பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் அது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் மாத்திரம் பொறுப்பல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மஹவ, வலகஸ்வெவ குணபால மலலசேகர மாதிரி வித்தியாலயத்தின் புதிய இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

1936 ஆம் ஆண்டு பன்சலைக்குச் சொந்தமான பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அரச பாடசாலையாக மாறிய இப்பாடசாலையானது, பல்வேறு காரணங்களினால் 2004 ஆம் ஆண்டு மூடப்பட்டது. எவ்வாறாயினும், மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, இன்று சுமார் 1300 மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு சிறப்பான கல்வி நிறுவனமாக வளர்ந்திருக்கின்றது.

விழாவில் உரையாற்றிய பிரதமர்,

இப்பாடசாலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அப்பால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்ட வேண்டும். பாடசாலை மாணவர்களின் கல்வியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் பொறுப்பு மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும். 2026 ஆம் ஆண்டளவில் அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலைகள் இருக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதோடு, அதற்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

புத்திசாலி மற்றும் புத்திசாலியற்ற மாணவர்கள் என எவரையும் வகைப்படுத்த இயலாது. ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கவே செய்கின்றது. அந்தத் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்பதே கல்வி முறைமையின் பொறுப்பாகும்.

அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளினதும் இறுதி நோக்கம், நடைமுறைச் சிந்தனை கொண்ட, ஆக்கத்திறன் மிக்க உறுதியான பிரஜைகளை உருவாக்குவதேயாகும். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், உலகில் உருவாகி வரும் புதிய துறைகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பை நாம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம், என பிரதமர் தெரிவித்தார்.

376 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய இருமாடிக் கட்டிடத்தில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஓர் அலுவலக அறை உள்ளடங்குவதுடன், இவ்வருட இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா ஹேரத், மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஐ.எம்.ஏ. ஜின்னா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர், ஆசிரியர் குழாமினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளுக்கு வழி காட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஜூன் 18 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தின்போது, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, 2025 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் பாடநெறிசார் செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பிரதமர் பரிசில்களை வழங்கி வைத்தார். அத்தோடு, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ பாடசாலைப் பத்திரிகையான "ஆதர்ஷ பிரபா" இதழும் பிரதமரால் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இவ்வாறான பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இவ்வாறான பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் சந்திக்கும்போதே, நாட்டின் கல்வியை உயர் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற எமது உறுதிப்பாட்டை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற ஊக்கம் எமக்குக் கிடைக்கின்றது. பிள்ளைகளின் முகங்களில் மகிழ்ச்சி தவழும், அன்பு,பாதுகாப்பு நிறைந்த சூழலைக் கொண்ட பாடசாலைகளையே நாம் காண விரும்புகிறோம்.

ஒரு நாடு என்ற வகையில் எம் முன் பல சவால்கள் உள்ளன. நீண்ட காலமாக எமது நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கிய பின்னடைவை நாம் இப்போதே படிப்படியாகச் சீர்செய்து வருகின்றோம். உலகளாவிய ரீதியிலும் தட்பவெப்பநிலை ரீதியிலும் ஏற்படும் மாற்றங்கள் எமது நாட்டையும் பாதிக்கின்றன. ஆகையினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அந்தச் சவால்களை முறியடிக்கக் கூடியதாக இருக்கும்.

கல்வித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் அனைத்துத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். இது பாடத்திட்ட அபிவிருத்தி மாத்திரமல்லாது, கல்வித் துறையின் மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் என, புதிய உலகிற்குத் தேவையான திறன்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் பரந்த அளவிலான ஒரு செயற்பாடாகும். எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகள் நமக்காக திறந்துள்ளன என்ற எண்ணத்தையும், அவர்களின் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்திலும் கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களுடன் முன்னோக்கிச் செல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலுடன் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேபோன்று, ஆசிரியர் பயிற்சிச் செயல்முறையை மிகவும் பலமான முறையில் மேற்கொள்வதன் மூலம், மாணவர்களுக்குப் பயனுள்ள கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும், என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குருணாகல் புனித பெர்ணடெட் மாதிரி ஆரம்பப் பாடசாலையிலும் பிரதமர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

அத்தோடு, மஹவ, ரிதிபெந்திஎல்ல, கஜநெக்கம மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் செய்த பிரதமர், அப்பாடாசாலை ஆசிரியர் குழாமினருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, அப்பகுதி மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களுக்குத் தனது கௌரவத்தையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய மற்றும் கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக குணசேன, கீதா ஹேரத், குருணாகல் பிரதேச சபை தலைவர் எம்.ஏ. விமலசிறி, மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், குறித்த விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 1,008 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில், 2026-2028 காலப்பகுதியில் இப்பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு

Special attention must be directed to food security, water management, and energy management in preparation for the anticipated impacts of El Niño. - Prime Minister Dr. Harini Amarasuriya

It is important to enhance the services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that special attention should be directed towards food security, water management, and energy management in preparation for anticipated impacts of El Niño.

The Prime Minister made these remarks while attending the Colombo District Coordinating Committee meeting held today (16) at the Colombo District Secretariat.

During the meeting, attention was focused on the progress of development programmes planned for 2026 as at 15 June 2026, including the Decentralized Budget Programme, Rural Roads Programme, Disaster Risk Reduction Projects, the Prajashakthi Programme, and projects implemented under line ministries.

While reviewing projects being implemented under the Ministry of Sports, a decision was taken at the meeting to establish a Sports Sub-Committee for the Colombo District and Minister of Sports and Youth Affairs Mr. Sunil Kumara Gamage stated that future activities would be planned through this sub-committee.

Prime Minister Dr. Harini Amarasuriya also emphasized the need to pay special attention to the development of sports activities in rural schools.

Highlighting the importance of preparing for the direct impacts of the anticipated El Niño weather conditions in Sri Lanka and the global challenges following the situation, the Prime Minister emphasized the need to focus on food security, water management, and energy management. The Prime Minister further noted the importance of conducting awareness programmes on energy conservation and the efficient use.

Commenting on the programme to improve accessibility for persons with disabilities implemented under the Prajashakthi Programme, the Prime Minister stated that special attention should also be given to strengthening services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

The event was attended by Deputy Speaker Dr. Rizvie Salih, Deputy Minister of Media Dr. Kaushalya Ariyarathne, Chairman of the Colombo District Coordinating Committee and Member of Parliament Lakshman Nipuna Arachchi, Colombo District Secretary Ginige Prasanna Janaka Kumara, public representatives of the Colombo District, government officials, and other invitees.

Prime Minister’s Media Division

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போன்று, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிப்போம்.

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று அவசியமென்றும், கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போலவே, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிக்க வேண்டுமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்குச் சமாந்தரமாக, டெங்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதையும் பொதுமக்களிடையே சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு,16 ஆம் திகதி கொட்டாவ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட டெங்கு ஒழிப்பு நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தற்போது எமது நாட்டில் டெங்கு அபாயம் அதிகரித்து வருகின்றது. கொழும்பு மாவட்டம் அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது. அதிலும் மகரகம நகரம் குறிப்பிடத்தக்க நிலையில் இருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக, பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டெங்கு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் என்ற வகையில், டெங்கு ஒழிப்பு வாரத்தை அறிவித்து, அந்த வாரத்திற்குள் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள டெங்கு அபாயத்தைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வாரத்திற்கு மட்டுமல்லாது, இதற்காக நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்கொண்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததைப் போன்றே, இப்போதும் கூட்டு முயற்சியின் மூலம் இந்தச் சவாலை முறியடிக்க வேண்டும். டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டைத் தமது சொந்தப் பொறுப்பாகக் கருதி, முதலில் கொழும்பு மாவட்டத்தை அதிக அபாயத்திலிருந்து குறைந்த அபாயமுள்ள பிரதேசமாக மாற்றி, படிப்படியாக இந்நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கிய கொட்டாவ நகர சபை, கொட்டாவ பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர், மகரகம பிரதேச செயலகம், பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, காணிப் பதிவு அலுவலகம், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, கொட்டாவ தர்மபால வித்தியாலயம், கொட்டாவ ஆனந்த வித்தியாலயம் மற்றும் கொட்டாவ வர்த்தக சங்கம் உள்ளிட்ட தரப்பினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கம்லத், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, மகரகம நகர சபைத் தலைவர் சமன் சமரகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடல் சுமூகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்தது.

வர்த்தகம், முதலீடு, நிலையான அபிவிருத்தி, பெண்களின் நலன் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பாலின சமத்துவத்தை முன்னெடுப்பதற்கும், அரச நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, தற்போதுள்ள சவால்கள் மற்றும் பெண்களின் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தொடர்ச்சியான கொள்கை ரீதியான ஆதரவு, திறன் அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகள் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதித் தலைவர் Ms. Galija Agiseva, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு