சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி
இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான உலகளாவிய கருப்பொருளாக, “Rights. Justice. Action. For ALL Women and Girls” (அனைத்துப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உரிமையும் நீதியும் கிடைப்பதற்கான செயற்பாடு) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைச் சமூகத்தினதும் பொருளாதாரத்தினதும் உண்மையான உயிர்நாடியாக எமது பெண்களே விளங்குகின்றனர். குடும்பத்திலும் சமூகத்திலும் அவர்கள் ஆற்றும் பணி, இன்று ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது. எமது அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக, பெண்களை வெறும் பயனாளிகளாக மாத்திரம் கருதாமல், நாட்டின் அபிவிருத்தியின் செயல்திறன்மிக்க பங்காளிகளாகக் கருதி, அவர்களுக்குரிய கௌரவத்தையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
எமது கொள்கைத் திட்டத்தில் பெண்களுக்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் சில முக்கிய விடயங்களை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்,
ஒரு இல்லத்தரசியாக அவர் வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பை மதித்தல், பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் அவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை விரிவுபடுத்துதல் என்பன எமது முக்கிய இலக்குகளாகும். அத்துடன் பொதுப் போக்குவரத்து, பணியிடம் மற்றும் குடும்பத்திற்குள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும், தேசிய மட்டம் முதல் பிரதேச மட்டம் வரையிலான தீர்மானங்களை இயற்றும் சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பின்னணியை உருவாக்குவதிலும், பெண்களின் ஊட்டச்சத்து, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான விசேட திட்டங்களைச் செயற்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
பெண்கள் என்பவர்கள் இரக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் அல்ல, மாறாக அவர்கள் அறிவு, சகிப்புத்தன்மை மற்றும் படைப்பாற்றல் மிக்க சமூகப் பங்காளிகளாவர். ஒரு பெண் அச்சமின்றி வீதியில் பயணிக்கக்கூடிய, அவளது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய, அதேவேளை கௌரவமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு "வளமான நாட்டை" உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
இந்த சர்வதேச மகளிர் தினம், இந்நாட்டுப் பெண்கள் அனைவரதும் நற்கனவுகள் நனவாகும், அவர்களது கௌரவத்தை உலகுக்கு பறைசாற்றும் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பமாக அமையட்டும் என நான் மனதாரப் பிரார்த்திக்கின்றேன்!
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு





