பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

பிரதமருக்கும் பிரித்தானிய கவுன்சில் கல்வி நிபுணர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி பிரித்தானிய கவுன்சிலின் (British Council) கல்வித்துறை அறிஞர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக அமைந்தது. குறிப்பாக ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆங்கில மொழி ஊக்குவிப்புத் திட்டங்கள், கல்விக் கட்டமைப்புகள் மற்றும் மொழித்திறன் விருத்தி ஆகிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது.

இதன்போது, பிரித்தானிய கவுன்சிலின் சர்வதேச அனுபவங்கள் குறித்து விளக்கமளித்த அதன் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தமது நிறுவன ரீதியான வேலைத்திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினர். இலங்கையின் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காகத் தொழில்நுட்ப உதவிகள், ஆசிரியர் அபிவிருத்தி மற்றும் கொள்கை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கையின் கல்வித் துறைக்கு பிரித்தானிய கவுன்சில் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இத்தகைய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் அரசியல் கலாசாரம் தற்போது மீண்டும் திருப்ப முடியாத வகையில் சாதகமான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார்.

அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவதுடன், பொருளாதார அபிவிருத்தியின் பயன்கள் அனைத்து இன மக்களுக்கும் சமமாகச் சென்றடையும் வகையிலான ஓர் ஆட்சி தற்போது நாட்டில் உருவாகியுள்ளதாக, நிகழ்வில் உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய அரசியல் கூட்டங்கள் போன்றன்றி, அங்கு வருகை தந்திருந்த இலங்கையர்கள் பிரதமர் மற்றும் அமைச்சரிடம் நேரடியாகக் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் திறந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஏற்பாட்டுக் குழுவினர், இரவு உணவு உட்பட அனைத்துச் செலவுகளும் பங்கேற்றவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டதோடு, பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப் பழகிய எதிர்க்கட்சித் தரப்பினர், இத்தகைய வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயற்பாடுகளைக் கண்டு குழப்பமடைவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் கல்விச் செயலாளர் கௌரவ பிரிட்ஜெட் பிலிப்சன் (Rt Hon. Bridget Phillipson) அவர்களைச் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி; மாணவர் பரிமாற்றம் (Student mobility), கூட்டு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினராலும் கவனம் செலுத்தப்பட்டது.

செவ்னிங் புலமைப்பரிசில்கள் (Chevening Scholarships) மற்றும் பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டம் (Commonwealth Scholarship Scheme) போன்ற ஐக்கிய இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் தற்போது நடைமுறையில் இருந்துவருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய பிரதமர், இதன் மூலம் இலங்கையின் ஆளணித் திறனை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால மக்கள் தொடர்புகளை வளர்ப்பதற்கும் கிடைக்கப்பெறுகின்ற பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.

முறையான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் முறைகளை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் உயர்கல்வித் துறையைப் பலப்படுத்த தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது விளக்கிக்கூறினார். கல்வியின் தரத்தைப் பேணுதல் மற்றும் மாணவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்தல் பற்றிய ஐக்கிய இராச்சியத்தின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து அந்நாட்டின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விரிவான கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே கல்விசார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பொதுவான உடன்பாடுகளுடன் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிகார செயலாளர் இவெட் கூப்பருக்கும் இடை​யில் சந்திப்பு

பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாக சபை அமர்வு (2026) இல் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளர் இவெட் கூப்பர் (Yvette Cooper) அவர்களைச் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இதன்போது, ’டிட்வா’ சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, கொள்கை முன்னுரிமைகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கவனம், இலங்கையின் சாதகமான பொருளாதாரப் பயணம் ஆகியன குறித்து ஐக்கிய இராச்சியத்தின் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு, தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நகர்வுகள், வலுசக்தித் துறையில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள், பிராந்திய தொடர்பாடல் மற்றும் நீண்டகால வலுசக்தி பாதுகாப்பைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், குடிபெயர்வு கட்டமைப்புகளின் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் அதேவேளை, கல்விசார் நகர்வுக் கட்டமைப்புகளை (academic mobility frameworks) பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் சிலரும் பிரதமருடன் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை ஒழுங்கமைப்பதற்கான இறுதிக் கலந்துரையாடல் பிரதமரின் செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

கொழும்பு கங்காராம விகாரையை மையப்படுத்தி இம்முறை நடத்தப்படும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் பற்றிய இறுதிக் கலந்துரையாடல், மே 20 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குறிப்பாகப் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்திப் பயன்பாடு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் தலைமையில் கூடிய அரச சேவையினை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கான குழுவினால், மின்சாரப் பயன்பாட்டிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை வெசாக் வாரத்தில் தளர்த்துவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, புத்த ரஷ்மி வெசாக் வலயச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் தெரிவித்தார்.

அதற்கமைய, குறைந்த எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவில், அலங்கார வழிபாடுகளை விட ஆன்மீக வழிபாடுகள் மூலம் பக்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் வெசாக் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுமென, கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார். மேலும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், முப்படைகள், இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், வலுசக்தி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை

மே 19 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 OSGA வருடாந்த விரிவுரையின் (2026 OSGA Annual Lecture) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ’அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்’ (The Politics of Development: Sri Lanka and Beyond) எனும் தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் St Antony’s College இல் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவினால் (OSGA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமகால உலகளாவிய சவால்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக முன்னணி கல்விமான்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்தத் துறையின் முதன்மை நிகழ்வாக இது அமைந்தது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் பற்றி எடுத்துரைத்ததுடன், அர்த்தமுள்ள சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அடைய முயற்சிக்கும் நாடுகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்தும் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

தனது விரிவுரையின் போது, அபிவிருத்தி என்பதைக் கொள்கைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார மாதிரிகளின் ஊடாக மாத்திரம் புரிந்துகொள்ள இயலாது என்றும், அது மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் ஊடாகவே நோக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடிகள், நிறுவன ரீதியான சவால்கள் மற்றும் நீண்டகால சமத்துவமின்மைகளிலிருந்து மீண்டு வரும் நாடுகளில், கொள்கைகளையும் நடைமுறை எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கங்களுக்கு அவசியமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்திய பிரதமர், அடிமட்ட அரசியல் இயக்கங்கள் மற்றும் தலைமைத்துவப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார். பெண்களுக்கு அதிக அரசியல் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய சமூக, அரசியல் கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் தொடரும் சவால்கள் குறித்தும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

அத்தோடு, பொருளாதார மீட்சி மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த கலாநிதி அமரசூரிய, ஊதியம் பெறும் மற்றும் பெறாத பராமரிப்புப் பணிகளை (Care Work) அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பாரம்பரிய பொருளாதார அமைப்புகளில் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குப் பெண்கள் பெற்றுக்கொடுக்கும் பங்களிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்தோடு, நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார முன்னேற்றத்தை உறுதிசெய்வதுடன், மனித கௌரவம், நீதி மற்றும் சமூக நலனையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கங்கள், சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகள் குறித்துப் பேசிய பிரதமர், அபிவிருத்தி முன்னுரிமைகள் உள்ளூர் எதார்த்தங்களுக்கு அமைய அமைவதையும், மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் இருப்பதையும் உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சமூக மானுடவியலாளர், செயற்பாட்டாளர், கல்வியாளர் மற்றும் அரசியல் தலைவராகத் தனது அனுபவங்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கலாநிதி அமரசூரிய, மக்கள் போராட்டங்களை நீண்டகாலக் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களாகவும் நிறுவன மாற்றங்களாகவும் மாற்றியமைப்பதில் உள்ள சவால்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்தார். அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த பொறுமை, பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு ஆகியன அவசியமாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விரிவுரையைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் அமர்வில், நல்லாட்சி, நிறுவனங்களின் சுதந்திரம், அரசியல் சீர்திருத்தம், பொருளாதார மீட்சி மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் என்பவற்றுடன் கொள்கை அமுலாக்கத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் டீகோ சான்செஸ்-அன்கோச்சியா (Professor Diego Sanchez-Ancochea), பிரதமரின் விரிவுரையைப் பாராட்டியதோடு, புலமைசார் நுண்ணறிவையும் நடைமுறை அரசியல் அனுபவங்களையும் உள்ளடக்கிய, அரசியல் மற்றும் அபிவிருத்திக்கு இடையிலான உறவு குறித்த மிக முக்கியமான மற்றும் காலத்திற்கேற்றதொரு உரையாக இது அமைந்ததாகத் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு