வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்த வட பகுதி அரச ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

வட மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 2024.07.12 அன்று யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண நூலகத்திற்கும் இதன் போது நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

"எங்கள் வாழ்நாளில் வரலாறு காணாத பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டோம். நிதி நெருக்கடியை சமாளிக்கும் பணிக்கும் சவாலுக்கும் ஜனாதிபதியும் பிரதமராகிய நானும் எதிர்கொண்டோம். நாட்டை முன்கொண்டு செல்வதற்குத் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பல மக்கள் பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகித்தனர். நெருக்கடியை தீர்ப்பதற்கு பெரும் பலமாக இருந்தனர்.

அன்று நாங்கள் பட்ட கஷ்டங்கள் யாழ். ஊழியர்களுக்கு தெரியும். அவர்கள் நெருக்கடியை படிப்படியாக தீர்க்க உதவினார்கள்.

கடந்த 24 மாதங்களில் பொருளாதார சவாலை வெற்றிகொள்ள நாட்டு மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவின் காரணமாக சர்வதேச அளவில் இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு சாதகமான வளர்ச்சியை அடைந்துள்ளோம். மேலும் அடைவுகளை நோக்கிப் பயணிக்க, நாம் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும்.

கடந்த சில நாட்களாக கொழும்பில் சில சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாண மக்கள் அவற்றில் இணையவில்லை. அதற்காக ஆளுநர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வழக்கம் போல் வேலைக்குச் சென்று, அன்றாடக் கடமைகளை நிறைவேற்றி, சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபட்டனர்.

நாங்கள் ஒரு நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் போது, நாங்கள் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம். அந்த வகையில் நமக்கு ஒரு கடமை இருக்கிறது. நமது உரிமைகளை நாம் கோர வேண்டும். ஆனால் அமைதியான முறையில் நமது உரிமைகளைப் பற்றி கலந்துரையாட முடியும்.

அன்று டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தந்தையுடன் எனது தந்தை பிலிப் குணவர்தன மற்றும் கலாநிதி என்.எம். பெரேரா ஆகியோர் மிகவும் நெருக்கமாக பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டின் பிரபலமான பொது வேலை நிறுத்தத்தில், அரச சேவை ஊழியர்கள் நாட்டின் பாரியதொரு வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்து பல்வேறு பகுதிகளுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகைதந்தனர்.

யாழ்ப்பாணத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய அவர்கள் பின்னர் அமைச்சர்களானார்கள். எப்படி நண்பர்களின் ஆதரவோடு கல்வி முறை கட்டமைக்கப்பட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட்டது என்பது வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, வடமாகாண சபையின் பிரதம செயலாளர் மற்றும் அதிகாரிகள் மற்றும் நியமனம் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(புகைப்படம் - யாழ் நூலகத்தின் பிள்ளைகளுடன் பிரதமர் கலந்துரையாடல், இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் புகைப்படத்தில் உள்ளனர்.)

பிரதமர் ஊடகப் பிரிவு