தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கொரியா எமது பாடசாலைகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொரியாவின் செமால் மன்றம், தனது டிஜிட்டல் செமால் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள 5 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.03.11) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கம்பளை புனித ஜோசப் பெண்கள் பாடசாலை, நாமினிஓய மத்திய மகா வித்தியாலயம், கினிகத்ஹேன மத்திய மகா வித்தயாலயம், கொடகவெல குலரத்ன வித்தியாலயம் மற்றும் ரன்வல மகாநாக வித்தியாலயம் ஆகியவற்றின் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 36.5 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் மற்றும் உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்-

பாடசாலை பிள்ளைகளே, நீங்கள்தான் வருங்காலத் தலைமுறை. நீங்கள்தான் இந்த நாட்டை பொறுப்பேற்க இருக்கின்றவர்கள். தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகையே மாற்றிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், கொரியா தொலைதூரத்தில் உள்ள எங்கள் பாடசாலைகளுக்கு தொழிநுட்ப உதவிகளை கொண்டுவந்து சேர்த்துள்ளது. அவற்றிலிருந்து அதிகபட்ச பயன்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். கல்வித் துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் தேவை குறித்து இன்று நாம் புரிந்துகொண்டுள்ளோம். நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை விரைவாக வழங்க கொரிய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நாடாக கொரியாவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

கொரியத் தூதுவர் மியோன் லீ, சப்ரகமுவவிலுள்ள பாடசாலைகளுக்கு செமால் மன்றம் வழங்கிய உதவிகளைப் பாராட்டியதுடன், அதனை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

செமால் மன்றத்தின் தலைவர் லீ சொன்ங் ஜோன்ங் சியோலில் இருந்து சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த விழாவில் உரையாற்றியதுடன், இலங்கையில் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், இலங்கையில் செமால் மன்றத்தின் பிரதிநிதி சாய் சுன்ங் வூ அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்ட பாடசாலைகளின் மாணவர்களும் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்வில் உரையாற்றியதுடன், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொட, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, அதிபர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு