்படுத்துவதில் ஜப்பானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

கல்வி, வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அணுகல்தன்மை மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இலங்கை, ஜப்பான் மற்றும் நிப்பான் நிதியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பொதுவான உறுதிப்பாட்டை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.

இந்தச் சந்திப்பில் நிப்பான் நிதியத்தின் கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா , இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாட்டா Akio Isomata, ஜப்பானியத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் திரு. ரியோ தகாவோகா Ryo Takaoka மற்றும் நிப்பான் நிதியத்தின் தலைவரின் செயலாளர் திரு. ஷோட்டா நகயாசு Shota Nakayasu ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தரப்பில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாவித்திரி பானபொக்கே, மற்றும் வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி காயங்கா டயஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமரைச் சந்திப்பு

திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, கல்வி, நல்லிணக்கம் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். கல்விச் சீர்திருத்தத்தைப் பாராட்டிய பேராயர் Gallagher, “கல்வியே அமைதி, நம்பிக்கை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான புதிய பெயர்” என்று குறிப்பிட்டதோடு, திருச்சீமையின் உலகளாவிய முயற்சியான உலகக் கல்விப் பொன்விழா குறித்தும் எடுத்துரைத்தார்.

போருக்குப் பின்னர் உருவாகி இருக்கும் நல்லிணக்கத்தைப் பற்றி வலியுறுத்திய பிரதமர், தற்போதைய அரசாங்கத்தின் அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளை, அனைவரையும் உள்வாங்கிய, பன்மைத்துவ அணுகுமுறையைப் பற்றி எடுத்துரைத்தார். நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தொடர்ச்சியான உரையாடல் மற்றும் புதிய சிந்தனை ஆகியன தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையைப் பாராட்டிய பேராயர் Gallagher, சர்வதேச நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு நீதி அமைப்புகள், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

சந்திப்பின் முடிவில், திருச்சீமையின் திருத்தந்தை Leo XIV அவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வது குறித்துப் பேராயர் Gallagher முன்மொழிந்தார். இந்தப் பரிந்துரையை வரவேற்றப் பிரதமர், உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததோடு, திருச்சீமைக்கு விஜயம் செய்யுமாறு பேராயர் Gallagher விடுத்த அழைப்பையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

வத்திக்கான் தூதுக்குழுவில் கொழும்பில் அமைந்துள்ள திருச்சீமைத் தூதரகத்தின் பொறுப்பாளர் கௌரவ அருட்தந்தை Monsignor Roberto Lucchini, திருச்சீமை அரச செயலகத்தின் இரண்டாம் செயலாளர் Rev. Monsignor Tomislav Zubac ஆகியோரும் உள்ளடங்கி இருந்தனர். இலங்கையின் சார்பாகப் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு. சுகீஷ்வர குணரத்ன மற்றும் பிரதிப் பணிப்பாளர் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) திருமதி அனோத்யா சிரஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வரும் உலக உணவுத் திட்டம் (WFP), இலங்கையில் உணவுப் பாதுகாப்பு, போசாக்குப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் சமூகங்களின் தாங்குதன்மை (Resilience) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஆதரவை வழங்கி வருகிறது.

2023 - 2027ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) வியூகத் திட்டம் (Strategic Plan) மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குப் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டத்திற்கமைய உலக உணவுத் திட்டத்துடன் (WFP) இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எம்.எச்.ஏ.எம். ரிஃப்லான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் கண்காணித்தார்.

மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஒக்டோபர் 26ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, அசித நிரோஷன், அருண பனாகொட, தேவானந்த சுரவீர, அஜித் கிஹான், ஹிருணி விஜேசிங்க, கயான் ஜானக, பைசல் மொஹமட் ஆகியோரும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தின் பொது மக்கள், சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலை ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற, தெய்யந்தர, பெல்பாமுல்லயில் அமைந்துள்ள எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலைக்காகக் கட்டப்பட்ட புதிய மூன்று மாடி சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த புதிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதியானது, Phenomenal Trading நிறுவனத்தின் அதிபதி தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்களினதும், அவரது பிள்ளைகளினதும் முழுமையான நிதி நன்கொடையுடன் கட்டப்பட்டது.இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கும் பரிசுப் பத்திரத்தை தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்கள் பிரதமரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இந்த வைத்தியசாலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்ததோடு. சமூகப் பொறுப்புடன் செயற்படும் வர்த்தகர்கள் பற்றிய முன்மாதிரியை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்கத்தக்க திறமையான வர்த்தகர்களின் தேவை இந்தக் காலகட்டத்தில் இருந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இந்த மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை முழுமையாக நிர்மாணித்து அதனை நன்கொடையாக வழங்கியதன் மூலம் ஆற்றிய சேவைக்காக தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள்,

"இன்று இந்த வைத்தியசாலையை நிர்மாணித்த எச்.பி. பியசிறி அவர்களின் கனவு, 2030ஆம் ஆண்டிற்குள் புரியாது இந்தக் கிராமப் பிரதேசத்தைச் சுற்றுலாத் துறையின் மூலம் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆயுர்வேதத்தை சுற்றுலாத் துறையுடன் இணைத்து, ஆரோக்கிய சுற்றுலாத் துறையாக (wellness tourism) அதனை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இது ஒரு சிகிச்சையாகவும், பராமரிப்பாகவும் அமைகின்றது. இது நமது நாட்டை உலகளவில் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஒரு தொழில்முயற்சி சார்ந்த கருப்பொருளாகும். அதற்கு பியசிறி அவர்களின் நோக்கு மிகவும் முக்கியமானதாகும். அத்தோடு ஆயுர்வேத வைத்தியசாலை என்பது அரசாங்க வைத்தியசாலையைப் போலவே மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அந்த வகையில் இந்த பெருமதிமிக்க வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு பியசிறி அவர்கள் தமது பங்கை நேர்த்தியாக நிறைவேற்றி இருக்கின்றார். அவரது பணியின் மிகுதியை நிறைவு செய்ய அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கின்றோம்," என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினர், தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மேத்தகே உட்பட விருந்தினர்களும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு