இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்து ஆராய்வு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27.11.2023) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், கொழும்புக்கு நேரடி விமான மற்றும் கடல் மார்க்கமான போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராய்வதற்கு இலங்கைக்கான புதிய இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இணக்கம் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டு வர்த்தக சபையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையின் தனியார் துறையுடன் கலந்துரையாடலுக்கு அனுப்பப்படவுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை தூதரகத்தில் இருந்து விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து பிரதமர் சுட்டிக்காட்டியதுடன், இது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் தாமதம் சரிசெய்யப்படும் என்றும் இத்தாலிய தூதுவர் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இத்தாலிய பிரதித் தூதுவர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு